டாஸ்மாக்



போதை சூழ் மனிதர்களிடம்
போதையற்று உழல்வதே
ஒரு போதை!

-0-

சபதத்தோடு தொடங்கும் குடி
மதுக்குப்பி தீர்கையில்
தீர்த்துவிடுகிறது சபதத்தை!

-0-

தழுவித் தஞ்சம்புகும் மது
திறக்கிறது அம் மனங்களையும்
சிலநேரம் அம்மணங்களையும்!

-0-

பசியாய் அன்பும் உணவாய் வம்பும்
அவ்வப்போது பரிமாறப்படுகிறது
மதுபான மேசைகளில்!

-0-

கூடுதலாய்ச்சேரும் மதுத்துளிகள்
ஒரேநேரத்தில் எழுப்பவல்லது
உறங்கும் கடவுளையும் சாத்தானையும்!

-0-

வரம்புகள் மீறப்படும்
மதுச்சுற்றிலும் உணரலாம்
சிறுதுளி பெருவெள்ளம்

-0-

பணவீக்கம்


நான் சென்றபோது கணேஷ், வாசலில்நின்று கருப்பு மை கிண்ணத்தை அழுந்தத் தேய்த்து கழுவிக்கொண்டிருந்தார். சரி யாரோ ’ஒரு யூத்து’ தலைக்கு சாயம் பூசியிருக்கும் போல என நினைத்துக்கொண்டேன். ’நாமும் ஒருநாளைக்கு சாயம் அடித்துப்பார்த்தால் என்ன’வென்று நினைப்பு ஊறும்போதே தலையைச் சிலுப்பி ஊற்றுக்கண்களை அடைத்துவிட்டு, ஓரமாய்க் கிடந்த நீள நாற்காலியில் அமர்ந்தேன். சலூனுக்கே உரிய இலக்கணமாய்க் கிடந்த வாரப்பத்திரிக்கையை மேலோட்டமாக புரட்டத் துவங்கினேன்.
 
தலைமுழுக்க சாயம் பூசிக்கொண்டு, சட்டையில்லாமல் இன்றி, வரிவரியாய் தலைமுடியைச் சீவிவிட்டு, உலர்வதற்காக சுவர்மேசை மேல் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார் ஒருவர். நின்றுகொண்டிருந்த விதத்தைப் பார்க்கும் போதே, அவர் கணேஷின் நண்பராக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. அருகில் இருந்த முடிவெட்டும் நாற்காலியில் கரடிக்குட்டிக்கு நிகரான தலையோடு ஒருவர் அமர்ந்திருந்தார். முடியென்றால்முடி, அத்தனைமுடி. அதுவும், முடி உதிர்ந்தவர்கள் பொறாமைப் படுவதெற்கென்றே அவ்வளவு முடிகள் அவர்களுக்கு படைக்கப்பட்டிருக்குமோ என நினைத்துக்கொண்டேன். இப்படி எதாச்சும் நினைத்துக்கொ’ல்ல’த்தான் முடியும், வேறென்ன செய்ய முடியும்.

அந்தக் கரடிக்குட்டி, தனக்குப் பக்கவாட்டில் பின்பக்கமாய் அமர்ந்திருக்கும், என்னை தனக்கு முன்னேயிருக்கும் பெரிய சுவர்கண்ணாடி வழி பார்க்கிறதோ என்ற சந்தேகம் வந்தது. தன்னிச்சையாக பிடரி(யில் மட்டும் இருக்கும்) முடியைக் கோதிக்கொண்டேன். கோதிக்கொண்டே திடுக்கிட்டு கரடிக்குட்டிக்கு முன்னாடி இருக்கும் கண்ணாடியைப் பார்த்தேன், அந்த கரடிக்குட்டி புன்முறுவல் பூத்ததுபோல், அதில் தோன்றியது. ”மனுசனால ஆவாதது மசுறுனால என்றா ஆவப்போகுது” எனும் வழக்கமான தன்னெழுச்சி வாசகத்தை ஒருமுறை உள்ளுக்குள் உச்சரித்துக் கொண்டேன். மேசையில் சாய்ந்தமாதிரி நின்றிருந்த சாயமேற்றப்பட்டவர் தினந்தந்தி செய்தித்தாளை அடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தவர் திடீரென,

“ஏங் கணேசா இந்தக் கொடுமையப் பாத்தியா? துபாய்ல பெட்ரோல் வெல லிட்டர் 4 ரூபா தானாம், நம்ம ஊர்லதான் ஏத்துயேத்துனு ஏத்திட்டுப் போறானுவ” என்றார்.

“மேஸ்திரி, நீயெல்லாம் பைக் வாங்குனா, ஏறாம இருக்குமா? எப்பிடியும் லிட்டரு 100 ரூபா விக்கும் பாரு” என கணேஷ் சாபம் கொடுத்தார். கணேஷ் அடிக்கடி சைக்கிளில் செல்வதைப் பார்த்திருக்கேன். சாயம் பூசிய மேஸ்திரியின் புதுபைக் வெளியில் நின்றுகொண்டிருந்தது. கரடிக்குட்டி தன் தலைக்குமேலே சாபம் கொடுத்துக்கொண்டிருந்த கணேஷை பார்க்க முயல்வது கண்ணாடிவழியே எனக்குத் தெரிந்தது.

”ஆமாம் ஏறாம என்ன பண்ணும் அதுதான் பணவீக்கம் அதிகமாயிட்டே போகுதாம்ல, பிரணாப்முகர்ஜி அதத்தான் சொல்லியிருக்கார்” என தினந்தந்தியை ஒப்பித்தார்.

”இந்த பணவீக்கம்னா என்ன மேஸ்திரி?”

”அது… வந்து… பணவீக்கம்னா பணவீக்கம்தான் கணேசு” என சமாளிக்க முயன்றார் மேஸ்திரி!

அந்தப் பதிலில் கணேஷ் நிறைவடையவில்லை. தலையை தன்னை நம்பி தேமேனு கொடுத்திருந்த கரடிக்குட்டியிடம் கேட்டார், “பணம் வீக்கம்னா என்னங்க சார்?”

கரடிக்குட்டி உதட்டைப் பிளுக்கியபோது என்னையறியாமல் என் கை பிடரியைக் கோதியது.

பெட்ரோல் விலையேறிய மகிழ்வான கொடுமையைவிட, அப்போதைக்கு இந்த மர்மமான பணவீக்கம் தான் கணேஷை ரொம்பவும் கொடுமைப் படுத்தியிருக்க வேண்டும்.

நான் ஆறேழு வருடங்களாக அங்கே முடி வெட்டிக்கொள்ளச் சென்றாலும், பொதுவாக எதுவுமே பேசிக்கொள்வதில்லை. செல்லும் நேரத்தில் கூட்டம் இருப்பின், உற்றுப்பார்ப்பேன், ”அரை மணி / ஒரு மணி” என்பதாக இருக்கும் பதில். அதைத்தாண்டி இதுவரை எதுவும் பேசிக்கொள்வதில்லை. பேசிக்கொள்ளும் அவசியமும் வந்ததில்லை.

திடீரென கத்திரி இயக்கத்தை நிறுத்திவிட்டு, என்னைப் பார்த்து “சார், பணவீக்கம்னா என்ன” என்றார்.

கத்திரி இயக்கம் நின்றதால் அலுப்பில், கரடிக்குட்டி தன் தலையை அப்படியே பின்பக்கம் மலர்த்தி கணேஷைப் பார்த்தார். கணேஷ் அனிச்சையாய் தலையைப்பிடித்து கையால் முன் நகர்த்தி அமுக்கிக்கொண்டே, என் முகத்தை ஆர்வமாய்ப் பார்த்தார். மேஸ்திரியும் என்னைப் பார்க்க, அமுக்கப்பட்ட தலையோடு கரடிக்குட்டியும் கண்ணாடி வழியே என்னை பார்த்தார்.

யாரோ கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவுடன் என் முன் உச்சியில் இருக்கும் கொஞ்சம் முடிகளில் இரண்டு மட்டும் கொம்பு போல் தடித்து உறுதிப்படுவதை உணர்ந்தேன். அப்படி உணரும்போது இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வெட்டுபடும் எனத் தோன்றியவுடன் இரண்டும் தளர்ந்து பழையபடி மடங்கிக் கிடந்தது.

“பண வீக்கம்ங்றது, ஒன்னுமில்லைங்க இன்ஃப்லெஸ்ன்னு (Inflation) சொல்வோம், அதுதான் தமிழ்ல பணவீக்கம்” என்றேன்.

அந்தக் கரடிக்குட்டிக்கு, கணேஷின் கத்திரி இயங்காத கோபமோ என்னவோ தெரியவில்லை, “அதுதான் பணவீக்கம்னா என்னனு விளக்கமாச் சொல்லுங்க சார்” என கோர்த்துவிட்டார்.

இதென்னடா வம்பாப்போச்சு என நினைத்துக்கொண்டே “ம்ம்ம்.. எப்படிச்சொன்னா புரியும்” என முனகினேன்

“சார், நீங்க புரியற மாதிரி சொல்லுங்க, நாங்க புரிஞ்சிக்கிறோம்” என்றார் மேஸ்திரி

“ம்ம்ம் அது ஒன்னுமில்லைங்க, உதாரணத்துக்கு, இப்ப முடிவெட்ட தலைக்கு ஐம்பது ரூபாய் வாங்குறீங்க தானே, அதே, நாளையில் இருந்து முடிவெட்ட வர்றவங்க ஒரு நூறு பேர் வரை தொடர்ந்து, தானாகவே முடிவெட்டிக்கிட்ட பிறகு தலைக்கு நூறு ரூபா வலிய குடுத்துட்டு போறாங்கன்னு வைங்க, அப்போ என்ன பண்ணுவீங்க, நூத்தியொன்னாவதா வழக்கம் போல் வர்ற ஆளுகிட்டேயும் ஐம்பது ரூபாக்கு பதிலா நூறு ரூபா எதிர்பார்ப்பீங்கதானே, அதுதான் ஐம்பது ரூபா வேலைக்கு நூறு ரூபா வாங்குறது ஒருவித பணவீக்கம்னு” பந்தாவாக எடுத்துவிட்டேன்.

“அண்ணே இதுல எப்படீண்ணே வெளிச்சம் வரும் என கவுண்டமணியின் பெட்ரமாக்ஸ் லைக் மாண்டிலை உடைத்த வைதேகி காத்திருந்தாள் செந்தில் போல்,

“அடப்போங்க சார், அம்பது கொடுக்கிறதுக்கே ஒரு மாதிரி பார்க்கிறாங்க, யாரு வந்து நூறு ரூபா தானாக் குடுப்பாங்க” என என் விளக்கத்தை நொறுக்கிவிட்டு கத்தியோடு கரடிக்குட்டி தலையில் மீண்டும் படையெடுத்தார்.

கணேசுக்கு புரியாதது, கத்தரி பாய்ந்த விதத்தின் வழியே கரடிக்குட்டி தெரிந்திருக்க வேண்டும். கரடிக்குட்டி சாத’ரணமாகப் பார்த்ததே எனக்கு ஏதோ பாவமாகப்பட்டது.

அதுவரை எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த பொருளாதார மேதையை எழுப்பி பணவீக்கத்துக்கு சரியான விளக்கம் என்னவென்று கேட்டேன். பயபுள்ள, எதோ டூப்ளிகேட் சரக்கடித்து மட்டையானது போல் முனகினாரே ஒழிய தீர்வாக எதையும் எனக்குள் சொல்லவில்லை.

கணேஷின் கத்திரி சப்தம், மேஸ்திரி சரசரவென புரட்டு பத்திரிக்கை சப்தம், கரடிக்குட்டியின் குறுகுறுப் பார்வையென ஒவ்வொன்றும் என்னை கடுப்போடு பார்ப்பதை என நினைக்கும்போதே, மனதிற்குள் ஏதோ விளக்கு பொளிச்சென எரிந்தது.

”ஏங்கணேசு, இப்ப முடிவெட்டுறீங்களே அந்த (கரடிக்குட்டி) அண்ணனுக்கு  எவ்வளவு காசு வாங்குவீங்க” என்றேன்.

அண்ணனுக்கு எனச் சொன்னது ஒரு கூடுதல் பாதுகாப்புணர்வில். பல இடங்களில் இந்த அண்ணா பாசம்தான் பலரைக் காப்பதுண்டு.

“அம்பதுதான் சார்”

”பார்த்தீங்காளா? இப்படி மாங்குமாங்குனு மணிக்கணக்குல வெட்டிடுற அவருக்கும் அம்பது ரூபா வாங்குறீங்க, பொசுக்குனு மூனு நிமிசத்துல வெட்டியுடுற எனக்கும் அம்பது ரூபா வாங்குறீங்க, என் தலைக்கு வேலையை மீறி கூடுதல வாங்குற காசுக்குப் பேருதான் பணவீக்கம்” என்றேன்

கரடிக்குட்டிக்கு திக்கென்றிருக்க வேண்டும். ”அலோ, அவரு பேச்சைக்கேட்டு திடீர்னு ரேட்டை ஏத்தீறாதீங்க, அம்பதுதான் எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றவாறு வழக்கம்போல் கண்ணாடி வழியே கூர்மையாக முறைத்தார்.

”பார்த்தியா கணேசு, உன்னைய வெச்சே சார் பட்டாசு கிளப்பிட்டாருல்ல” என மேஸ்திரி வேறு கூடுதலாய்க் கிளப்பிவிட்டார்.. பரபரவென கரடிக்குட்டி இடத்தைக்காலி செய்ய, நான் சென்று அமர்ந்தேன். அதுவரை ஒருவித யோசனையில் இருந்த கணேஷ்,

“கவலையவிடுங்க சார்! உங்களுக்கும் நஷ்டம் வராத மாதிரி வேலை பண்றேன்” எனக் கூறிய கணேஷ் தலையில் தண்ணீரைப் பீச்சி விட்டு முடியைக் கோதி கர்ரக் கர்ரக் என வெட்டித்தள்ள ஆரம்பித்தார்.

ஒரு வழியாய் முடித்து எழும்போது மண்டை மட்டுமே தெரிந்தது, மண்டைமேல் அமர்ந்திருந்த முடிகள் பணவீக்கத்தைச் சரிக்கட்ட இரையாகியிருந்தது. மனசு வீக்கத்தோடு, அம்பது ரூபாயை நீட்டினேன். காசை வாங்கி கல்லாவில் போட்ட கணேஷ் சிரித்துக்கொண்டே, தலை வார சீப்பை ஒரு தட்டுத்தட்டி கொடுத்தார். கண்ணாடி அருகே நகர்ந்து சீப்பை தலையில் வைத்து சீவ இழுத்தேன். பாறை மேல் ஓட்டும் டிராக்டர் கலப்பைபோல் எகிறி எகிறி ஓடியது.

என் தலை வழியாய் பரீட்சார்த்தமாய், கணேஷ் பணவீக்கத்தை குறைக்க முயற்சித்தது புரிந்தது. ஆமாம், வழக்கம்போல் அடுத்த ஒன்றரை மாதத்தில் முடிவெட்ட வேண்டிய அவசியமிருக்காது. எப்படியும் மூன்று மாதம் வரை தாக்குப்பிடிக்கலாம்.

-0-

முக - வரிகள்



செழித்த கன்னத்தில்
சில வரிகள் தீட்டி
கொஞ்சும் கவிதைகள்
கொஞ்சம் எழுதிடவா...!

கூர்ந்து துளைக்கும்
கூரிய விழிகளில்
ஒரு கூடைக்
கவிதைகளைக் கொட்டிடவா...!

கிறங்கிமூடும் இமைமுடிகளில்
தொய்வாய் ஒரு தொட்டில்கட்டி
உறங்கத் துவளும்
கவிதைகளைத் தாலாட்டிடவா...!

ஈரம் தோய்ந்த
சில கவிதைகளை
ஏக்கப் பெருமூச்சின்
வெதுவெதுப்பில் உலர்த்திடவா...!

கிறங்கிச் சுழிக்கும்
இதழ்களின் வரிகளில்
மிதக்கும் கவிதைகளை
இதழ்களால் அள்ளிடவா...!

-0-

ஒரு மனிதர் 10 ஆயிரம் மரங்கள்

நீங்களும் நானும் வைத்த மரங்கள் தரும் காற்றையா சுவாசிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் போட்ட பாதையிலா பயணிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் வெட்டிய குளத்திலா நீர் அருந்துகிறோம்?. இந்தக் கேள்விக்கான ஒரே பதில் இல்லை என்பதுதான். யாரோ ஒருவர்  எதன்பொருட்டோ பிரதிபலன் பாராமல் செய்த நல்லகாரியங்களில்தான் இன்று நலமாய் நம் நாட்களை நகர்த்துகிறோம். இந்த பூமி கனிம வளங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை விட, தியாகங்களால் கட்டமைக்கப்பட்டது எனச் சொல்வதே பொருத்தம். தேசம் முழுதும் ஆங்காங்கே அற்புதமான தியாக மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் எண்ணற்ற காரணங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னும் புதிதுபுதிதாய் பெருமைப்படுத்தும் காரணங்கள் விளைந்துகொண்டுதான் இருக்கின்றது. அப்படி ஈரோடு பெருமிதம் கொள்ளும் ஒரு நபர்தான் நாகராஜன். சுற்றுச்சூழல் மேல் அளப்பரிய காதல் கொண்டவர்களுக்கு நிச்சயம் இவரை அடையாளம் தெரிந்திருக்கும். ஈரோடு அருகேயிருக்கும் காஞ்சிக்கோவில் நகருக்குள் நுழைந்து “நாகராஜன்” எனப் பெயர் சொன்னால் முக மலர்ச்சியோடு வழி காட்டுகிறார்கள்.


தனது 17-வது வயதிலிருந்து கடந்த 40 வருடங்களாக செடி நடுவதை வேள்வியாகக் கொண்டிருக்கும் நாகராஜனால் இப்பகுதியில் வளர்ந்து நிற்கும் மரங்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டக்கூடியது. விதைகளை தெரிவு செய்து,  பையில் முளைக்க வைத்து, செடியாக்கி, சரியான இடம் தேடி செடி நட்டு, பெரிதாகும் வரை பலமுறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து அதைக் காப்பாற்றிவரும் இவரது முயற்சியால் வளர்ந்து நிற்கும் விருட்சங்களின் எண்ணிக்கை ஒன்றல்ல இரண்டல்ல 10 ஆயிரத்திற்கும் அதிகம்.

“சிறு வயதிலிருந்தே எனக்கு மரம் வளர்க்க வேண்டும், இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உண்டு. முதன் முதலாக என்னுடைய 17வது வயதில் மரம் நட ஆரம்பித்தேன். தினமும் காலை மாலை என இருவேளையும் நேரம் ஒதுக்கி சாலை ஓரங்கள், பொட்டல்கள், புறம்போக்கு என்று கண்ணில்படும் எல்லா இடங்களிலும் குழி தோண்டி செடிகளை நட்டு வைப்பேன். ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை போன்ற மரங்கள் எல்லா மண்ணிலும் வளரும் தன்மையுடையவை. அதிகம் தண்ணீரும் தேவைப்படாத ரகங்கள். ஆள் உயர அளவிற்கு செடிகள் வளரும் வரை அவற்றை வேலி கட்டி, தண்ணீர் ஊற்றி பராமரிப்பேன். அதற்குப்பின் அவை தானே பிழைத்துக்கொள்ளும்.

மழைக்காலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் பிரச்சனை இல்லை, ஆனால் கோடைக்காலத்தில் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுவதுதான் கஷ்டமான காரியம். தேங்காய் நார்களை சேகரித்துவந்து செடியைச் சுற்றிப் போட்டு அதன்மேல் தண்ணீர் தெளிப்பேன். காஞ்சிக்கோவில் மலைக்கோயிலைச்சுற்றி வைத்த செடிகளுக்காக மலையின் மேல் ஏறி, அங்கே பாறை இடுக்குகளில் தேங்கி இருக்கும் நீரை எடுத்து வந்து ஊற்றியதால் இன்று அந்த இடமே பசுஞ்சோலையாக மாறிவிட்டது.

ஆரம்பத்தில் நான் மரம் நடுவதைப்பார்த்த பலரும் என்னை பைத்தியகாரன் வெட்டி வேலை பார்க்கிறான் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் பணியை செய்து வந்தேன். இன்று அவர்களது வாரிசுகள் நான் வைத்த மரங்களின் நிழலையும், பலன்களையும் அனுபவிக்கின்றனர். தூய காற்றை சுவாசிக்கின்றனர். இதுதான் நான் அவர்களுக்கு சொல்லும் பதில்” என்று தான் பொறுமைகாத்த கதையைச் சொல்லும் நாகராஜனுக்கு, மக்களிடமும், அரசிடமும் மரம் வளர்ப்பி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்ற ஆதங்கம் இருக்கிறது.


“காடுகளில் தன்னிச்சையாக உருவாகி வளரும் மரங்கள் தீயசக்திகளால் அழிக்கப்பட்டுவரும் வேளையில், மனிதனால் வைக்கப்படும் மரங்கள் மக்களாலேயே அழிக்கப்படுகிறது என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். குறிப்பாக சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் போன்றவர்கள் சில சில்லறை காரணங்களுக்காக சர்வ சாதரணமாக வெட்டி வீழ்த்திவிடுகின்றனர். மேலும் விறகுக்காகவும், விற்பதற்காகவும் மக்களே மரங்களை வெட்டும் அவலமும் நடைமுறையில் இருக்கிறது.

மழைநீர் சேகரிப்பு திட்டம் எப்படி கட்டாயமாக்கப்பட்டதோ அதே போல் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கவேண்டும், இருக்கும் மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பதை இந்தியா முழுவதும் கட்டாய சட்டமாக இயற்றவேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் தலைமுறையினர் தண்ணீருக்காகவும், சுத்தமான காற்றுக்காகவும் அல்லாடாமல் இருக்கும் நிலைமையை உருவாக்கமுடியும்” என்று தொலைநோக்கு சிந்தனையுடன் சொல்லும் நாகராஜனை பல அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பாராட்டி விருதுகள் வழங்கியிருக்கின்றனர்.

ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கும் சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். நம்மிடமே சுரண்டி பணத்தை பதுக்கி வைக்கும் பதுக்கல் பேர்வழிகள் நிறைந்திருக்கும் இந்த நாட்டில் தனக்கு தீங்கு செய்யும் மனிதருக்கும் சுவாசிக்க சுத்தமான காற்றை வாரி வழங்கும் பரந்த மணம் கொண்ட மரங்களை பாதுகாக்கும், வளர்க்கும் சிந்தனை நமக்கு எப்போது வரப்போகிறது.
-------
பொறுப்பி : 11.09.2011 மதுரை திருச்சி தினமலர் சண்டே ஸ்பெஷலில் வெளிவந்த கட்டுரை
நன்றி : தினமலர். மற்றும் கார்த்தி கர்ணா


நாகராஜன் குறித்து மேலும் சில செய்திகள்:
நெசவு தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்த நாகராஜன் அவர்கள், தனது குடும்ப பொருளாதார சூழலின் காரணமாக தற்சமயம் மாதம் முழுதும் ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மிகுந்த பொருளாதார சிக்கலும், உடல்நலக் குறைவு இருந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மாதத்திற்கு ஒருநாள் கட்டாய விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த நாளைப் பயன்படுத்தி மரம் நடுவதை வேட்கையாகக் கொண்டிருக்கிறார். எத்தகைய சூழலிலும் தங்களது சுய உழைப்பு மூலம் மட்டுமே, தங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் அவருடைய மனைவி திருமதி. பிரேமா நாகராஜன். 


அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர்கள் வீட்டில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டிவைத்திருக்கிறார். அக்கம்பக்கம் மழைநீர் சேகரிப்புக் குறித்து கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார் நாகராஜன். மழைநீர் சேகரிப்பை இந்திய அளவில் கடுமையான சட்டமாக்கவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். இயற்கை குறித்து, மழை நீர் சேகரிப்பு குறித்து எங்கு அழைத்தாலும் கூட்டங்களில் அதுகுறித்த விழிப்புணர்வுக்காக பேசவும் தயாராக இருக்கிறார்.

நல்ல மனிதர்களை போற்றுவதும், காப்பதும், அவர்கள் வழி நடப்பதும் புண்ணியம் என்பதையும் மனதில் கொள்வோம். நாகராஜன் அவர்களின் தொடர்பு எண் : 04294–314752, 98652-47910 

***

திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா குறித்து ஏற்கனவே எழுதிய கட்டுரை கோடியில் இருவர்
***
திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா ஆகியோருக்கு நடத்திய பாராட்டு விழா மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா

-0-



தருணங்களின் தவிப்பு


அழிக்க மறந்திருந்த

அகாலமான நண்பனின்  
அலைபேசி எண்ணை 
அழிக்கும் தினத்தில்
இன்னொருமுறை 
செத்துப்போகிறான்.

***

சிலந்தியின் ஓட்டமும் 
உழைப்பும் கனவும்
ஒற்றை நொடியில் 
கலைந்து போகிறது
ஒட்டடையாய் 
கண்ணில் படும்போது

***

கடிக்கத் தவிக்கும் 
கொசுவை
அடிக்கும் கையில் 
சிதறிப்படிகிறது
வேறொருவரின் 
இரத்தம்

***

குதூகல குறும்புகளையும்
பட்டாம்பூச்சி படபடப்பையும்

பள்ளி கிளம்பும் பிள்ளை
தன் பையோடு 
சுமந்துபோகிறது
வீட்டை வெறுமையாக்கி!


***

கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி


மிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.

பள்ளி முகப்பு
மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு. அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.
தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின்

பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும், பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல், அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது.

வகுப்பறை

மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது

எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி

  • பளபளக்கும் தரை,  
  • தரமான பச்சை வண்ணப்பலகை,  
  • வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய்
  • அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,  
  • வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,  
  • தெர்மோகூல் கூரை,  
  • மின்விசிறிகள்
  • உயர்தர நவீன விளக்குகள்
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை
  • வேதியியல் உபகரணங்கள்,
  • கணித ஆய்வக உபகரணங்கள்,
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,  
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
  • அனைவருக்கும் தரமான சீருடை,
  • காலுறைகளுடன் கூடிய காலணி,
  • முதலுதவிப்பெட்டி,
  • தீயணைப்புக்கருவி,
  • உயர்திறன் வாய்ந்த கனிணி,
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.

கணினி உட்பட கல்வி உபகரணங்கள்

இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே

மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி

தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல், அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒரு சாயம் வெளுத்துப்போன உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியை உலகத்தரத்திற்கு மாற்றிக்காட்டியுள்ளது.


பில்லூர் அருகே மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்த ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப் பட்டபோதே, ஃப்ராங்ளின் மிகுந்த சிரத்தையெடுத்து வெறும் பதினேழு பிள்ளைகள் படித்த நிலையில் இருந்து 30 பிள்ளைகளாக உயர்த்தியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஃப்ராங்கிளின், தனக்குள் இருந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன கட்டம் அது. ஆண்டாண்டு காலமாக இருந்த அந்த அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர் படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத் தேவை மாற்றம் என்பதே.

காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர், தனக்கு மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டை தீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளார்.

ஊர்மக்களுடன் ஆசிரியர்கள்

மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்களினும் ஒரு பெரிய தொகையை அளித்து அந்த வேள்வியை தொடங்கியுள்ளனர். வளரும் தலைமுறைக்காக தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் புதியதொரு உலகம் சமைக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் காத்திருந்தது. இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை ஒரு முன்மாதிரி வகுப்பறையாக வடித்தெடுத்துள்ளனர்.

தங்களின் பங்களிப்பு, இராமாம்பாளையம் கிராமக் கல்விக்குழுவினரின் உதவி என, சுமார் இரண்டரை லட்சம் செலவில் இதை நிறைவேற்றியுள்ளனர். எப்படி இப்படியொரு செயலைச் செய்ய தங்களால் ஒத்துழைப்பு அளிக்க முடிந்தது என கிராமத் தலைவரிடம் கேட்கும் போது அவர் சொல்லும் ஒரே வார்த்தைதிரு.பிராங்களின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமேஎன்பதுதான்.

ஆசிரியர் திரு. ப்ராங்ளின்

திரு.ஃப்ராங்களின் வெறுமென ஒரு சாதாரண ஆசிரியராக அந்தப் பள்ளியில் செயல்படவில்லை. குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கிறார். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் அவர்மேல் ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம். குழந்தைகள் குறித்து பெருமையாகச் சொல்லும் ஆசிரியர்எங்கள் பிள்ளைகளுக்கு வெறும் கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்தெரிவிக்கிறார்.

பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதைத் திறம்படத் துவங்கியுள்ளனர்.


மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை, ஆசிரியர்,  மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

பிள்ளைகளின் சுய ஒழுக்கம் மற்றும் தெளிவு குறித்து கூறும்போது, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் மூன்று மாதங்களாய் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு செய்திடவில்லை. நடந்துவரும் போது சுவர்களைத் தொடர்ந்து தொட்டால் அழுக்காகிவிடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதை அவ்வப்போது காண நேர்ந்தது. பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

ந்த மறுமலர்ச்சி இத்தோடு நிற்காமல் எல்லாக் கிராமங்களிலும் பூக்க வேண்டும். அதற்கு நீரூற்ற இன்னும் எத்தனை காலம் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது. ஏன் அந்த மாற்றத்தை நாமே விதைக்கக்கூடாது? கோவில் இல்லாதா ஊர்கள் உண்டா, அதிலும் குறிப்பாக அங்கிருக்கும் கோவில்கள் கோடிக்கணக்ககில், லட்சக்கணக்கில் செலவு செய்து புணரமைக்கப்படுவதற்காக எவ்வளவோ சிரமப்பட்டு எல்லாக் கிராமங்களும் நிதியீட்டிக்கொண்டுதானே இருக்கின்றன? அதில் ஏன் கொஞ்சம் தொகையை இந்த பள்ளிகளை நோக்கி மடைமாற்றக்கூடாது?  
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் படித்து முன்னேறிய முன்னாள் மாணவர்களே கூட ஒன்று திரண்டு தங்களைச் செதுக்கிய பள்ளியை ஏன் ஒரு மாதிரிப்பள்ளியாக மாற்றிடமுடியாது? எல்லாமே சாத்தியம் தான், ஆனால் எங்கே மாற்றம் நிகழ வேண்டுமோ அங்கே ஒரு ஃப்ராங்ளின் உருவாக வேண்டும், அல்லது நானோ, நீங்களோ இதை எடுத்துச்சொல்லி ஒரு ஆசியருக்குள் ஒளிந்திருக்கும் ஃப்ராங்ளினை வெளிக்கொணரவேண்டும்! பள்ளியின் வலைப்பதிவு முகவரி


இதேபோல் ஒரு மாதிரிப் பள்ளியை அமைக்க அனைத்து திட்டங்களையும், தன் அனுபவத்தையும் தருவதற்கு திரு.ஃப்ராங்ளின் தயாராக இருக்கின்றார். நாம் தயாரா?

ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவதுதான் புரட்சியா? மாற்றத்திற்காக அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் புரட்சிதான்!

திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com              99424 72672      
 

-0-

பள்ளிக்குச் சென்றுவர துணை நின்ற எங்கள் ஈரோடு தமிழ்வலைப்பதிவர் குழும நண்பர்கள் கார்த்திக், ஆரூரன், லவ்டேல் மேடிக்கு நன்றி