Mar 3, 2025

ஏமாறுவதற்கு வரி விலக்கு உண்டு

 தாம் புத்திசாலி எனும் எண்ணம் சிலருக்கு வலுவாக இருக்கும். பலருக்கு அதுவே மனதின் அடி ஆழத்தில் மென் புழுதியாகப் படிந்திருப்பதுண்டு. புத்திசாலி என்பதற்கு அளவுகோல் எதுவும் வைக்க முடியாது. அப்படியே அளவுகோல் என ஒன்றை வைத்தாலும், அது மிகப் பெரும்பான்மையானோருக்கு உடன்படக்கூடியதாக இருக்காது. பலருக்கு உடன்படாதது எப்படி பொதுவானதாகும்? தாம் புத்திசாலியென அடி மனதில் படிந்து கிடப்பதை சிலர் அதன் விதமாகவே அழகு பார்ப்பதுண்டு, சிலர் விரல் நுனிகளால் அதில் கோலமிட்டு புன்னகைப்பதுண்டு. வெகு சிலர் மட்டுமே ‘ஃப்பூ’ என ஊதி விட்டு அதனைக் கடந்து செல்வர்.

தன்னை ஏதோவொரு கணத்தில் புத்திசாலி எனச் சொல்வோர் அனைவருக்கும் பொது ஒற்றுமை ஒன்று உண்டு. அது, யாரோ ஒருவர் தன்னை ஒரு காலகட்டத்தில் ஏமாற்றிவிட்டதாக விரல் சுட்டுவது. ஏமாற்றப்பட்டது என்பது, பிள்ளைப் பிராயத்தில் மிட்டாய் தருவதாகச் சொல்லி தாராது போன நட்பு தொடங்கி, பருவ வயது காதல், மண வாழ்க்கை, பாகப்பிரிவினை, கொடுக்கல் வாங்கல், பணியிடம், தொழில் உள்ளிட்டவற்றில் யார்யாரோ தம்மை ஏமாற்றியதாக ஒவ்வொருவரிடமும் ஓர் பட்டியல் உண்டு. பட்டியலில் இடம் பெற்ற பெயர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் வேறுபடலாம். அதே சமயம், ஏமாந்தவர்களின் பட்டியல் அத்தனை சிறியதும் அல்ல.

இது எப்படி நிகழ்ந்தது எனக் கேட்டால், தன்னைப் பார்த்தாலே அவர்களுக்கெல்லாம் ஏமாற்றத் தோன்றியிருக்க வேண்டுமென ஒரே மாதிரி பதிலை பலரும் சொல்வதுண்டு. ”அது எப்படி ஒருவரைப் பார்த்தாலே ஏமாற்றத் தோன்றும்?!” எனும் கேள்வியை அவர்கள் ஏற்பதில்லை. ஏமாற்றப்பட்டது குறித்துப் பேசும்போது, தாம் அறிவித்த அல்லது தம் அடி மனதில் புழுதியாகப் படிந்திருந்த ‘புத்திசாலி’த்தனம் மிக லாவகமாக மறைக்கப்படும்.

தமக்கு நிகழ்ந்த ஏமாற்றத்தையொட்டி, தானே தன் மீது பச்சாதாபம் தேடுவது முதல் வன்மத்துடன் பழி வாங்குவது வரை பலவிதமான வினைகள் இங்கு ஆற்றப்படுவதுண்டு. அதைவிடுத்து, அந்த ஏமாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று சிந்திப்பது மிகக் குறைவு.

இங்கு இரண்டு வகையினர் உண்டு. ஒன்று ஏமாற்றுவோர் மற்றொன்று ஏமாற்றப்படுவோர். இவர்கள் எல்லா நேரங்களிலும் இதில் ஏதோ ஒரு வகையில் மட்டுமே நிலைத்து நிற்பது போல் கட்டமைக்கப்படுகின்றனர். அவர்களின் நிலைகள் சில நேரங்களில் மாறுவதுண்டு. அதே சமயம், வகை மாறினாலும், அது தற்காலிகம் என்று சொல்வதுபோலே, மீண்டும் தம் வகை இதுதான் என எது தனக்கு வசதிப்படுகின்றதோ அதில் நின்றுகொள்வர்.

ஏமாந்த, ஏமாற்றப்பட்ட மற்றும் ஏமாந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் அனைத்திலும் பெரும் பங்கு வகித்தது ஏமாற்றியவரா அல்லது ஏமாற்றப்பட்டவரா எனும் கேள்விக்கு ’ஏமாற்றியவர்’ என எளிதாகப் பதில் அளித்துவிடுகின்றனர். அது அவர்களுக்குப் பிடித்த பதில்தானே தவிர, அதுவே உண்மையாக இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஏமாறுவதில் பெரும் பங்கு வகிப்பது ஏமாற்றப்படுகிறவரே. காரணம் ஏமாற்றப்படுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அவர்கள் தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.

எந்தவிதமான பணம் ஈட்டுவது சார்ந்த ஏமாற்றங்களுக்குப் பின்னாலும், மிகப் பெரிய பேராசை ஒன்று இருந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அந்தப் பேராசையை வசதியாக மறைத்தபடி, ஏதோ தாங்கள்தான் உலகின் அதிசிறந்த அப்பிராணி போலவும், நியாயமான ஒன்றையே தாங்கள் அடைய முற்பட்டதுபோலவும், தங்களைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றியதாகவும்  அவர்கள் நடந்துகொள்வதுண்டு. பொதுவாக நிதி மோசடிகளில் ஏமாற்றும் திட்டத்தோடு வருகின்றவர்கள் பெரும்பாலும் தனித்த மனிதர்களைக் குறி வைக்கமாட்டார்கள். பறவைகளுக்கு வலை விரிப்பதுபோல், தோதான இடத்தில் வலை விரிப்பார்கள். அவர்களுக்கு இதில் சிலரோ பலரோ சிக்குவார்கள் என்று தெரியும். ஆனால் யார் யாரெனத் தெளிவாகத் தெரியாது. ஆனால் ஏமாறுகின்றவர்கள் தம்மைத் தாமாக வெளிப்படுத்தி, தாம் சிக்குவதற்கு எந்த வலை சிறந்தது என்று மிக எளிதாகத் தேர்ந்தெடுத்து விடுவதுண்டு.

ஏமாறுதலில் அடுத்ததாகப் பெரும் பங்கு வகிப்பது அறியாமை. பெற்றிருக்க வேண்டிய அறிவினைப் பல்வேறு காரணங்களால் பெற முடியாது போவது ஒருவகையென்றால், பெற மறுப்பது மற்றொரு வகை. அறிவியல் அவ்வளவாக வளர்ச்சியடைந்திடாத காலத்தில் அறியாமையோடு இருப்பதற்குப் பல்வேறு சமாதானங்கள் இருந்தன. இன்றைய காலகட்டத்தில் அறியாமைக்குப் பெரிதும் காரணமாக இருப்பது, அறிந்துகொள்ள முற்படாததே. ஒருவரே நேரடியாக எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியுமா என்றால் 'ஆம்' என்று சொல்வது நியாயமான பதிலாக இருக்காது. எந்த ஒன்றிலும் அறிந்தவர்கள், அதில் குறைந்தபட்ச அறிவு பெற்றவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று பலரும் உண்டு. தன்னால் அறிந்துகொள்ள முடியாது என்றால் இவர்களில் யாரையேனும் துணைக் கொள்ளலாம். அதைவிடுத்து அறியாமை என்னுடைய அடையாளம் என்போரும், தாம் ஏமாறுவதற்குத் தயார் என்று சிவப்புக் கம்பளம் விரிப்பதும் நிதர்சனமான உண்மை.

அறியாமை போன்றே இருக்கும் மற்றொன்று அறிவுக் குறைபாடு. தான் ஈடுபட வேண்டியதில் மிக மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பதில் திருப்தி கொள்வது, அறிந்தது போதும் என நினைப்பது, சில பல காரணங்களால் மனத்தடை ஏற்படுத்திக்கொண்டு மேலும் அறிந்துகொள்ள மறுப்பது ஆகியவை அறிவுக் குறைபாட்டிற்குக் காரணமாகின்றன. அறிவுக்குறைபாட்டோடு எதை அணுகினாலும், புரிதலின்மை ஓங்கி நிற்கும், புரிதலின்மை ஓங்கியிருக்கும் இடத்தில் முழுமையான புரிதலோடு வருகின்றவர் எளிதாக தனக்கான இடங்களைக் கைப்பற்றுவர். அவர்கள் ஏதேதோ செய்து ஏமாற்றி அந்த இடத்தை அடைந்துவிட்டதாகக் கருதுவதும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் வகையன்றி வேறென்ன?




ஒவ்வொருவரையும் சுற்றி 360 டிகிரி சுற்றளவிலும் போட்டி ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றது. ஒருவர் மட்டுமே தேவையுள்ள இடத்திற்கு ஓராயிரம் பேர் போட்டியிடும் நிலை முக்கியமான அனைத்துத் தளங்களிலும் உண்டு. அந்தப் போட்டிக்குத் தன்னை முழுமையாகத் தகுதிப்படுத்திக் கொள்ளாததும், தம்மைப் போதுமான அளவு வளர்த்துக் கொள்ளாததும், அந்த இடத்தை வேறொருவர் கைப்பற்றிட எளிதில் வழி வகுக்கின்றன. நானும்தான் விரும்பினேன், அதற்காக உழைத்தேன், தகுதிப்படுத்திக் கொண்டிருந்தேன், ஆனால், எனக்கு வேண்டுமென்றே வழங்கப்படவில்லை என்பது பெரிதும் உடனிருப்போரை சமாதானப்படுத்தும் எளிய வழியாக வேண்டுமானால் இருக்கலாம். அந்தச் சமாளிப்புகள் ஒருபோதும் அவர்களைச் சமாதானப்படுத்தாது. ஒருவேளை அதுவே அவர்களைச் சமாதானப்படுத்துவதாக அவர்கள் கருதினால், அது அவர்களை அவர்களே ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. 

தகுதிப்படுத்திக்கொள்ளாமை ஏமாறுவதில் ஒருவகை என்றால், அதற்கு இணையான மற்றொருவகை வழங்கப்படும் வாய்ப்பினை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிடுவது. வாய்ப்பு எப்போதும் தன்னை அலங்கரித்துக்கொண்டும், வெளிச்சமிட்டுக்கொண்டும் வருவதில்லை. சில நேரங்களில் மேகத்தில் மூழ்கிய நிலவொளிபோல் மங்கலாக இருக்கும். சில நேரங்களில் மின்மினி போல் கண் சிமிட்டும். சில தருணங்களில் அது தன்னைத் திடமாக அறிவிக்கும். வாய்ப்புகள் எந்த வடிவில் வந்தாலும், தெளிவாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள தன்னைத் தயார்படுத்தி வைத்திருப்பதுவும், திடப்படுத்தி வைத்திருப்பதுவும் மிகவும் முக்கியம். பெரு வெளிச்சமாக வருமென எதிர்பார்த்திருப்பது, மின்மினியாய் சிணுங்கும்போது அதனை இனம்கண்டு, வாய்ப்பினை ஏற்று, தன்னை நிரூபித்தல் மட்டுமே தன்னையே ஏமாற்றிக்கொள்வதைத் தவிர்க்கச் செய்யும்.

தனக்கென்றிருக்கும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட மறப்பதுவும், மறுப்பதுவும் தான் அடைய வேண்டிய நிலை, இடம் ஆகியவற்றைத் தடுக்கவே செய்யும். வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை என்பது, அந்த வாழ்தலில் தனக்குத் தேவையானதை அடைய தனக்கு இருக்கும் அடிப்படை உரிமையை உணர்தலே. தான் உரிமையை நிலைநாட்ட மறுக்கும் இடங்களில் வேறொருவர் எளிதாக அந்த உரிமையை எடுத்துக்கொள்வார். காரணம் உரிமைகள் என்பது யாரோ ஒருவரால் செலுத்தப்படவேண்டிய ஓர் இயங்கு ஆற்றல். இயங்கிக் கொண்டிருப்பதைப் பயன்படுத்த வேண்டியவர் பயன்படுத்தத் தவறினால் அல்லது மறுத்தால் அந்த இயக்கம் ஓய்ந்து போய்விடாது, தன்னை இயக்கத் தகுதியானவரை அனுமதித்துத் தொடர்ந்து இயங்குவதையே விரும்பும். அதுவே நியதி. நான் என் உரிமையை அங்கே நிலைநாட்டியிருக்க வேண்டும், நான் தவறவிட்டதால் எல்லாம் என் கைவிட்டுப் போய்விட்டது, நான் ஏதோ ஒருவகையில் வஞ்சிக்கப்பட்டேன் எனும் சமாதானங்களால் யாருக்கு என்ன பயன் இருந்துவிட முடியும்?

ஏமாற்றங்களில் உச்சம் பெற்றிருப்பது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கைகளின் ஆயுட்காலம் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்துவதுண்டு. இது எப்படி இத்தனை காலமும் செழிப்பாக இருந்து கொண்டிருக்கின்றது? நியாயமாகச் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்ய மறுத்து, எந்தவகையிலும் ஏற்க முடியாத, ஏற்கக் கூடாத, விளைவுகளை ஏற்படுத்தாத ஒன்றை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், சிறப்பாகிவிடும் என நம்புவது யாருடைய பிழை?

ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட, ஏமாறுபவர்கள்தான் ஏமாற்றுபவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.

Apr 9, 2024

மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

பொதுவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை. பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாதவற்றைத்தான். நிகழ்த்த முடியாதவை எனப் பட்டியலிட்டதை யாரோ ஒருவர், எதன் நிமித்தமாகவோ நிகழ்த்திடும்போது அது எளிதாக வெற்றியென அங்கீகாரம் பெற்று விடுகின்றது. சில வெற்றிகள் அப்படி நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துமாறு நிபந்தனைகள் விதிப்பதில்லை. மிக நுண்ணியதொரு அழகியலில், மாறுபட்ட பார்வையில் தன்னை திருப்தி செய்துகொள்ளும். அப்படியான அழகியலின் வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம்தான் மஞ்ஞும்மல் பாய்ஸ்.

எல்லோரும் கதை குறித்து எழுதிவிட்டதால் ஸ்பாய்லர் அலெர்ட் எதுவும் தேவைப்படாது. கொச்சி அருகே மஞ்ஞும்மல் என்கிற ஊரிலிருந்து இளைஞர் குழுமம் ஒன்று கொடைக்கானல் சுற்றுலா செல்கின்றனர். காலங்காலமாய் இளைஞர்கள் சுற்றுலா சென்றால் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படியானதொரு கொண்டாட்டத்தோடு சுற்றுலா அமைகின்றது. இறுதியாக ஊருக்குப் புறப்படும் முன் குணா குகைக்குச் செல்கின்றனர். வனத்துறையின் தடை மற்றும் எச்சரிக்கையை மீறி உள்ளே சென்று தங்கள் வருகையினைப் பதிவு செய்யும் வகையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றெழுதி கொண்டாட்டமாக இருக்கும் சூழலில் குகைக்குள் ஒரு ஓட்டையின் வழியே சுபாஷ் விழுந்துவிட, சுபாஷை மீட்டெடுக்கும் போராட்டம்தான் கதை.

குடிகார இளைஞர்கள், பொறுப்பற்ற முறையில், தடுப்பு மற்றும் எச்சரிக்கையை மீறிச் சென்று விழுந்ததை இப்படி படமாக எடுத்துக் கொண்டாடலாமா எனும் தர்க்கவாதிகளிடமிருந்து நான் விலகி நிற்கவே விரும்புகிறேன்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றழைக்கப்படும் உண்மையான பாத்திரங்கள் பெயிண்ட் அடிப்பவர்கள் மற்றும் மீன் வெட்டுகின்றவர்கள். பொதுவாக இளைஞர்களின் பெரும்பாலான மலைப்பிரதேச சுற்றுலாக்களில் மது இருப்பதுண்டு. சரி தப்பு என்பது அவரவர் எண்ணம். ஆனால் மது இருப்பது உண்மை.

 2006ம் ஆண்டு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தியத் திரைப்படங்களில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் அதிகத் திரைப்படங்கள் வருவதுண்டு.




இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. இந்தப் படத்தின் வெற்றிக்கு மலையாள ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்கள்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. உண்மையில் இப்படியொரு அலையை எதிர்பார்க்கவில்லை. மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் ஏன் இப்படியொரு பேரலையை ஏற்படுத்தியது என்ற ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது.

தமிழ் ரசிகர்களிடம் ஏன் இத்தனை பரவசம் எனும் கேள்விக்கான பதில், இயக்குனரின் மிக சாமார்த்தியமான அந்த முடிவு. குட்டனும் சுபாஷும் கருவறையிலிருந்து மறு பிறப்புபோல் மேலெழும்பி வரும் கணத்தில் பளீரென குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு பாடலிலிருந்துஉண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன பொன்மானே பொன்மானேஎன்றொலிக்கும் ஜானகியின் குரலுக்கு திரையரங்கம் துள்ளும் மாயமே சாட்சி. அந்தத் தருணத்தில் அந்த வரி ஒலிக்காமல் போயிருந்திருந்தால் தமிழ் ரசிகர்களிடம் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தாமல் மற்றுமொரு மலையாளப் படமாகவே இருந்திருக்கலாம்.

படத்தின் இயக்குனர் சிதம்பரம் அளித்த பேட்டிகளினூடாக அறிவது, அந்தப் பாடல் எதேட்சையாக அந்த இடத்தில் நுழைக்கப்படவில்லைஎழுதியபோதே, கண்மணி அன்போடு பாடலில் துவங்கி, ரசிகர்களை தயார்படுத்தி வைத்திருந்து, முக்கியமான அந்தக் காட்சியில்உண்டான காயமெங்கும்வரியை பொருத்துவது என்று தீர்மானித்திருக்கின்றார்.

அழுத்தம் நிறைந்த அந்தக் கணத்தில் ஆனந்தக் கண்ணீர் வர வைக்கும் ஆற்றல் குறிப்பிட்ட அந்த வரிக்கும், குரலுக்கும், அதன் இசைக்கும் இருந்ததை திரையரங்கில் காண முடிந்தது. அதுதான் ஒரு படைப்பின் அழகியல். அது தான் நிகழ்த்த விரும்பியது மற்றும் பார்வையாளனிடம் கொண்டு வர விரும்பியதன் உச்சத்தைத் தொட்டுவிட வேண்டும்.

அந்தப் பாடல் சேர்க்கை படத்தின் வெற்றிக்கான காரணமாக பார்க்கும் அதே சமயம், அதைத் தாண்டி படத்தில் ஆழமாக ஒன்றிப்போக எனக்கு சில காட்சிகளும் காரணங்களும் உண்டு.

*

சுபாஷை மீட்பதற்காக குட்டன் குழிக்குள் இறங்குகையில் 120 அடி ஆழத்தில் கயிறு தீர்ந்துவிட காவல் அதிகாரி அடுத்த கயிற்றை இணைக்குமாறு தீயணைப்பு துறை அதிகாரியிடம் சொல்கிறார். அவர் இனியும் கீழே இறங்கினால்  ஆக்ஸிஜன் கிடைக்காது, எனவே குட்டனை மேலே வர வைப்பதுதான் நல்லது என்கிறார். மேலே வருமாறு குட்டனிடம் காவல் அதிகாரி சொல்கிறார். குட்டன் மறுக்க, அவரின் குரல் அதிகாரமாக ஆணையிடுகின்றது. பொதுவாகவே அதிகாரத்தின் குரல்களில் எப்போதும் அறிவின் வாசனை இருக்காது என்பதற்கான மிகச் சரியான உதாரணம்தான் உயிரைப் பணயம் வைத்து, துணிந்து இறங்கியவனிடம்மரியாதையா மேல வந்துடுஎனும் அந்த ஆணை.

 

*

குட்டன் சுபாஷைக் கண்டு, கயிற்றில் தன் உடலோடு இணைத்துக் கட்டிக்கொள்ள மேலிருந்து, கயிறு இழுக்கும் வீரர்களான நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இழுக்கின்றனர். மெல்ல மெல்ல சாவின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்வை நோக்கி இருவரும் உயர்கின்றனர். ஒருகட்டத்தில் குறுகிய இடுக்கில் சிக்கிக்கொள்ள மேலே இழுக்க முடியாத நிலை வருகின்றது.

அனைவரும் ஏறத்தாழ நம்பிக்கை இழக்கும் கணத்தில், அதுவரை அதிர்ச்சியில், மிகுந்த மன அழுத்தத்தில் உறைந்துபோயிருந்த, அபிஷேக் குகைக்குள் வந்து நிற்கிறான். அவனைப் பார்த்தவர்கள் பதட்டத்தோடு அங்கிருந்து வெளியேறுமாறு கத்த, அதனைப் பொருட்படுத்தாது, ”எடா... லூசடிக்கடா!” எனும் தேர்ந்த யுக்தியை மந்திரம்போல் தருகிறான்.

மேலே இழுப்பதுதான் நோக்கம் என்பதற்காக ஒரே மூச்சில் இழுத்துவிட முடியாது. சிக்கிக்கொள்ளும் தருணங்களில் இன்னும் ஆற்றல் கொடுப்பதால் சிக்கல் தீர்ந்துவிடாது, தேவையான தருணங்களில் சற்று தளர்த்திக் கொண்டுதான் மீண்டும் முழு வலிமையோடு தொடர வேண்டும் என்பதை அந்தகயித்த கொஞ்சம் விட்டு இழு” (லூசடிக்கடா) மிக எளிதாக உணர்த்தி விடுகின்றது. ‘சற்றே தளர்த்தி முழு ஆற்றலைச் செலுத்துஎன்பது அந்தக் காட்சிக்கான யுக்தி மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்தின் பல தருணங்களுக்கான பாடம்.


*

ந்தப் படத்தில் ஒட்டுமொத்தமாகக் கொண்டாட என்னிடமிருருக்கும் மிக முக்கியக் காரணம், தேவையின் பொருட்டு வைக்கும், சொற்களில் விவரிக்கவியலாத அளவுக்கான அபரிமிதமான நம்பிக்கை. சாத்தானின் சமையலறை என்றழைக்கப்படும் குணா குகையின் ஆழம் யாருக்கும் தெரியாது. வரைபடம் கிடையாது. உள்ளே விழுந்தவர்கள் யாரும் அதுவரை உயிரோடு மீண்டதில்லை. சூசைட் பாய்ண்ட்-ல் தற்கொலை செய்தோரின் உடல்களை எடுத்துவரும் திறன் வாய்ந்தவர்கள்கூட குகையின் குழிக்குள் விழுந்தவர்களை மீட்டெடுத்துவர முன்வருவதில்லை.

இப்படியாக அந்தப் பகுதி கடைக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வனத்துறை, காவல் துறை மற்றும் மீட்பு படை உள்ளிட்ட அனைவரும் உயிரோடு மீட்க முடியாது என மிக உறுதியாகச் சொன்ன பிறகும், அந்த நண்பர்களை எது போராட வைத்தது என்பதுதான் என்னை இடைவிடாது ஆச்சரியமூட்டும் கேள்வி.

ஆழ்துளைக் குழாயில் விழுந்தோர், இடிபாடுகளில் சிக்கியோர், குழிக்குள் விழுந்தோர், சுரங்கத்தில் மாட்டியோர் என எத்தனையோ சூழல்களில் மீட்டெடுக்கப்படுவதில், ஏற்கனவே அப்படி மீட்டெடுத்தற்கான சில உதாரணங்கள் இருந்ததுண்டு. ஆனால் குணா குகைக்குள் விழுந்தவர் மீண்டதாக வரலாறு இல்லாதபோது, புதியதொரு வரலாற்றை உருவாக்க, அவர்களிடம் இருந்த அளவற்ற, அதுவரை யாரும் உணர்ந்திடாத நம்பிக்கையின் மூலம் என்னவாக இருந்திருக்கும்?

சுபாஷைக் கைவிட்டு ஊர் திரும்பினால், சுபாஷின் அம்மாவை எதிர்கொள்ளும்போது அவரின் எளிய கேள்விக்கும், குத்தும் பார்வைக்கும் சக எளிய மனிதர்களான அவர்களால் ஒருபோதும் பதில் தயாரித்துவிட முடியாது. அதைவிட மிக முக்கியமானது உடன் வந்த ஒருவனை ஆபத்தில் விட்டுவிட்டு, அவனுக்கு என்ன ஆனது, எப்படியிருக்கிறான் எனத் தெரியாமல், தெளிவில்லாதொரு முடிவினை தெளிவான தீர்வுபோன்று ஏற்றுக்கொள்ளும் வதைக்குள் அவர்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதுதான் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் சுமத்திய அவநம்பிக்கைக்கு சவால் விடத் துணிகின்றது. அந்த சவால் ஓங்காரமாய் ஒலிக்கவில்லை. மௌனமாக உள்ளுக்குள் ஆற்றலாய் உருவெடுக்கின்றது. யாரோடும் முரண் கொள்ளாமல் தங்களை உருவேற்றிக்கொள்கின்றனர். என்னவாகினும் போராடிப் பார்த்துவிடுவது எனும் போர்க்குணம் எழுகின்றது.

அந்தப் போர்குணம் வௌவால்கள் படையெடுத்த ஆழ்ந்த இருளை நோக்கிடேய் சுபாஷுஎன கதறிக்கொண்டேயிருந்தது, காவல் துறை பழி சொல்லி அடித்து துவைத்தபோதும் பொறுத்துக்கொண்டது, மழை பொழிந்தபோது தன்னைக் கரையாகக் கட்டமைத்தது, மீட்டுப்படை வீரர் இறங்க மறுத்தபோது தம் உயிரை பணயம் வைத்தது, இறுதியாக நட்பின் பெயரால், மனிதத்தின் பெயரால், உறுதியின் பெயரால், நம்பிக்கையின் பெயரால் வென்றெடுத்தது.

~ ஈரோடு கதிர்


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...