வீராவேசமான விமர்சனம்
இரத்த வாடை சுமக்கும் இசம்
தட்டி வளர்க்கப்படும் சாதி வெறியால்
என்ன நல்லதைக் கொடுத்துவிட முடிந்தது
வெற்று வெறியூட்டலைத் தவிர்த்து
பசி வயிற்றைக் கிள்ளுகிறவனுக்கு
நோய் உடலை உருக்குபவனுக்கு
சாதியும் இல்லை, இசமும் இல்லை
தர்க்கமும் இல்லை, தாக்குதலும் இல்லை
அவனைப்போல் இன்னொருவனும் இல்லை...
சாலையோரம் குப்பையாய் கிடக்கும்
மனநிலை பிறழ்ந்த மனித மூட்டை
எரியும் தார் சாலையில் செருப்பில்லாமல்
கருகும் அழுக்குச் சட்டைக் குழந்தை
கடமையைச் செய்ய காசு பிடுங்கும்
சில கேடுகெட்ட அதிகாரம் படைத்தவன்
என்னைச் சுற்றி இரவு உணவு இல்லாமல்
படுக்கைக்கு செல்லும் பாவப்பட்டவர்கள்
எல்லா இசத்திலும், சாதியிலும்
இருக்கத்தானே செய்கிறார்கள்
எதையோ பிடுங்கிக் கத்தை கட்டிட
இதில் நீயென்ன நானென்ன பெரிசு
வெள்ளைக்காரன் போடும் சட்டைக்கு
சேர்த்த சாயம் ஊறியதில் செத்துப்போனது
எந்தச் சாதிக்காரனுக்கான தண்ணீர் என்பதற்கு
எவரும் சண்டை போடவில்லை
சுழலும் நாற்காலியில் குளிரும் அறையில்
வார்த்தை வசப்படும் சிலருக்கு
முப்பத்தி சொச்ச பொத்தான்களின் மூலம்
விமர்சனங்களால், இசங்களால்
செத்துக் கொண்டிருக்கும் சாதிகளால்
தேடலோடு படிக்க வருபவனுக்கு
தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது
ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்

-------------------------------------------------------------------------
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.