வெப்ப மூச்சில் வியர்த்த ஒரு சொல்



விளக்குகள் 
அணைத்த பின்பும்
சன்னல் வழியே கசியும்
தெருவிளக்கின் வெளிச்சம்
நினைவின்
மொழி மாற்றாகும்போது
வெப்ப மூச்சில்
வியர்த்த ஒரு சொல்
ஒளிந்து கிடக்கும்
பிரியத்தை
தேடித் தேடி
வேட்டையாடிக் கொண்டிருக்கிறது


-

ஒரு தட்டானின் மரணம்



வெடுக்கெனக் நகர்கிறது ரயில்
உயிரற்ற தட்டானொன்று
சன்னல் விளிம்பில்
ஒட்டியிருக்கிறது

காற்றைக் கிழித்து
ரயில் சீறுகிறது
மினுமினு றெக்கையும்
கண்ணாடி வாலும்
ரயிலின் தடதடப்புக்கேற்ப
நடுங்குகின்றன

வால் பிடித்து
றெக்கை படபடக்க
காற்றில் விடுகிறேன்
பறக்கவிடுதலைத் தவிர
வேறெந்த வகையில்
தட்டானுக்கு
அஞ்சலி செலுத்த!

பிரிய இறகொன்று



யானையொன்றின் பிளிறலில்
வனம் அதிர்கிறது
கிளை விட்டு வேகமாய்
இறக்கையடிக்கிறாய்
படபடப்பில்
றகொன்று
பிரிந்து மிதக்கிறது

இறங்கி வரும்
றகைப் பற்றுவதும்
அதிலிருக்கும்
பிரியத்தை வாசிப்பதும் தவிர்த்து
வேரடியில்
அமர்ந்திருக்கும் நான்

வேறென்ன செய்ய!

ஒழுக்கமாய் இருப்பதற்கு மிரட்டத் தேவையில்லை

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் பள்ளிகளில் கழிவறைகள் கட்டுவதற்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடுகள் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் பத்தாயிரமா....!? என்று யோசனை வராமல் இல்லை. அந்தத் திட்டம் தொழில் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், முன்னாள் மாணவர்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியோடு நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்தி சொல்கின்றது. 

இதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தொழில் நிறுவனங்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம். அந்தந்தப் பகுதி நிறுவனங்கள், சேவை அமைப்புகள், முன்னாள் மாணவர்களின் உதவியோடு இது மிக எளிதாக எட்டிவிடும் இலக்கென்றே கருதத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும், பல்வேறு மாற்றங்களின் மூலமாக இருக்கும் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வயது வந்த பிள்ளைகள் கழிவறைகளுக்காக அல்லாட விடுவதைவிட பெரிய கொடுமைகளை அவர்களுக்கு கொடுத்துவிட முடியாது. பள்ளிக்கூடத்தில் நிகழ்த்த வேண்டிய மாற்றாங்கள் குறித்து எப்போது பேச்சு வந்தாலும், முதலில் கழிவறைகளை அமையுங்கள் அல்லது இருப்பதை மேம்படுத்துங்கள் என்றே தோன்றும். அதுதான் மிக மிக முக்கியம், ஆனால் அதில்தான் பொதுவாக நாம் மிக மிக மோசமான கவனத்தை செலுத்தி வந்திருக்கின்றோம் எனச் சொல்லலாம். இப்போது அதற்கான ஒரு தீர்வு வருகின்றது என்பதே பெரும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.



இதை மகிழ்வோடு எதிர்கொள்ளும் அதே சமயம், இத்தனையாண்டுகளாக இத்தனை கழிவறைகளின் தேவையிருந்தும், தொடர்புடையவர்கள் கண் மூடியிருந்ததற்கு வெட்கப்பட்டுதான் ஆகவேண்டும். அப்ப அரசுப்பள்ளிகளில் கழிவறைகள்கூட இல்லாமல் இருந்தனவா?’ என்ற கேள்விக்கு, பாரதி கிருஷ்ணக்குமாரின் எனக்கில்லையா கல்விஆவணப்படம் உள்ளிட்ட பல ஆதாரங்கள் ஆமாம்என காலம்காலமாக சவுக்கால் அடித்துச் சொல்லிக்கொண்டேதான் இருந்திருக்கின்றன.

சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களே பிளாஸ்டிக் கேன் உதவியோடு கழிவறைகளை ஏற்படுத்தியிருப்பது குறித்த செய்தியைப் பகிர்ந்தபோது, வசதிகள் செய்துகொடுத்தாலும் மாணவர்கள் அவற்றை பத்திரமாக வைத்திருக்காமல், சேதப்படுத்தி விடுவதாக ஒரு முணுமுணுப்பு வந்தது. அதை சட்டெனப் புறந்தள்ளி விடாமல் ஏன் அப்படி என ஆராய்வது முக்கியமானது. நன்றாக இருக்கும் ஒன்றை எதன் நிமித்தமோ சேதப்படுத்தும் கோளாறான மனநிலை சிலருக்கு இருப்பதை மறுக்க முடியாது. தனக்கு எந்த விதத்திலும் தொடர்பேயில்லாத ஒருவரின் கார் சாலையோரத்தில் நிற்க, அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு குடிகாரன் சல்லிக்கற்களை வைத்து கார் முழுக்க கோடு போட்டு வைத்திருந்திருந்தான். பிரச்சனை முற்றி அந்த ஆளின் வீட்டு ஓனரால் காலி செய்ய வைக்கப்பட்டது. சில வக்கிரங்களுக்கு, குற்றங்களுக்கு மிக மேலோட்டமான காரணம் போதும் அல்லது கற்பனையே செய்து பார்க்க முடியாதது மாதிரியான ஆழமான காரணம் உள்ளுக்குள் புதைந்து கிடக்கும்.

ஆனால் நன்றாக இல்லாத ஒன்றை, மேலும் சிதைப்பதை மனிதன் ஒரு வடிகாலாக வைத்திருக்கிறான். நன்றாக மூடும் பொதுக் கழிவறைக் கதவை மூடுவான் திறப்பான். அதே சமயம் தாள் ஒழுங்கா பூட்டாத கதவை எரிச்சலில் எட்டி உதைக்கவே செய்வான். ஆக நன்றாக இருப்பதை சிதைப்பவர்கள் 10% என்றால், நன்றாக இல்லாததைச் சிதைப்பவர்கள் 50-60% ஆக இருக்கலாம். இயலாமையை எதிர்ப்பைக் காட்டும் வழிகள் மனிதனுக்கு பல நேரங்களில் கொடூரமானதாகவே வாய்த்துவிடுகின்றன. குறைந்த பட்சம் எப்போதும் தண்ணீர் இருப்பதையும், குழாய்கள் உடைந்திருக்காத நிலை மற்றும் தண்ணீர்க் கசிவு இல்லாததையும் பொதுக் கழிவறைகளில் உறுதி செய்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும், சேதங்கள் குறையும்.

2011ல் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் ராமம்பாளையம் அரசுப் பள்ளியை மேம்படுத்தப்பட்ட பள்ளியாக அதன் ஆசிரியர் ஃப்ராங்ளின் மாற்றி வைத்திருந்தார். வகுப்பறைகளும், அதன் சுவர்களும் துளியும் கறைபடாமல் அப்படியே பளிச்சென இருந்தன. அந்த வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அதில் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் துவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு படவில்லை. எப்படி சாத்தியம் இது எனக் கேட்டபோது, “மாணவனுக்கு சுவற்றில் அழுக்கு செய்தால், அதை சுத்தம் செய்வது எவ்ளோ கடினம் என்பதையும், மீண்டும் வர்ணம் பூச ஆகும் செலவுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருப்பதால், ஒரு துளி அழுக்குப்படாமல் இருக்கின்றதுஎன்றார்.


பிள்ளைகள் ஒழுக்கமாய் இருப்பதற்கு மிரட்டத் தேவையில்லை. தேவைப்படுவதைச் செய்து கொடுத்தல் அவசியம். திட்டங்களில், செயல்பாடுகளில் நாம் நேர்மையாய் நடந்துகொள்வது முக்கியம். நிதானமாய் பொறுப்பாய் சொல்லிக் கொடுப்பது அதனினும் முக்கியம்.

வேர்களெங்கும் முட்கள்











கையளித்துவிட்டுப் போன
அந்தச் சொல்லில் ஒரு முள்
சொருகப்பட்டிருந்தது

வளர்ந்து கிளைகள் நீட்டி
விருட்சமாய் விரிந்து
பரந்து நிற்கின்றது

அந்தச் சொல்லிலிருந்து
வடியும் நினைவெங்கிலும்
தைத்திருக்கின்றன
முனை முறிந்த முட்கள்

மௌனம் காக்கும்
மண்ணைக் கிளர்ந்து
வேர்களைப் பார்க்கிறேன்
வேர்களெங்கும் முட்கள்!





-

ஒரு துளி நஞ்சு

வாழ்க்கை பல நேரங்களில் ஒரு பெருமைமிகு, விசித்திரமான விளையாட்டுக் களம் போன்றதுதான். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் இலக்காக இருப்பது  போன்றே, போட்டியாளனும், எதிரியும் விளையாட்டில் தவிர்க்க முடியாதவர்கள். போட்டியாளனும் எதிரிகளும் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கை முழுதும் நிரம்பியே இருப்பவர்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் எதிரிகள் என்றோ, போட்டியாளன் என்றோ தெரியாமலேயே அவர்களோடு இயைந்து வாழ நிர்பந்திக்கப்படுவதுதான் வேடிக்கை.

போட்டியாளன் ஆவதற்கும், எதிரி ஆவதற்கும் குறிப்பிட்ட சம்பவங்களோ, தெளிவான காரணங்கள் இருக்கவேண்டியதில்லைதம் இலக்கை நோக்கி அவர் போக்கில்  ஓடும் யாரோ ஒருவர், அதுவரையிலும் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒருவருக்கு சட்டென எதிரியாகவும், போட்டியாளனாகாவும் ஆகிவிட முடியும். மிகச் சிறியதொரு சூழல் அதை நிகழ்த்திவிடும். யோசித்துப் பார்த்தால் அவர்கள் போட்டியாளனும், எதிரியும் ஆனதற்கு நியாயமான இமை முடி அளவு காரணம்கூட இருக்க முடியாது.  வாழ்நாளில் அப்படியொருவரை அதற்குமுன் சந்தித்திருக்கவோ, இனி சந்திக்கவோ கூட சாத்தியமின்றிப் போகலாம். ஆனால் அவர்கள்தான் அப்போது போட்டியாளராகவும், எதிரியாகவும் மாறிப்போவார்கள்.

சமீபத்தில் ஒருமுறை, சாலை சந்திப்பில் காரில் குறுக்காக கடக்க முயல்கிறேன். என் வலதுபுறம் வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டி, நான் கிட்டத்தட்ட கடந்திருந்த நிலையில், சட்டென வளைத்து காருக்கு முன்பாக தன் வாகனத்தை நிறுத்திக் கொண்டு என்னைப் பார்த்து முறைத்தார். அது குறுக்காகக் கடப்பவர்களுக்கு எப்போதும் உரிமை என்பதுஒரு மாத்திரைஅளவு குறைவானது எனக் கருதும் மனநிலையின் வெளிப்பாடு. அந்த நிலையில் அநேகமாக எங்களில் யார் ஒருவர் நிதானித்து விட்டுக் கொடுத்திருந்தாலும் விட்டுக்கொடுத்தவருக்கு 10-20 நொடிகள் மட்டுமே தாமதம் ஏற்படலாம். அவர் முறைத்ததைப் பார்த்தபோது எனக்கு உள்ளூர சிரிப்புதான் வந்தது. என் சிரிப்பில் ஒளிந்திருக்கும் திடம் நான் சாலையைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டேன் எனும் நிரூபணம்தான். இந்த நிலையில் என் வாகனத்திற்கு குறுக்காக மறித்து நிற்பது என்பது அவரின் பொறுமையின்மை என்பதாகவே தோற்றம் கொடுத்தது. அந்த தோற்றம் கொடுக்கும் தெம்பு அலாதியானது. அந்தச் சூழலில் எங்கள் மேல் பாயும் கோபப் பார்வைகள் மற்றும் எரிச்சல் குரல்கள்களிலிருந்து நம்மை விடுவிக்க வைக்கும் தோற்றம் கொடுப்பது. ’நா கிட்டத்தட்ட க்ராஸ் பண்ணிட்டப்ப வேணும்னே நீ குறுக்கே போட்டு நிக்கிறே!’ எனும் இந்த நிலை எனக்குச் சாதகமானது. ஒருவேளை அதில் நானே குற்றம் இழைத்திருந்தாலும், அதற்கும் சேர்த்துதான் அந்த நபர் பதிலளிக்க வேண்டும். வாகனங்கள் தேங்க ஆரம்பிக்கின்றன. அவரை நோக்கி ஆத்திரக் குரல்கள் எழும்புகின்றன. வசவுகள் கூடுகின்றன. நான் அமைதியாக ஒரு ஏளனப் பார்வையோடு அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் அந்த நபர் விருக்கென நகர்கிறார்.

இதை அப்படியே பிரதியெடுத்ததுபோல் என் நண்பருக்கும் அதே பொன்றதொரு சம்பவம் நிகழ்கிறது. இத்தனைக்கும் அவர் மிகுந்த நிதானம் பாவிக்கின்றவர். மனிதர்களின் பலவிதமான பிறழ்வுகளின்போது மிக எளிதாக அவர்களை அவர்களின் செயல்களிலிருந்து பிரித்துப் பார்த்துமனுசப்பயன்னா அப்படித்தான்!” எனும் நிதானமான, சமாதான வரியோடு அவர்களை எதிர்கொண்டு இணக்கம் பாவிக்கிறவர். அவர் காரில் ஒருமுறை சாலையைக் கடக்கும்போது, எனக்கு நிகழ்ந்து போலவே அவரின் வாகனத்தின் முன்பு குறுக்கே பைக் நிறுத்திக்கொண்டு வம்பு செய்த மனிதரை முதலில் அமைதியாக உற்றுப் பார்த்திருக்கிறார். அவரின் அமைதியை தன் ஆணவத்திற்கான அனுமதியாகக் கருதிய அந்த நபர் இன்னும் ஏதேதோ பேச, சட்டென இறங்கிய நண்பர் பொளேர்..பொளேர் என நட்ட நடுரோட்டில் அடித்திருக்கிறார். அது சட்டென கை கலப்பாக மாறி நிகழ்ந்து தணிந்தது.

கடந்தேகும் மனிதர்களில் ஒரு உறவைப் பூக்கச் செய்ய, நொடிப்பொழுதில் ஒரு மெல்லிய புன்னகை மிகப் போதுமானதாக இருப்பதுபோல், எந்த வகையிலும் முன்பின் அறிமுகமோ, தொடர்போ, அவசியமோ இல்லாமல் ஒரு எதிரியைச் சம்பாதிக்க, ஒவ்வாத ஒற்றைச் செயல் அல்லது ஒற்றைச்சொல் போதும். அந்தக் கணத்தில் தோன்றும் சிறு பகை, பெரும் பகையாக மாறி எஞ்சிய வாழ்க்கை முழுதும் தொடர்ந்த வரலாறுகளும் இங்குண்டு. உடன் பிறந்த உறவுகளிலும்கூட தலைமுறைகளாக பகையைத் தொடர்ந்தவர்களும், தொடர்கிறவர்களும் இங்குண்டு,

பலரின் வாழ்க்கையில் இப்பெரும் பகைகளுக்குப் பின்னால் இருப்பது குறித்து ஆராய்ந்தால், அவை யாவற்றிற்கும் காரணம் ஒரு சிறு முடிச்சே எனும் ஆச்சரியக் கசப்பே மிஞ்சும். மகத்தான மனித உறவுகளைவிட தருணம், சொல், அவமதிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றுதல் எனும் சிறு முடிச்சுகள் எவ்விதம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது எப்போதும் புரியாத புதிர்தான்.

இப்படியான எல்லாக் கோபங்களுக்கும், பகைகளுக்கும் பின்னால் மறந்துபோன புன்னகைகளும், உறவுகளுக்கிடையே உலர்ந்துபோன உறவின் கதகதப்புகளும் பெருந்தொகையில் உயிர்ப்பின்றி கனத்துக் கிடக்கும். அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் வழிகளும், முறைகளும் தெரியாமல் தவிக்கும் அவலம்தான் மனித குலத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம்.



புன்னகையால் உறவுகள் பூத்துவிடுவது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும், சக மனிதர்களிடம் உதிரும் புன்னகையிலும், சிரிப்பிலும் உயிர்த் தன்மை இருத்தல் அவசியம். பல நேரங்களில் தயாரிக்கப்பட்ட சிரிப்பு அணிந்திருக்கும் மனிதர்களை ஏனோ நமக்குப் பிடித்து விடுகிறது. ஆனால் அப்படியான சிரிப்புகளில் ஒருபொழுதேனும் ஏதேனும் மலரின் நறுமணத்தை நாம் உணர்ந்ததுண்டா? அந்தப் புன்னகைகளில் கண்கள் மலர்வதில்லை. அந்தப் புன்னகைகள் இனம் புரியா வீச்சத்தை தன்னுள்ளே பொத்தி வைத்து உமிழ்கின்றவைகள். அவ்வீச்சம் முழுவதும் ஏதேனும் வாதை பரவியிருக்கும், காத்திருப்பு நிரம்பியிருக்கும், சொல்ல முடியாத இடத்தில் அடைந்த காயத்தின் வேதனை அடங்கியிருக்கும். தயாரிக்கப்பட்ட சிரிப்பு உதிர்ப்பவர்களை  நம்புங்கள், ஆனால் அந்த சிரிப்பின் மேல் முனையில் ஒரு நட்சத்திரத்தை வரைந்து வைத்துக் கொள்ளுங்கள், காரணம் அம்மாதிரியான எதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

ஏதோ ஒரு புள்ளியில் பூத்து, நட்பாய், உறவாய் மாறிப்போகும் உறவுகள் கொடுக்கும் இதம், நம்பிக்கை பொதுவாக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவற்றை அதன் தன்மை மற்றும் உயிர்ப்போடு வழங்கிட எவராலும் சொற்களை நம்பிக்கை மிகு ஒழுங்கில் கோர்த்துவிட முடிவதில்லை. உறவுகளின் மத்தியில் எண்ணப் பரிமாற்றங்களும், உணர்வுப் பரிமாற்றங்களும் சொற்கள் மட்டும் உடல் மொழிகளால் ஒவ்வொரு முறையும் நிகழ்த்தப்படுகின்றன. இந்தப் பரிமாற்றங்கள் சரியாக அமையாதவர்களுக்குள் எப்போதும் ஒரு வெற்றிடம் கனன்று கொண்டே இருக்கும்

கை பற்றிக்கொள்ளுதல் அல்லது விரல் கோர்த்துக் கொள்ளுதல் என்பது உறவு நிலைகளுக்கிடையே உரிமை, பிரியம், நேசிப்பு, அக்கறை ஆகியவற்றை இடம் பெயர்த்தும் ஒரு கலை. விரல் கோர்த்துக் கொள்வதோ, கை கோர்த்துக் கொள்வதோ இரண்டுமே ஒரு சம்பிரதாயமான செயல்பாடோ, உடலின் அங்கங்களை ஒன்றாய் இணைத்து சுகம் எய்துவதோ மட்டுமல்ல. விரல்கள் கோர்த்துக்கொள்வதில் விதவிதமான வகைகள் உண்டு. அவை அழுத்தம், இறுக்கம், நேரம், வருடல் எனப் பல வகைப்படும். ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றை தனித்து உணர்த்தும். மெல்லப் பற்றிக்கொள்தல் ஒன்றைச் சொல்கிறதென்றால், சட்டென இறுக்கிப் பிடித்தல் இன்னொன்றைச் சொல்லும். இறுக்கத்தின் கனத்திற்கேற்ப அந்தக் கணத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய, வாரி வழங்கவேண்டிய நம்பிக்கை, அன்பு, பரிவு, ஆதரவு பரிமாறப்படும். கவனத்தில்கொள்ள வேண்டியது பற்றிக்கொள்தல், பிணைத்துக் கொள்தல் வேறு நசுக்குதல் வேறு; இது கைகளுக்கு மட்டுமல்ல, உறவுகளுக்கும் பொருந்தும்.

வாழ்க்கை எவ்வளவு உன்னதமான ஒரு பரிசோ அது போன்றே உறவுகளும் உன்னதமான ஒரு பரிசே. உலகில் இருக்கும் எல்லா உயிரினங்களும் உறவுகளில் இவ்வளவு நேர்த்தியும், சார்புத்தன்மையும், உணர்வுகளும் கொண்டிருப்பவையா எனத் தெரியவில்லை. மனித உறவுகளில் நேர்த்தியும், உணர்வுகளும் என்பதையும் தாண்டி சார்ப்புத்தன்மை என்பது மிக முக்கியமானதாகப் படுகிறது. மனிதர்களின் கைப் பற்றுதல்கள், ஆறுதல்கள், அரவணைப்பு இல்லாமல் வாழ்க்கையெனும் இந்த அலை பொங்கும் கடலை நீந்திக்கடப்பதென்பது எளிதா என்ன? இவை யாவற்றையும் கெடுக்கும், சிதைக்கும் தன்மை பாரதி காட்டிலோர் பொந்திடை வைத்த அக்கினிக்குஞ்சு போன்றதொருதுக்கினியூண்டுகோபத்திற்கு உண்டு. கோபம் என்பதை திறன், அடையாளம், தகுதி என பல நேரங்களில் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கே மனித உறவுகளோடு வாழ வேண்டுமா? கோபத்தோடு குடித்தனம் நடத்த வேண்டுமா என்பதை நாம் தானே தீர்மானிக்கவியலும்.

கீச்சுகள் தொகுப்பு - 68

பொதுவாகவே இரவுகள் நேசங்களால் வேயப்பட்டு விடுகின்றன...!

-

முத்தத்தின் பிழையில் சுவை கூடும் முரணுண்டு!

-

வியர்வையில் சரசமாடும் மாலைக் காற்றுக்கும் பிரியம் என்றே பெயர்!

-

பேரன்பு எனப்படுவது வேரிலும் விளையும், கிளையிலும் காய்க்கும்!

 -
  
சிறு மழையெனும் மருதாணி வாசம்

-
 
வெயில் திண்மமாய் உறைந்து கிடக்கிறது. துணிகின்றவர்களை ஊடறுத்துச் செல்லப் பணிக்கிறது.

-

பகை கொள்ள கணப்பொழுதென்றால் அதை முடிக்க அதில் காற்பொழுது போதும். எப்போதென்பதை தீர்மானிக்கும் காலம்தான் இங்கு தெய்வம்.

-

அவசியத் தேவையென்று வரும்போது, வலிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சைகளுக்கு மறுப்பா சொல்ல முடியும்!?

-

உரிமைதான் உறவுகளின் இரத்த நாளம்

-

புரிந்துகொள்ளச் சிரமம் தான்! ஆனால் ஏற்றுக்கொள்ள அவ்வளவு சிரமமில்லை! :)

-
 
விவசாயம் மக்களைக் காப்பாற்றிய காலம் போய், “விவசாயம் காப்போம்என மக்கள் சொல்லும் காலத்தில் இருக்கின்றோம் :(

-

மனதிற்குள் நீந்தும் சொற்கள் சில நேரங்களில் கண்களுக்குள் பரவி விடுகின்றன!

-

மௌனம் என்பது ஒரு மாயப் பெட்டி.... அதற்குள் எதையும் போட்டு வைக்கலாம்... தேவைப்படுகையில் கைவிட்டு எதையேனும் அள்ளிக்கொள்ளலாம்.

-
 
மனம் ஒரு மாய வசீகரம் பிணைந்த ஒரு பேராற்றல். எப்போதும் பசித்திருக்கும் ஒரு பெரும் ஜீவன்

-
 
உறவுகளை வளர்ப்பதும் சிதைப்பதும்... சொற்களைப் பயன்படுத்தும் சில தருணங்களே...!

-
 
மழையை யோசிச்சாலும், நேசிச்சாலும் அதன் ஈரம் மற்றும் குளிரோடு, கொஞ்சம் புழுக்கமும் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

-

சொற்களை வெறும் சொற்களாய்ப் பார்த்தால், அவை எழுத்துகளால் நிரப்பப்பட்ட சொற்கள் மட்டுமே!

-

மௌனமும் ஒரு விருந்தாளி போலத்தான்.

-

உதவி என்ற பெயரில் ஒருமுறை ஏமாந்து கொள்ளுங்கள். அதுவொன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால்... மீண்டும் மீண்டும் என்பது....!!!!!
 
-
 
நன்றாக யோசித்துப் பாருங்கள்... அன்பு என்பது பல நேரங்களில் வெறும் சொற்கள் தான்!

-

உடைதல் எளிது... முறிதல் வலிது!

-

கர்வத்தின் கரைசல் காமம்!

-
 
புன்னகைக்கும் முன் இதழ்களைக் கொஞ்சம் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். வறண்ட புன்னகை உயிரற்றது.

-
 
டைனோசர் அழிஞ்சு போனதுக்கு ஒரு சின்னப்பூச்சி கூட காரணமாக இருக்கலாம்!

-

பகிரப்படாத துக்கம் மட்டுமில்லை, பகிர முடியாத மகிழ்ச்சியும் சுமைதான்!

-
 
பேரன்பு எப்போதும் 'பிடித்ததை விட்டுக்கொடுஎன்றே கோருகிறது!

-
 
நாம் கோர்க்கும் சொற்களை வாசிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதையும் தாண்டி சேமிக்கிறார்கள் என அறியும் தருணம் குதூகலமானவை.

-

கடலுக்கடியிலும் நிலம்தான்!

-
 
எத்தனை எழுதி ஓய்ந்தாலும் தீர்ந்து போகாத கதைகளும், மனிதர்களும் இங்கு எப்போதுமுண்டு. அதனாலென்ன, இன்னும் காலம் இருக்கின்றது.

-

ஒரு விவாதத்தை மொக்கையா முறித்துப்போடும் சொற்களில் மிக முக்கியமானவை "ok leave it"

-

சில நேரங்களில்... ஓட்டம் உற்சாகம் தருவதாகவும், ஓய்வு களைப்பூட்டுவதாகவும்!

-

உங்களின் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. சமாதானங்கள் மட்டுமே இருக்கின்றன!

-
எல்லாவற்றிலும் முடிவு எட்ட முடியாது... பலவற்றில் முடிவு மாதிரி ஒன்றைத்தான் எட்ட முடியும்!

-