May 15, 2011

தூரிகையும் சித்திரமும் என் இதயமும்




எதிர்பாராத தருணத்தில்
மேகத்திற்குப் பிரசவம் நடந்தது
அந்த ரயில் நிலையத்தில்

தெறிக்கும் சாரல்களில் ஆசிர்வதிக்கப்பட்டு
ஒரு சித்திரமும் தூரிகையும்
கைகள் பற்றி நின்றிருந்தன

தாமதமாய் வந்த ரயில் வண்டி
கொட்டும் பெரு மழைக்குள்
பெருமூச்சுவிட்டபடி நீண்டு கிடந்தது

தூரிகையிடம் விடைபெற்று
சித்திரம் மட்டும் ஓடி ஏறியது
ஒரு முன்பதிவு பெட்டியில்!

சாரல் தெறிக்கும் படியில் நின்று
மழைச்சரங்களை ஊடுருவி
அவனோடு விழிகளால் கதைத்துக்கிடந்தது

ஆயிரம் அபிநயங்கள் பேசிய
அவள் விழிக் கத்திக்கு முன்
அவன் விழிகள் உயிரற்றுக் கிடந்தன

கண்ணைத்துடை என்ற சாடையோடு
கைப்பையை தலைக்குப்பிடித்து
அவனருகே ஓடிவந்து ஏதோ கிசுகிசுத்தாள்
வர்ணத்தோடு நிமிர்ந்து மலர்ந்தது தூரிகை

திரும்பியவள் படியில் பாதம் பதிக்கும்முன்
மழைத்துளிகள் சொட்டச் சொட்ட
ஒரு முறை திரும்பி புன்னகையை உதிர்த்தாள்
கண்ட உயிர்களுக்குள் எல்லாம் பூ பூத்தது

மழையும் விடவில்லை வண்டியும் நகரவில்லை
புருவங்களை அசைத்து விழிகளால் கதைத்தவள்
மெதுவாய் விழி மூடி அவனை அருகே அழைத்தாள்

புத்துயிர்கொண்ட அந்தத் தூரிகையையும்
அழகாய் தீட்டியிருக்கும் அந்தச் சித்திரத்தின்
அருகில் வண்ணக்குழம்போடு ஆசையாய் ஓடியது

அவன் கைக்குள் கையைப் பொருத்தி
ஏதேதோ காதில் கிசுகிசுத்தாள்
அவன் விரல்களை அழுத்திப் பிசைந்தாள்

கதவோரம் ஒடுங்கி நின்றவள்
விழிமூடி இழுத்த சுவாசத்தில்
அவனைப்பிடுங்கி அவளுக்குள் நட்டுக்கொண்டாள்

வண்டி ஒரு குலுங்கலோடு நகர முற்பட
அவன் முதுகில் அழுந்தக் கை பதித்து
பிரசவம் போல் வெளியே தள்ளிவிட்டாள்….

தூரிகை மழையில் கரைந்து போனது
சித்திரம் உள்ளே காணாமல் போனது
நகரும் சக்கரங்களில் என் இதயம் கசங்கியது

கை நீட்டி ஒரு மழைத்துளியை கையகப்படுத்தி
விரல் மூடி மெதுவாய் விரித்துப் பார்த்தேன்
மொட்டாய் சிரித்த மழைத்துளி கண்சிமிட்டி
காதலித்துப்பார் என்றது கிசுகிசுப்பாய்

-0-

May 14, 2011

வர்ணம் கலைந்(த்)த கிராமத்து கூத்து!

உள்ளூர் திருவிழாக்களின் மேல் படிந்திருக்கும் சாயம் சிறிது சிறிதாக வெளுத்திருந்தாலும், அதன் மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறைந்து போனதாகத் தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் சில வருடங்களாக கோவில் புனரமைக்கப்படும் பணி நடந்ததால் திருவிழா மோகம் அற்றுப்போயிருந்தது. சமீபத்தில் நடந்த குடமுழுக்குக்குப் பிறகு வரும் முதல் திருவிழா. ஆனாலும், சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த பாட்டியின் மறைவையொட்டி எங்கள் குடும்பத்திற்கு சில காலங்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதால், இந்த ஆண்டின் திருவிழா குறித்த கனவுகள் சுருண்டு படுத்துக்கொண்டது.

அந்தச் சூழலில் உறவினர் கிராமத்தில் திருவிழா, கெடா வெட்டு என அழைப்பு வர, ஆண்டெனா அந்த திசையை நோக்கி திரும்பிக்கொண்டது. மதியம் விருந்துக்குச் சாப்பிடப் போகலாம் என நினைத்து திட்டம் தீட்டும் போது, கெடாவெட்டு குடும்பத்திலிருந்து அழைப்பு வந்தது “அண்ணா, கூத்துப் பாக்கணும்னு ரொம்ப நாளாக் கேட்டீங்களே, இன்னிக்கு ராத்திரி இங்கே கூத்து நடத்துறாங்களாம்” 

கடகடவென நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டு சொந்த கிராமத்திற்கு ஒரு எட்டு போய்விட்டு, மாலை கெடாவெட்டுக்கு போகலாம் என்ற திட்டத்தோடு, கெடாக்கறியை விட கூத்துதான் முக்கியம் எனும் அடிப்படையில் ”எதோ மிச்சம் மீதியிருக்கிறத எடுத்து வை ராசா, லேட்டா வந்து கவனிச்சுக்குறேன்” என முன்பதிவு செய்த பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. ”காலையில இறக்கின ’பனம் பால்’ நீங்க வராதால தீர்ந்து(!!) போச்சு, மத்யானம் இறக்குறதையாவது ருசி பாருங்க” என்று. பனம்பாலின் ருசி குறித்த குஷி வேகவேகமா விரட்டியது அங்கே செல் என. 

ஒருவழியாய் உள்ளூரில் மதியம் உண்டு முடித்து, ஆடி அசைந்து கெடாவிருந்துக்குச் செல்லும் போது, வீடே காலியாக இருந்தது. எல்லாம் கழுவிக் கவிழ்த்திய நிலை, இருந்தாலும் ஆறுதலாய் ”தனியே எடுத்து வெச்சிருக்கோம், கவலைப்படவேணாம்” என வார்த்தைப் பாலை வார்த்துவிட்டு, மெதுவாய் கிணற்று மேட்டுக்குக்கு கடத்திப்போனார்கள். மூன்று மணிக்கு முட்டியைவிட்டு இடம்பெயர்ந்து வந்த பனம்பால் கொஞ்சம் புளிப்பேறும் முனைப்பில் காத்துக்கிடந்தது.

உதடுகளின் வழியே நரம்பு வரை சிலுசிலுத்த மின்சாரம், சித்தெறும்புக் கடியென சீண்டிப்பார்த்தது. இரவு விருந்தை முடித்து ”கூத்துப்பார்க்கப் போறோம்” என்றவர்களை விந்தையாகப் பார்த்தார்கள். ”இதென்னடாது, டவுன்ல இருக்கிறவங்க கூத்தெல்லாம் பாப்பீங்ளா”

ஒருவழியாய் கோவில் அருகே வந்தால் கூத்து நடப்பதற்கான அறிகுறி எதையும் காணவில்லை. சூழலைப்பார்க்கும் போது நிஜமாவே கூத்துதானா இல்ல பைப்ல ஷவர் செஞ்சு விடுற ரெக்கார்டு டேன்ஸா இருக்குமோ என கொஞ்சம் பயம் வந்தது. ”அட அந்த டேன்ஸா இருந்தா இந்நேரம் கூட்டம் பிச்சுக்காதா?, ஒரு பயலையும் காணோம் பாருங்க, இது கூத்துதான்” என்று உடன்வந்தவர்களின் வார்த்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

அங்கிருந்த ஒருவரை நெருங்கி “ஏனுங்க, கூத்து ஆடுதுன்னு சொன்னாங்க, ஒன்னுமே காணோமே” எனக் கேட்டபோது அப்போதுதான் கூத்து ஆடுபவர்கள் வந்ததாகவும், கொஞ்ச நேரத்தில் ஆரம்பித்துவிடும் என்று கூறினார். கூத்து பார்த்து குறைந்தது 20 - 25 வருசம் இருக்குமென நினைக்கிறேன். ஆனாலும் புழுதி பறக்கும் அந்தக்கூத்து அவ்வப்போது மனதுக்குள் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றது.

கூட்டத்துக்குள் தூங்கும் குழந்தைகளைத் தூக்கிப் போவது, தூங்கி விழும் பெருசுகளின் காதில் துணியை முறுக்கி விடுவது என கோமாளி செய்யும் அலப்பறையும், குதர்க்கமாய்ப் பேசிப்பேசி, சாட்டையில் வாங்கும் அடி கோமாளியும், ஒத்து ஊதி, கூடவே பாடும் வாத்தியக் குழுவும், ஒவ்வொரு பாத்திரத்துக்கும் கொடுக்கும் அறிமுகப் பில்டப்பும், ஓங்கிய குரலில் முழங்கும் பாடலும் வசனமும், அந்த சிறிய சதுர இடைவெளிக்குள் எதுமில்லாமல் அவர்கள் நடத்தும் கதையின் களத்தை அப்படியே மனதுக்குள் படிய வைப்பதில் கூத்துக்கலைஞர்கள் என்றுமே வெற்றியடைந்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் சரிந்த மாதிரி கோணல்மாணலாக இழுத்துக்கட்ட பதாகைக்கு முன்பு, செங்கற்களை அடுக்கி உயரம் ஊட்டப்பட்ட பலகைகள் மேல் ஆர்மெனியம், தபலா, ஒத்து என கசங்கிய சட்டையும், லுங்கியுமாக சுதி சேர்த்துக்கொண்டிருந்தார்கள். மாரியம்மன் கோவில் பந்தலடியில் ஏற்கனவே கட்டியிருந்த குழல் விளக்குகளுக்கு அடியில் தோரயமான சதுரமாய் இடம் விட்டு ஆங்காங்கே சிறியது முதல் பெரியது வரை சாக்கு, ஜமுக்காலம் என விரித்து அமர்ந்திருந்தனர்.

பொறுமை தீரும் வரை, வெறும் சுதி மட்டுமே சேர்ப்பார்களோ, கூத்து துவங்காது போல என நினைக்கும் போதே, கோமாளி வெளியில் வந்தார். வழக்காமான கோமாளிகளின் உடையல்லாமல், புள்ளிபோட்ட சட்டையும், ஜிகு ஜிகு பேண்டுமாய் கோமாளிக்குரிய கோமாளித்தனமில்லாத உடை. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அவர் தொண்டையிலிருந்து வெளிவரும் சப்தத்தை விட காற்றுதான் அதிகம் வந்தது. என்ன செய்தும் குரல் எட்டவில்லை. கொஞ்ச நேரத்தில் கோமாளிக்கு பேச்சு, ஏச்சுத் துணைக்கு தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு வந்த ஆள், கோமாளி பச்சை பச்சையாகப் பேச, அதற்கேற்றார் போல், வேண்டுமானவரை கோமாளியை சாட்டையில் அடிப்பது என நேரத்தை தின்று துப்பிக்கொண்டிருந்தார்களே ஒழிய கூத்தை முனைப்போடு முன்னெடுக்கும் முயற்சி அற்றிருந்தது.

அடுத்து வந்த கூத்து வாத்தியார் இது என்ன கூத்து என விளக்குகிறேன் என கொஞ்சம் பேசி நிறையப்பாடிவிட்டு மறக்காமல் கோமாளியையும் நாலு சாத்து சாத்திவிட்டுச் சென்றார்.  ஒரு காலத்தில் கூத்தில் கோமாளியை அடித்தால் விழுந்து விழுந்து சிரிக்கும் கூட்டம், இப்போது அதற்கெல்லாம் ஒன்றும் அசந்ததாகத் தெரியவில்லை.

சரி எப்போதான் கூத்து ஆரம்பிக்கும் என நெளிந்து கொண்டிருந்த போது, 
பின்பக்கம் இருந்த ஒப்பனைப் பகுதி தடுக்குகளின் இடைவெளியில் முழுதாய் அரச வேடமிட்ட ஒரு ஆள் ”பக் பக்” என பீடியை இழுத்துக்கொண்டிருப்பது கொஞ்சம் விநோதமாகப்பட்டது. வேசமிட்டவனை அந்த ராசாவாகவே மனதில் வரிந்து கொள்ளும் பொதுப்புத்தி மனதுக்கு, பீடி இழுப்பதை ஏனோ ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தது.

ஒருவழியாய் கோமாளியும் கூத்து வாத்தியாரும் என்ன கூத்து என்று சொல்லி முடிக்கவும், உள்ளேயிருந்து ஓங்காரமான குரலில் வந்தார் துரியோதன மகராஜாவான அந்த பீடிப் பார்ட்டி! என்னதான் ஓங்காரம் போட்டாலும் குரல் தேய்ந்துதான் வந்தது, கூடவே வெளியேறிய வார்த்தைகளுக்கும் நிகராக மூச்சும் வாங்கியது. விடியும் வரை துரியோதனன் என்ன பாடுபடப்போராறோ என்ற நினைப்போடு என்னுடன் வந்தவர்களைப் பார்க்க, இனம் புரியாத ஒரு கொலை வெறியை என் மேல் செலுத்த விரும்பாமல் சமாளித்தபடியே இருப்பது புரிந்தது. நானே வலிய அழைத்தேன் “ஒரு டீ சாப்ட்டு வரலாமா” துள்ளி எழுந்தன உடன்பிறப்புகள்.
அப்படியே ஒதுங்கி திருவிழாவிற்காக முளைத்த கட்டில் கடைகளை ஒட்டிய டீக்கடையில் டீ கேட்க ”சில்வர் கிளாசா, இல்ல ப்ளாஸ்டிக் கிளாசா” எனக் கேட்க, ப்ளாஸ்டிக்கிற்கு எதிரானா கொம்பு சர்ரென நீண்டது. உடனிருந்தவர் ”பரவால்ல சில்வர் டம்ளர்யே குடுங்க, புழங்குற சாதிதான்” என்றார். அப்போதுதான் சுருக்கென தைத்தது, ”அடப் பன்னாடைகளா இது ரெட்டைக் குவளை வெங்காயம் போல” என.

தேநீர் உறிஞ்சி முடிக்கும் போது துரியோதன் உள்ளே சென்றிருக்க, மஞ்சள் பைஜாவும் லுங்கியுமாக(!!) அடுத்த ஆள், தேங்காய் நாரை வண்டி மையில் நனைத்தது போல் மீசை, தாடி தலைமுடியென உலகமகா(!!!) ஒப்பனையில் வீராவேசமாக ஏதோ கதை சொல்லி சவால் விட்டுக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவரிடம் இது யார் எனக் கேட்டேன் “சகுனி மகாராசா” என்றார். கைபேசியை எடுத்துப் பார்த்தேன் ஒரு மணிக்கு அருகாமையில் காட்டியது, உடன் வந்தவர்களைப் பார்த்தேன், என்னைப் பரிதாபமாகப் பார்த்தபடி தலையை அசைத்தார்கள். அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஈரோட்டில் வீட்டில் நிதானமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தோம். கனவில் கூத்தின் மேல் இருந்த வர்ணம் கலைந்தோடியது, விடிந்து எழும் போது, எல்லாம் கனவு போல் தோன்றியது!







-0-

May 11, 2011

உண்மை ஒன்றுதான்

அக்கணத்தில் பிறப்பது செய்தி
காலம் தாழ்ந்து கசிவது ரகசியம்
அடையாளக் குறிகள் 
அழகாய்ச் சுட்டினாலும்
உண்மை என்னவோ ஒன்றுதான்

-0-

சில அழைப்பிதழ்களைக் காணும்போது
கண்ணினூடாக மனதில் படிகிறது
பலருக்குள் அடர்த்தியாய்
படிந்துகிடக்கும் சாதிச் சாயம்

-0-

நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்

-0-

அலங்காரம் அற்றுப் பிறக்கும் கவிதை
வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்
தன்னைத் தொலைத்துவிடுகிறது

-0-


May 8, 2011

ஒரு எழவின் கதை


முப்பது வருடங்களாகப்பிரிந்த மனைவி
திருமணத்திற்குப் பிறகு
ஒட்டு றவு அற்றுப்போன மகள்
மகன் சாவுக்குபின் பேத்திகளைக்கூட
அண்டவிடாத மருமகள் என
உறவுகளுக்காய்த் தவித்தவன்
ஒருநாள் உறக்கத்திலிருந்து
எழ மறந்து போனான்

”எழவு காங்கனும்” எனும் மையப்புள்ளிக்கு
திசைகளிலிருந்து திரும்பிய மூவருக்கும்
மறந்துபோன அவன் வாசத்திற்குப் பதில்
மரணம் தின்ற எச்சத்தின் வாசமும்
அடக்கம் பண்ணிக் காரியம் செய்ய
காசுக்கு எங்கே போவதென்ற திகைப்பும்
அடர்த்தியாய் அடித்தது  
 
இறந்தவனின் தலையணைக்குக் கீழே
இருந்த எட்டாயிரம் ரூபாய்க் காசும்
இரும்புப்பெட்டிக்குள் கிடந்த பத்திரங்களும்
அவனை எந்தப்பஞ்சாயத்துக்கும் இழுக்காமல்
நல்லபடியாய் நகர்த்திப்போன
மூன்றாம் நாள் அண்டம் பொறுக்கி
ஆற்றில் விட்டு கூரை மேல் சோறு போட்டு
பத்திரங்களின் கனத்தை பங்கு பிரித்ததில் 
தலைக்கு லட்சத்துக்குமேல் வந்தது


உறவுகள் ஒன்று கூடிப் போட்ட
மறுவிரால் விருந்தில் கோழிக்குழம்பை
சோற்றில் பிசைந்த மனைவியின்
வாயிலிருந்து நழுவியது ”எங்கூட்டுக்காரன்”
வெத்தலை மடித்துக்கொண்டே வாய்க்குள்
மென்று கொண்டிருந்தாள் மகள் “எங்கப்பன்”
யாரிடமோ அலைபேசியில் கதை
பேசும் மருமகள் உதிர்த்தாள் ”எங்க மாமனாரு”

காமத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும்
இடையே உரசி உரசிக் கிழியும் தருவாயில்
தூக்கியெறியப்பட்ட ஆணுறை போல்
உறவுகளில் நசுங்கிக்கிடந்த அவனின் ஆவி
அருகிலிருந்த ஊஞ்ச மரத்தின்
ஒரு கிளை நுனியில் ஆடிக்கொண்டிருந்தது

-0-

May 6, 2011

சில கூட்டல்களும் ஒரு சமக்குறியும்


ஊர்ப்பக்கம் அடிக்கடி ஒரு கதை சொல்வார்கள். ஒரு ஊரில், அந்தப் பகுதி முழுதும் கொள்ளையடித்த பின், ஒரு மிகப் பெரிய திருடனும், அவனின் எடுபிடியும், இரவாகிவிட்டதால் ஊர் ஓரமாய் இருக்கும் கோவிலில் படுத்திருந்துவிட்டு காலையில் செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். சின்ன கோவில் என்பதால் எடுபிடி, இருக்கும் இடத்தில் சுருண்டு சமாளித்துக் கொள்கிறான். திருடன் மட்டும் இடம் போதவில்லை என்பதால் தில்லாக காலைத் தூக்கி சாமி தலைமேல் வைத்துக் கொண்டு உறங்குகிறான். பொறுத்துப் பொறுத்துப்பார்த்த சாமி பாரம் தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் திணருகிறது. ஒரு வழியாய் கையை நீட்டி அருகில் உறங்கும் எடுபிடியை அடித்து எழுப்புகிறது. ”டேய்… மரியாதையா அவனைக் காலை எடுக்கச்சொல்றியா? இல்ல உன்னோட கண்ணை நோண்டட்டுமாடா?” என்றது

+

எல்லா வரம்புகளையும் மிதித்து, எல்லா விதிகளையும் உடைத்து, பாகிஸ்தான் அடைகாத்து(!) வைத்திருந்த தனது ஒற்றை எதிரி ஒசாமாவை, அர்த்த ஜாமத்தில் வீரதீரமாகக் கொன்று கொக்கரிக்கிறது அமெரிக்கா. “எங்கள் இறையாண்மையின் விரைக்கொட்டைகளை நசுக்கிட்டீங்களேடா”ன்னு முனகிய பாகிஸ்தான் அதை முக்கிச் சொல்லவும்முடியல, ஒரு முடியைக்கூட பிடுங்கவும் முடியல.

பட்டியல் போட்டால் இரண்டு கை விரல்கள் பத்தாது என்பது போல், இந்தியாவுக்குத் தேவையான 25க்கும் மேற்பட்ட எதிரிகளை சொகுசாய் தனக்குள்ளே அடைகாத்துக் கொண்டே கர்ஜிக்கிறது பாகிஸ்தான் “ஏய், இந்தியா ஒழுங்கா பொத்திக்கிட்டு இரு. உள்ளுக்கே வரனும்னு நினைச்சா, தொலைச்சுப்புடுவேன் படவா”.

+

அலைக்கற்றையில் ஊழல், விளையாட்டில் ஊழல், ராணுவ விதவைகளுக்கான மனையில் ஊழல் என ஊழல்களின் ஒட்டுமொத்த தொகுப்பின் சூத்திரதாரியாக இருக்கும் தேசியக் கட்சியை நேரடியாகத் தீண்டமுடியாத சக்தி, ஒரு மாநிலக் கட்சியை ஓடஓட விரட்டுகிறது.

+

மிகப் பெரிய ஊழல் வெல்லக்கட்டியை திகட்டத் திகட்டத் தின்றவர்களை செரித்துக்கொள்ள அனுமதித்துவிட்டு, சுமந்துவந்து கொடுத்து விட்டு, ஒட்டிக்கொண்டிருந்ததை விரல் சூப்பிக்கொண்டிருந்தவரை மட்டும் ஒவ்வொரு கம்பியாய் எண்ணச் சொல்லி கணக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

=

சொல்லவேண்டிய இடத்தில் பலவற்றைச் சொல்ல முடிவதில்லை, செயல்படுத்த வேண்டிய இடத்தில்  பலவற்றைச் செயல்படுத்த முடிவதில்லை. எல்லா இடத்திற்கும் இது பொதுச்சித்தாந்தம் தான் போல. அவரவர் நாட்கள் அதனதன் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது. காலமும் எல்லாக் கருமங்களையும் கவனித்துக்கொண்டே கள்ள மௌனத்தோடு தன் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருக்கிறது.

எப்போதாவது ”எல்லாம் ஒரு நாள் உள்ளே போய்டுவீங்கடா”னு எதோ மனநிலைபிறழ்ந்த மனிதனின் குரல் காதில் விழுந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இயற்கையும் ஏதேதோ ரூபங்களில் எச்சரிக்கைகளை தெளித்துக்கொண்டிருக்கிறது.

-0-

May 4, 2011

ஒன்னு ரெண்டு மூனு



1.
எல்லாக் காதல் கவிதைகளிலும்
யாரோ ஒருத்தியின் வாசம்
படிந்துதான் கிடக்கிறது
சிலசமயம் அவள் அறிந்து
பலசமயம் அறியாமல்


2.
காத்திருத்தலின் 
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
காத்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது

3.
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் படைப்புகளிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது
உடையணிவிப்பதோ
உடைகிழிப்பதோ
பூச்சூடி முகப்பூச்சிடுவதோ
சிதைத்துக்காட்டுவதோ
மட்டும்தான் படைப்பாளி

-0-

May 2, 2011

நான் இறங்கினேன் அது ஏறியது

சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட மெஸ் அது. சாலையோரம் வாயிலில் தோசைக்கல் போட்டு, உள்ளே இருக்கும் கூடத்தில் உணவு பரிமாறும் உணவகம். ஒட்டிய கட்டிடத்தில் டாஸ்மாக் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.

புதிய உணவகம் என்பதால் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. இருக்கும் எட்டு மேசைகளுக்கும் சேர்ந்து ஆங்காங்கே ஆறேழு பேர் அமர்ந்து சாப்பிட்டாலே அதிகம். ஆனாலும் வீட்டுக்கு வாங்கிப்போவோர் எப்போதும் ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருப்பார்கள்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் இருக்கும் உணவகம் என்பதால் இரவுகளில் வெளியில் சாப்பிடும் சூழல் வந்தால் அந்தக்கடையில் சாப்பிடுவது வழக்கம்.

பல நாட்களுக்குப் பிறகு இந்த முறை சென்றபோது, பரிமாற புதிதாக இரண்டு சிறுவர்கள் இருந்தனர். மெலிந்த தேகமாய் சின்னஞ் சிறுவர்களாக இருந்தனர். இருவருமே சில்வண்டு போல பரபரப்பாக இருந்தனர். டவுசர் போட்டால் சிறுவனாக தெரிவோம் என்பதலோ என்னவோ, லுங்கி இருவருமே லுங்கி கட்டியிருந்தனர்.

நான் அமர்ந்ததும் பளிச்சென இருந்த பையன் புன்னகைத்த முகத்தோடு ஓடிவந்தான் வேகமாக இலை போட்டு தண்ணீர் வைத்து

“அண்ணா என்னங்ணா சாப்ட்றீங்க” என்றான்

வாடிக்கையாய் இலையைப் போட்டு தண்ணீர் வைத்துவிட்டு நாமாக எதாவது சொல்லட்டும் என்று உயிர்ப்பில்லாப் பார்வையை வீசும் ஆட்களைப்பார்த்த எனக்கு, இது கொஞ்சம் புதிதாக, உற்சாகமா இருந்தது.

“தம்பி ரெண்டு பரோட்டா, ஒரு ஒன்சைட் ஆம்லெட்”

“போதுங்ளாண்ணா” என்றான் வெள்ளந்தியாய்.

என்னவோ உறவினர்கள் வீட்டில் ”அட இன்னும் கொஞ்சம் வெச்சுக்க” என உபசரிக்கும் உணர்வு மனதுக்குள் வந்தது.

குறும்புன்னகையோடு, ”போதுங்கண்ணு, உம்பேரென்ன”

”அண்ணா, விஷ்ணு பிரசாத்ண்ணா”

தோசைக் கல்லைப் பார்த்து ”ஒர்ர்ர்ரு ஒன்சைட் ஆம்ம்ம்ம்ளேட்” என கத்திவிட்டு பரோட்டாவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு வந்தான்.

எனக்கு இடது பக்க மேசையில் இருந்த ஒரு போதைத் திலகம் சிறு தடுமாற்றதோடு இலையைக் குழப்பிக் கொண்டிருந்தது. தண்ணீர் டம்ளரை எடுப்பதும், கீழே வைப்பதுமாய் ஒரு போராட்டம் ஒரு ஒழுங்கோடு நடந்து கொண்டிருந்தது. நல்ல போதையில் இருக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டினார்.

“டேய்ய்ய்ய்ய்…. @@க்டி, இங்க வாடா”

போதைத் திலகம் அந்தச் சிறுவன் விஷ்ணுபிரசாத்தைக் கூப்பிட்டார்

”அண்ணா, என்னங்ணா” என்று சுணக்கம் எதுவும் காட்டாமல் ஓடிவந்தான்

”முறுவலா ஒரு கலக்கி சொல்லுடா”

தோசைக்கல் அருகே நகர்ந்தவன் “முறுவலா ஒரு கலக்கி” என்றான்
அங்கிருந்த ஆள் எதோ சொல்லியிருக்க வேண்டும்

உடனே போதைத் திலகத்திடம் ஓடி வந்து “அண்ணா, வெறும் கலக்கிதாங்ணா இருக்குதாம், முறுவலா கலக்கி வரதாம்”

”ஹெ ஹெ ஹெ” என சிரித்த போதை ”சும்மா சொன்னேண்டா, முறுவலா எப்படிடா வரும், கலக்கியாவே கொண்டா”

விஷ்ணுபிரசாத் வெட்கப் புன்னகையோடு நகர்ந்தான்

அடுத்த மேசை, ஆர்டர், தோசைக்கல்லை நோக்கி குரல் எனச் சிட்டாக ஓடிக்கொண்டேயிருந்தான்.

ஒரு வழியாய் போதைத் திலகம் தின்று முடித்து கை கழுவி வந்த போது கொஞ்சம் சோம்பு போட்ட தட்டில் பில்லோடு நீட்டினான் விஷ்ணுபிரசாத்.

“என்னடா ரேட்டு எல்லாம் ஜாஸ்தியா போட்ருக்கே”

”இல்லீங்னா, எப்பவும் அதே ரேட்தான்”

ஐந்து பத்து ரூபாயைக் கொடுத்த போதைத் திலகம், ”எவ்வளவுடா பில்” என்றது

”நாப்பத்தொன்னுங்ண்ணா”

“மிச்சம் ஒம்பது ரூவாய நீயே வெச்சிக்டா” என அவன் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளி “வரட்டுமாடா மாப்ள?” எனத் தடுமாற்றத்தோடு போதை நகர்ந்தது.

கல்லாவை நோக்கி நகர்ந்தவன் உடல் முழுக்க பூத்த சந்தோசம் பூத்திருந்தது.

கல்லாவில் இருந்தவரிடம் சிரித்துக்கொண்டே ஏதோ சொன்னான். அவரும் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.

பத்து ரூபாயைச் சட்டைப்பையில் திணித்தவாறு சந்தோசமாக ஒன் சைட் ஆம்ளெட்டோடு என் இலைக்கு வந்தான்

“இந்தாங்ண்ணா” 

புன்னகைத்தேன், என்னைப் பார்த்து சிரித்தவன் சிரிப்பில் அந்த பத்து 
ரூபாய் நோட்டின் காந்தி சிரிப்பது போல் தோன்றியது.

“உன்னட வயசு என்ன?”

அவன் முகம் லேசாய் கருத்தது
“பன்னண்டுங்ணா”

“வீடு எங்கப்பா? பள்ளிக்கூடம் போகலையா”

”நான் தேவகோட்டைண்ணா” என்றவன் கொஞ்சம் யோசித்துத் தடுமாறி “ஸ்கூல் லீவுண்ணா, லீவுல வேலைக்கு வந்திருக்கேன்” எனச் சொல்லும் போதே முகம் வெளுத்திருந்தது.

நகர்ந்தவன் முகத்தில் வாட்டம் அலையலையாய் படிந்து கொண்டிருந்தது.

சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போது, அருகில் நின்று பழைய செய்தித்தாளின் கிழித்த பாதியைக் கை துடைக்க நீட்டினான்.

கைக் குட்டையை எடுத்துக்கொண்டு செய்தித்தாளைத் தவிர்த்தபோது கவனித்தேன், கொட்டையெழுத்தில் தலைவர்களின் மே தின வாழ்த்து செய்திகள் தெரிந்தது.

ஆமாம் யார் இந்த தலைவர்கள். தலைவர்கள் என்ற பெயரில் இன்று இயக்கங்களா நடக்கிறது. இயக்கம் என்ற அடிப்படையில் துவங்கிய கட்சிகள் எல்லாமே இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் மாறிவிட்டனவே. இயக்கம், கொள்கை எனக் கட்சியைப் பின் தொடர்ந்த தொண்டர்கள், காலப்போக்கில் நிறுவனங்களின் ஊழியர்கள் போல் கட்சி எனும் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து ஊதியத்தையோ, கையூட்டுகளையோ நினைத்துதானே மந்தைகளாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தலைவர்களின் வாழ்த்து தங்கள் தொண்டர்களுக்காவாது எதும் மகிழ்ச்சியைத் தருமா?

உழைக்கும் மக்களுக்கு என்ற அடைப்புக்குறிக்குள் தலைவர்கள் சொன்ன அந்த வாழ்த்து விஷ்ணுபிராசாத்துக்கும் சேர்த்துத்தானா? அவன் அதை வாசித்திருப்பானா?, அந்த வாழ்த்து அவனுக்கு எதும் மகிழ்ச்சியைத் தந்திருக்குமா?

வெளியேறும் போது எதேச்சையாய் உள்ளே திரும்பிப் பார்த்தேன். விஷ்ணுபிரசாத்தும் சரியாக என்னைப் பார்த்தான். இவன் இனி நிஜமாய்ப் பள்ளிக்கூடம் போவானா? போதை ஊட்டத் துவங்கியுள்ள அந்த பத்து ரூபாய் சில்லறைத் தாட்களின் மோகம், அவன் படிப்பை இனியும் தொடர அனுமதிக்குமா என்ற நினைப்போடு படியிறங்கினேன். இன்னொரு போதைத் திலகம் என் தோளில் லேசாய் உரசிக்கொண்டே படியில் ஏறிக்கொண்டிருந்தது.

சாப்பிட்ட பரோட்டாவும் ஒன்சைடு ஆம்ப்ளெட்டும் செரிக்குமா என்ற எண்ணம் வயிற்றில் கனக்கத் தொடங்கியது!

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...