அழகான தங்கத்திருவோடு
வாங்கும் வறுமைக்கு
அட்சய பாத்திரத்தில்
மலம் கழித்த பெருமையும்…
வீச்சத்தை மறைக்க
வாசம் வழியும் பூவை
வலிக்கவலிக்க மேலும் கசக்கி
போர்தொடுக்கும் கலவியும்…
பச்சைப்பிள்ளை பசியில்வாட
பால் கனக்கும் மார்புக்காம்புகளில்
கண்ணைப்பறிக்கும் வர்ணமென
விஷம் பூசும் விபரீதமும்…
விளக்குகளில் குளிர்காய்ந்து
இரவுகளைப் பகல்களாக்கி
எலும்புகளுக்குள் நோய்புகுத்தி
இற்றுப்போகும் மனதுகளையும்...
எழுதிச் சலித்து விட்டது
வெளுத்துச் சாயமிட்ட விஷத்தில்
மாண்டுபோன நிலங்களின்
வண்ண வெடிப்புகளுக்கிடையே!
-0-