’கடைசியா முகம்பாருங்க’
மயானத்தில் தீமூட்டும்முன்
எட்டிப்பார்க்கும் விழிகளில் படிவது
மரணத்தின் கொடூரமுகமே
**
மரணம் எதனினும்
வலிமையானது என்பதை
மரணங்களின் வாயிலாகவே
உணர்த்துகிறது
**
பிறப்பு கல்வி காதல்
கல்யாணம் பணி தொழில்
உறுதியற்ற எதற்கும் நாள் குறிப்பவன்
ஒருபோதும் குறிக்கத்துணிவதில்லை
உறுதியான மரணத்தின் நாளை
**
ஒவ்வொரு மரணமும்
உண்மையாய் உள்வாங்குவோருக்கு
அதுவரை கற்றறியாப் பாடத்திற்கு
பாஸ்மார்க் போட்டுவிட்டுப்போகிறது
**
தன்னைத் தழுவும்வரை
தனக்கு மரணம் வருமென்பதை
யாரும் நம்புவதில்லை
நம்பும் தருணத்தில்
மரணம் விட்டுவைப்பதில்லை
**
செருக்குகள் உதிர்த்து
நெருங்கிய மரணங்களைச்
செரிக்க முடியாமல் நிற்கையில்
கைகளில் பற்றுவதையெல்லாம்
அன்பால் நிரப்பச்செய்வதும் கூட
செரிக்கமுடியாத அதே மரணம்தான்
**
ஒரு உயிரை மட்டும்
கொய்துபோவதா மரணத்தின் பணி
வாழ்க்கைமேல் உடனிருப்போர்
வைத்திருக்கும் நம்பிக்கையைக்
கொஞ்சம் உதிர்க்கச் செய்வதும்தான்
**