'நான் இருக்கேன் என்னை நம்புங்க’ எனும் அஸ்திரங்கள்

வங்கியில் ஒரு வேலையாகக் காத்திருந்தேன். எனக்கும் அடுத்த இருக்கையில் ஓர் இளம் தம்பதி. நடப்பு வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் நகைக்கடன் பெறுவது தொடர்பாக அந்த தனியார் வங்கி ஊழியருடன் உரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

நகைக்கடனுக்கு வட்டி எவ்வளவு என மனைவி கேட்டபோது 9.25% எனச் சொல்கிறார் ஊழியர். உடனே IOBயில் எவ்வளவு எனக் கேட்க, அந்த ஊழியர், வங்கி அதிகாரியை அழைக்கிறார். வந்தவர் ”IOBல சரியாத் தெரியல, அநேகமா 8.9%ஆக இருக்கலாம். இப்ப ரெப்போ ஏத்தினதால அங்கே கூடியிருக்கும், எங்க பேங்க்ல மாறலஎன்கிறார். கூடுதலாக அது கவர்மெண்ட் பேங்க், சர்வீஸ் எப்படியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்!என்கிறார்.

அங்கேயும் நெட்பேங்கிங் ப்ளஸ் எல்லா சர்வீஸும் இருக்கேஎன அந்தப் பெண் கேட்க, வங்கி அதிகாரி ஒருமாதிரியாக சமாளிக்கிறார். மீண்டும் அந்தப் பணியாளருடன் அவர்கள் தொடர்கின்றனர்.

ஊழியர் 'வெல்த் அக்கவுண்ட்' என்று விளக்கிக் கொண்டிருக்கிறார். கணவர் ஒற்றைக்காலில் நின்றபடி இங்கு கவனம் செலுத்தாமலேயே இருக்க, மனைவியுடன் மட்டுமே உரையாடல் மேற்கொண்டிருந்தார்.

சில நிமிடங்களுக்குள் என்ன வேலை பார்க்கிறீங்க? எங்கே, WFHல் இருக்கும் சாதக, பாதகம் குறித்தெல்லாம் உரையாடலை நகர்த்தி, அந்தப் பெண்ணை அடிக்கடி சிரிக்க வைத்து, இடையிடையே 'வெல்த் அக்கவுண்ட்' குறித்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்.

ஒருகட்டத்திற்குப் பிறகு ஏதோவொரு சமரசத்திற்கு அவர்கள் வந்தததுபோல் தோன்றியது. கடைசியாக அவர் நான் இருக்கேன் மேடம்.... நான் எல்லாம் பார்த்துக்குறேன்... என்னை நம்புங்க... ஒரு கவலையும் வேண்டாம்!எனும் அஸ்திரத்தைப் பயன்படுத்தியபோதுதான், அந்தப் பணியாளரை உற்றுப்பார்த்தேன். பார்த்த கணத்தில் என்னையுமறியாமல் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது.

பொதுவிடத்தில், நமக்குத் தொடர்பில்லாதவற்றில் அப்படியான சிரிப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும் அந்த ஊழியர் பயன்படுத்திய அந்த அஸ்திரம் செய்த பாவம் அது. என்னுடைய சிரிப்பைக் கவனித்துவிட்ட அவர் என்னை நோக்கி புருவத்தை உயர்த்தியபடி சார்என்றார்.

ஒண்ணுமில்ல!என்றேன்

இல்ல சார் பரவாயில்ல சொல்லுங்க!

நீங்க தல ஃபேனா, தளபதி ஃபேனா!?”

ஏன் சார்... திடீர்னு கேக்குறீங்க... தளபதி ஃபேன்

அப்படியா.... வாரிசு பார்த்திருப்பீங்க.... எதுக்கும் நேரம் கிடைக்கும்போது துணிவு ஒருமுறை பார்த்துடுங்க!

அவர் முகத்தில் குழப்ப ரேகை ஓட ஆரம்பித்தது.

நான் இருக்கேன்... என்னை நம்புங்க!' எனக் காலம் காலமாய் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் வாக்குறுதி கொடுத்தவர்களெல்லாம் சடசடவென நினைவுக்கும் வந்து போனார்கள்.

No comments: