நேசிக்க நிறையக் காரணங்கள்
ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சிக்கான நேர்காணல் ஒளிப்பதிவில் கடந்த திங்கட்கிழமை கலந்து கொண்டேன். (நிகழ்ச்சி ஒளிபரப்பும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிகிறேன்.) இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பிற்கு மிக முக்கியக் காரணம் பதிவுல நண்பர்கள் ஆரூரன் மற்றும் உண்மைத் தமிழன். பதிவர் உண்மைத் தமிழனிடம் இதற்கு முன்பு ஒரு முறை சில நொடிகள் மட்டுமே கைபேசியில் பேசியிருக்கிறேன். ஆனாலும், நான் இந்த முறை சென்னை சென்ற போது என்னை பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்று, எல்லா உதவிகளையும் செய்து உபசரித்து அனுப்பிய நண்பர் உண்மைத் தமிழன் சரவணனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
நிகழ்ச்சி நிறைந்து, வானம்பாடிகள் பாலண்ணாவை சந்திக்கச் செல்லும் போது கடும் பசியில் வயிறு துடித்தது. அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்த போது, குளிர்ச்சியான குடி நீரோடு சரவண பவன் சாப்பாடு தயாராக இருந்தது. பசிக்கும் நேரத்தில் எதிர்பாரமல் கிடைக்கும் உணவு அமுதமே. இந்த அன்பும், உபசரிப்பும் எனக்கொரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.
வஞ்சம், கோபம், குரோதம் போன்ற காரணங்களை புறந்தள்ளி, பதிவுலக நண்பர்களோடு நேசம் பாராட்ட பல காரணங்கள், தருணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது மீண்டும் மீண்டும் மனதில் பளிச்சிடுகிறது.
------------------------
உறுத்தும் உணவு
சரவண பவனின் பார்சல் சாப்பாடு அருமையாகவே இருந்தது. ஆனாலும் சாப்பாட்டோடு கொடுக்கப்படும் சாம்பார், கூட்டு, ரசம், பாயாசம் என ஒவ்வொரு பதார்த்தங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தருவதை ஜீரணிக்க முடியவில்லை. பசியும், வாங்கி வைத்த நண்பரின் அன்புமே அந்த உணவை அந்த இடத்தில் சாப்பிட வைத்தாலும், மனதுக்குள் நெருடிக் கொண்டேயிருந்தது, ஒரு வேளை சாப்பாட்டுக்கு நாலு பிளாஸ்டிக் டப்பாக்களை வீணடிக்க வேண்டியிருக்கே என்று. இதற்கான மாற்றுகள் மிக அவசரமாகப் புகுத்தப்பட வேண்டும்.
------------------------
சட்டம் யார் கையில்
போடிநாயக்கனூரைச் சொந்த ஊராகக் கொண்டிருக்கும், நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்ன தகவல், போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்குகளை தடை செய்திருப்பதாகவும். தற்போது போடி பிளாஸ்டிக் இல்லா நகரமாக இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களால் பின்பற்றப் படுகிறது. பிளாஸ்டிக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் அதிகாரிகள் வணக்கத்திற்குரியவர்கள். சட்டம் சரியாக இயங்கினால் எல்லாம் சாத்தியம் தான்.
------------------------
போலீஸ் Vs பன்றிக் காய்ச்சல்
காவல் துறையினர் இரவு நேரச் சோதனைகளில், வாகனம் ஓட்டுபவர் மது அருந்தியிருக்கின்றனரா என்பதை சோதிக்க வாயை ஊது என்று சொல்லும் பரிதாபமான போக்கே இன்னமும் இருக்கிறது. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் நபரின் வாயை ஊதச் சொன்னால், சொன்னவருக்கும் சங்குதான் ஊத வேண்டியிருக்கும். பாவம் இவர்களுக்கொரு விடிவுகாலம் வராதா?
------------------------
போடுங்கம்மா ஓட்டு!
இனிய நண்பர் கருவாயன் (எ) சுரேஷ் பாபு அவர்கள் PIT தளத்தில் மிகப் பிரபலமான புகைப்படக் கலைஞர் மற்றும் ஆசிரியர் என்பதை அனைவரும் அறிவார்கள். EPSON நிறுவனம் நடத்தும் இந்த வருடத்திற்கான சிறந்த புகைப்படக்காரர் போட்டியில் அவரையும் ஒரு வேட்பாளராக அறிவித்து, அவரது இரண்டு படங்கள் தேர்வாகியுள்ளன. அதுகுறித்த சுட்டி. புகைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சுரேஷ் பாபுவிற்கு வாழ்த்துகளையும் வாக்குகளையும் அளியுங்கள். வாழ்த்துகள் சுரேஷ் பாபு.
______________________