Feb 26, 2015

கீச்சுகள் தொகுப்பு : 54





எச்சூஸ்மி தகப்பா....  ஒரு ஸ்லைஸ் பாட்டில கீழ போட்டதுக்கு 'சப்பு'னு அறையறதுக்குப் பேரு வீரம் இல்ல....  உங்கிட்ட அடிவாங்கிட்டு அழாம அமைதியா இருந்துட்டு, அஞ்சு நிமிசம் கழிச்சு 'அப்பா'னு மடில வந்து உக்காந்தனே... அதுக்குப் பேருதான் வீரம்!'

--

பெரம்பூர்ல எறங்கனும்னா அரக்கோணத்லேயே முழிச்சு லைட்ட போட்டு கலவரம் பண்றத குலத் தொழிலாகவே செய்யுது மேற்கத்தி சனம்!

-

வேட்டி கம்பெனி விளம்பரங்களில்தூய்மை இந்தியாவிசயம் சேர்ந்திருப்பதுகூடசெவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்எனும் டிசைன் வகைதான்

-

எதாவது திட்டம் குறித்துப் பேசும்போதுபொறுமையாக யோசித்துச் சொல்என்பதில் மறைந்திருப்பது நான் விரும்பும் பதிலையே சொல் என்பதுதான்.

-

அதிகம் கசப்பு சுவைத்துப் பழகிய நாக்கிற்கு, ஒரு கட்டத்தில் இனிப்பு ஒவ்வாத சுவையாகிவிடுகிறது.

-


பல நேரங்களில் வாழ்க்கை குறித்தான கனவு, பலூனில் ஊதப்பட்ட காற்று!

-

இந்தடச் ஸ்கிரீன்போன் பழகியதிலிருந்து, ஆல்பங்களில் இருக்கும் போட்டோக்களையும் இரண்டு விரல்களால் நிரடி, பெரிதாக்கி பார்க்கத் தோணுது!

-

பேரலைபோல் எப்போதாவது மனதில் மோதும் பாராட்டு அலை, அவ்வளவு எளிதில் அன்றிரவு தூங்க அனுமதிப்பதில்லை...

-

வரும் வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு மையத்தில் கொழுத்த நாயொன்று உறங்கிக்கொண்டிருந்தது. சுகமான வெயில் கீற்றுகள் குளிருக்கு மிக இதமாய். பரபரப்பான போக்குவரத்து அற்ற சாலைதான். எனினும் வேகமாய் வந்து ஒதுங்கும், திரும்பும் ஒரு காரோ, பைக்கோ நாய் மீது மோதிவிடலாம் எனும் நினைப்பில் அருகில் நின்றுப்ப்ச்சூ..ப்ப்ச்சூஎன அழைத்தேன். சாவகாசமாய் திறந்து பார்த்த நாயின் கண்கள் மெல்ல சொருகிக்கொண்டன. இமை திறத்தலும் மூடுதலும் ஒரு கவிதை போல் இருந்தது. மீண்டும் அழைத்தேன்.... உறுத்துப் பார்த்த நாயின் பார்வையில், ”இந்த இளம் வெயிலின் சுகமறியாப் பொறாமை பிடித்தவனேஎனும் தவிப்போ, ஏளனமோ இருந்தது புரிந்தது.

ஏதேதோ சந்தர்ப்பங்களில்
அந்த நாய் போல நானும்
நான் போல வேறு யாருமோ
இருந்திருக்கலாம்!

-

எதிலும் தன்னை முன்னிறுத்தஎழவு வீட்ல கூட பொணமா இருக்கனும்னு ஆசைப்படுறவங்களுக்கு சொல்றது, நீ அந்த நொடியோ வுழுந்து செத்துப்போய்டு தல!

-

தாயக்கட்டை உருட்டியவுடன் ஓடும் காய்கள் போல், அவரவர் பிழைப்பிடம் நோக்கி ஓடுகிறார்கள் நீள் விடுப்புக்குப்பின்னே!

-

பாக்கெட்ல செல்போன் பாடுது, கையில் ஜூ.வி வைத்துக்கொண்டு படிக்கிறார், இடைவிடாது அருகில் இருக்கும் மனைவியுடனும் பேசுகிறார் #பஸ் அலப்பறைகள்

-

மாட்டுப் பொங்கலன்று பட்டியிலிருக்கும் ஆட்டுக்கும் பூஜை போட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் கறிக்கடையில் நிக்கிறவுக எல்லாம் நம்ம பயலுவகதான்.

-

நம்ம வீட்ல கரண்ட் போனவுடனே, ’குலவழக்கப்படிபக்கத்து வீட்டிலும் கரெண்ட் போய்டுச்சானு பார்க்கிறதெல்லாம் அவ்ளோ பெரிய குத்தமா!?

-

ஒரு மனிதன் சக மனிதனை வெறுக்கும் அளவிற்கு, ஒரு மிருகம் சக மிருகத்தை வெறுப்பது நிகழுமா!?

-

ஞாயிற்றுக்கிழமை வயிறு முட்ட சாப்பிட்டு மதியம் தூங்கும் சுகம் கண்டிருந்தால், புத்தன் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். :)

-

சம்பாதிக்கும் பணத்தைவிட, கடன் வாங்கும் பணம் தான், ’பரபரவென வேகமாகக் கரைகிறது!

-

உலகத்தில் இப்போதைக்கு ரொம்ப ஈஸிவாட்சப் குரூப்ஆரம்பிக்கிறதுதான் போல. நேத்து மட்டும் என்னைய மூனு குரூப்ல சேர்த்திருக்காங்க!

-

Feb 24, 2015

எச்சம் - குங்குமம் கவிதை



நெடுந்தொலைவு பயணித்த
பறவையொன்று
வறண்டுபோன நதி மடியில்
குட்டையாய்த் தேங்கிக்கிடக்கும்
நிறங்களடர்ந்த சாயக்கழிவில்
தாகம் தணித்திட அமர்கிறது

கசப்பேறிய நீரினைப் பருகி
வானமேகும் பறவையின்
நனைந்த இறகுகளிலிருந்து
கடக்கும் வெளியெங்கும்
நிரம்பிக் கொண்டேயிருக்கிறது
துரோகத்தின் வாசம்

அந்தப் பறவை
பறந்தாகவேண்டும்
துரோகம் கரைந்தொழியும்
வரையேனும்

மலையுச்சியில்
பாறையிடுக்கில்
கசியும் சுனை நீரில்
கால் நனைக்கையில்
இறக்கை நுனியில்
துரோகத்தின்
எச்சமிருத்தலாகுமோ!

-

குறிப்பு : குங்குமம் (02.03.2015) இதழில் வெளியான கவிதை


Feb 16, 2015

நுகரச் சகியாதது



சொட்டுச்சொட்டாய்
துகள்த்துகளாய்
சேகரித்து
வைத்திருக்கும்
இந்தக் கர்வ மூட்டையில்
எப்பொழுதேனும்
என் வாள் முனை மோதி
தெறித்துவரும்
சிறு கல் பட்டு
கிழிந்து சொட்டுகையில்
பெருகும் வீச்சம்
என்னாலும்
நுகரச் சகியாதது!

Feb 6, 2015

பாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்



பள்ளி செல்லும் சிறுவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை என்றால், அது நினைவாற்றல் குறைபாடுதான். ஒரு வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத் திட்டம்தான். பாடம் நடத்துபவர் ஒரே ஆசிரியர்தான். கேள்வித்தாளும் ஒன்றேதான். விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரும்கூட ஒருவரேதான். ஆனாலும் ஒரு வகுப்பில் படிக்கும் அனைவரும் சமமான ஒரே மதிப்பெண்களைப் பெற்றுவிடுவதில்லை. அனைத்து மாணவர்களும் சமமான மதிப்பெண்களை பெறாமல் போவதற்கு பற்பல காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானது படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்துபோவது. பல ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த எளிய யோசனைகள் நம் செல்லங்களுக்கு உதவும்

முக்கியமான சொற்கள்:
பொதுவாக பாடத்தில் இருக்கும் மொத்தப் பகுதியையும் படித்து நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியம். சிலருக்கு முழுவதுமாக மனனம் செய்யப்பட்டு நினைவில் இருக்கும், ஆனால் முதல் வார்த்தை நினைவுக்கு வராமல் தடுமாற்றம் ஏற்படும். ஒட்டுமொத்தமாக நினைவில் இருக்கும் பாடத்தை எளிதாக மீட்டெடுக்கும் வழிதான் முக்கியமான வார்த்தைகளைத் (keywords) தெரிவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுதல். அப்படி நினைவில் வைத்திருக்கும் சொற்களை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டால், குறிப்பிட்ட பகுதி எளிதில் எளிதில் நினைவில் வந்துவிடும்.

முழுமையாகப் படித்தல்:
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி முடித்தபின், தனக்கு முழுவதுமாக புரிந்துவிட்ட பாடமாக இருந்தாலும் கூட, அன்றே அந்தப் பாடத்தை முழுமையாக ஒருமுறை படித்து நினைவில் நிறுத்திக்கொள்ளுதல் முக்கியம். ஆசிரியர் நடத்தி, தெளிவாகப் புரிந்த பாடத்தை முழுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கும்போது, அப்பாடம் ஆழமாக மனதில் பதிந்துவிடும்.

எழுதிப்பார்த்தல்:
படித்த பாடத்தை, புரிந்துகொண்ட பாடத்தை, நினைவில் வைத்திருக்கும் பாடத்தை இறுதியாக தேர்வில் நாம் எழுதிக்காட்டித்தான் வெளிப்படுத்தப் போகிறோம். ஆகவே படித்த, புரிந்த, நன்கு நினைவில் இருக்கும் பாடத்தை அவ்வப்போது எழுதிப் பார்ப்பது பலமுறை படிப்பதற்குச் சமம்.

சந்தேகம் கேட்டல்:
ஆசிரியர் பாடம் நடத்தும்போதே கூர்ந்து கவனித்தல் மிக முக்கியம். அதோடு ஆசிரியர் நடத்தும் பாடத்தில் வரும் மிகச்சிறிய சந்தேகங்களையும் உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு அல்லது சக மாணவர்களிடம் விவாதித்து தெளிவு படுத்திக்கொள்ளுவதும் மிக மிக முக்கியம். இவ்வாறு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெற்ற பாடங்கள் மிகத் தெளிவாக மனதில் பதிந்துவிடும். எளிதில் மறக்காது

மீண்டும் மீண்டும் படித்தல்:
பிடித்த ஒரு சினிமா படத்தையோ, பாடல் காட்சியையோ ஒரே ஒரு முறை பார்ப்பதோடு நிறுத்தி விடுகிறோமா? பொழுதுபோக்கு அம்சமாய் இருக்கும் திரைப்படம், பாடல் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை குழந்தைகள் அளிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பாடத்தை ஒருமுறை மட்டுமே படிப்பது எப்படி போதுமானதாக இருக்குமா? மனதில் ஆழமாகப் பதிந்த பாடமாகவே இருந்தாலும், நினைவில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, அந்தப் பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். பாடங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க, ஒரு கால அட்டவணையைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். அந்த அட்டவணைப்படி பாடத்தை குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் படித்தல் அவசியம்.

உணவு மற்றும் ஓய்வு:
தேர்வு சமயங்களில் எளிமையான சத்தான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவு என்ற வகையில் அதிகப்படியான பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை முடிந்தவரையில் தவிர்த்தல் நலம். தனது உடலுக்குத் தேவையான அளவிற்கு நிச்சயம் தூங்க வேண்டும். அதேபோல் தேர்வை நினைத்து பயப்படாமல், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதுவது குறித்து திட்டமிட்டுக்கொள்ளலாம். ஆனால் பயப்படத் தேவையில்லை.

ஆசிரியராக மாறுதல்:
தனக்குப் புரிந்த, நினைவில் இருக்கும் பாடத்தை நண்பர்களிடம் விவரிப்பது போல தனக்குத் தானே ஆசிரியராக மாறி, ஒரு வகுப்பு எடுத்தல் இன்னும் நல்ல பலன்களைத் தரும். தானே மாணவனாகவும் தானே ஆசிரியராகவும் மாறி ஒரு பாடத்தை விளக்கிவிட்டால் அது மறந்து போகுமா என்ன?

நண்பர்களிடம் விவாதித்தல்:
தனக்கு முழுவதுமாகப் புரிந்துவிட்டது, அதனால் இனி பிரச்சனைகள் இருக்காது என நினைப்பதுதான் சில நேரங்களில் பூதாகரமான பிரச்சனையாக மாறிவிடுகிறது. புரிந்துகொண்ட பாடத்தை, மீண்டும் மீண்டும் படிப்பதோடு, தான் படித்த, புரிந்துகொண்ட பாடத்தை, சக மாணவர்களிடம் விவரிப்பது என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி.

தன்னம்பிக்கை:
பொதுவாக பிடித்த பாடம் பிடிக்காத பாடம் என்பதே புரிதலின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. புரிந்துகொண்ட பாடங்கள் அனைத்தும் பிடித்த பாடங்களாகவே அமைந்துவிடும். அடுத்து பாடங்களைப் படிக்கும்போது இதை நான் எளிதில் புரிந்துகொள்வேன், எனக்கு நினைவில் நிற்கும், தேர்வில் கேள்விகளுக்கு மிகச்சிறப்பாக விடை எழுதுவேன் எனும் தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும். தன்னம்பிக்கைக் குறைவுதான் பெரும்பாலும் தேர்வு நேரங்களில் வீணான பதட்டத்தைக் கொண்டுவந்து பாடங்களை மறந்துபோகச் செய்கின்றது.

வழிமுறை அட்டவணை:
பொதுவாக ஒரு பாடத்தை மனதிற்குள் ஒரு வரைபடம்போல் வரைந்துகொள்ள வேண்டும். Flowchart எனப்படும் வழிமுறை அட்டவணை முறையில், பாடத்தில் இருக்கும் முக்கியச் சொற்களை அட்டவணைப் படுத்திக்கொண்டால் மிக எளிதாக முழுப் பாடத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.





-

செல்லமே பிப்ரவரி இதழில் வெளியானது. நன்றி செல்லமே

Feb 3, 2015

சபிக்கப்பட்ட வனமொன்று



வேர்களின் நுனிகளில்
பாவ நெருப்பு
பூக்கத் தொடங்கியிருக்கிறது

சபிக்கப்பட்ட இவ்வனத்தில்
விதைகள் எதுவும்
இனி விழப்போவதில்லை

மழைத்துளி வேண்டி
காத்துக்கிடந்த
கோரைப்புல் கிழங்கொன்று
இறுதியாய்
தம் கருமுட்டையை
வெளித்தள்ளியிருக்கிறது

மேய்ந்து பசியாறியவைகள்
விட்டுப்போன
பாதச்சுவடுகளில்
அழிந்துபோகும் நிலையில்
நினைவுகள் மட்டும்
மீந்து கிடக்கின்றன

எல்லாம் இல்லாமல் போன
ஒரு கணத்தில்
பேய் மழையொன்று வரலாம்

அதற்குள்
அந்த முன்னாள் வனத்திற்குச் சூட்டிட
பெயரொன்று
உருவாக்கிட வேண்டும்

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...