Oct 29, 2025

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா...’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரளவு அறிந்திருப்போம்.


ஆனால், 'இந்தக் காலத்துப் பசங்க புள்ளைங்களுக்குஇன்னொரு பக்கமும் இருக்கலாம். நாம் ஆச்சரியப்படும் அல்லது அயர்ச்சியுறும் அவர்களின் முகங்கள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னே நாம் அறியாத இன்னொரு பக்கம் இருக்கின்றது. அப்படியானதொரு பக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சமீபத்தில் ஆங்கிலத்தில் அனுப்பட்ட மடல் இது. நேரடி இணையவழி தமிழாக்கம் என்பதால் சில சொற்கள் வித்தியாசமாகத் தோன்றலாம்

*

வணக்கம்,


நேற்று உங்கள் அமர்வில் கலந்துகொண்ட பிறகு, என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு சிறிய பகுதியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆழமான உந்துதல் ஏற்பட்டது - அது எனக்கு வலிமை, பொறுமை, மற்றும் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடுத்த ஒரு கதை.


நான் ஒரே பள்ளியில் 14 ஆண்டுகள் படித்தேன், அந்தக் காலகட்டம் முழுவதும் நான் பெரும்பாலும் தனிமையில்தான் இருந்தேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் பெரிதாக இல்லை. என்னைச் சுற்றியிருந்த பலரும் மோசமான, toxic தன்மையுடையவர்களாக இருந்தனர் - நான் அடிக்கடி கேலிக்கும், உடல்ரீதியான அவமதிப்புக்கும் (body shaming) ஆளானேன்.


ஆயினும்கூட, எங்கள் மாவட்டத்தில் அதுதான் சிறந்த பள்ளி என்று என் பெற்றோர் நம்பியதால், நான் அங்கேயே தொடர்ந்தேன். அவர்கL கவலை வரவோ அல்லது அவர்கள் மனம் புண்படவோ கூடாது என்பதற்காக, அது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நான் ஒருபோதும் அவர்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தின் மத்தியிலும், நான் தொடர்ந்து கடினமாகப் படித்து, என் பள்ளியில் முதல் 5 மாணவர்களுக்குள்ளேயே இருந்தேன். ஆனால், 12ஆம் வகுப்பின்போது, நான் மனதளவில் மிகவும் சோர்வடைய ஆரம்பித்தேன். குறிப்பாக practical மற்றும் public exam-களுக்கு முன்பு கவனம் செலுத்தவே முடியவில்லை.

வெறும் பத்து நாட்களில் முழுப் பாடத்திட்டத்தையும் படித்து, 600-க்கு 526 மதிப்பெண்களைப் பெற்றேன். நான் JEE Mains தேர்வையும் எழுதினேன், அதில் 93 சதவிகிதம் (percentile) மதிப்பெண் பெற்றேன். ஆனால், அப்போது எதைத் தேர்ந்தெடுப்பது என எனக்குத் தெரியாததால், நான் NIT-யில் சேரவில்லை.


பின்னர், நான் இரண்டு ஆண்டுகள் NEET-க்காகத் தயாரானேன், ஆனால் அந்த கட்டம் மனதளவிலும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் கடினமானதாக இருந்தது - நான் மீண்டும் தோல்விகளையும், தனிமையையும் அதிகம் சந்தித்தேன். 720-க்கு 530 மதிப்பெண்கள் எடுத்தேன், MBBS கிடைப்பதற்கு வெறும் 30 மதிப்பெண்கள் குறைவாக இருந்தது. நிதி நெருக்கடிகள் காரணமாக, நான் பொறியியல் படிக்க முடிவு செய்து இங்கு சேர்ந்தேன்.


இங்கேயும் கூட, என்னால் நம்பகமான நட்புகளை உருவாக்க கடினமாக இருக்கிறது. தனிமை என்னை சில நேரங்களில் தொடர்ந்து துரத்துகிறது. ஆனால் ஐயா, நேற்று நீங்கள் நடத்திய பயிலரங்கு அமர்வு உண்மையிலேயே கண்களைத் திறப்பதாக இருந்தது. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையைப் பற்றி ஆழமான உண்மைகளை தாங்கி வந்தது - அது வெறும் கல்வி அல்லது வெற்றியைப் பற்றியது அல்ல; நாம் யார் என்பதையும், வாழ்க்கையில் உண்மையிலேயே எது முக்கியம் என்பதையும் புரிந்துகொள்வது பற்றியதாக இருந்தது.


என் வாழ்க்கை ஒரே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நகர்கிறது - நம் மனநிலைதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது (Our mindset decides our life)” அந்த மனநிலை மட்டுமே என்னை இன்று இங்கே கொண்டு வந்துள்ளது, மேலும் உங்கள் அமர்வு அந்த உண்மையை இன்னும் ஆழமாக வலுப்படுத்தியது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், அந்த அமர்வின் போது நான் உங்களுடன் பேச மிகவும் விரும்பினேன், ஆனால் என் introvert nature என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆயினும்கூட, நாம் நமது பயத்தினைக் கடக்கும்போதே வளர்ச்சி தொடங்குகிறது என்பதை உங்கள் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. நான் உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த மனநிலையை வெளிப்படுத்துகிறது. நேற்று முதல், வித்தியாசமாகச் சிந்திக்க, அர்த்தமுள்ளதாக வாழ, மற்றும் தைரியமாக என்னைப் வெளிப்படுத்த, நான் உங்களை என் role model - ஆகக் கருதுகிறேன்.


நேற்று, நான் வெறுமனே ஒரு அமர்வில் கலந்துகொள்ளவில்லை… “நான் யார்?” என்ற கேள்விக்கு ஒரு பதிலைக் கண்டுபிடித்தேன்.


*

சமீபத்தில் என்னை நன்கு அறிந்த ஒரு பள்ளியின் முதல்வர், அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் என்னை அறிமுகப்படுத்தும்போது, என்னைக் குறித்த விபரங்கள் பலவற்றை விரிவாகத் தெரிவித்துவிட்டு, ”இதையெல்லாம் தாண்டி, இந்த நிகழ்விற்கு இவரை அழைக்க ஒரு முக்கியக் காரணம் உள்ளது. அது, இவர் எப்போதும் பிள்ளைகளின் பக்கம் மட்டுமே நிற்பார். நாம் பிள்ளைகள் குறித்து ஒரு கவலை அல்லது புகார் உள்ளிட்ட எதைப் பகிர்ந்தாலும், அந்தக் கவலை, புகார் பெற்றோர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி அல்லது ஆசிரியர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி, 'அதெல்லாம் இருக்கட்டும்ங்க, அந்தப் பையன் - பொண்ணு சைடுலா எதாவது ஒரு காரணம் இருந்திருக்கலாம், அதையும் என்னவென்று பார்ப்போம்என்பார்எனக் குறிப்பிட்டார்.


அதைக் கேட்டதும், எனக்கும் 'அட... ஆமாம்தானே...எனத் தோன்றியது. உண்மையில் அப்படியொரு இயல்பு, நிலைப்பாடு என்னிடம் இருப்பதை நானே உணர்ந்த தருணம். அதுவரை எதுவானாலும் பிள்ளைகள் பக்கம் நான் நிற்க விரும்பியதைநானே அவ்வளவாக, தெளிவாக உணர்ந்திருக்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டதில்லை. நம்மிடம் இருக்க வேண்டிய குணம், பண்பு அல்லது நிலைப்பாடு என்பது ஏதோவொரு புள்ளியில் தானாக வந்து நம்மிடம் இணைந்துவிடுகின்றன. சிலவற்றை எப்போது, எதன் நிமித்தம் வந்து சேர்ந்த்து என அடையாளம் கண்டுவிட முடியும். பலவற்றை அப்படி இனம் காண முடிவதிலை.


மேலே இருக்கும் மடல் வந்து சில வாரங்கள் ஆகியிருந்தாலும், ’பதின்வயதில் பலருக்கும் எளிதாக வாய்க்கும் ஒன்றை எட்ட, எத்தனையெத்தனை தடைகளைத் தாண்டி ஒரு பிள்ளை வர வேண்டியிருந்திருக்கின்றதுஎன்பது மட்டும் மனதில் அலைந்துகொண்டேயிருந்தது. அந்த மடலுக்கு விரிவாக பதில் அனுப்பியிருந்தேன். அடுத்தமுறை அவருடைய கல்லூரிக்குச் செல்லும்போது தேடி, சந்தித்து பேசிவிட்டு வரவேண்டும் எனவும் நினைத்திருக்கிறேன்.

இம்மாதிரியான அவர்களின் இன்னொரு பக்கம்இப்படி மடல்களாக நீளும், உரையாடல்களாக எட்டும், சில வேளைகளில் வெறும் ஓரிரு வரிகளிலும்கூட வந்தடையும்.


எது வந்தாலும் பிள்ளைகள் பக்கம் நிற்க விரும்புவதன், நிற்க முற்படுவதன் பின்னே, அவ்வளவு எளிதில் வெளிப்படாத, நம்மால் அவ்வளவாக வாசிக்கப்படாத அந்தப் பக்கங்களில் கனத்திருக்கும், உண்மைகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆழமாக உணர்கிறேன்.


Oct 19, 2025

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில், எனக்கு அடுத்தடுத்துப் பல அனுபவங்கள் அமைந்தன. ஆனால், அதிலிருந்த சுவாரஸ்யம் அனைத்தும் ஒரே மையப்புள்ளியைக் கொண்ட அனுபவங்கள் என்பதுதான்.

அந்தத் தினத்திலிருந்து, இரண்டு வாரம் கழித்து, “90% கோபம் கம்மி பண்ணிவிட்டேன்என்று அந்தத் தம்பி அனுப்பிய வாட்சப் தகவல் இப்போதும் மனதிற்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது.

90% கோபத்தைக் குறைப்பது அத்தனை எளிதா என்ன? அது அத்தனை எளிதில் வசப்படாத ஒன்றுதான். கோபம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். கோபம் வரும் தருணங்களில் எங்களின் உரையாடல் நினைவில் வந்து போயிருக்கலாம். 

அந்த உரையாடல் அன்று வாய்த்ததற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு.

சரி... அன்று நடந்தது என்ன...!?

 

01

அதுவொரு செவ்வாய்க்கிழமை. காலை ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தேன். அன்று அந்த நிகழ்ச்சியில் பேசுவது தவிர்த்து, வேறு எந்தத் திட்டமிடலும் முந்தைய இரவு வரை இருக்கவில்லை.

முந்தைய இரவு, ஒருவர் தொடர்பு கொண்டு, 'நாளைக் காலை நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் உரையாட முடியுமா?' எனக் கேட்டார். நாங்கள் அவ்வப்போது ஃபோனில் உரையாடிக் கொள்கிறவர்கள்தான். நேரில் என்றதும் குடும்ப விசயம் குறித்து இருக்கலாம் எனக் கருதினேன். குடும்ப விசயம் குறித்து நேரில் ஒருமுறையும், ஃபோனில் சில முறையும் உரையாடியிருக்கின்றேன். சந்திக்கலாம் என ஒப்புதல் தெரிவித்தேன்.

அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வந்துவிட்டார். நிறைவடையும் வரை காத்திருந்தார். நிகழ்விலிருந்து விடைபெற்ற பிறகு, இடம் தேர்ந்து அவருடன் உரையாடல் தொடங்கினேன். கருதியதுபோல் குடும்ப விசயம்தான். எளிய குடும்ப சிக்கல். ஆனால் முடிச்சு இறுகிக் கொண்டேயிருக்கின்றது. அவர் தனியே நின்று அனைத்தையும் அமைதிப்படுத்தி, சரி செய்துவிட முயற்சி செய்கிறார். ஆனால் அவர் மட்டுமே தனித்து எதுவும் செய்ய முடியாது. அதனால் எப்படி சரி செய்வது என்பதில் பெரும் குழப்பம். காரணம், சரி செய்ய வேண்டியதில் இவருடைய பங்கு குறைவானது. சிக்கலை இறுக்கிக்கொண்டே செல்லும் மற்றவர்கள்தான் அதனை சரி செய்ய வேண்டும்.

முன்பே அது பற்றி நாங்கள் பேசியிருக்கின்றோம். அவர் தீர்வு காண விரும்பினாலும், அவரிடம் மட்டுமே பேசுவதால், எதுவும் நகராது. தொடர்புடையவர்களில் ஒருவரிடம் பேசுவதுதான் முக்கியத் தேவை. ஆனால் அவர்கள் உடன்பட மாட்டார்கள். அனைவருக்குமே தாம் செய்வதுதான் சரியென்றிருக்கலாம் அல்லது தாம் ஒரு சிக்கலில் உள்ளோம், அதற்கான தீர்வை தாம்தான் தேட வேண்டும் எனும் தெளிவில்லாமல் இருக்கலாம்.

நீண்ட நேரம் அந்த உரையாடலை எடுத்துச் செல்லத் தேவை இருக்கவில்லை. உங்க வருத்தம், வலி புரியுது. ஆனா, நீங்க  மட்டுமே  சொல்யூசன் உருவாக்க முடியாது. அவங்களும் உடன்படனும். அவங்கள்ல யாராவது ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்க. அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க. அவங்களாகவே ஆதரவோ அல்லது  ஆலோசனையோ தேடும் ஒரு புள்ளி இருக்கும், அதை அவங்க அடையும்போது, ஜஸ்ட் நீங்க தோளைத் தொட்டால் போதும், சரினு சொல்லிடுவாங்க. வரட்டும் பேசிப் பார்ப்போம். எது தேவையோ, யாரிடம் சரி வருமோ, அதற்கு ஏற்பாடு செய்வோம்!என்று உறுதியளித்தேன்.

அவர் எவ்வளவு தூரம் மனதளவில் திருப்தி அடைந்தார் எனத் தெரியவில்லை. ஆனால் சில தீர்வுகளுக்கு அதிக தொலைவு பயணிக்க வேண்டும், சில தீர்வுகளுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். சில தீர்வுகளுக்கு அதீத சகிப்புத்தன்மை வேண்டும்.


02

நண்பரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தருணத்தில் அவர் எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்குத் தகுந்த ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் நினைவில் கொண்டிருந்தாலும், அவருடைய அன்றாட வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அவரின் தொடர் ஓட்டத்தில் ஒரு சவால் வந்தது. ஒரு சாதாரண சம்பவம், சரியாகக் கையாளத் தவறியதால், மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேயிருந்தது. தவறியது எந்தவிதத்திலும் குறைபாடு அல்ல. அப்போது அதுதான் சாத்தியப்பட்டிருக்கும். அது சிக்கலாக மாறி, நாட்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, பல மாதங்களாக நீடித்தது. ஒவ்வொரு சந்திப்பிலும் உரையாடலிலும் அதனைச் சரி செய்ய வலியுறுத்தினேன். முடிந்தவரை தொடர்ந்து என் கவனத்தையும், அக்கறையையும் செலுத்திக் கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கும் எல்லைகள் இருந்தன. எல்லைக்கு மறுபக்கமிருந்து கொடுக்கப்பட்டவை பல நேரங்களில் அவ்வளவாகப் பலன் தராது.

பெரும்பாலும் பொருளாதார இழப்புகளை, நெருக்கடிகளை நாம் பேசும் அளவிற்கு, மனதளவிலான நெருக்கடிகளை, இழப்புகளைப் பேசுவதில்லை. நாட்கள் நகர நகர அவருக்கு மன நெருக்கடி கூடிக்கொண்டேயிருந்தது. அந்த நெருக்கடிகள் அவருக்கு வந்திருக்கக் கூடாதவைதான். ஆனாலும், வரத்தான் செய்யும். அதற்கு சில காரணங்கள் இயல்பாக அமைந்துவிடும். அவர் எடுத்த சில முடிவுகள் எனக்கு ஒப்புதல் இல்லாததாக இருந்தன. எதையும் பூசி மெழுகாமல் முடிந்தவரை என்னுடைய கருத்துகளை நேரடியாகத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். அதுவே அந்த நட்பிற்கு நான் செய்யும் அறம். ஒவ்வொரு முடிவும் தெரிவிக்கப்படும்போது, ‘அடடா! கொஞ்சம் முன்ன சொல்லியிருந்திருந்தா வேற மாதிரி சொல்லியிருக்கலாமே எனத் தோன்றும். அதையும் தெரிவிக்கத் தவறவில்லை. ஆனாலும் உணர்ச்சிகள் ஆளும் களம் இப்படித்தான் இருக்கும்.

ஒருகட்டத்தில், எல்லாவற்றையும் சமன் செய்யும், சரி செய்யும் ஒரு புள்ளி வந்தது. அப்படியொரு தருணம் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என மனதார விரும்பியிருந்தேன். மிக முக்கியமான முடிவினை அவர் எடுக்க வேண்டிய தருணம். என் கவனத்திற்கு வந்தவுடன், தகுந்த ஆலோசனையோடுதான் முடிவெடுக்க வேண்டுமென ஒரு உளவியலாளரைப் பரிந்துரை செய்தேன். தேவைப்பட்டால் நானும் உடன் வருவதாகத் தெரிவித்தேன். அந்தச் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலோசனை நேரம். 

உளவியலாளரின் ஆலோசனை மிகச் சரியாக அமைந்தது. அவருக்கு பல்வேறு கோணங்களில் நிறைய தெளிவு கிட்டியது. கடந்த காலத்தின் பிழைகளுக்குக் காரணங்கள் புரிந்தன. எடுக்க வேண்டிய முடிவிற்கு நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்தது. 

திரும்ப வரும் வழியில் காஃபி குடிப்பதற்காக ஒரு உணவகத்தில் நண்பர் வண்டியை நிறுத்தினார். அந்தச் சாலை வழியே நூற்றுக்கணக்கான முறை சென்று வந்திருந்தாலும், நான் அப்படி குறிப்பாக அந்த உணவகத்தில் நிறுத்தியதில்லை. சிற்றுண்டி, காஃபி என உரையாடல் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படும்போது, உணவகத்தின் முன்பிருந்த விளக்குத் தூணை படம் எடுத்து வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தேன். 


03

அந்தப் படத்தை வைத்து யாரும் அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என நான் கருதவில்லை. அதை ஒரு தம்பி கண்டுபிடித்தார். உணவகத்தின் பெயரைச் சுட்டி அதுதானே எனக் கேட்டார். நான்கு மாவட்டங்கள் தள்ளி இருக்கும் அவர், ஒரு ட்ராவலர் என்பதால் பெரிய ஆச்சரியம் எழவில்லை. ஆனாலும் கண்டுபிடித்ததைப் பாராட்டினேன். அதிலிருந்து உரையாடல் தொடங்கியது.

உடனே அந்த உணவகத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பின்னிரவுப் பொழுதில் சாப்பிடச் சென்றிருக்கிறார். ஒரு மேசையில் அமர, பரிமாறுகிறவர் அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு குடும்பமாக வந்தவர்களை அந்த மேசையில் அமர வைத்திருக்கிறார். சொன்ன விதமும் சரியானதாக இருக்கவில்லை. அதனால் அந்த உணவகம் குறித்து கூகுள் ரிவியூவில் ஒற்றை நட்சத்திரம் அளித்து, புகாரினைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் அதைச் சொன்னபோது என் மனம் கனிந்திருந்தது. தம்பி அந்தப் பணியாளார் செய்தது தவறுதான். சில நெடுஞ்சாலை உணவகங்களில் இப்படியான சேவைக் குறைபாடு இருக்கின்றதுதான். அதை இன்னொரு கோணத்தில் பார்த்திருந்தால் உன்னால் கடந்து வந்திருக்க முடியும். அந்த நபர் அன்று எத்தனையாவது மணி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தாரோ தெரியாது. அவருக்கென்று எதுவும் இலக்கு இருக்கின்றதா என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்காதே. சுமப்பதற்காக நீயாக சில வழிகளை உருவாக்கிக் கொள்ளாதே!என்பது போல் தெரிவித்தேன். அவர் ஒற்றை நட்சத்திரம் அளித்ததைத் தவறு என்று சொல்லவில்லை. 

சில நிமிடங்களில் அந்த ஒற்றை நட்சத்திர கருத்துப் பகிர்வை அழித்துவிட்டதாகத் தெரிவித்தார். உரையாடல் தொடர்ந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் அதுவரை எங்கெல்லாம் ஒற்றை ஸ்டார் கருத்து / புகார் பதிந்திருந்தாரோ அத்தனையையும் அழித்துவிட்டேன் என்றார். இப்போது நான் என்னவெல்லாம் சொன்னேன் என்பது முழுமையாக நினைவில் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவர் மனதை நெகிழ்த்தும்விதமாக ஏதோ சொல்லியிருக்கின்றேன். 




இரண்டு வாரங்கள் கழித்து, அவராகவே 90% கோபத்தைக் குறைத்துவிட்டேன் என்றார். உண்மையில் அது அத்தனை எளிதல்ல என்றாலும், பல தருணங்களில் அவர் முயற்சி வெற்றி கண்டிருக்கலாம்.

குறை காணும் இடத்திலெல்லாம் ஒற்றை நட்சத்திரம் இட்டு புகார் அல்லது குறையைப் பதிவு செய்வது தவறொன்றுமில்லை. சேவைக் குறைபாடுகளைக் கண்டாலும், தம் கருத்தினைப் பதிவு செய்யாமல் ஒதுங்க வேண்டியதில்லை. ஆனால், நான் பகிர்ந்த படத்தை அவர் அடையாளம் கண்டதும் அவருக்கு என்னிடம் பகிரத் தோன்றியது, அந்த புகார் தவிர வேறெதுவும் இல்லை என்பதுதான் எனக்கு அப்போது முதன்மையாகப்பட்டது.  

அதே நாளில் மேலும் இரண்டு பேருக்காக  தனித்தனியே ஃபோனில் காலையும், மாலையும் உளவியல் தொடர்பாக மட்டுமே உரையாடியிருந்தேன். இருவருமே இளம் வயது. நன்கு வாழ வேண்டிய வயது. அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு வந்திருக்கக்கூடாது. மீள்வதற்கு மிகப் பெரும் பிரயத்தனம் தேவை. 

நாள் முழுக்க சந்தித்த, உரையாடிய, உடன் பயணித்த அவர்கள் குறித்து நிறைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் வாழ்வில் மனச் சமநிலையுடன் இருப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியிருந்தனர். அந்தத் தருணத்தில்தான் இந்தத் தம்பி ஒற்றை நட்சத்திரத்தோடு என்னிடம் வந்தார்.  அந்த உரையாடலும் தொடங்கியது. 

உடனே, அதிலிருந்து அவரை வெளியேற்றுவது எனக்கு முதன்மையாகப்பட்டது. அப்படி தோன்றியதற்கு அன்றைய தினம் அடுத்தடுத்து நிகழ்ந்த செயல்களும் காரணமாக இருக்கலாம். எனக்குள் மன நலனும், மனிதமும் முதன்மையாக நின்றன. எதன் நிமித்தமாகவும் மனதிற்குள் கடுமைகளைச் சேர்த்து சுமப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.

இரண்டு வார காலத்தில் அவர் கோபத்தைக் குறைத்தது அவருடைய சுய விருப்பம், திறனில் பேரில் நிகழ்ந்திருக்கலாம். அதற்கு என் சொற்கள் மட்டுமே காரணம் எனக் கருதவில்லை. அடுத்த நாளே தெரிவித்திருந்தால் இந்தளவு அதனைப் பொருட்படுத்தியிருப்பேனா எனத் தெரியவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து எனும் போது அவர் எடுத்த முடிவு செயல்பட்டிருக்கின்றது எனப் புரிந்துகொண்டேன். ’90% கோவம் கம்மி பண்ணிவிட்டேன்' எனப் பகிர்ந்ததும் 90% இல்லாவிட்டாலும் குறிப்பிட்டதொரு சதவிகிதம் இருக்குமென மகிழ்ச்சியாக இருந்தது.

மனம் நெகிழ்ந்திருக்கும்போது, மனம் நிறைவாக இருக்கும்போது சொற்களும் நிறைவாகவும், நெகிழ்வாகவுமே வெளிப்படும். அந்த இளகிய சொற்கள் ஒருவேளை 10% நோக்கம் மட்டுமே கொண்டிருந்தாலும், 90% பலனைத் தரும் என்பதை அன்று புரிந்து கொண்டேன். 

 *

Oct 17, 2025

நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்

நிதானமாக இதை வாசியுங்கள். நிறையப் பேருக்கு இது வருத்தம் தரும் பதிவாகவும் இருக்கலாம். இதன் நோக்கம் வருத்தம் அடையச் செய்ய அல்ல. கிடைத்த வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே!

இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையின் சுருக்கம் ...

புற்​று​நோய் முற்​றிய​தால் நேரம் கழிகிறது.  இதுதான் எனக்கு கடைசி தீபாவளி நண்​பர்​களே” - 21 வயது இளைஞர் உருக்​க​மான பதிவு

கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் 19 வயது இளைஞர் ஒரு​வருக்கு பெருங்​குடலில் புற்​று​நோய் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. அது முற்​றிய நிலை​யாக நான்காவது நிலைக்கு சென்​றுள்​ளது. மருத்​து​வர்​கள் கீமோதெரபி உட்பட அனைத்து வித​மான சிகிச்​சைகளும் அளித்​துள்​ளனர். எனினும், புற்​று​நோய் முற்​றிய​தால் ஒன்​றும் செய்ய முடியவில்​லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்​வதே சிரமம் என்று கைவிரித்துள்​ளனர். தற்​போது 21 வயதாகும் அந்த இளைஞர் சமூக வலைதளத்​தில் தன்​னுடைய வலி, கனவு​கள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில்...

/

விரை​வில் தீபாவளி வரு​கிறது. தெருக்​கள் ஏற்​கெனவே விளக்​கு​களால் ஜொலிக்​கின்​றன. அவற்றை நான் கடைசி முறை​யாக பார்க்​கிறேன் என்​பதை நினைக்​கும்​போது மிக​வும் கடின​மாக இருக்​கிறது. இந்த பண்​டிகை கால விளக்​கு​கள், சந்​தோஷம், சிரிப்​பு, சத்​தம் என எல்​லா​வற்​றை​யும் இழக்க போகிறேன்.

நான் சத்​தமில்​லாமல் சிறிது சிறி​தாக சரிந்து கொண்​டிருக்​கும் போது, வாழ்க்கை தொடர்ந்து நகர்வது விசித்​திர​மாக உள்​ளது. அடுத்த ஆண்டு என்​னுடைய இடத்​தில் வேறு யாரோ ஒரு​வர் விளக்கு ஏற்​று​வார். நான் வெறும் நினை​வாக மட்​டுமே இருப்​பேன்.

எனக்கு சுற்​றுலா செல்​வது பிடிக்​கும். தனி​யாக நிறு​வனம் தொடங்க ஆசைப்​பட்​டேன். செல்ல நாய் வளர்க்க நினைத்​தேன். ஆனால், எனது நேரம் கழிந்து கொண்​டிருப்​பது நினை​வுக்கு வரு​கிறது. அதனால் அந்த எண்​ணங்​கள் மங்​கி​விடு​கின்​றன.

நான் வீட்​டில்​தான் இருக்​கிறேன். எனது பெற்​றோரின் முகத்​தில் சோகத்​தைப் பார்க்​கிறேன். இவற்றை எல்​லாம் நான் ஏன் எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரிய​வில்​லை. அடுத்து என்ன நடக்​கிறதோ தெரி​யாது. அதில் நான் மறைந்து போவதற்கு முன்பு சத்தமாக சொல்​லி​விட்டு செல்​வதற்​காக இருக்​கலாம்.

/

முதலில், அந்த இளைஞரின் வயதில் இருக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து சொல்ல விரும்புவது, உங்கள் வாழ்க்கை மீது, உங்கள் அன்றாடங்கள் மீது, உங்களுக்கு கிடைத்தவைகள் மீது ஏதேனும் புகார் இருந்தால், புறந்தள்ளிவிட்டு மீண்டுமொரு அந்த இளைஞர் கூறியிருப்பதை வாசியுங்கள்.

அப்படியும் புகார்கள் இருந்தால் சரியான நபருடன் உரையாடுங்கள். இந்த வாரத்தில் அப்படி என்னோடு உரையாடியவர்களின் எண்ணிக்கையும், உரையாடலும் என்னை மலைக்க வைத்துள்ளது. ஏதேதோ இன்மைகள், குறைகள், புகார்கள். மிக முக்கியமான சின்னச் சின்னக் குழப்பங்கள். ஒரு சரியான வழிகாட்டியை, மனதில் இருப்பதை வெளிப்படுத்தினால் கேட்பதற்கான நபரை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

பொதுவாக நம் எல்லோருக்குமே, அந்த இளைஞரின் பதிவினை வாசிக்கும்போது பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம். சிலருக்கு அச்சம் தந்திருக்கலாம். இவ்ளோதானா வாழ்க்கை எனும் சலிப்பைத் தந்திருக்கலாம்.... இன்னும்கூட நிறைய இருந்திருக்கலாம். நிச்சயமாக யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது.

சிலவற்றை எந்த வகையிலும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அவை முற்றிலும் நம் கட்டுப்பாட்டை மீறி வருகின்றவை.

ஆனால், நாம் அறிந்து நம்மால் தடுக்க, தவிர்க்க இயலுகின்றவற்றை, அவ்வாறு செய்யாமல் நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், வாய்ப்புகள், வளங்கள், உறவுகள், உடல் நலம், மன நலம் ஆகியவற்றை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றோமா எனும் கேள்வியை எழுப்பினால் போதும். சரியாக வேண்டியவைகள் மெல்ல மெல்ல சரியாகும்.

வாழ்க்கை நிச்சயமற்றதுதான். ஆனால், நம் யாருக்கும், அந்த இளைஞருக்கு 'தான் இல்லாமல் போகப்போவதுதெரிந்துவிட்ட நிலை போல் இல்லை. அந்த நிறைவுப் புள்ளி தெரியாதது எத்தனை பெரிய வரம் என்பது அது தெரிந்துவிட்டால்தான் தெரியும். அவருக்கு ஒவ்வொரு விடியலும் மரணத்தை நெருங்கும் மைல் கற்கள். எதையும் ’இதைச் செய்து என்ன ஆகப்போகிறது’ எனும் பதிலற்ற கேள்வியோடுதான் செய்ய வேண்டியிருக்கும்.

நமக்கு நாளை இருக்கின்றது, இந்த தீபாவளி இருக்கின்றது, அடுத்த தீபாவளியும் இருக்குமென ஆழமாக நம்புகிறோம், மனதார விரும்புகிறோம். நமக்கு அடுத்த மாதம், புத்தாண்டு, பொங்கல் உண்டு. மாணவர்களுக்கு தேர்வுகள், விடுமுறைகள், திறப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு கூட்டங்கள், வருமானங்கள், அதிகாரங்கள், தேர்தல்கள் உண்டு. விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகள், வெற்றிகள், பரிசுகள் உண்டு. குடும்பத்தினருக்கு திருமணங்கள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள், விருந்துகள் உண்டு.  மனித வாழ்க்கையில் எதெல்லாம் அடிப்படைத் தேவையோ, விருப்பமோ அவையெல்லாம் கிடைக்கும் சாத்தியங்கள் பெரும்பாலும் உண்டு.

அந்த இளைஞராக இப்போதைக்கு நாம் இல்லாதிருப்பது எதெனினும் மிகப் பெரிய பரிசு. நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், உடல் நலம், மன நலம், உறவுகள், நட்புகள், வாய்ப்புகள், வளங்கள் ஆகியவற்றில் கொஞ்சம் போதாமைகள் இருந்தாலும், இருப்பதை இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மனதார கவனம் செலுத்துவோம்.

நான் பல தருணங்களில் சொன்னதுதான் ‘நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்!’. அந்த வாழ்வு நம் கைகளில் இப்போது இருக்கின்றது அல்லது அந்த வாழ்வின் பிடியில் தற்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம்.

அதனை நன்கு வாழ்ந்துவிடலாம். அந்தத் தீர்மானம் பெரும்பாலும் நம் கைகளில்தான் இருக்கின்றது.

 ~ ஈரோடு கதிர் 

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...