Showing posts with label பரிந்துரை. Show all posts
Showing posts with label பரிந்துரை. Show all posts

Oct 28, 2010

ஓங்கி அறையும் ஆயிஷா

நம் வீடு தவிர்த்து, நண்பர்கள் வீட்டில் தங்கும் போது வெறுமையாய் கிடைக்கும் நேரம் எப்பொழுதுமே சுவாரசியம் நிறைந்த ஒன்று. அங்கு கிடக்கும் புத்தகங்கள், படங்கள், புகைப்பட தொகுப்புகள் என அவர்களின் சுவை பற்றி அறிந்து கொள்வதில் இருக்கும் சுகம் கொஞ்சம் அலாதியானது. அப்படி ஒரு தங்கலில் எனக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு அழகிய புத்தக அலமாரி. அலமாரி நிறைந்து கிடந்தால், ஆகா இவ்வளவா என்ற பிரமிப்பு, அதைக் கிண்டிப்பார்க்கும் ஆர்வத்தை கொஞ்சம் குறைத்து விடுவதாகவே உணர்வதுண்டு. நான்கடுக்கு கொண்ட அந்த அலமாரியின் இரண்டு தட்டுகளில் மட்டும் புத்தகம் அழகாய் கிடந்தன. இருக்கும் நேரத்தையும், சோம்பேறித்தனத்தையும் கணக்கிலிட்டு சின்னதாய் இருக்கும் சில புத்தகங்களை மட்டும் கையகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்.

அப்படிக் கைக்கொண்டதிலும் மிகக் குறைந்த தடிமனான புத்தகமே முதல் தேர்வாய் மாற புரட்ட ஆரம்பித்தேன். கருப்பு நிறத்தில் அட்டைப் படமும், ஆயிஷா என்ற தலைப்போடும் இருந்தது.



ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை என்ற தலைப்போடு அந்தப் புத்தக வரிகள் துவங்க, முன்னுரைதான் புத்தகமோ என்ற நினைப்போடு வரிகளை மேய, மிக அழகாய் உள்ளிழுத்துக்கொண்டு போகிறது வரிகள். சீரான வேகத்தில் போகும் வாசிப்பை, காந்தம் குறித்து ஆசிரியை நடத்தும் வகுப்பில் மிஸ்என்ற குரலோடு எழும் ஆயிஷாவின் குரல் தடம் மாற்றுகிறது.

மிஸ் என்று எழுந்தவளை என்ன வாந்தி வருதாஎன வக்கிர வார்த்தையில் கேள்வி கேட்கும் ஆசிரியை என் உயர்நிலைப் பள்ளி வாத்தியார்கள் சிலரை கண்ணுக்குள் போட்டு நிரப்பியது.

ஆனாலும் அன்று ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.

அதேசமயம், பத்தாம் வகுப்பு மாணவியாய் இருந்து கொண்டு பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அறிவு(!) மெச்சப்படாமல், குற்றமாக தூக்கிலப்படுகிறது. அறிவைக் கொலை செய்யும் போது உருவாகும் வலி கொடியது என்பது எவருக்குப் புரிகிறது. அறிவைத் தூர்வாரும் ஆயிஷாவின் கேள்விகள், பல ஆசிரியைகளை அடித்துத் துன்புறுத்துகிறது. நாம் கண்டு கடந்து வந்த பல ஆசிரியைகளின் உலகத்தை ரெஜினா என்ற ஆசிரியை மூலம் நினைவும் படுத்துகிறது.

ஆயிஷாவின் மனதிற்குள் துளிர்த்த விஞ்ஞானம் குறித்த மிகப் பெரிய தேடுதலே ஆயிஷாவை தன் பசிக்கு புசித்துக்கொள்கிறது. பக்கங்களை முடித்து, மனதிற்குள் சுவர்கள் வெடித்து, புத்தகத்தை கீழே வைக்கும் போது கண்களுக்குள் நெருப்பாய் கொதிக்கிறது, நானும், நாமும் நம்மைச் சீண்டிய பல கேள்விகளுக்காகவும், இன்னபிற அறிவுப்பூர்வமான(!) காரணங்களுக்காகவும் முடக்கிப் போட்ட ஆயிஷாக்களின் உருவங்கள்.

**********
உபரித்தகவல்: தமிழில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான புத்தகம். 8 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மிக முக்கியம்: குழந்தைகளுக்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்.


புத்தகம்: ஆயிஷா | ஆசிரியர் :  இரா. நடராஜன் | ஆசிரியர் வலைப்பக்கம் | பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் | விலை:  ரூ.10
இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்க:
* தமிழ்  சுட்டி * ஆங்கிலம்  சுட்டி
 


.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...