தோற்றுப்போகும் ருசி மொட்டுகளும் அன்பும்

சுவாரசியமான அரட்டையையும் மீறிப் பசித்திருந்த வேளை. நண்பர் வீட்டில் தேநீரோடு, மென் சிவப்பு நிறத்தில் வட்ட வடிவ க்ரீம் பிஸ்கெட்கள் சிலவற்றை ஒரு தட்டில் நிரப்பிப் பரிமாறினார்கள். பசியின் உணர்வில் பிஸ்கெட்கள் கவர்ச்சிகரமாத் தெரிந்தன. தொலைக்காட்சி விளம்பரங்களில் தூள் பறத்தும் பிஸ்கெட் வகை அது. எடுத்துச் சுவைத்தேன். நீட்டி முழக்கிச் சொல்ல வேண்டியதில்லை, ஒற்றை வரியில்இதையெல்லாம் மனுசன் திம்பானா!?” னக் கேட்கலாம் போன்ற சகிக்க முடியாதொரு சுவை.

அந்த நெருடலை என் உடல் மொழியிலிருந்து கவனித்துவிட்ட நண்பர் என்னாச்சு?” என்றார். விருந்தோம்பல் இங்கிதம் என்பதையும் தாண்டி... புரிதல் உள்ள நட்பு என்பதால்என்னங்க டேஸ்ட் இது... கொடுமையால்ல இருக்கு!?” என்றேன். அந்தப் புள்ளியில் நாங்கள் இன்னும் நெருங்கிப்போனோம். “நமக்கு சகிக்கல, ஆனா புள்ளைங்க இதத்தானே திங்குதுங்கஎன்றார்

நண்பரின் பத்து வயது மகனின் மிகப் பிடித்தமான பிஸ்கெட் அது. எது இல்லையென்றாலும் பிரச்சனையில்லை, அந்த பிஸ்கெட் இல்லாவிடில் வீடு ரணகளமாகிவிடும். அன்பு எனும் நிலைப்பாட்டில் குடும்பம் அஞ்சுகிறது. பிள்ளைகளுக்கு பிடித்தது என்றால், எதையும் வாங்கித் தந்துவிடுவது என்பதே அன்பென்றாகி வெகுகாலமாகி விட்டது



இப்படியான சகிக்க முடியாத சுவையில் பிஸ்கெட் தயாரிப்பது யாருடைய தேர்வு. அதுவும் குழந்தைகளை இலக்காக வைத்து ஒரு பிஸ்கெட்டை எந்த அடிப்படை அறத்தோடு தயாரிக்கிறார்கள்? உண்மையிலேயே பிள்ளைகளின் நாக்குகள் காலப்போக்கில் இந்த மாதிரியான ருசியை விரும்பும் அளவிற்கு மாறிப்போய்விட்டனவா? அல்லது தங்கள் வியாபாரத்திற்காக பிள்ளைகளிடம் விளம்பரங்கள் மூலம் அந்த ருசியைக் கொண்டு சேர்ப்பித்துவிட்டனரா?

ஓடிவந்து தட்டிலிருக்கும் பிஸ்கெட்டை எடுத்து இரண்டாகப் பிரித்து க்ரீமை நாக்கில் அப்பி, கைகளில் எச்சில் வழிய ருசித்து ண்ணும் நண்பரின் மகனைப் பார்க்கிறேன். ‘ருசியில் தலைமுறைகளுக்கு இடையே எப்படி இத்தனை பெரிய வேறுபாடு எனும் சிந்தனையின் நீட்சியாய் என் பால்யத்திற்குள் பயணப்படுகிறேன்.

கால் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய நகர்ப்புற வாழ்வியலில் பிள்ளைகளுக்குக் கிடைத்த நொறுக்குத் தீனிகள் எவையென்று நான் அறிந்திருக்கவில்லை. கிராமம் சார்ந்த வாழ்க்கையில் எங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. இப்போது போன்ற சந்தைப்படுத்தல்கள் அப்போது கிடையவே கிடையாது.

சந்தைக்கோ, திருவிழாவிற்கோ சென்றால் மட்டுமே குறிப்பிட்ட சில உணவுப் பண்டங்கள் வாங்கி வருவார்கள். மற்றபடி வீட்டில் இருப்பது, வயலில் கிடைப்பதையொட்டியே தேவைகளைச் சமாளித்துக்கொள்ள வேண்டும்

எண்ணெய் வித்துக்களாக இருப்பினும், அவற்றில் ஒவ்வொருவரையும் கவர்ந்திருப்பது கடலையும் எள்ளும்தான். கடலை என்பது எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வேர்க்கடலை அல்லது நிலக்கடலை. கடலையின் ருசியில் போதுமென நிறைவடைந்து திருப்தியடைவது இன்றளவும் எனக்குச் சாத்தியப்படவேயில்லை. கடலையை எல்லாப் பதங்களிலும் நம்மால் ருசிக்க முடியும்.

விளைந்து முதிர்ந்து இருக்கும் பருவத்தில் செடியோடு பிடுங்கி பச்சைக் காய்களை நெருப்பில் சுட்டு ருசிக்கலாம். காய்கள் எரிந்தும் எரியாமலும் இருக்க, உள்ளே புழுங்கி வெந்து புகை மணக்கும் பச்சை கடலையின் ருசி நினைத்தாலே நாவில் எச்சில் சுரக்க வைக்கும். பறித்த காய்களை வேக வைத்துச் சாப்பிடலாம். வேக வைத்த கடலை சூடாக சாப்பிட்டால் ஒரு சுசி;, ஆற வைத்து தின்றால் வேறு ருசி; அடுத்த நாள் சற்று உலர்ந்த நிலையில் சாப்பிடும்போது இன்னொரு ருசி.

உலர்த்தி, பதப்படுத்திய காய்களை இரண்டு விதங்களில் சுவைக்கப் பயன்படுத்தலாம். ஒன்று இரும்பு வாணலியில் வறுப்பது. மற்றொன்று நெருப்பில் கொட்டி எரிந்து போகாமல் பதமாக எடுப்பது. அடுத்தது பருப்பினைத் தனியாகப் பிரித்து பச்சையாகவோ, வறுத்தோ உண்ணலாம். கடலையுடன் கடித்துக்கொள்ள வெல்லமோ, கருப்பட்டியோ கிடைத்து விட்டால் வயிறு நிரம்பும் வரை உலகம் மறந்துபோகும்

நல்லெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் எள்ளும் ருசி மிகுந்த ஒரு பொருளே. வறுத்த எள்ளுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து உண்பது ருசியின் இன்னொரு உச்சம். இதில் எள்ளு மாவு என்பது கிராமத்தினருக்கே உரியதொரு சிறப்புத் தயாரிப்பு. அதுவொரு கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடு. வறுத்த எள்ளை செக்கில் இட்டு, வெல்லம் சேர்த்து உலக்கையால் மாவாக இடிக்கப்பார்கள். இடிக்கும்போது எழும் மணமே அக்கம்பக்கத்திற்கு எள்ளு மாவின் வருகையை உணர்த்திவிடும்.  எள்ளுமாவுடன் ராகிக்களி இணைத்தால் அல்வா போன்ற பதத்தில் ஒரு இனிப்பு வகை கிடைக்கும். அதன் ருசி குறித்தெல்லாம் சொற்களில் விளக்கிவிடமுடியுமென எனக்குத் தோன்றவில்லை

புளியில் இருந்து எடுத்துக் குப்பையில் போடப்படும் புளியங்கொட்டைகூட ஒரு  நொறுக்குத் தீனிதான். புளியங்கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து, உலர்த்தி அதை வறுத்து உடைத்து தோல் நீக்கினால் சற்று கடினமான பதத்தில் மணக்க மணக்கக் கிடைக்கும். பொழுது போகாத தருணங்களின் தீனி அது.

தேங்காய்த் துண்டுகளுடன் வாழைப்பழம் அல்லது வெல்லம், கருப்பட்டி இணைந்து சீரிய நொறுக்குத் தீனியாகவும், பசிப் பொழுதின் ஆபத்பாந்தவனாகவும் அமையும். பொரியுடன் பொட்டுக்கடலை, மிக்சர், வறுத்த நிலக்கடலை கலந்த கலவை திருவிழாக்காலத் தீனிகள்.

பருவங்களில் பனை மரங்களில் கிடைக்கும் நொங்கு அமிர்தத்தின் பிறிதொரு வடிவமென்றே தோன்றுகிறது. பனங்காய்கள் முற்றிப் பழுத்து விழும் காலைப் பொழுதுகள் கவர்ச்சிகரமானவை. அவற்றைத் தீயில் சுட்டுஉறைந்து கிடக்கும் கமகமக்கும் சாற்றினை உறிஞ்சிச் சுவைக்கலாம். பனம் பழத்தின் கொட்டைகள் வீணாகும் பொருளல்ல. ஒரு ஒழுங்கில் அடுக்கிப் பொறுத்திருந்தால், முளைப்பு துளிர்க்கும். அந்தப் பருவத்தில் வெட்டி உடைத்தால் ருசி மிகுந்த சீம்பு கிடைக்கும். முளைப்பு விட்ட பன்ங் கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்தால், வேர்விட்டு சில வாரங்களில் பனங்கிழங்காக விளைந்து திரண்டிருக்கும். அவற்றைப் பிடுங்கி தனித்தனியாக தீயில் சுட்டு அதன் மணத்தோடு சாப்பிடலாம். வேகவைத்து நார் உறித்து நாட்கணக்கில் சுவைத்துக் கொண்டேயிருக்கலாம்.

வயல்வெளிகளில் பயிர்களுக்கு எப்போதும் தொந்தரவாக, களையாக இருக்கும் கோரைப்புற்களின் கிழங்குகள்கூட குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மணக்கும் ஒரு இணை உணவுதான். விளைந்து நிற்கும் கம்பு, ராகிப் பூட்டைகள், எப்போதாவது வெட்டப்படும் தென்னை மற்றும் பனை மரத்தின் இளங்குருத்துகள் என ஏதேனும் ஒன்று, அதையண்டி இருக்கும் மனிதர்களின் பசி மற்றும் ருசிக்காக தம்மை ஈந்து தருவதில் வஞ்சனைகள் செய்வதேயில்லை.

இவையுள்ளிட்ட இன்னும் எத்தனையோ பதார்த்தங்கள், பொருட்கள் கிராமத்து மனிதர்களின் அன்றாடங்களில் இன்றளவும் அனைவருக்குமான  இணை உணவுகளாக, நொறுக்குத் தீனி வகைகளாக இருந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ருசி இருந்தது, தனித்த சத்துகள் இருந்தன. அவற்றை உண்பதற்கென நம்மிடம் தேவைகளும், காரணங்களும் இருந்தன. இங்கு பட்டியலிடப்படாத, இக்கணத்தில் என் நினைவுகளில் தொலைந்து போன இன்னும் எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன்.

இவை எல்லாமே ‘கால் நூற்றாண்டு காலத்திற்குள்மற்றொரு தலைமுறையின் முன்னால் காணாமல் போய்விட்ட அல்லது காணாமல் போக்கப்பட்ட பதார்த்தங்கள் என்றும் பட்டியலிடலாம். இவற்றின் இடங்களை வணிகம் சார்ந்த தயாரிப்புப் பொருட்கள் மிக எளிதாக, அதேசமயம் மிக வலுவாகப் பிடித்துவிட்டன. பெரு நிறுவனங்கள், பன்னாட்டுத் தயாரிப்புகள், விளம்பர யுக்திகள், பெரும் ஆளுமைகளின் பரிந்துரைப் பாசாங்குகள் எனும் கூட்டு வலைப்பின்னல், நம்மிடமிருந்த பொருட்களிலிருந்து நம்மையும், நம் பிள்ளைகளையும் அந்நியப்படுத்திவிட்டனநம் பிள்ளைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, நாம் நம் அக்கம்பக்கம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீர்மானிக்க முடிவதில்லை. யாரோ தாங்கள் விரும்பிய வண்ணம் தீர்மானிக்கிறார்கள். தங்கள் நோக்கத்தில் நம் வீட்டுப் பிள்ளைகளின் வாயிலாக யார் யாரோ வென்றெடுக்கிறார்கள். அதற்காக இடைவிடாது திறம்படச் செயல்படுகிறார்கள். தம் மண்ணில், தம் சுற்றத்தில் கிடைத்த எல்லா நல்லவற்றைகளையும் தொலைத்த இந்தத் தலைமுறைக்கு எது ருசி, எது ஆரோக்கியம் என்பதிலேயே தெளிவின்மை நிரப்பட்டிருக்கிறது.

பெற்றவர்களும்கூட தங்கள் இயலாமையைச் சமாளிக்க, பிள்ளைகளின் வாய்களை அடைக்க, பிள்ளைகளின் அசட்டு விருப்பத்திற்கேற்ப கவர்ச்சியான ஒரு நொறுக்குத் தீனியை, ஒவ்வாச்சுவை கொண்ட ஒரு பிஸ்கெட்டை, காற்றுப் பையில் அடைக்கப்பட்ட உப்பும் எண்ணையும் மிகுந்த ஒரு பதார்த்தத்தைக் கொடுத்து, அந்தச் சூழலை வென்று விடுகிறார்கள்.

தோற்றுப் போவதென்னவோ, சாயமேற்றப்பட்ட சந்தோசத்தில், மகிழ்ந்து விடுவதாய் கற்பனை செய்துகொள்ளும் பிள்ளைகளின் ருசி மொட்டுகளும், ஆரோக்கியமும் மற்றும் நம் பொருளாதாரமும், உண்மையான அன்பும் தான்!

**

நம்தோழி நவம்பர் 2016