ரெண்டாவது மரணம்!

அவர்கள்... பிரியத்துக்குரிய நெருக்கமான நட்பு வட்டத்திலோ, உறவாகவோ அல்லது வெறும் வியாபார, பணியிடத் தொடர்பாகவோகூட இருக்கலாம். சட்டென மரணம் அவர்களைத் தின்று செரிக்கையில், நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் உறவின் அடர்த்திக்கேற்ப ஏற்படும் அதிர்வுகளை முடிந்தாலும் முடியாவிட்டாலும் எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறோம்.

வழமைபோல் காலம் அந்தக் காயத்திற்கும் மருந்து போடுகிறது. பல மரணங்களிலிருந்து சட்டென வெளியேறி விடுகிறோம். சிலவற்றில் மெல்ல மெல்லவே வெளியேற முடிகிறது அல்லது வெளியேற தொடர்ந்து முயற்சிக்கிறோம். 

முன்பெல்லாம் இத்தனை அகால மரணங்களைச் சந்தித்தோமா? முன்பு இத்தனை பேர் நட்பு அல்லது உறவு வட்டத்தில் இல்லையோ? எல்லாவித சமாதானங்களையும் மீறி ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை விபத்துகளால், உணவு முறையால் வரும் நோய்களால் இளம் வயது மரணங்களைக் கூடுதலாகச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். 

இப்படி எதிர்கொள்ளும் மரணங்களில், அவர்களோடு நமக்கிருக்கும் நெருக்கத்திற்குக்கேற்ப வெளியேறிவிடுகிறோம் அல்லது வெளியேற சிரமப்படுகிறோம். யாரும் அதே இடத்தில் தேங்கிவிடுவதில்லை. ஆனால் அப்படிக் கரையேறும் நம்மைச் சட்டென உள்ளே இழுத்துப்பிடித்து அமுக்குவதில் பெரும் பங்காற்றுவது நம் அலைபேசியில் எஞ்சியிருக்கும் அவர்களின் தொடர்பு எண்கள்தான். 



எண்கள் கிடைத்தவுடன் பெயர் போட்டு பதிந்து கொள்வதுபோல், இறந்துபோன ஒருவரின் எண்ணை, எழவுக்குப் போய்வந்தவுடனேயே அழித்துவிட முடிவதில்லை. அழிக்கவும் தோன்றுவதில்லை. அழிக்கலாமா வேண்டாமா என ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்து விடுகிறது. 

எப்போதாவது அலைபேசித் தொடர்புகளை உருட்டும்போதோ, வேறு எண்கள் தேடுகையிலோ இறந்து போனவர்களின் எண் கண்களில் சிக்குவதுண்டு. சிக்குவது என்பதைவிட அது அப்படியே கண்ணில் தைத்து நேரடியாக உயிரை சுருக்கென குத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். 

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் கண்ட ஒரு முதலாமாண்டு நினைவஞ்சலி அறிவிப்புக் கட்டத்திற்குள் இருந்த இளைஞர் முன்பொரு காலத்தில் தொழில் ரீதியாக என்னோடு தொடர்பிலிருந்தவர். உண்மையில் அவர் இறந்துபோனதே எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவரின் கைபேசி எண் அந்த நொடி வரைக்கும், என் கைபேசிப் பெயர் பட்டியலில் உயிரோடு இருந்து கொண்டிருந்தது. கைபேசியில் இருந்த அவரின் பெயர் மற்றும் எண்ணையும், நினைவஞ்சலி விளம்பரத்தில் இருந்த பெயரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழே வரிசையாய்க் கிடந்த குடும்பப் பெயர்களுக்குக் கீழே அந்தக் கைபேசி எண் தென்படுகிறதா எனத் தேடினேன். தென்படவில்லை. சில நினைவுக்கிளறலுக்குப் பின், சற்றே நீண்ட யோசனைக்குப் பின், அழித்துவிடுவதென முடிவெடுத்த அந்தக் கணத்தில் மூடிய இமைக்குள் எப்போதும் கண்டிராத ஒரு காரிருளையும், கொதிப்பையும் உணர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் கைபேசியில் எஞ்சி நிற்கும் செத்துப்போனவர்களின் எண் கண்ணில் தைக்கும் கணத்தில் மனதில் படரும் இருள் அந்த எண்ணை என்ன செய்வது என்ற குழப்பத்தையே உருவாக்குகிறது. அப்படியே வைத்திருப்பதா? அந்த எண் என்னவாகியிருக்கும். அவர்கள் வீட்டில் யாரேனும் பயன்படுத்துவார்களா? அப்படி எவரேனும் பயன்படுத்தி அதிலிருந்து அழைப்பு செல்லும்போது, இறந்தவரின் பெயரை அழிக்காமல் வைத்திருப்பவர் அதிரமாட்டாரா? எனப் பல கேள்விகள் துளைப்பதுண்டு.

எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பேசி அல்லது பேசாமலேயே இருந்தோ, நேரில் சந்தித்து உரையாடியோ என ஃபேஸ்புக் நட்பிலிருந்து திடிரென மரணத்தை எதிர்கொள்ளும் நண்பர்களை அன்ஃப்ரெண்ட் செய்யவும் மிகப்பெரிய வலிமை தேவைப்படுகிறது. அவர்களின் மரணச் செய்தி கேட்டபிறகு ஏனோ அவர்களின் நிழற்படங்கள் கூடுதல் அழகாகவும், அவர்கள் எழுதியவை மனதிற்கு கூடுதல் நெருக்கமாகவும் புலப்படுகின்றன. 

நிதர்சனங்களைக் கடப்பதொன்றும் அவ்வளவு எளிதானதல்ல. 

-

நன்றி :  தி இந்து

கீச்சுகள் - 41



கோபத்துல கத்திட்டு, பக்கத்தில இருக்கிறவங்ககிட்ட கோபப்பட்டு கத்துனா நமக்குத்தா கெடுதல்னு அட்வைஸ் பண்ற அல்ப சுகம் இருக்கே... அப்பப்பா செம :)

-

உங்கள் நம்பிக்கையின்மையை அவர்கள் கேள்விக்குட்படுத்தாத போதும், அவர்களின் நம்பிக்கையை நீங்கள் கேள்விக்குட்படுத்துவதை நம்புகிறீர்களா?

-

புதிய பாராட்டும் மகிழ்ச்சியும் முந்தைய மகிழ்ச்சியை மறக்கடித்து விடுகின்றன. அவமானமும் துக்கமும் மட்டும் முந்தையவைகளோடு இணைந்துவிடுகின்றன.

-

நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லைதான், ஆனாலும் நிரூபித்துவிட மனது தவிக்கிறது!

-

அவசியப்படாத தருணத்தில் ஓய்வெடுத்துப் பாருங்கள். அப்போது தெரியும் ஓய்வு எத்தனை பெரிய நரகமென்று!

-

 தினமும் இருக்கும் 24மணி நேரத்தில், குறைந்தபட்சம் ஒருபக்க அளவுகூட பேனாவினால் எழுதாமல் அப்படி என்னதான் வெட்டி முறிக்கிறேன்னு ஒன்னும் புரியல!

-

மௌனமாய் இருப்பதை, ”சொன்னாத்தானே தெரியும்!” என்கிறார்கள் :) #ஙே

-

சில கதவுகள் பூட்டியிருப்பது போலவே தென்படுகின்றன. அழுத்தித் தள்ளினால்தான் தெரிகிறது அவை பூட்டப்படவில்லையென!

-


முத்தங்களுக்கு அனுமதி கிடையாது ஆனால்நீ அத்து மீறலாம்!

-

அதோ அந்த மூலையிலிருந்து அரை நிலா யாரையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உங்களையோ!?


-

பல வருடங்கள் தீனிபோட்டு தடவித்தடவி வளர்த்ததொப்பையை சில வாரங்களில் கரைக்க நினைக்கிறதுக்குப் பேருதான்பேராசைப்பிணாத்தல்போபியாவியாதி!


-

நம்மூர்லயும் ஒருஅமேசான் காடுஇருந்திருந்தா பல பிரச்சனைகளிலிருந்து தப்பிச்சிருக்கலாம் குறிப்பா சாவடிக்கிற இந்த டிவி விளம்பரங்களிலிருந்து!

-

எதைநிரூபிக்கஇந்த வாழ்க்கை!?


-



மனசுக்கு ஒரு Mute பட்டன் இருந்திருக்கலாம்!

-

ட்விட்டர் மாதிரி 140 எழுத்துகதானு ஃபேஸ்புக்லயும் வெச்சிருந்தா, ஃபேஸ்புக்ல இத்தனை யுத்தங்கள் நடந்திருக்காதுனு தோணுது!


-

சரி try பண்றேன்என்பதிலிருக்கும் ’try’க்கு நிகரான தப்பித்தல், பொய் வேறெதும் இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க நான் try பண்ணிட்டிருக்கேன்!


-


குளிர்ந்து கிடக்கும் இந்த விடியலை, கதகதப்பாய் கட்டியணைத்து முன்னுச்சியில் ஒரு முத்தமிட்டாலலென்ன!


-


இப்போது கவ்வியிருக்கும் இந்த உணர்வு, ஒரு உறக்கத்திற்குப்பின் மாறிடச் சாத்தியமுண்டு. மாறிடச் சாத்தியமுடைய உணர்வுக்கா இத்தனை போராட்டம்?


-

நமக்கு IRCTCகூட நேரடிதொடர்பு இருக்குமோ? யாருக்கு Tatkal போட்டாலும் கிடைக்குது. நம்ம பேரு ராசிக்கு ஆடி போயி ஆவணி போயி புரட்டாசி வந்தும் ம்ஹூம்

-

ஆசை தோசை அப்பளம் வடை

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மட்டும் மகள்கள் விரும்புவதை நிறைவேற்றிவிட கொஞ்சம் கூடுதலாய் விரும்புகின்றனர். தம்பி மகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் அப்பாவின் முகம் முழுதும் ஒப்பனைகள் செய்து, உதட்டுச்சாயம் பூசி, புருவம் சுற்றி பொட்டு வைத்து கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு விடுமுறை மதியத்தில் எவரோ கதவைத் தட்டியிருக்கின்றனர்.

அந்த அழகிய தருணம் குறித்து என் மனைவி விவரித்துக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த என் மகளுக்குப் பொறுக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு நான்தானா கிடைத்தேன்!? மதியம் பசியாறிவிட்டு அமர்ந்திருந்த என்மேல் பாய்ந்தவளின் ஆசை சரிதான். ஆனால் அது ஆசை மட்டுமில்லை, பேராசை. பேராசை என்றுமே தவறுதானே?. உறங்காமல் இருந்ததாலோ என்னவோ முகத்தை விட்டுவிட்டு முடிமேல் ஆசை கொண்டு அதை வடிவம் மாற்ற விரும்பிவிட்டாள். 





”அப்பா… உங்களுக்கு ஸ்பைக் ஹேர் ஸ்டைல் பண்றேம்பா” என்றவள் என்னை அமேசான் காடுகளில் தினமும் குளித்து முடி உலர்த்துவன் என்று நினைத்தாளோ!? அல்லது தன் தந்தையாகப்பட்டவனுக்கு தன் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்கூட முடி இருக்கலாம் என்று நினைத்தாளோ!? தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் நினைப்பும் ஆசையும் அவள் கண்ணை மறைத்திருக்க வேண்டும்.

சீப்பை எடுத்து அங்குமிங்கும் கிடந்த முடிகளை என்னென்னவோ செய்ய முயற்சித்து, எதுவும் செய்யமுடியாமல், தனது தோல்வியையும் ஒப்புக்கொள்ள முடியாமல் துவண்டு சோர்ந்து விட்டாள். என்னை மாதிரி ஆட்களுக்கு முடிவெட்டுவோர் எத்தனை சிரமப்படுவார்கள் என்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலை அளித்திருக்கலாம். அடுத்த முறை தப்பித்தவறி எர்வாமாட்டீன் விளம்பரம் வந்தால் தாவிப்போய் தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும்.

முடி குறைவாய்ப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகள்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போவதும் எத்தனை துன்பமென்று!.


-

வழிந்தோடும் கல்





இறுதியாய் நானிட்ட
முற்றுப்புள்ளிக்குள்
 
புதைந்த வார்த்தைகளுக்கு
கொஞ்சம் பூக்கள்
தூவிச் செல்லுங்கள்!

*

உள்ளங்கையில்
ஏந்தியிருக்கும் கல்
விரலிடுக்கில்
வழிந்தோடும் நீரால்
செய்யப்பட்டிருக்காலம்!

*

வலிக்கட்டும்
வலிக்கு
பிடித்திருக்கும் வரை

வலிக்கு வலிக்கும்வரை
வலியை நோக்குவதைத் தவிர
திட்டமேதுமில்லை

*