திருப்பூர் நகரின் ஒரு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம். கணக்குப் பிரிவில் பணிபுரிந்த அந்த நபர் அது வரை நம்பிக்கையானவராகத்தான் இருந்தார். ஆனால், அன்றைக்கு அந்த நேர்மை பிறழ்ந்து போனது. வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச்சென்ற ஏழு லட்சத்து அறுபதாயிரம் பணத்துடன் தன் சொந்த ஊருக்கு ஓடிப்போய்விடுகிறார். உடனடியாக நிறுவன முதலாளி அடுத்த மாவட்டத்தில் இருக்கும் பணத்தை திருடிய நபரின் சொந்த ஊருக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு அலறி அடித்து ஓடி வருகிறார். ஆய்வாளரின் திறமை, அதிரடி நடவடிக்கையில், அடுத்த சில மணி நேரத்தில் பணம் மீட்கப் படுகிறது. மீட்ட பணத்தை ஆய்வாளர் எண்ணிப் பார்த்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். பணத்தை எண்ணிப் பார்த்தவர் பணம் முழுதும் இருக்கிறது என்கிறார்.
“சரியா இருக்கா, சரி போய்ட்டு வாங்க” என்கிறார் ஆய்வாளர்
“சார்ர்ர்ர், உங்களுக்கு எதாவது?” முதலாளி
“அட, அதெல்லாம் ஒன்னும் வேணாம், கிளம்புங்க”
ஒன்றும் பேசாமல் பையிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் கட்டை எடுத்து மேசை மேல் வைத்து விட்டு வெளியேறுகிறார் அந்த முதலாளி.
ஒரு கிளை அலுவலகத்தில் விற்பனை பிரிவில் இருக்கும் ஆள் பணத்தை ஏமாற்றுகிறார் என நேரடியாக விசாரிக்கச் செல்கிறார் இன்னொரு முதலாளி. விசாரிக்கும் போது அந்த விற்பனை ஆளை ஓங்கி அறைகிறார். அடிவாங்கியவன் நேரடியாக காவல் நிலையம் செல்கிறான்.
முதலாளி அந்தக் காவல் நிலைய ஆய்வாளரின் நண்பரை சிபாரிசு பிடிக்கிறார். அதே சமயம் புகார் கொடுத்த நபரை ”எதுக்கு உன்ன அடிச்சார்?” என்று விசாரித்ததில் தான் செய்த தவறுகளை அடிவாங்கியவன் உளறுகிறான்.
முதலாளி அந்தக் காவல் நிலைய ஆய்வாளரின் நண்பரை சிபாரிசு பிடிக்கிறார். அதே சமயம் புகார் கொடுத்த நபரை ”எதுக்கு உன்ன அடிச்சார்?” என்று விசாரித்ததில் தான் செய்த தவறுகளை அடிவாங்கியவன் உளறுகிறான்.
ஆய்வாளரைத் தொடர்பு கொண்ட முதலாளியின் நண்பரிடம் “கம்ப்ளைண்ட் குடுத்தவனே, தப்பை ஒத்துக்கிட்டான். ஒன்னும் பிரச்சனையில்லை, அவர ஸ்டேசனுக்கு வந்துட்டு போகச் சொல்லுங்க, போதும். பேசி அனுப்பிடலாம்” என்கிறார்.
ஏதோ ஒரு எண்ணத்தில் காவல் நிலையத்தை தவிர்க்க விரும்பி முதலாளி நண்பரிடம் ”ஸ்டேசனுக்கு மட்டும் வேணாங்க, எவ்வளவு அமௌண்ட்னு கேட்டுச் சொல்லுங்க, குடுத்துறலாம்” என்கிறார்.
நண்பர் ஆய்வாளரிடம் “சார், அவரு ஸ்டேசன்க்கு வரத்தயங்குறாரு. அமௌண்ட் வேணா குடுத்தறலாம்னு சொல்றார்”.
சிரித்தவாறு ஆய்வாளர் “அதெல்லாம் ஒன்னும் வேணாய்யா. ஸ்டேசனுக்கு வந்துட்டு போகச்சொல்லுங்க, நேர்ல பேசி பிரச்சனைய முடிச்சுருவோம்” என்கிறார்.
“அமௌண்ட் வேணா சேத்தி குடுத்துறலாங்க, ஸ்டேசனுக்கு வேணாங்க” மீண்டும் வேண்டுகோள் வைக்கிறார்.
நண்பர் அதை ஆய்வாளரிடம் சொல்ல, சலித்துக் கொள்ளும் ஆய்வாளர் “சரி….. ஒரு பத்தாயிரம் வாங்கிடுங்க”
பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு முதலாளி நிம்மதியடைகிறார்.
.....................................
ம்ம்ம்ம்ம்……. கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
_______________________________