பழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்


சட்டம் என்பது மனிதர்களை நெறிப்படுத்தவும், எந்த வகையிலும் தீங்கிழைக்காமல் ஒருவித ஒழுங்கிற்குள் வைக்கவும்தானே தவிர, சட்டத்திற்குள் உட்படுபவர்களுக்கு எதிரானதாகவோ அல்லது அவர்களை குற்றம் செய்யத் தூண்டுவதாகவோ அமைந்து விடக்கூடாது. மனிதர்களின் நலனுக்கான இயற்றப்பட்ட சட்டமே காலப்போக்கில் மனித குலத்திற்கு எதிரானதாக இருந்தால் அவை நிச்சயம் ஆய்வுக்குட்படுத்தி மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் சட்டங்களில் சமீப ஆண்டுகளில் கேள்வி எழுப்பப்படும், மாற்றம் தேவை எனக் குரல் கொடுக்கப்படும் சட்டங்களில் முக்கியமானது மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (Medical Termination of Pregnancy MTP - எம்டிபி). இது சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றது.

அதென்ன மருத்துவ கருக்கலைப்பு சட்டம்?

ஒரு பெண் கருவுற்று, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்தக் கருவினை கலைக்க விரும்பினால், அதன் காலம் 12 வாரங்களுக்கு உட்பட்டிருந்தால், அதற்கான பயிற்சி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்வதை தீர்மானித்து மேற்கொள்ளலாம்.

ஒருவேளை கருவின் காலம் 12 வாரங்களைத் தாண்டி 20 வாரங்களுக்குள் இருந்தால், மருத்துவ கருக்கலைப்பு சட்ட பயிற்சி பெற்ற இரண்டு மருத்துவர்கள் கலந்தாலோசித்து கருக்கலைப்பு செய்யலாம்.

இருபது வாரங்களைத் தாண்டிவிட்டால், கருக்கலைப்பு செய்வதென்பது சட்டப்படி குற்றம். அப்படியும் செய்ய வேண்டிய தேவை இருந்தால், நீதிமன்றத்தை அணுகி அதன் ஒப்புதல் பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும்.

கருக்கலைப்பு எதனால்?

கருவின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு இருக்கும் எனத் தெரிந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

18 வயதிற்கு குறைவான ஒரு பெண் கருவுற்றிருந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

பாலியல் வன்புணர்வினால் ஒரு பெண் கருவுற்றிருந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

கருவினால் தாயின் உடல் மற்றும் மனநலத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிந்தால் கருக்கலைப்பு செய்யலாம்.

கருத்தடை சிகிச்சை மேற்கொண்டிருந்து, அது தோல்வியடைந்து கருவுற்றிருந்தால் கருக்கலைப்பு செய்யலாம்

இவை அனைத்திற்கும் அந்தப் பெண்ணின் ஒப்புதல் மிகவும் முக்கியம்.

*

அந்தப் பெண்ணிற்கு பதினெட்டு வயதிலேயே திருமணமாகி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இரண்டு பெண் குழந்தைகள். எப்படியும் ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் தொடர்ந்து காத்திருந்தார்கள். ஆனால் அதன்பின் ஒருபோதும் கருத்தரிக்கவில்லை. மீண்டும் ஒரு கருத்தரிப்பை மறந்தே போயிருந்தார்கள். ஆண்டுகள் ஓடின அவருக்கு நாற்பத்தி இரண்டு வயதாகும்போது முதல் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு மாதவிடாய் தள்ளிப்போனது. மாதவிடாய் நிற்கும் காலம் என்பதால் பெரிதாக பொருட்படுத்தவில்லை. வாரங்கள் மாதங்களாக கடக்க, வயிறு மெல்லப் பருமனாக ஆரம்பிக்க ஏதோ ஒரு விபரீதம் புரிந்தது. கருவுற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்ததால் கருத்தரிப்பின் அனுபவம் தேய்ந்து போயிருந்தது. மருத்துவரை அணுகிப் பார்க்கும்போது அவர் கருவுற்றிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. கலைக்க முயற்சித்தால் சட்டம் இடம் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டிய நிலை.

மகள் திருமணமாகி கருவுறுவாள் எனக் காத்திருந்த நேரத்தில், தம் வயிற்றில் இருக்கும் கருவை எப்படி கலைப்பது எனும் குழப்பம் வந்தது. இளைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழலில் எப்படி குழந்தையை பெற்றெடுப்பது எனும் பயம் சூழ்ந்தது. சம்பந்தி வீட்டார் உள்ளிட்ட சுற்றமும் நட்பும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனும் பதட்டம் கூடியது. மத்திம வயதில் இருக்கும் ஒருவரை குழப்பம், பயம், பதட்டம் ஒன்றாகச் சூழ்ந்தால் போதும், மிக எளிதில் வீழ்த்திவிடும். வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறியது. திசையெங்கும் கறை படிந்ததாகத் தோன்றியது. அவர் முன் இருந்த ஒரேயொரு எளிய வாய்ப்பு வாழ்க்கையை முடித்துக்கொள்ளுதல்.

பொருத்தமில்லாத வயதில் கருவுறுதல் என்பதை அவமானமாக, குற்றமாக அவர் கருதியது அவர் பிழை மட்டுமல்ல. அது சமூகத்தின் சாபம். ஒருநாள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். உடனடியாக உடல் தகனம் செய்யப்பட்டது. உண்மை தெரிந்த இரண்டே இரண்டு பேர் ஒன்று கணவர் மற்றொன்று எதிர்பாராத வகையில் உருவான கருவை இருபது வாரத்திற்கு மேல் கலைக்க அனுமதிக்காத சட்டம்.

அந்த மரணத்திற்கு பொறுப்புள்ள இருவரில் சட்டம் அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்க, கணவரிடம் மட்டும் கேள்விகள் குவிந்துகொண்டே இருந்தன. ஏன் தற்கொலை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆனால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. அதில் தன் குற்றம் ஏதுமில்லை என்றாலும், தானும் அந்தப் பிழைக்கு பொறுப்பு என்பது தொடர்ந்து உறுத்தியது. அதிலிருந்து தப்பிக்க எப்போதாவது இருந்த குடி, பழக்கமாக மாறி, நோயாக உருவெடுத்தது. அடுத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முன்பே குடியால் வீழ்ந்து மனம் குலைந்து அவரும் இறந்து போனார்.

இப்போது நம் நினைவுகளை மீட்டிப் பார்த்தால் இப்படி நாற்பதுகளில் காரணமே இல்லாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் சிலர் நினைவுக்கு வருவார்கள். அவர்களில் ஒரு சில மரணங்கள் இப்படியான காரணங்களாலும்கூட நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மறுக்கத் தோன்றவில்லை.

சட்டம் இதுபோல் இத்தனை ஆண்டுகளில் லட்சக்கணக்கான அழுகுரல்களை கேட்டிருக்கும். சட்டம் எல்லாவற்றையும் தின்று செரிக்கும். சட்டமென்பது ஒரு காலகட்டத்தின் தீர்மானம். அது மனித மனங்களை, அதிலிருக்கும் உணர்வுகளை, நுண்ணிய சிக்கல்களை எட்டிப்பார்க்கும் பொறுமையற்று தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும். சட்டம் என்பது பல நேரங்களில் வெறும் சொற்களால் அமைக்கப்பட்ட வேலிதானே?.

மன வளர்ச்சி குறைந்த ஓர் இளம்பெண் தனக்கு என்ன நிகழ்ந்தது எனத் தெரியாமலேயே சமூகத்தின் கசடுகளால் கருவுற்ற கொடுமை ஏற்பட்டுவிட்டது. அதன் ஆபத்தை இனம் கண்டு, சிறிய தொண்டு அமைப்பு ஒன்று அந்தப் பெண்ணிற்கான நல்லது செய்ய முற்பட்டு, மருத்துவமனையை அணுகியது. கரு இருபது வாரங்களை கடந்திருப்பதால், கருக்கலைப்பு செய்ய சட்டம் இடம் கொடுக்காது என மருத்துவமனை கையை விரித்தது. முறையாக நீதிமன்றத்தை அணுகி, அதன் நடைமுறைகளைக் கடந்தபோது கரு முப்பது வாரங்களைக் கடந்திருந்தது. அதற்கு மேல் கருக்கலைப்பு செய்தால், அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதால், தனக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பது தெரியாமலே அவர் அம்மாவாகவும், அம்மா இருந்தும் பயன் இல்லாத, அப்பா யாரென்றே தெரியாத அந்தக் குழந்தையும் இந்த உலகத்தில் எல்லாமும் இருக்கும் குழந்தைகளோடு போட்டியில் பங்கெடுக்கும் நிலையை சட்டம் திணித்துள்ளது.

ஒரு பிழை நிகழும்போது அதிலிருந்து மீளும் வாய்ப்பைத் தராமல் அலைக்கழிக்கவோ அல்லது வாழ்க்கை மீது மிரட்சியை ஏற்படுத்தவோ ஒரு சட்டம் ஏன் காரணமாக இருக்கின்றது?. சட்டத்தைச் சொல்லியும் குறையில்லை. காரணம் அது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பழமையான சட்டம். இந்த மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971ம் ஆண்டு இயற்றப்பட்டது. அப்போதைய வாழ்வியல் முறைகளை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டது, அந்த கால கட்டத்திற்கு தகுதியானதாகவும் பொருத்தமானதாகவும் இருந்திருக்கலாம்.  அதுவே இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துமா?

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக அதே சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், நீண்ட நாட்களாவே இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென பல தரப்புகளில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சமீபத்தில் பாராளுமன்றத்தில் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் இருபது வாரங்கள் என்பதை இருபத்து நான்கு வாரங்களாக மாற்றும் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது. இது எப்போது சட்டமாகி, சமூகத்தில் அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.


*

இருபத்து நான்கு வாரங்களுக்கான சட்ட முன்வரைவு வைக்கப்பட்டிருப்பதே ஓரு ஆரோக்கியமான செயல்பாடாக கருதப்படும் சூழலில் இது குறித்து மேலும் அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும்,  ஈரோடு மாருதி மருத்துவ மையத்தின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் நிர்மலா சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பார்பரா லிடியா ஆகியோருடன் இணைந்து உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

உரையாடலில் மருத்துவ கருக்கலைப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் இருபது வாரங்கள் என்ற அனுமதியை இருபத்து நான்கு வாரங்களுக்கு மாற்றினால் ஏற்படும் தவறுகள் குறித்த கேள்வியை வழக்கறிஞர் எழுப்பினார். எல்லாக் கேள்விகளுக்கும் மிகத் தெளிவான பதில்களை மருத்துவர் நிர்மலா சதாசிவம் விளக்கமாக கொடுத்தார்.

இந்தியாவில் நடக்கும் கருக்கலைப்புகளில் 76% சதவிகிதம் மருத்துவமனையை அணுகாமல் பாதுகாப்பற்ற முறையில் சட்ட விரோதமாக செய்யப்படுகின்றன. இருபது வாரங்களைத் தாண்டிவிட்டால், நீதி மன்றம் சென்று அனுமதி பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பதுவும்கூட பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளுக்கு வழி வகுக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் இரண்டு குழந்தைகளைக் கொண்டிருந்த தம்பதி, பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு எதிர்பாராமல் கருத்தரித்த சூழலில், இருபது வாரங்களைக் கடந்த காரணத்தால் அந்தக் கருவை கலைக்க முடியாமல், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டி வந்தது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த அவர்கள் மூன்றாவது குழந்தையை வளர்க்க மிகவும் சிரமப்படுகின்றனர். சட்டம் இருபத்து நான்கு வாரம் வரை அனுமதி கொடுத்திருந்தால், எதிர்பாராமல் கருவுற்ற அந்த மூன்றாவது குழந்தையை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

இதனால் பாலினம் கண்டறியப்பட்டு, அதனை முன் வைத்து கருக்கலைப்பு செய்யப்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம் தானே?”

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிவிப்பது மிகக் கடுமையான குற்றம். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதை தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஆகவே அந்த தவறு இருபத்து நான்கு வாரம் எனும் அனுமதியால் நிகழும் என்று சொல்வது ஆதாரமற்றதாகவே கருதுகிறேன்

வேறென்ன காரணங்களால் சட்ட திருத்தம் அவசியம் எனக் கருதுகிறீர்கள்?”

இந்தக் காலத்தில் மனிதர்களின் வாழ்வியல் முறை மாறியிருக்கின்றது. இணைந்து வாழ்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சூழலில், விரும்பத்தகாத ஒரு கரு வளரும் நிலை ஏற்பட்டால், அந்தப் பெண்ணின் நலன் கருதி, திருமணமாகாத பெண் என்ற நிலையில் கருக்கலைப்பிற்கு அனுமதி கொடுக்க வேண்டியது முக்கியம்.

ஒரு கருவை வளர்ப்பதும், வேண்டாம் என நினைப்பதும் இறுதியாக பெண்ணுடைய முழுமையான உரிமையாகக் கருதப்பட வேண்டும். அதை அவள் தீர்மானிக்க நாம் அதிகபட்சமான அவகாசத்தைத் தரவேண்டும். இதனால் பெண்ணின் உரிமை நிலை நாட்டப்படுவதோடு, ஆரோக்கியமான நல்ல சூழலில் குழந்தை வளர்வதற்கு சரியான வாய்ப்பளிக்கப்படும்.”



ஜூன் 1, 2016 முதல் 2019 ஏப்ரல் 30ம் தேதி வரை, கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி 194 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 97 பேர் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் 82 பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள். 88 வழக்குகளில், கரு அசாதாரணமாக இருந்ததாக, கருக்கலைப்புக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் முன்பே கூறியது போல், கர்ப்பம் 20 வாரங்களை கடந்திருந்ததால், 82 பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியரில் 13 பேருக்கு இந்த கருக்கலைப்பு நடைமுறை மறுக்கப்பட்டது.
திருமண நிலை மற்றும் வயதை பொருட்படுத்தாமல் கருத்தரித்த 12 வாரங்கள் வரை, அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்வும் வகையில் எம்டிபி சட்டத்தில் திருத்த வேண்டும் என்று ரஸ்தோகி கூறினார். சட்டபூர்வமான கருக்கலைப்பின் வரம்பு, 24 வாரங்கள் என நீட்டிக்க வேண்டும். அந்த கட்டம் வரை கருக்கலைப்பு செய்வது பாதுகாப்பானது. பலாத்காரம் மற்றும் கரு அசாதாரண நிலை போன்றவற்றில் இந்த வரம்பு பொருந்தாது என்ற ரஸ்தோகி, இச்சட்டத்தில் திருத்தம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்
2016 முதல் 2019 வரை, கருக்கலைப்பு செய்ய அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் 194  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 97 பேர் வன்புணர்வு குற்றங்களில் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 80 சதவிகிதம் பேர் பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள். மற்ற வழக்குகளில், கரு வளர்ச்சி குறைபாடு, கருக்கலைப்புக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மொத்த வழக்குகளில் கரு வளர்ச்சி இருபது வாரங்களை கடந்திருந்த காரணத்தினால் பதிமூன்று பேருக்கு இந்த கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட அனைவரும் வன்புணர்வுக்கு ஆளானவர்கள். வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட கொடுமையுடன், வேண்டாத, விரும்பத்தகாத கருவையும் சுமக்க வேண்டிய கொடுமையும் இணைந்தது.

கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது என்பதை வெகு சிலரே அறிந்துள்ளனர். நியாயமான காரணங்களோடு அதை முன்னெடுக்கும்போது ஏற்படும் தடைகளைத் தாண்ட முடியாமல் குறுக்கு வழிகளைத் தேர்தெடுக்கும் நிலைக்கு பலரும் தள்ளப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறை.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளில் கடுமையான ஆபத்துகள் ஏற்படுகின்றன. வயிற்றை அழுத்துவது, அங்கீகரிக்கப்படாத மருந்துகளைக் கொடுத்தல், பிறப்புறுப்பில் குச்சி வைத்தல் ஆகிய செயல்கள் மூலம், குடல் பாதிப்படைதல், நோய்த் தொற்று ஏற்படுதல், மீண்டும் கருவுறும் தன்மை இல்லாது போதல், காயம் ஏற்படுதல் ஆகிய ஆபத்துகள் உண்டு. சிலவேளைகளில் இதன் காரணமாக மரணமும் ஏற்படுகின்றன. உலக அளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளில் ஆண்டுக்கு சுமார் 70,000 பெண்கள் இறந்து போகிறார்கள். இந்தியாவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்வதால் மட்டும், தினசரி பத்து பெண்கள் இறந்து போகின்றனர்.

ஒவ்வொரு பத்தாண்டு கால இடைவெளியிலும் கற்பனை செய்து பார்த்திட முடியாத அளவிற்கான மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம் என்பதை மறுக்கவே முடியாது. ஆனால் பெண்ணின் உரிமை சார்ந்த, உயிர் சார்ந்த, எதிர்காலம் சார்ந்த ஒரு விசயத்தில், ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் இன்றி மௌனம் காத்திருக்கிறோம் என்பது ஆரோக்கியமான சமூகத்திற்கான அடையாளமாகாது.

மருத்துவ கருக்கலைப்பு சட்டம் நவீனம் அடைய வேண்டும். அது நாடாளுமன்றத்தில் சட்டமாக மாறி மக்களுக்கான சட்டமாக விரைவில் மாற வேண்டும். நியாயமான காரணங்களால் ஒரு பெண் தன் கருவை கலைக்க விரும்பினால் அது அவரின் உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.

வேண்டுதல் வேண்டாமை


பஞ்சர் கடைகளை
அடையாளம் காட்ட
பளபளக்கும் பலகைகளும்
வண்ண விளக்குகளும் தேவையில்லை
சாலையோரத்தில் ஒரு டயரை
நிறுத்தி வைத்தல் போதும்
விளம்பரம் தேவைப்படின்
வெள்ளை மஞ்சள் நிறத்தில்
கோணல் மாணலாய்
எழுதி வைத்தல் போதும்
நிறுத்தி வைக்கப்படும் டயர்கள்
ஓடித் தேய்ந்து போனவை
பொத்தல் ஆனவை
கிழிந்தவை என எப்படியும் இருக்கலாம்
எப்படி இருந்தாலும்
இன்னும் வாழ்வு மிச்சமுண்டு
நிறுத்தப்பட்ட டயரின் குழிவில்
பூனையொன்று குட்டிகளை ஈனலாம்
கீழே அடுக்கி வைக்கப்பட்ட
டயர்கள் மறைவில்
எலியொன்று இனப்பெருக்கம் செய்யலாம்
இவற்றிற்கிடையே
ஓடிக்கொண்டிருக்கும் ஓய்ந்திருக்கும் டயர்களில்
எது எலி எது பூனை எனும்
கேள்வியும் எழலாம்!


உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்


அன்பிற்கினிய கவிஞர் கலாபிரியா அவர்களின் அழைப்பில் பிப்ரவரி 13ம் தேதி தென்காசி, இடைகால் மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா விருந்தினராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. கவிஞர் கலாபிரியா அவர்களின் துணைவியார் திருமதி சரஸ்வதி அம்மாள் அந்தப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பள்ளியின் செயலராகப் பதவி வகிக்கிறார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் ஏ.ஆர்.எஸ் (எ) ஏ.ஆர்.சுப்பையா முதலியார் அவர்கள் 1969ம் ஆண்டு இந்தப் பள்ளியைத் துவங்கியிருக்கிறார். அவருடைய 109வது பிறந்தநாள் விழா தினத்தில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

ஆண்டு விழாவில் கலந்து கொள்வதையொட்டி, அன்று காலை மாணவர்களுக்கான பயிலரங்கு நடத்தலாமா எனக் கேட்டிருந்தனர். சரியென ஒப்புக்கொண்டிருந்தேன். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ராஜசேகரன் முழுவீச்சில் என்னோடு தொடர்பில் இருந்து, எப்போது அழைத்து விபரங்கள் கேட்டாலும் கொடுத்தார்.

முதலில் 10,11,12ம் வகுப்பில் உள்ள 600 பேருக்கும் ஒரே அமர்வாக நடத்தும் திட்டத்தை முன் வைத்தனர். பொதுவாக மூன்று வகுப்பையும் ஒன்றாக அமர்த்தி பேசுவதில்லை என்பதால் தனித்தனியாக வைப்பதையே பரிந்துரை செய்தேன். நேரமின்மை காரணமாக ஒன்றாகவே நடத்துவதாக முடிவு செய்திருந்தனர். புதன் இரவு அழைத்த தலைமையாசிரியர் இடப்பற்றாக்குறை காரணமாக 11,12ம் வகுப்பை பயிலரங்கில் அமர்த்தி, 10ம் வகுப்பை அருகாமை வகுப்பில் அமர்த்தி பேசுவதை மட்டும் கேட்க ஏற்பாடு செய்கிறோம் என்றார். நான் மறுத்து, முடிந்தால் அவர்களுக்கு மதிய அமர்வுகூட ஏற்பாடு செய்யுங்கள், வெறும் பேச்சு மட்டும் கேட்பது போல் வேண்டாம் என்றேன். மாலை ஐந்து மணிக்கு ஆண்டு விழா என்பதால் அதிலும் சிரமம் இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் பத்தாம் வகுப்பிற்கு மதிய அமர்வை உறுதிப்படுத்தினர்.

புதன்கிழமை தென்காசி நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருமலைக்கோவில் சென்று திரும்பி, தென்காசியிலேயே தங்கிவிட்டு, வியாழன் காலைதான் இடைகால் சென்றடந்தேன். பேருந்து நிறுத்ததில் கவிஞர் கலாபிரியா காத்திருந்து அழைத்துச் சென்றார். நடை தூரம் தான் அவர் வீடு. இரண்டாம் முறையாகச் செல்கிறேன். இது அவருடன் நான்காவது சந்திப்பு என நினைக்கிறேன். எழுத்து, வயது, நிலம் என மிகப் பெரும் இடைவெளி இருந்தாலும், மனதிற்கு மிகப் பிரியமான அருகாமையை உணர்த்தும் தந்தையின் நெகிழ்வும், தோழமையின் நேசமும் அவரிடமுண்டு. சென்றதும் சுவையான காஃபியுடன் அந்த நாள் துவங்கியது.

வீட்டின் மாடியில் விருந்தினர் தங்குவதற்கான அறை, அலமாரிகளில் அடுக்கப்பட்ட புத்தகங்களோடு வரவேற்கிறது. அறையில் விருந்தினர் வந்து தங்கினால் எதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும் என மிக நுணுக்கமாகச் செய்யப்பட்டிருந்த வசதிகளும், பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த பொருட்களும் உபசரிப்பின் ப்ரியமிகு இலக்கணம். அவருடைய வேனல், பெயரிடப்படாத படம் நாவல்களை அன்பளித்தார்.

நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளை முழுவதுமாக முடித்து, தயாராகி கீழே வரும்போது அண்ணன் அமல்ராஜ் காத்திருந்தார். ஒவ்வொரு வருகையிலும் எப்படியாவது சந்தித்து விடுகிறவர், நான் சந்திக்க வேண்டுமென பெரிதும் விரும்பப்படுகிறவர். சரஸ்வதி அம்மாவின் உபசரிப்பில் காலை உணவு முடித்து பள்ளிக்குப் புறப்பட்டோம்.



நிறுவனரின் சிலைக்கு மாலை அணிவிப்பு, மரக்கன்று நடுதல் ஆகியவை முடிந்து காலை மூன்று மணி நேர அமர்வு 11, 12ம் வகுப்பிற்கான அமர்வு இரண்டு மணி நேரம் சுமார் 400 பிள்ளைகளுக்கு நடந்தது. மதிய இடைவெளிக்குப் பிறகு 10ம் வகுப்பிற்கான அமர்வு இரண்டு மணி நேரம் சுமார் 200 பிள்ளைகளுக்கு நடந்தது.



பிள்ளைகளுக்கான ஒரே சிரமம் நிலத்தில் அமர வைக்கப்பட்டது என்பதைத் தவிர்த்து, இருக்கும் சாத்தியங்களை வைத்து மிகச் சிறப்பான, அர்ப்பணிப்பான ஏற்பாடு. இதற்காக பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட நிர்வாகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பள்ளியின் தலைமையாசிரியர், தலைவர் திரு.சுரேஷ், செயலர் திருமதி சரஸ்வதி, கவிஞர் கலாபிரியா, அண்ணன் அமல்ராஜ் ஆகியோரும் முதல் பயிலரங்கு அமர்வில் பங்கெடுத்தனர்.



மதிய உணவிற்குப் பிறகு இரண்டாவது அமர்வு நிறைவடைந்து மீண்டும் கவிஞர் இல்லத்திற்கு திரும்பி அவசரமாகக் குளித்து ஆடை மாற்றி ஆண்டு விழாவுக்கு தயாரானபோது, பாலபாரதி வருகை தந்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன்தான் கவிஞர் கலாப்பிரியா இந்த வீட்டிற்கு வந்திருந்தேன், தென்காசி நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே முக்கியத் துவக்கப்புள்ளி. அவருடன் உரையாடி மீண்டும் பள்ளிக்கு வந்தபோது, பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது.

காலை முதல் பள்ளியின் பெரும்பான்மை பிள்ளைகளிடம் பயிற்சியாளராக ஐந்து மணி நேரம் பேசியிருந்த சூழலில், தற்போது அவர்கள் முன்பு பேச்சாளர் பாத்திரம் எடுப்பது சற்று சவாலாகத்தான் இருந்தது. மேடைக்கு வரும்போது முதல் வரிசையில் அமர்த்தப்பட்டிருந்த 10ம் வகுப்பு மாணவர்களில் ஒரு தம்பி என்னை மறித்தான். மதிய நிகழ்வில் சிறப்பாக பங்கெடுத்த மாணவன்.

சார் எனக்கு ஒன்பதாம் வகுப்புல மார்க் எடுத்ததுக்கு ப்ரைஸ் கொடுப்பாங்க. அத நீங்கதான் கொடுக்கனும்என்றான். அப்படி கொடுப்பது என் கையில் இல்லையென்றாலும் சரியென்றபடி நகர்ந்தேன். மேடை ஏறிய பிறகும் சைகை மூலம் எனக்கு நினைவூட்டினான். (வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வடிவேலு சைகை காட்டிய காட்சி மனதில் நினைவுக்கு வராமல் இல்லை)

முதலில் நான் பேச வேண்டியிருந்தாலும், காலை, மதியம் பேசியிருந்ததால் மற்றொரு பேச்சாளரான முனைவர் சங்கரராமன் அவர்களை முதலில் பேசிவிடுமாறு வேண்டினேன். பயிலரங்குகளில் தொடர்ச்சியாக பேசி ஓய்ந்த பிறகு பெரு மௌனத்தை புசிப்பவன் நான். அது ஒருவகையில் ஓய்வாகவும், முக்கியமாக உரை தயாரிப்பு அவகாசமாகவும் தேவைப்பட்டது.



மாலை 6.45க்கு மேடை என் வசம் வர 7.15 மணிக்கு உரையை நிறைவு செய்ததும், பரிசு வழங்க அழைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிள்ளைகள் அழைக்கப்பட்டனர். அந்தப் பத்தாம் வகுப்பு மாணவனும் பரிசு வாங்க வந்தான். மலர்ச்சியோடு பரிசு கொடுத்து வாழ்த்தியபோது, வாங்கிய மகிழ்ச்சியோடு ‘உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்’ என்றான்.

இரவு ஊர் திரும்ப நெல்லையில் ரயில் பிடிக்க வேண்டியிருந்ததால் உடனடியாக புறப்பட வேண்டியிருந்தது. தென்காசி சென்று அங்கிருந்து திருநெல்வேலி வரும் திட்டம். கலாபிரியா அவர்களும், பள்ளியினரும் அதை மறுத்து நெல்லையில் விடுவதற்காக கார் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், நெல்லை சந்திப்பில் இறக்கிவிட்டனர்.

உங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்’ இது திரும்பத் திரும்ப உள்ளுக்குள் தளும்பிக் கொண்டேயிருந்தது. வேறென்ன வேண்டும் ஒரு நாளின் நிறைவில். வென்றெடுத்த தினவும், மனத் திருப்தியும். அவன் வளர வேண்டும், காலம் துணை நிற்கட்டும்.


சாய் கிருபா சிறப்பு பள்ளி - Value Added Visit


ஒருபோதும் அனுபவித்திராத புதிய உலகம் ஒன்றின் கதவுகளைத் திறந்து வைத்து, ’வந்து பாருங்கள்!என அழைத்தால் யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே நெருங்கிய உறவினரால் தவறவிடாமல் சென்று பார்த்து வாங்கஎன வற்புறுத்தப்பட்ட உலகம் அது. எனினும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. உண்மையில் அமைத்துக் கொள்ள நான் முயற்சி செய்யவில்லை.

அதை உருவாக்கியவர் சமீபத்தில்தான் என்னுடன் ஃபேஸ்புக் நட்பில் இணைந்திருந்தார். அவரின் தொடர் செயல்பாடுகளைக் கவனித்து வந்த நேரத்தில் அண்ணன் சிவக்குமார், அவருடைய எண்ணைக் கொடுத்து, உங்களை அழைக்க விரும்புகிறார், பேசுவார் என அறிமுகம் கொடுக்க, சிறிது நேரத்தில் அழைத்தார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு, தமது நிறுவனத்திற்கு VisiValue Added t வர அழைத்திருந்தார். உடனடியாக தேதியை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அந்த தேதியில் முடிந்தவரை வந்துவிடுகிறேன் எனச் சொல்லியிருந்தேன். இரண்டு நாட்கள் முன்பு அழைத்து குறித்த தேதியில் வந்துவிடுகிறேன் எனச் சொன்னேன். உண்மையில் Value Added Visit என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட எதுவும் தெரியாமல், அந்த உலகத்தினை அறியும் ஆர்வத்தில் 06.02.2020 வியாழக்கிழமை சரியான நேரத்திற்குச் சென்றடைந்தேன். உடன் மகளும் வந்திருந்தார்.

அந்த உலகம் திருப்பூர் சாய் கிருபா சிறப்பு பள்ளி”. உருவாக்கி நடத்தி வருபவர் திருமதி. கவின் திருமுருகன்.



அந்த உலகம் எதிரெதிரே இருக்கும் இரண்டு கட்டிடங்களில் இயங்குகின்றது. சுமார் 150 பிள்ளைகள் வந்து போகிறார்கள். 30-40 பேர் வேலை செய்கிறார்கள். வருகின்ற பிள்ளைகள் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருப்பார்கள்என்று எவரும் கூறிக் கடக்கும் வகையில்தான் மேலோட்டமாய் தெரிகின்றது.

வாசலில் நின்றபடி இரண்டு பூச்செண்டுகள், தம் பள்ளியின் தயாரிப்பில் உருவான அழகிய காகித பூங்கொத்தோடு நின்றிருந்தார்கள். அவர்களின் கைகளைப் பற்றி வணக்கம் சொல்லி உள்ளே நுழையும்போதே அந்த உலகத்திற்குள் பொருந்த நான் ஏறத்தாழ தயாராகியிருந்தேன்.

முதலில் திருமதி கவின் அவர்களுடன் உரையாடல் தொடங்கியது. இந்த உலகத்திற்குள் நுழைந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை தேர்ந்த முறையில் வரிசையாக பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவர் கேட்ட முதல் மற்றும் முக்கியமான கேள்வி, “இந்த மாதிரி குழந்தைகளை பார்த்திருக்கீங்ளா, அனுபவம் உண்டா!?”. என்னிடம் பதில் இல்லை.

சந்தித்ததென்றால், போகிற வருகிற வழியில் சந்தித்ததைச் சொல்வதா? யார் வீட்டிலேனும் எப்பொழுதேனும் பார்த்ததைச் சொல்வதா? ஏதேனும் காட்சிகளில் கண்டதைச் சொல்வதா? ஆகவே இல்லைங்க... எந்த அனுபவமும் இல்லை!என்றேன். வந்து பாருங்கஎன உள்ளே அழைத்துச் சென்றார்.

கவின், 2014ம் ஆண்டு முதல் இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சும்மா இருக்கோம், எதாவது செய்ய வேண்டுமே என்கிற எண்ணத்தில் ஒரு சிறப்பு பள்ளிக்கு ஒரு மணி நேரம் தன்னார்வலராக செல்லத் துவங்கியவர், அதை தினசரி சுமார் நான்கு மணி நேரமாக நீட்டித்திருக்கிறார். இரண்டரை ஆண்டு கால அனுபவத்திற்குப் பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்பட வேண்டுமென நான்கு குழந்தைகளோடு ஒரு சிறப்பு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். அது தற்போது 150 குழந்தைகளை வாழ்விக்கும் அற்புத உலகமாக மாறியிருக்கிறது.

சாய் கிருபா சிறப்பு பள்ளிஆட்டிசம் (autism) மற்றும் டவுன் சின்றோம் (down syndrome) எனச் சொல்லக்கூடிய மதியிறுக்கம் மற்றும் மன நலிவு உள்ளிட்டவைகள் சார்ந்த பல்வேறு சவால்கள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு புகலிடம் அல்லது வாழ்விக்கும் உலகம். ஆட்டிசம் குறித்து ஓரளவு வாசித்திருந்தாலும், அந்தக் குழந்தைகளை நேரில் கண்டதில்லை, அதே போல் டவுன் சின்றோம் குறித்து எந்த அனுபவமும் எனக்கிருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள கூச்சமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

இம்மாதிரியான குழந்தைகளை இதுதான் அவர்களுக்கான பிரச்சனை என்று இனம் கண்டு பார்த்திருக்கவில்லையே தவிர, பல தருணங்களில் சந்தித்திருக்கின்றேன். சரியாக பேச்சு வராத, கடுமையாக குறும்பு செய்யும், அடம் பிடிக்கும், எப்போதும் ஒடுங்கிப் போகும், வளர்ச்சி சரியில்லாத, நிற்க முடியாத, தலை பருத்த, தலை ஆடிக்கொண்டிருக்கும், நடக்க முடியாத, எச்சில் ஒழுகியபடி இருக்கும் இவர்களைக் கடந்துதான் வந்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்களுக்கு என்ன?’ எனும் புரிதல் இருந்ததில்லை.

சமீபத்தில்தான் பள்ளியை சற்று விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். வயது மற்றும் குறைபாடுகளை வைத்து தனித்தனி வகுப்புகளாக பிரிக்கப் பட்டுள்ளன. மூன்று வயது முதல் 33 வயது வரை அங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு வகுப்பறையிலும் இரண்டு மூன்று ஆசிரியைகள். ஆசிரியைகளில் பலர் அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள். ஆசிரியைகளுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்வு கிடைக்காத அளவு பிள்ளைகள் வேலை வாங்குகிறார்கள். அழகிய சீருடையில் ஒவ்வொரு குழந்தையும் பூவாய் சிரிக்கின்றன. 80% பிள்ளைகளுக்கு பேச்சு வரவில்லை.





கவின் ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்று, பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தும்போது புதியவரின் வருகையை இனிதே அங்கீகரிக்கிறார்கள். என்னைவிட என் மகளின் வருகையை அழகாய்க் கொண்டாடுகிறார்கள். அந்தப் பள்ளிச்சூழல் முழுக்க பெரும்பான்மையாக பெண்களே இருக்கின்றனர். கை குலுக்கல்களை மீண்டும் மீண்டும் விரும்புகிறார்கள். பாடுகிறார்கள். கத்தி கூச்சலிட்டுக் காட்டுகிறார்கள். சைகை செய்கிறார்கள். சிலர் அமர்வதே சிரமம் என்பதால் அதற்கான பிரத்யேக நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவரும் இந்தப் பள்ளிக்கு வந்தபோது இருந்த நிலை வேறு, இன்று இருக்கும் நிலை வேறு. மனித சமூகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மிக உயரிய மாற்றம் என்றால் இந்தப் பிள்ளைகளை, வந்த நிலையிலிருந்து இந்த நிலைக்கு மேம்படுத்தியிருப்பதை உதாரணமாகச் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு சிறுவன் என்னை சைகையால் அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொள்கிறான். அவனை செல்ஃபி வீடியோ எடுத்துக் காண்பிக்கிறேன், தன்னை அடையாளம் கண்டு, தன்னை நானு... என்னுஎன்று அடையாளம் சுட்டுகிறான். ஒரு பெண் குழந்தை என் மற்றும் மகளின் உள்ளங்கையை மீண்டும் மீண்டும் வாங்கி தன் காதில் பொத்தி விதவிதமாய் சிரித்துப் பார்த்து, அந்த ஒலி அதிர்வுகளை உணர்ந்து மகிழ்கிறது.

ஒவ்வொரு குழந்தை குறித்தும் கவின் அறிமுகம் கொடுக்கிறார். அவர்கள் வெறும் காட்சிக்குரியவர்கள் என்பதாக எந்த மனவோட்டமும் ஏற்பட்டுவிடாதவாறு அழுத்தமான அறிமுகம். அது நேசிப்பின் வெளிப்பாடு. ஒவ்வொரு அறைக்குள் அவர் நுழையும்போதும், ஏதோ ஒரு குழந்தை அம்மா என அவரை அழைக்கின்றது. விதவிதமான உணர்வுகளோடு அவரை நெருங்கும் பிள்ளைகளை அத்தனை ஆதூரமாய் அணைத்து தழுவுகிறார். நான் பார்த்ததில் உணர்ந்த மிக நெகிழ்வான அணைப்பென்பது அதுதான். கொஞ்சி முத்தமிடுகிறார். உண்மையில் கவின் அந்த உலகத்தில் இணைந்திருக்கவோ, இயங்கவோ இல்லை. தான் விரும்பிய உலகத்தை உருவாக்கி மிகக் கனிவாக வாழ்கிறார்.

அங்கிருந்து முதல் தளத்திற்கு அழைத்துச் செல்கிறார். எல்லாப் பிள்ளைகளும் பயன்படுத்தும் விதமான பல்வேறு உடற்பயிற்சி, விளையாட்டு கருவிகள். ஒவ்வொன்றிலும் கற்றல் நிகழ்கிறது. பிள்ளைகள் உரம் பெறுகிறார்கள். ஒவ்வொன்றும் தேடித் தேடி அங்கு நிறுவப்பட்டிருக்கின்றது. இன்னும் விசாலமான இடம் கிடைக்கும்போது அது மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி நகரும்.

பெரும் பிரமிப்போடும், கனத்த மனதோடும் கீழே வருகிறோம். எதிரில் இருக்கும் தொழிற்பயிற்சி மையத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் கொண்ட பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி கொடுத்து, அவர்களுக்கு பலவிதமான தொழிற்பயிற்சிகள் வழங்கி வரும் மையம் அது.



நுழைவாயில் அருகில் ஒரு மாணவன் தேங்காய் மட்டை உரித்துக் கொண்டிருந்தான். பல நிழற்படங்களில், காணொளிகளில் பார்த்த முகம். முகுந்தன் என அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.



வலது பக்க முதல் அறை சமையல் கூடம். 18 வயது நிரம்பிய பிள்ளைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். எள்ளும் கருப்பட்டியும் போட்டு இடித்த எள்ளு மாவு உருண்டைகள் தயாராகிக் கொண்டிருந்தன. ஒரு மாணவன் உருண்டை பிடித்து கொண்டிருந்தான். பாத்திரங்களில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாராக இருந்தன. மீல்ஸ் ஆன் வீல்ஸ் எனும் திட்டம் இந்தப் பிள்ளைகளால் நடத்தப்படுகிறது. இந்த மூன்று உணவு வகைகளும் வெளியில் அவர்களாலேயே விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அதில் தயிர் சாதம் மட்டும் தாளிக்கப்படாமல் இருக்க, அதற்கான வடைச்சட்டி அடுப்பில் வைக்கப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த இளைஞன் எண்ணெய் முழுதும் காயும் வரை காத்திருந்து கடுகு போட்டார். கடுகு போட்ட பிறகு ஒரு கடுகு விடாமல் வெடிக்கும் வரை காத்திருந்து கறிவேப்பிலை போட்டு, வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு, கிளறிவிட்டு, போதுமான உப்பு போட்டு வெந்ததும் இறக்கி நேராக தயிர் சாதம் இருந்த பாத்திரத்தில் ஊற்றிவிட்டு, வடைச்சட்டியை அங்கேயே வைத்துவிடாமல், நேராக சிங்கில் வைத்து தண்ணீர் திறந்துவிட்டுவிட்டு, தயிர் சாதத்தை கிளற ஆரம்பித்தான். அந்த பொறுமையும் நிதானமும் அழகிய கவிதையாய் மனதில் ஆழப் பதிந்தது.





இடது பக்க அறை அங்காடியாக மாற்றப்பட்டு, அங்கிருக்கும் பிள்ளைகள் மூலம் நடத்தப்படுகின்றது. வீட்டிற்கு தேவையான பல பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சில பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, சிறிய பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நாங்கள் சென்றிருந்தபோது மூட்டையில் இருந்த நாட்டு சக்கரை அரைக் கிலோ பைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அதைச் செய்து கொண்டிருந்த மாணவனைக் கவனித்தேன். ஒவ்வொரு பையிலும் 500 கிராம் சர்க்கரை போட வேண்டும், நீங்கள் கவனித்துப் பாருங்கள், ஒரு பையில்கூட 498, 499, 501, 502 கிராம் என்றெல்லாம் இருக்காது. அனைத்திலும் 500 கிராம் மட்டுமே கச்சிதமாக இருக்கும்என்றார் கவின். எடை இயந்திரத்தில் வைத்திருந்த காகித பையில் நிரப்பப்பட்ட சர்க்கரை அளவு மிகச்சரியாக 500 காட்டிக்கொண்டிருந்தது.

அங்காடியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதே சுவையான முறுக்குடன் சூடான சுக்கு தேநீர் வந்தது. உணர்ச்சி வசப்பட்டோ, மிகைப்படுத்தியோ எல்லாம் சொல்லவில்லை. சுக்கு கொத்தமல்லி கருப்பட்டி கலந்த அந்த தேநீரின் ருசியை இதுவரை எங்கும் உணர்ந்ததில்லை என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். முறுக்கு மற்றும் தேநீர் அந்தப் பிள்ளைகளால் தயாரிக்கப்பட்டதே.

அடுத்த அறையில் அழகிய வேலைப்பாடுகளுடன் காகித பைகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான பயிற்சியும், தயாரிப்பும் நடக்கின்றது. எனக்கு காலையில் வழங்கப்பட்ட காகித பூங்கொத்தும் அவர்களின் தயாரிப்புதான். அங்கும் பிள்ளைகள் கற்றுக் கொண்டு தயாரிக்கிறார்கள். இடையிடையே அவர்களுக்கான பலவிதமான கற்பித்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு அறையில் ஒரு பக்கம் பிள்ளைகள் காய்கறி நறுக்குகிறார்கள், இன்னொரு பக்கம் எட்டாம் வகுப்பு பாடம் உள்ளிட்ட பல நிலைகளுக்கான கற்பித்தல் நிகழ்கிறது.

அனைத்தையும் பார்வையிட்ட பிறகு, மீல்ஸ்-ஆன்-வீல்ஸ் திட்டம் நிகழும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். ஆர்டிஓ அலுவலகம் அருகில் ஒரு ஆம்னி வேனில் சாய் கிருபா மையத்தில் சமைக்கப்பட்ட தக்காளி, எலுமிச்சை, தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனையில் ஈடுபடுபவர்களும் சிறப்பு பிள்ளைகளே. தினசரி வாடிக்கையாளர்கள் சாப்பிட வருகிறார்கள். அவர்களுக்கான குடிநீர், நாற்காலி வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாப்பாடு பரிமாறும் இடத்தில் சிந்தும் பருக்கைகள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகின்றன. அந்தக் காட்சி ஆகச்சிறந்ததொரு அழகியல். ஞாயிறு தவிர்த்து அனைத்து நாட்களும் உணவு விற்பனை நடைபெறுகின்றது.





சமையல் தேவைகளுக்காகவும், பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதற்காகவும் சுமார் முக்கால் ஏக்கர் பரப்பில் கடினமான முயற்சிகள் மேற்கொண்டு இரசாயனம் கலக்காமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. தேவைக்குப்போக மிஞ்சும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அங்காடி, கைவினைப் பொருட்கள், உணவு தயாரிப்பு, விவசாயம், விற்பனை ஆகிய அனைத்தும் எந்த விதத்திலும் வருமானத்தை எதிர்பார்த்து செயல்படுத்தப்படவில்லை. அவை அந்தப் பிள்ளைகளை தகுதியும், திறனும் உள்ளவர்களாக மாற்றும் காரணியாகவே நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் 18 வயது நிரம்பிய பிள்ளைகள் மட்டுமே அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட அளவில் சம்பளமும் வழங்கப்படுகின்றது. இந்த தகுதி மற்றும் திறமையின் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு எதிர்காலம் உறுதியாகின்றது என்பது எத்தனை அற்புதமான செயல் என்பதை நினைக்க திருமதி கவின் மீது அலாதியான மரியாதை கூடுகிறது.


சமையல் குழுவின் தயாரிப்பில் சோறு, சாம்பார், அவரை பொறியல், ரசம், தயிர் என மதிய உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது முகுந்தன் ஓடி வந்து, ’நான் சாப்பிட்டேன், நல்லாருக்கு, சாப்பிடுங்க!எனச் சொல்லிப் போகிறான். அது சொற்களாய் உச்சரிக்கப்படவில்லை. மனதைப் பரிமாறுதல் என்பதே அந்த செயல்.

எனக்கு ஒன்றும் பெரிதாகப் பேசத் தோன்றவில்லை. மனம் முழுக்க ஆச்சரியங்களும், நெகிழ்வான உணர்வும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. உணவு முடிந்ததும் நேரத்தை செலவிட்டு வந்தமைக்காக நன்றி என்கிறார் கவின். கவின் நன்கு உயரமானவர். அது வெறும் உடலின் உயரமல்ல. அர்ப்பணிப்பின், தாய்மையின், .........., ......, ......( இன்னும் எத்தனை சொற்கள் வேண்டுமானாலும் இதில் நிரப்பிக்கொள்ளலாம்) உயரம். தம் வாழ்வையே இந்தப் பிள்ளைகளை மனிதர்களாக்குவதற்காக, அவர்களின் மேன்மைக்காக அர்ப்பணித்திருக்கும் அவரிடமிருந்து நன்றி பெறுவதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை, ஆகவே உங்கள் அர்ப்பணிப்பின் முன் இந்த அரைநாளை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. ஆகவே நன்றியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!என்று விடைபெறுகிறேன். உண்மையில் எனக்கும், என் மகளுக்கும் புதியதோர் உலகத்தை அறிமுகம் செய்து, அதற்குள் அனுமதித்த அவருக்கு நன்றி சொல்கிறேன்.

திருப்பூரில் அத்தனை அற்புதங்களைச் செய்துவரும் கவின், ஈரோடு பெருந்துறை ரோட்டில் இருக்கும் கவின் மருத்துவமனை நிறுவனர் மறைந்த மருத்துவர் இளங்கோ அவர்களின் மகள். அவர் ஈரோட்டின் மகள் என்பதில் மிகுந்த பெருமையும் மனநிறைவும்.

கவின் குறித்து மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியது, சாய் கிருபா பள்ளிக்கு என சொந்தக் கட்டிடத்தில் விசாலமான பள்ளியை அமைக்கும் வரை ஒரு சபதம் எடுத்திருக்கிறார். முதலில் கேட்பதற்கு எளிமையாகத் தோன்றலாம். ஆனால் மிக வலிமையான, சற்றே சுய வதை கொண்ட சபதம் அது. தெரிந்து கொள்ள விரும்புவோர் நேரில் சந்தித்து தெரிந்து கொள்வதே சரியானது.

எதை அடிப்படையாகக் கொண்டு Value Added Visit என என்னை அழைத்தார் எனத் தெரியவில்லை. உண்மையில் நான்தான் Value Added ஆகி அங்கிருந்து திரும்பினேன்.

தொடர்புக்கு : சாய் கிருபா சிறப்பு பள்ளி
29, ஈஸ்வரன் நகர், காந்தி நகர், திருப்பூர்-641603. மொபைல் : 9362161671, 7601829295


- ஈரோடு கதிர்