ஒருவழிப்பாதை


நுழைவு மறுக்கப்படும்
ஒருவழிப்பாதையின்
முகப்பு மீது
திகட்டாத  தீண்டுமின்பம் நமக்குண்டு

யாரோ கூடித் திட்டமிட்டு
நமக்காகவே மறுக்கப்படுகிறதெனும்
நினைப்பு கூடிக் கனக்கும்

நுழைய விட்டால்
அந்த வழி நம்மை
விரைந்து சேர்க்குமெனும்
நம்பிக்கையுண்டு

அங்கே காவல் இருந்து
தடுப்பவர் மீது
தீராத வன்மமொன்று முளைக்கும்

ஏமாற்றத்தோடு திரும்புகையில்
வாழ்வின் எல்லாச் சிக்கல்களுக்கும்
வளைந்து இட்டுச் செல்லும் பாதையே
காரணமெனும் மின்னல் வெட்டும்

தடை மீறியோ தவறிப்போயோ
தடுக்கப்பட்ட முனை வழியே
நுழைகின்றவர்கள் மீது
அந்தச் சாலைக்கு ஒருபோதும்
பகையேதும் துளிர்ப்பதில்லை!


No comments: