திபெத்திந்தியா - இப்படியொரு நாடு இருக்குங்க!

விரிந்துபரந்து நீண்டு கிடக்கும் தமிழக கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதி அது. ஆசனூரிலிருந்து கொள்ளேகால் செல்லும் வழியில் இருக்கிறது உடையார்பாளையா! இந்திய வரலாற்றில் குறிப்பிடும்படியானதொரு இடம், ஆனால் அவ்வளவாக இந்தியர்களுக்கு அடையாளம் தெரியாத இடம் அது.

தமிழகத்தின் கேர்மாளாம் வனச்சோதனைச் சாவடி தாண்டியதிலிருந்து மிக மோசமான சாலை கடும் சவாலைக் கொடுத்தது. குத்தும் கூரான கற்களை ஒரு வழியாய் சமாளித்து உடையார்பாளையாவை (கர்நாடகா மாநிலம்) எட்டும்போது அந்தப் பகுதியில் சாலை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.




திபெத் அகதிகளுக்கென இந்திய அரசாங்கம் அளித்திருக்கும் (இராஜ) வாழ்க்கை குறித்த அளவெடுக்கும் கண்களோடு அந்த இடத்தை அடைந்த போது ஆச்சரியத்தில் மனம் தடுமாறியது. திபெத்திலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த திபெத்திய அகதிகளுக்கு, அந்தப் பகுதியில் 23 கிராமங்களில் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து மத்திய அரசாங்கம் பாதுகாத்து வருகிறது என்பதுதான் ஆச்சரியம்.

முதன்மையாய் இருக்கும் ஒரு உயர்ந்த கிராமத்தை நோக்கி எங்கள் வாகனம் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருக்கும்போது, இரண்டு சக்கர வாகனங்களில் எதிர்திசையிலிருந்து பறக்கும் திபெத்திய இளைஞர்களைப் பார்க்கும்போது இது இந்தியா தானா!? என்ற கேள்வி மூளைக்குள் குடைந்தெடுக்கிறது. ஈழத்து மக்களுக்காக இந்த தேசம் அமைத்துக் கொடுத்திருக்கும் முகாம்கள் குறித்த கோபம் கொதிக்கிறது. 





ஒருவழியாய் அந்த கிராமத்தின் மையத்திற்கு வர, எதோ அவர்களுக்கான முப்பது நாள் வழிபாடு விழா நடப்பதை அறிய முடிகிறது. எங்கு நோக்கினும் திபெத்தியக் கொடிகள், அவர்கள் தேர்தலுக்கான சுவரொட்டிகள், தகுதி நிறைந்த கல்விக்கூடங்கள், வசதி நிறைந்த மருத்துவமனை, பெரிய வழிபாட்டுக்கூடம், கூடி மகிழ சமுதாயக்கூடம், விளையாட அழகிய மைதானம் என எல்லாமே திபெத்தில் இருக்கும் சூழல் நம்மை ஆட்கொ’ல்’கிறது.

திபெத்திலிருந்து அகதிகளாக வந்த அவர்களுக்கு நல்ல சூழலில் மலைப்பிரதேசம் போன்று இடம் வழங்கி, அவர்களுக்கு நிலம் வழங்கி மிகக் கௌரவமான அளவில் குடியமர்த்திருக்கின்றது. வேதனை நிறைந்த வேடிக்கை என்னவெனில், திபெத்தியர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் இந்திய தேசத்தின் மதிப்புமிகு வாக்காளன், குடிமகனான தமிழக, கர்நாடக மக்கள் கூலிகளாக வேலைசெய்து பிழைக்கிறார்கள் என்பதுதான்.

காலம்காலமாக இந்திய மண்ணில் வாழ்ந்து வருபவனுக்குக்கூட சொந்த நிலமின்றி, அகதியாக இங்கே வந்தவர்களிடம் கூலிக்கு வேலைக்கு செல்வதின் முரண் எனக்குப் புரிபடவேயில்லை. ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என இருக்கும் இந்த தேசம் குறித்த வெகுண்ட மனதோடு அங்கே கொஞ்சம் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம்.

திபெத்தியப் பெண்கள் ஆங்காங்கே கடை விரித்திருக்கின்றனர். நம்மை மிக சிநேகமாக எதிர்கொள்கின்றனர். தங்கள் சமூக பண்டிகையை ஒட்டி கையில் ஒரு கையில் மாலையை ஏந்தி எந்நேரமும் பிரார்த்தனையில் இருக்கின்றனர்.



கன்னடம் பேசும் ஒரு பெண்மணி காய்கறிக்கடை வைத்திருக்கிறார். பேச்சுக்கொடுக்கும் போது, கீழே ஊர்ப்பக்கம் இருந்து காலையில் வந்து விற்றுவிட்டு மாலை திரும்புவதாகச் சொன்னார். கன்னடமும், திபெத்தியர்களுக்காக இந்தியும் மிக இயல்பாகப் பேசுகிறார்.

இதுவரை ஒரு முறைகூட வந்திராதா தலாய்லாமாவிற்காக, எப்போதாவது வந்தால் தங்குவதற்கென அற்புதமான ஒரு குடியிருப்பு கட்டி வைத்துள்ளனர். எப்போதாவது வருவாரா அல்லது எப்போதுமே அந்த குடியிருப்பு அப்படியேதான் கிடக்குமா எனும் சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.

துறவு நிலை மேற்கொண்ட சிறுவர்கள் மஞ்சள் அடர்சிவப்பு ஆடையில் ஆங்காங்கே புழங்கிக்கொண்டிருக்கின்றனர். அங்கிங்கென சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்கையில், அழகாய் தமிழ்ப் பேசும் திபெத்திய பெண்மணி கிடைத்தார். நீண்ட நாட்கள் புதுவையில் இருந்ததால் மிக இயல்பாக தமிழில் உரையாடுகிறார்.





மேலும் சிறிது நேரத்தைக் கடத்திவிட்டு, திபெத்திலிருந்து இந்தியாவிற்குள் திரும்ப ஆரம்பித்தோம். அன்று முதல் இன்றுவரை மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ள எந்தவொரு பொருத்தமான வார்த்தைகளும் கிடைக்கவில்லை.


~/\~

24.11.2008-ல் பதிவுலகத்திற்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் நகரும் இந்த நாளில், இதுவரை இணைய எழுத்துமூலம் ஈட்டிய அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

~/\~

கூடிக்களிக்கும் தனிமை




கழுத்தைக் கவ்விக்கொண்டு
தொட்டிலாடுகிறது
மனிதர்களற்ற வீட்டில்
உடனுறங்கும் தனிமை…

இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள்
முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து
நெளிந்து நெளிந்து நகர்கிறது
ஒரு மண்புழு போல

நள்ளிரவு விழிப்பில்
புத்திக்கு முன் துயிலெழுந்து
இடவலமாய்த் துழாவும் கைகளில்
தாவி அப்பிக்கொள்கிறது

சன்னலோர மரக்கிளைகளில்
சிதறும் பறவைக் கொஞ்சல்களும்
வெளிச்சக் கீற்றுகளையும்
தட்டியெழுப்ப அனுமதிக்கிறது

நேரம் தவறிய தேநீர் சிற்றுண்டி
பசிக்கு கொஞ்சம் பகல் உறக்கம்
தொட்டுக்கொள்ள ஒரு முட்டை
இரு ரொட்டித்துண்டுகளுமென
எதையும் கலைத்துப்போட்டுக்கொள்ளும்
ஏகாந்த சௌகரியத்தை ஊட்டுகிறது

இறுகப்பூட்டிய யாழின் நரம்புகளாய்
அதிரும் தனிமையை
மீட்ட மீட்ட இதமாய் தெறிக்கிறது
அன்றைய தனிமையின் தனித்துவ இசை

தனிமையை அனுபவித்து
திளைத்துக் கொண்டாடி களைத்து
தனிமையை உற்றுப்பார்க்கையில்
குழுவாய் கூடிச்சிரிக்கிறது தனிமை!

~
நன்றி திண்ணை

தொலைந்து மீளும் உலகம்


ரண்டு படுக்கையும் சேர்ந்து சதுரமாக இருப்பதால் எந்த திசையில் வேண்டுமானாலும் தலைவைத்து தூங்கிக்கொள்ளலாம். ஆனால் அதில் மேற்கு ஓரம் படுத்து, வடக்கில் தலை வைத்த தினங்களிலெல்லாம் கனவுகளால் இரவுகள் நிரம்புவதாக இருக்கின்றது. அதுவும் கனவில் வருபவர்கள் சாதாரண ஆட்களாய் இருப்பதில்லை. குறைந்த பட்சம் எதாவது தலைவர்களாக, அதுவும் விவகாரம் பிடித்த தலைவர்களாகவேயிருக்க, நாளுக்கு நாள் லேசான அச்சம் அப்பிக்கொண்டது, இது எப்படியும் நம்மைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பாமல் விடாது போல என்று.

சில நாட்கள் கனவுகள் வந்தது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஒரு நாள் வேறுவழியின்றி வீட்டில் சொன்னேன். ஒரு மாதிரி கிண்டலாகப் பார்த்து குறும்புன்னகை பூத்தவர்களிடம் “என்னானலும் சரி இன்னிக்கு அதே மாதிரி படுக்கிறேன், எப்படிக் கனவு வருதுன்னு பார்க்கிறேன்” என சவால்(!) விட்டுவிட்டுப்படுத்தேன்.

காலையில் கண்விழிக்கும் போது கனவு கரைந்துகொண்டிருந்தது. விழித்த விநாடியில் சப்தமாகச் சொன்னேன். ”அடச்சே இன்னிக்கு கனவு வந்துடுச்சு. அதும் என்னோட நேரம், ரோசய்யாவா கனவுல வரணும்” என்று சொல்லியதைக் கேட்டு மனைவி சிரிக்கும் முன்னே, எப்போது அந்நேரத்துக்கு சிரமப்பட்டு எழுப்பினாலும் விழிக்காத மகள், தாவி கழுத்தைக் கட்டிக்கொண்டு, “என்னப்பா நடந்துச்சு கனவுல” என கேட்க ஆரம்பித்தாள். கரைந்துபோன கனவின் எச்சமாய், மிச்சம் மீதியிருந்த கனவுச் சாயங்களை அவர்களிடம் தெளித்துவிட்டு. ”தூக்கம் முக்கியம்டா குமாரு” என எனக்கு நானே சொல்லிக்கொண்டு இனி இடம் மாற்றிப்படுப்பது என முடிவோடு அன்றைய நாளைக் கடந்தேன்.

இரவு படுக்கைக்குச் செல்லும்போது கவனித்தேன்,  எனக்கு மட்டும் சபிக்கப்பட்ட அதே இடம் ஒதுக்கப்பட்டு தலையணை வடக்கிலேயே வைக்கப்பட்டிருந்தது. ”ஏன் இப்படி போட்டிருக்கீங்க” என்றேன். கண்களை மூடிக்கொண்டே “அங்கயே படுங்கப்பா, காத்தால என்ன கனவு வந்துச்சுன்னு சொல்லுங்க” எனக் கள்ளச்சிரிப்புச் சிரித்தாள் மகள்.

அப்போது அவ்வாறே படுத்துக்கொண்டேன். அவள் கண்ணுறங்கியதும், ஒரு கனவை யோசித்துக்கொண்டே தலைமாற்றிப்படுத்தேன். விடிந்து விழித்தெழுந்து அவள் கேட்கும் போது தெளிவாகச் சொல்லிக்கொள்ளலாம். நான் தயாரித்த கனவு எப்படியும் கரைந்துபோக வாய்ப்பில்லை. 


***

திர்த்த வீட்டுக் குட்டிப்பாப்பா ஆர்த்தி. உயரத்தை வைத்துக் கணக்கிட்டால் 7 வயதுதான் சொல்லமுடியும். ஆனால் 10 வயதாகிறது. குறைவான உயரமும் கூடுதல் பருமனுமாய் ஒரு புசுபுசுக் குழந்தை அவள். ஒவ்வொரு விடியலிலும் சன்னல் வழியே கசிந்து வந்து எழுப்பும் அவர்கள் சிறகுப்பந்து விளையாடும் ஓசைதான். தினமும் காலை நான் எழும்பொழுது படுக்கையறை சன்னலில் அவர்கள் சிறகுப்பந்து விளையாடும் ஓசை கேட்டுக்கொண்டேயிருக்கும். இரவு பத்து மணிக்கு மேலும் கூட அவர்களின் வீட்டு வாசலில் அவள் நடமாடுவதைப் பார்ப்பேன். எப்படியாகினும் காலை 6 மணிக்கெல்லாம், தன் அப்பாவோடு சிறகுப்பந்து விளையாடிக் கொண்டிருப்பாள். எப்போது பார்த்தாலும் தன் அப்பாவோடு ஒரு விளையாட்டு மனோபாவத்துடனேயே இருப்பதைக் கவனித்திருக்கின்றேன்.

அன்றைக்கு வீட்டு வாசலில் உட்கார்ந்து கால் உறையை மாட்டிக்கொண்டிருந்தாள். நான் வண்டியை வீதிக்கு நகர்த்தி , நிறுத்தித் துடைத்துக்கொண்டிருந்தேன். உள்ளேயிருந்து ”ஏய் எரும மாடு சீக்கிரம் கெளம்புடி” அவள் அம்மாவின் குரல் கேட்டது. குரலின் பிளிறல் கேட்டு திரும்பிப்பார்த்தேன்.

”சாக்ஸ் போடுறேன்மா” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

என்னவென்று புருவத்தை உயர்த்தினேன்.

“எங்க அம்மச்சி, எங்கம்மாவ எரும மாடுன்னுதான் திட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு. கிசுகிசுப்பாய்ச் சிரித்தாள்.

***





ரையே 11.11.11 கலக்கி ஓய்ந்தாலும், அது குறித்த பேச்சுகள் அடுத்த சில நாட்களுக்கு மிஞ்சியிருந்தன. எதிரில் விதவிதமாய் குத்தும் வெளிச்சங்களைக் கடந்து வாகனத்தை முடுக்கிக் கொண்டிருந்தேன். என் திருமணம் நடந்த மண்டபத்தைக் கடக்கும்போது, மகள் “அப்பா உங்க கல்யாணம் நடந்த மண்டபம் இதுதானே!” என நூற்றிச் சில்லறை முறையாகக் கேட்டுவைத்தாள்.

”நம்ம கல்யாணம் 03.03.02னு நடந்ததுக்குப் பதிலா 03.03.03னு நடந்திருக்கலாம்ங்க” என்றாள் மனைவி. ஏதோ சிந்தனையில் இறுகியிருந்த முகத்தோடு பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன்.
“சொல்றதுக்கு ஈஸியா இருந்திருக்கும்ல” என்றாள்!

”அய்யய்யோ, அப்படி நடந்திருந்தா எனக்குப் பிரச்சனையாயிருக்குமே” என்றாள் மகள்

“உனக்கென்னப்பா பிரச்சனை”

”2003ல கல்யாணமாகியிருந்தா நான் 2004ல தானே பொறந்திருப்பேன். அப்படிப் பொறந்திருந்தா, இப்ப செகண்ட் ஸ்டேண்ர்டுதானே படிச்சிட்டிருப்பேன்”

“செரி அதனால என்ன?”

”அய்யோ ஷங்கித்தி கூட ஒரே கிளாஸ்ல மாட்டியிருப்பேனே”

”யாரது ஷங்கித்தி”

”செகண்ட் ஸ்டேண்ர்டு பொண்ணுப்பா, எங்கூட வேன்ல வருவா, செமக் குறும்பு. நல்லவேளை 2003ல உங்களுக்கு கல்யாணமானதால நான் தப்பிச்சேன்”

கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. அவரவர் கவலை அவரவர்க்கு. எதிரில் மிரட்டலாக வந்த பேருந்து, என்னை எச்சரித்து ஒழுங்காக ஓட்டுமாறு சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனது.

***

நினைத்த நேரத்தில் ம்மால் குழந்தைகளை, நமக்கு இணையாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. குழந்தைகளால் அவர்கள் நினைத்த நேரத்தில் நம்மைக் குழந்தையாக மாற்றவும், அதேபோல் தங்களை பெரியவர்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது.

என்ன செய்வது, இனிமே நாம குழந்தையாக மாறவாமுடியும்!?

~

கீச்சுகள் - 5

சில நேரங்களில் தானாகக் கிடைக்கும் தனிமை, எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் போன்று இனிமையானது.

***
எல்லாம் நானே, எவரிடமிருந்தும் கற்றுக்கொள்வதில்லை”  எனச் சொல்பவர்களிடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது!.

***
தேய்க்கமுடியாத அளவுக்கு கரைந்த சோப்பை புது சோப்பில் ஒட்டிப் பயன்படுத்துறீங்களா? கடையில் இருந்து நீங்கதான் சோப் வாங்கிட்டு வர்றீங்கங்றத ஒத்துக்குறேன் :).

***
மௌனங்களில்தான்  தேடவும் முடிகிறது,  தொலையவும் முடிகிறது.


***
அண்டை வீட்டு நாய் அடங்காமல் குரைப்பது அதன் சுதந்திரம். பதிலுக்கு குரைக்கவோ, காதைப்பொத்தவோ மட்டுமே சுதந்திரம். அதை அடிக்க அல்ல #முடியலத்துவம்.

***
நாயகனாகவோ, வில்லனாகவோ இருப்பதை அவன் மட்டுமே தீர்மானித்துவிட முடிவதில்லை!

***
நம் தவறுகள், பல சமயங்களில் மற்றவர்கள் சுட்டும் முன்பே நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஒத்துக்கொள்வதில் மட்டும்தான் எப்போதுமே சிக்கல்!.

***
எல்லாவற்றுக்கும் ஒரு வியாக்கியானம் சொல்லும் நபர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருப்பது நிகழ்காலத்திற்கும் நல்லது!.

***
ஆரம்பப் பள்ளி நாட்களில் அதிகம் திட்டு வாங்கியவர்களில் முக்கியமானவர்திருவள்ளுவர்”.

***
தேவதைகளுக்கு தங்களைத் தேவதைகளெனத் தெரிவதில்லை, ஆராதிப்பவர்களுக்குத்தான் தெரிகிறது.

***
விடுமுறைக்கு அடுத்து வரும் எல்லா நாட்களும் திங்கட்கிழமை இல்லை என மனசுக்குப் புரியவைக்க நான் படுற பாடு இருக்கே!!! #அப்ப்ப்பப்பா!


***
சில மரணங்களை கடவுள் தடுப்பதுமில்லை.  சில மரணங்களை அவ்வளவு எளிதில் பரிசளித்துவிடுவதுமில்லை!.

***
பிடிக்காத உணவுக்கு எத்தனை நேரமானாலும் பசிப்பதில்லை. பிடித்த உணவுக்கு எந்த நேரமெனினும் பசிக்கிறது # குழந்தைகள்.

***
இன்னும் போதாமல் இருப்பதுஅன்பு”.

***
தங்கம் விலை உயர்வால் மக்கள் அவதி - அடப் பாவமே காத்தால பழைய சோத்துக்கு தங்கத்தைத்தான் தொட்டுக்குவாங்களோ?

***
பல பொண்ணுங்க ஆண்களை, அண்ணான்னு கூப்பிடறது பாசத்துல இல்ல, பாதுகாப்புக்கும்தான் #தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி.... :)

*** 

அழகாய் இருக்கும் அபத்தங்கள் சில நேரங்களில் கவிதையாக மாறிவிடுகிறது.

***

அதீதமாய் நேசிக்கும் ஒன்று குறித்து பேசும்போது கூடுதல் நாடகத்தன்மை வந்துவிடுகிறது. 

*** 

எந்தச் சூழலில் ஆழ்ந்திருந்தாலும், சில பாடல்களால் அதிலிருந்து மீட்டெடுத்துவிட முடிகிறது # இசை.

***
மனதுக்கு உகந்த நண்பர்கள் உடன் இருக்கும் பொழுதுகளில், ஒரு திருவிழாவிற்குரிய கொண்டாட்டம் மனதில் நிலைகொள்கிறது!.

***

மாங்குமாங்னு கல்யாணத்தை போட்டோ எடுத்துக்கொள்ளும் பலர் (முழுதாய் பணம் கொடுத்து) ஆல்பம் வாங்குவதற்குள் பசங்க புள்ளைக பள்ளிக்கூடம் போய்டுது.

***


பொறுப்பி: அவ்வப்போது ட்விட்டரில்கிறுக்கியகீச்சுகள்’.