பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தேவிபாரதி!

எழுத்தாளர் தேவிபாரதி டிசம்பர் 20ம் தேதி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சாலை விபத்தில் தலையில் பலத்த அடிப்பட்டு நினைவிழந்த நிலையில் ஈரோடு சம்பத்நகரில் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள பரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில் செய்த ஸ்கேனில் மூளையில் இரத்தக் கசிவு மற்றும் இரத்தக் கட்டு ஏற்பட்டிருந்தது தெரிந்தது. பின்னர் செய்த ஸ்கேனில் இரத்தக்கசிவு நின்றிருந்த நல்ல சேதி கிட்டியது. அதோடு முகத்தில், மண்டையோட்டில் குறிப்பாக வலது பக்கம் முழுவதும் ஏழெட்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. பின்னர் அதற்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தேறி வருகிறார்

மருத்துவமனை செலவுகளை எதிர்கொள்ளச் சிரமப்படும்
எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு உதவும் நோக்கில் ஃபேஸ்புக்கில் பதிவு எழுதுவதற்காக, வங்கி விபரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் மனைவியை நேற்று அழைத்தபோது இறுதியாக ஒரு சிறு தயக்கத்தோடு...

”சார் நாளைக்கு அவர் பர்த் டே, முடிஞ்சா வந்துட்டுப் போங்க... நண்பர்களைப் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவார்ங்க!” என்றார்.

கடந்த சில நாட்களாக ஒவ்வொருமுறை அழைக்கும்போதும், ”உங்கள மாதிரி யாரும் வந்துட்டுப்போன ரொம்ப சந்தோசப்படுறாருங்க” எனச் சொல்வார்.

சந்திக்கும்போதெல்லாம் தேவிபாரதி தொடர்ந்து எதாவது பேசவிரும்புகிறார். கன்னம், தலையில் எலும்புகள் உடைந்திருப்பதால் மென்று சாப்பிடுவது கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அவரை பேச அனுமதிக்கக்கூடாது என்பதற்காகவும் முடிந்தவரை அவரிடம் விடைபெற்று வந்துவிடுவேன்.


இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் காலையில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அநேகமாக இரண்டொரு நாட்களில் வீடு திரும்பலாம் என்றிருந்த நிலையில், எது சாப்பிட்டாலும் வாந்தியெடுப்பது புதுச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. அதனால் மீண்டும் சலைன் போடப்பட்டுள்ளது. வலது கன்னம் மற்றும் தலையின் பக்கவாட்டில் மிகக்கடுமையான வலியை உணர்வதாகச் சொல்கிறார்.

சீக்கிரம் நல்லாயிடுவீங்க என ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி முடிக்கும் முன்பே... ”ரெண்டொரு நாள்ல நல்லாயிடுவேன்” என தன்னம்பிக்கையாகப் பேசுகிறார். ஆனாலும் வலியின் வேதனை அந்த தன்னம்பிக்கையும் கடந்து முகத்தில் தெரிகிறது.

ஈரோட்டில் 2010ல் நடந்த ஒரு இலக்கிய கருத்தரங்கில்தான் அவரை முதலில் சந்தித்தேன். அந்த கருத்தரங்கில் அவரின் உரையைக் கேட்டு உடனடியாக எங்கள் அரிமா சங்க கூட்டத்திற்கு பேச அழைத்திருந்தோம். அன்றைய தினம் இரண்டு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் அவரோடு உரையாடியது மறக்க முடியாத ஒன்று. அதன்பின் அவருடைய புத்தக வெளியீட்டில், ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் என சந்தித்ததோடு சரி.

மற்றபடி காலச்சுவடு இதழில் இருந்த நாட்கள், புதுயுகம் தொலைக்காட்சியில் இருந்த நாட்கள், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்து புது வாழ்க்கையை துவங்கிய தருணம் என ஃபேஸ்புக் பதிவு மற்றும் நண்பர்களிடம் உரையாடல் மூலம் என ஏதோ ஒருவிதத்தில் தொடர்பில் இருந்தார்.
எளிமையான, நிதானமான, உறுதியான மனிதராக மட்டுமே கண்டுவந்த தேவிபாரதி பத்து நாட்களைக் கடந்த நிலையில் வலியின் பிடியில் சிக்குண்டு படுக்கையில் கிடப்பதைப் பார்க்கக் கலங்குகிறது.

”நான் எப்பவுமே தைரியமா இருப்பேன்… எனக்குத் தெரியும் நான் செத்துப் போகமாட்டேன்னு. சீக்கிரம் சரியாகி வந்துடுவேன்” எனும் அந்த தன்னம்பிக்கையும் இப்போது பெரு மருந்தாக இருக்கின்றது. அவரோடு விபத்தில் சிக்கினாலும், மருத்துவமனைக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை தன் வலிகளை முற்றிலும் மறந்து தேவிபாரதியை ஒரு குழந்தைபோல் கவனித்து வரும் அவர் மனைவியின் திடமும் அவர் மீண்டு வருவதற்கு முக்கியக் காரணம் என்றே சொல்லலாம்.

உச்ச வலியிலும் தொடர்ந்து பேச விரும்புகிறார். படுக்கையில் கிடந்தவாறு தலையை இங்கும் அங்கும் உருட்டியபடியே… கடந்த காலங்களை மீட்டி மீட்டிப் பேசுகிறார்.

இருபது முப்பது ஆண்டுகளாக வாழ்க்கை அளித்த சவால்கள், அதைக் கடந்த விதம், சமீபத்தில் திருமணம் முடித்த சூழல் என விரிகிறது அவரது பேச்சு. ”பேசாம இருங்க!” என அறிவு கொண்டு தடுக்க மனம் வரவில்லை.

1900ன் முற்பாதியில் அவர் தாத்தாவும், பின்னர் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தது குறித்துப் பேசுகிறார். அவர்கள் சொல்லியவற்றைச் சொல்கிறார். அப்பாவின் டைரி குறித்துப் பேசுகிறார். எப்படியும் இன்னும் பத்து வருசம் இருக்கனும், எழுத்து ரொம்பப் பிடிக்கும் … ரொம்ப வருசமா எழுதாமல் விட்டுட்டேன் என்கிறார். தன் பிறந்த நாளில் தந்தை குறித்தும் தாத்தா குறித்தும் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறதென்கிறார்

சமீபத்தில் எழுதியிருக்கும் ஒரு பெரிய சிறுகதை குறித்துப் பேசுகிறார். அதை எழுத்தாளர் சுகுமாரன் சுருக்கச் சொன்னதை நினைவு கூர்கிறார். இரண்டு நாவல்களை முடிக்கும் தருணத்தில் இருப்பதைச் சொல்கிறார். இரண்டின் களம் மற்றும் அதற்கான உழைப்பு குறித்துப் பேசுகிறார்.

சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடுவேன் என்கிறார். சமீபத்தில் புதிதாக வீடு கட்டியிருப்பதைச் சொல்லி, ஒரு நாள் நண்பர்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து நிறைய பேச வேண்டும் என தேவிபாரதி ஆசைப்பட்டதாக அவர் மனைவி சொல்கிறார். ”வீட்டுக்குப் போனதும் எல்லா நண்பர்களும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சார்… நிறையப் பேசுவோம்… உங்க எல்லாரையும் பார்க்கனும்!” என்கிறார்

இடையிடையே கண்ணிலிருந்து பக்கவாட்டில் நீர் வடிகிறது. வலியினால, மீட்டப்படும் நினைவுகளினாலா, இன்னும் படுக்கையில் இருக்கிறோமே என்ற எண்ணத்தினால என தீர்மானிக்க முடியவில்லை.

தேவிபாரதியின் பிறந்த நாளிற்காக மருத்துவமனை அறையிலேயே சாக்லெட்டும் கேக்கும் வாங்கி வைத்திருக்கிறார் அவர் மனைவி. காலையில் கேக் வெட்டலாம் எனச் சொன்னவரிடம் மாலை நண்பர்களோடு வருகிறேன், அப்போது வெட்டலாம் எனச் சொல்லி வந்திருக்கிறேன். கவிஞர் மோகனரங்கன் உள்ளிட்ட சில நண்பர்கள் மாலை 5 மணிக்கு மருத்துவமனை செல்லலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

இதுவரையிலான நான்கைந்து சந்திப்புகளிலும் அவர் எழுத்து தவிர்த்து வேறெதுவும் குறிப்பிட்ட மாதிரி பேசியதாக நினைவில்லை. மருத்துவமனையின் முதல் சந்திப்பில் தனக்கு என்ன நடந்தது, எங்கே இருக்கிறோம், ஏன் இதெல்லாம் என்று எதுவுமே நினைப்பில் இல்லாதபோதும் நாங்கள் முதலில் சந்தித்தது குறித்தும், தன்னைக் கூட்டத்திற்கு அழைத்தது குறித்தும் மனைவியிடம் அறிமுகப்படுத்தினார். கவிஞர் மோகனரங்கன் அவர்களிடம் பேசும்போது சென்னையில் புத்தக் கண்காட்சி தள்ளிப்போயிருப்பது குறித்துப் பேசியிருக்கிறார். என்னுடன் பிறிதொரு சந்திப்பில் பெருமாள்முருகன் குறித்து விசாரித்துவிட்டு, சென்னை புத்தகக் கண்காட்சி குறித்துப் பேசிவிட்டு, சென்னை வெள்ளப்பாதிப்பு குறித்து பேசினார். சென்னையில் நிறைய நண்பர்கள் இருப்பது குறித்தும், அவர்கள் பாதிக்கப்பட்ட விதம் குறித்தும் பேசினார். மற்றொரு சந்திப்பில் தி இந்துவில் தமிழச்சி தங்கபாண்டியன் தான் சமீபத்தில் வாசித்ததில் பிடித்ததாக என்னுரைய கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டி ”உங்க தொகுப்பு கொடுங்க, எனக்கு வேண்டும்” எனக் கேட்கிறார்.

கடுமையான வலியை தனக்குள் விழுங்கியவாறே திடமான வார்த்தைகளில் “இன்னும் பத்து வருசம் எப்படியாச்சும் இருக்கனும் சார். இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கு!” என்கிறார்.

படைப்பு என்பது ஒரு படைப்பாளியின் பலமா, பலவீனமா எனும் ஒரு கேள்வி எனக்குள் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. என் பார்வையில் அது பலமாகவோ, பலவீனமாகவோ தெரிந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும் படைப்பு என்பது படைப்பாளிகளுக்கு உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்டதாகவே இருக்கின்றது. அவர்கள் இன்றி வேறு யாரால் இந்த உலகத்தின் எல்லாக் கூறுகளையும் ஏனையோருக்கு அறிமுகப்படுத்தவியலும்.

இந்தப் பிறந்த நாளில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சொல்ல விரும்பும் வாழ்த்து… விரைந்து நலம் பெற்று கூடு திரும்புங்கள். ஒரு புது விடியலில் தெம்பாக சிறகு விரிக்கலாம். பறக்க வேண்டிய வானம் பெரிதென்பதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா என்ன!? எல்லாம் நல்லவிதமாய், நலமாய் அமையட்டும்!

-

நன்றி :  தி இந்து

-


இனியொரு விதி செய்ய ஆணையிடும் பிள்ளைகள்



சில மாதங்களுக்கு முன்பு கிராமப்புற பள்ளியொன்றில் படித்த பதின் வயது மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டிருந்தாள். காரணம் என்னவென்றே தெரியாத மரணம் என்பது மரணத்தைவிட கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. தந்தையின் மீது அதீத பாசம் கொண்டிருந்த அவள், தனது தந்தை குடிப்பழக்கத்தால் அழிந்துபோவதும், அசிங்கப்படுவதும் கண்டு மனம் வெறுத்துப்போய், தனது மரணமேனும் அந்த அப்பாவை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்குமா என்ற எண்ணத்தில் தன்னையே மாய்த்துக்கொண்டதாக செய்திகள் கசிய ஆரம்பித்தபோது அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

சென்னையில் கணவனின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட சண்டையின் முடிவாய், தம் பிள்ளைகள் இருவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதில் அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ தாய் மட்டும் உயிர்பிழைத்த செய்தி உறையச் செய்தது. உயிர் பிழைத்த அவர் பிள்ளைகளை கொலை செய்த வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சிறை சென்றிருக்கிறார். சட்டம் அளிக்கும் கருணையோ, தண்டனையோ ஒரு பக்கம் இருக்கட்டும்… தான் பெற்றெடுத்த பிள்ளைகளை, தனது தற்கொலையை முன்னிட்டு அன்பின் காரணமாகவோ, பாதுகாப்பின் காரணமாகவோ, சுயநலத்தின் காரணமாகவோ  கொலை செய்த கொடூரத்திலிருந்து மனதளவில் அவர் எவ்விதம் தன்னைத் தண்டிக்கப்போகிறார் அல்லது சமாதானப்படுத்திக் கொள்ளப்போகிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது.

தனக்கு பாடம் சொல்லித் தரும் பள்ளி ஆசிரியரின் பாலியல் வன்கொடுமையால் சிதைக்கப்பட்ட ஒரு கிராமப்புற எழை மாணவி, தான் பாதிக்கப்பட்டதைச் சொன்னால் நம்பமாட்டார்கள் எனும் அவநம்பிக்கை கொள்கிறாள். ஒருவகையில் அதுதான் உண்மையும் கூட. ஆசிரியரின் பாலியல் வக்கிரத்திற்கு எதிராக, ஒரு கட்டத்தில் மரண சாசனம் எழுதி வைத்துவிட்டு, ”இந்த மரணத்தின் காரணமாய் நீங்கள் நடந்த கொடூரத்தை நம்பித்தான் ஆகவேண்டும்” என்று கூறி மரித்துப் போயிருக்கிறாள்.



ந்தப் பிள்ளைகளின் மரணங்கள் செய்திகளாக வாசிக்கும்போதும், காணும்போதும் ஏற்படும் அதிர்ச்சிகளை கால வெள்ளம் சலவை செய்துவிடுவதுதான் நம் பலவீனம். பெரிதாக வெளிச்சத்துக்கு வராமல், தற்காலிகமாக மட்டுமே அதிர்ச்சி தந்து, படிப்பினைகள் தராமல் போகும் குழந்தைகளின் மரணம் கொடும் சாபமன்றி வேறென்ன?
மரணம்தான் வாழ்வின் முடிவுப்புள்ளியென தத்துவார்த்தமாகச் சிந்தித்தாலும், வலிந்து திணிக்கப்படும், ஏற்படுத்திக்கொள்ளப்படும் மரணங்கள் எவ்வகையில் ஏற்புடையதன்று என்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருக்க முடியாது.

பல மாதங்களுக்கு முன்பு கண்ட காட்சியொன்று அப்படியே ஆழ மனதில் நிலைத்து விட்டிருக்கின்றது. அதன்பின் எத்தனையோ காட்சிகளைக் கண்டு நினைவடுக்கில் சேமித்திருந்தாலும் அந்தக் காட்சி மட்டும் நினைவை விட்டு அகலவேயில்லை.

நாகூர் தர்க்காவின் தெற்குப்புற வீதி அது. இரண்டு சக்கர வாகனம் ஒன்று அதன் நெற்றிப்பொட்டில் ஈழப்போரில் கொல்லப்பட்ட பாலகன் பாலச்சந்திரனின் வட்ட வடிவப் படத்தை தாங்கி நிற்கிறது. எழுபது வயதினை அண்மித்திருக்கும் பெரியவர் ஒருவர் வீதியில் வந்து கொண்டிருக்கிறார். இரு சக்கர வாகனத்தின் நெற்றிப்பொட்டில் இருக்கும் பாலசந்திரனனின் படத்தைப் பார்த்தவர் நெருங்கி வருகிறார். வாகன ஓட்டி வண்டியில் அமர்ந்து நிமிர்ந்தபடி, வண்டியை உயிர்ப்பித்து நகர முற்படுகிறார்.

வாகனத்தை மிகச்சரியாக மறித்தவாறு நிற்கும் பெரியவர் வண்டியின் முகப்பை பிடித்தவாறு பாலச்சந்திரனின் படத்தை உற்றுப் பார்க்கிறார். ஏதோ முணுமுணுத்தபடி விரல்களால் படத்தை வருடிப் பார்க்கிறார். ’இந்தப் பெரியவர் குறுக்கே வந்து வழி மறிக்கிறார்’ என்பது போல் சற்று கோபமாகப் பார்த்த அந்த வாகன ஓட்டி இளைஞர், பெரியவரின் கைகள் பாலச்சந்திரன் படத்தை வருடுவதைப் பார்த்ததும் தடுமாறுகிறார். அக்கம் பக்கம் பார்க்கிறார். அந்த சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்னையும் பார்க்கிறார். சட்டென வண்டியிலிருந்து இறங்குகிறார்.

பெரியவர் நிதானித்து நகர்கிறார். அவர் வாய் முணுமுணுப்பது உடைந்து கேட்கிறது. ”இந்தப் பச்சப்புள்ளய அநியாயமா கொன்னுட்டாங்களே” என்பதையே திரும்பத் திரும்ப உச்சரித்தவாறு வீதியின் மையத்தில் நிற்கிறார். வேகமாய் வந்த வண்டியோட்டி ஒருவர் நடுவீதியில் நிற்கும் அவரைக் கண்டு ஒலிப்பான் அதிர விட, அந்த ஓசையில் கலங்கித் தடுமாறுகிறார் பெரியவர். பாலச்சந்திரன் படம் தாங்கிய வண்டிக்கு சொந்தக்காரரான இளைஞர், வண்டியை அணைத்துவிட்டு, வண்டியில் ஏறாமல் நடந்தபடியே தள்ளிக்கொண்டு நகர்கிறார்.

அந்தப் பெரியவரின் கலக்கமும், தவிப்பும், தடுமாற்றமும் அந்தக் கணப்பொழுதில் அடங்கிவிடப் போவதில்லை. என்னைவிட்டு நடந்து தூரத்தை - இடைவெளியை அதிகரித்துக் கொண்டிருக்கும் அவரையே பார்க்கிறேன். நடையில் கூடுதல் தளர்ச்சி. முதுகு கூடுதலாய் வளைவது போல் ஒரு தோற்றம். அவரின் அதிர்ச்சியும் வருத்தமும் உண்மையில் பாலச்சந்திரன் எனும் பாலகனின் நீதியற்ற கொடுமரணத்தைக் குறித்த செய்திகள் பார்த்ததும், கேட்டதுமான செயல்களின் விளைவாக இருக்கலாம்; அல்லது அவனுக்கு நிகரான ஒரு பேரப்பிள்ளையோ உறவுப் பிள்ளையோ அவரின் குடும்பத்தில் இருக்கலாம்; அல்லது இல்லாது போயிருத்தல் என்பதின் நீட்சியாகவும் இருக்கலாம்.

உலகத்தை உலுக்கிய பாலகன் பாலசந்திரன் மரணம் போன்றேதான் ஒவ்வொரு பிஞ்சுகளின் உதிர்வும் அந்தக் குடும்பத்திலும், அவை சார்ந்த உறவுகளின் மத்தியிலும் இடைவிடாத அதிர்வுகளை காலம் முழுமைக்கும் நீட்டிக்கச் செய்கின்றன.

நாம் ஏங்கித் தவித்துத் தேடியும், நேரில் கண்டுணராத கடவுளின் வடிவங்களாய் காட்சித் தருபவர்கள் குழந்தைகள். அவர்களின் எதிர்பாராத செய்கைகள், உலகை அவர்கள் அணுகும் முயல்வுகள், ஒன்றை அவர்கள் நோக்கும் பார்வைகள் எல்லம் நமக்குத் தரும் ஆச்சரியங்கள் சொற்களில் அடங்காதவை. நம் பால்யத்தில் நாம் அவர்கள்போல் இருந்ததில்லை, ஏன் இப்போதும்கூட அவர்கள் போல் இருக்க முடியவில்லை என்பதை அடிப்படையாக வைத்தும்கூட அந்த ஆச்சரியங்கள் உருவாகலாம்.

குழந்தைகளின் மரணங்கள் என்பது கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும், விபத்தாக இருந்தாலும் அது குழந்தைகளின் பிழையன்று. அப்பாவிற்காக உயிர் ஈந்தவள் குடிகார அப்பாக்களுக்காகவும், தாயின் கைகளில் நெரிபட்டு மாய்ந்த பிள்ளைகள் தாய்களின் கணவன்களுக்காகவும், மரண சாசனம் எழுதிய மாணவி கொடூர மனம் படைத்த ஆசிரியர்களுக்காகவும் தங்களை பலிகொடுத்திருக்கிறார்கள். அந்த மரணங்கள் முழுக்க முழுக்க இந்த சமூகத்தின் பிழை… அழுத்தமாகச் சொன்னால் அவை சமூகம் புரிந்த கொடுங்குற்றம். இந்த பிழை அல்லது குற்றத்திற்கான தண்டனை, பிராயச்சித்தம் என்பது வெறும் செய்திகளில் ஏற்படும் பரபரப்பு அதையொட்டிய அதிர்ச்சி என்பதோடு முடிந்து விடப்போகிறதா!?

எல்லாவிதத்திலும் வளர்ந்தாக தன்னைக் காட்டிக்கொள்ளும் சமூகம் இதுவரையிலும் குழந்தைகளாக இந்த உலகத்தில் பிறந்ததைத் தவிர ஏதும் குற்றம் செய்யாப் பிள்ளைகள் தமது பால்யத்தைத் துறக்குமுன்பே மரணத்தை தண்டனையா ஏற்க வேண்டியிருப்பது குறித்தும் சற்று மெத்தனம் காட்டுகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

எதனைக் கொண்டும் எவராலும் குழந்தைகளுக்கு ஈடான ஒன்றை, ஒருபோதும் நிரப்பிக் கொள்ள முடிவதில்லை. ஒரு குழந்தையின் வார்ப்பு என்பது அந்தக் குழந்தைக்காக மட்டுமே செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. இன்னொரு உயிர் என்பது இன்னொன்றுதான். முந்தையது கிடையாது. அப்படியான குழந்தைகளின் மரணங்கள், தாம் வாழ்ந்த சமூகத்திற்கான பாடமானதும், எச்சரிக்கையானதும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


-

“நம் தோழி” டிசம்பர் இதழில் வெளியான கட்டுரை

-

கீச்சுகள் தொகுப்பு 61



நாளை குறித்து நம்பிக்கை மிகும் நேரங்களில், நளினமாக நடனமாடுகிறது மனது.

-

நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை விட, உலகம் ஒன்றும் பெரிதாக நம்மை ஏமாற்றிவிடவில்லை!

-

மலரினும் மெல்லியது முத்தம் :)

-


விபரீதமான கற்பனைகளில் இருக்கும் மிக முக்கியமான பயம் அதிலிருக்கும் துல்லியம் தான்! 





புத்திசாலிகளுடனும் நட்பு அவசியப்படுகிறது. முட்டாள்களுடனும் நட்பு அவசியப்படுகிறது. இருவருமே வாழ்க்கை எதுவென உணர்த்துகிறார்கள்.

-

மடிமேல் கிடத்திய பூனைக்குட்டியை வருடிக்கொண்டு வீட்டில் இடைவிடாது திட்டிக்கொண்டிருக்கும் ஒருவரைக் கண்டேன். ஞானம் குறைப் பிரசவமாகிறது!

-

பாதங்களில் சிறு உருளைகளைக் கட்டிக்கொண்டு விரைந்திடவோ, கைகளில் இறக்கைகளைப் பொருத்திக்கொண்டு பறந்திடவோ துடிக்குது மனசு!

-

வெள்ளத்தின்போது விலை உயர்ந்த கார்களுக்கு அங்கு வேலையில்லை. அழுக்கடைந்த படகுகள்தான் அசைந்தபடி வந்திருந்தன அனைவரையும் மீட்க.

-

ஏதோ உணர்வுக்குள் ஆட்பட்டு, அதன் போக்கில் மனநிலையை அமைத்துக்கொண்டு மூழ்கிப்போதல்தான் பெரும் பிணியாய்க் கவ்வுகிறது. தான் இருக்கும் நிலை உணரும் ஒரு சொடுக்குக் கவனமும், ஆட்படுத்தும் உணர்வின் எதிர்நிலை என்னவாக இருக்குமெனத் தேடுவதுமே மருந்தாக அமைகின்றது.

-

பிடித்தவர்களைப் புரிந்துகொள்ள அறிவைப் பயன்படுத்துவதில்லை!

-

வன அழிப்பு குறித்து வெயிற்காலங்களிலும், நீர் நிலைகளை அழித்தது குறித்து மழைக்காலங்களிலும் அதிதீவிரமாய் விவாதிக்கப் பழகியிருக்கின்றோம்!

-

நேசிக்கவும், நேசிக்கப்படவும் தனக்கு மட்டும் யாருமே இல்லை என நினைப்பவர்களும் அனாதைகள் தான்

-

வாழவே முடியாதெனும் சவால்களை கொண்டுள்ள ஒருவன், ’தான் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பதாய்இந்த நாளின் பரிசாய் உணர்த்திவிட்டு போயிருக்கிறான்!

-

துயரங்கள் எப்போதும் நம்ப முடியாததாகவே இருக்கின்றன. ஆனால் அவை உண்மையாக இருந்து விடுவதுதான் துயரமே!

-

அவசரம் - நிதானம், திட்டமிடல் - திட்டமிடாமை ஆகியவை இடையே பெரிய இடைவெளிகள் இல்லை. ஆனால் விளைவுகளில் மிகப்பெரிய இடைவெளிகள் இருக்கின்றன.

-



நகரம் பிடித்திருக்கிறதா என்கிறார்கள். பிடித்து வைத்திருக்கிறது என்கிறேன்!

-

ஏதோ ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிடிக்காமல் போய்விடுபவர்களின் குறைகளுக்கு வர்ணம் பூசும் நோய்மைக்கு நிகரேதுமில்லை!

-

அமெரிக்கா முதல் அண்டார்டிகா வரை இருக்கும் நம்மூர் ஆட்களை கடுப்பேத்தும் ஆயுதம் எங்கூட்ல இன்னிக்கு அரிசியும்பருப்பு சோறு

-

அன்பை நிரூபிக்க முயல்வதை அபத்தமென்றும் சொல்லலாம்!

-

நீங்கள் என்னவோ பெயர் வைத்துக்கொள்ளுங்கள் நான் அதை பிரியமென்று நினைத்துக்கொள்கிறேன்

-

அன்புள்ள எவரும் எவரையும் ஆசிர்வதிக்கலாம்!

-

உயிர் வாழ சுவாசிக்கும் கையளவு காற்றைக்கூட, இது என் காற்று, எனக்கானது எனப் பிடித்து வைத்துக்கொள்ள முடியாதவர்கள் நாம்!

-

மழையின் பேரழகே அதன் இறுமாப்புதான்!

-

உண்மை செய்திகள் பகிரப்படுவதைவிட, புரளிகள், கட்டுக்கதைகள், மிகைப்படுத்தல்களை பரவவிடும் தளமாகவே வாட்சப் குழுமங்கள் மாறிப்போனது சாபக்கேடு

-

திசை பழையது பாதை பழையது ஆனால்... நடை புதிது...!

-