முறிந்த கோபம்





தீயாய்ப் பரபரக்கும் நகரத்துச் சாலை
ஒட்டி உரசிப் பறக்கிறது
உயர்வேக இருசக்கர வாகனம்
ஒரு கணம் பயமும் உடனே கோபமும்...

கருப்பு உடை, கத்தரிக்கப்பட்ட கூந்தல்
கனகச்சிதமான இளம்பெண்
இரு பக்கம் கால் பரப்பி
இளைஞனின் பின் படர்ந்து பரவி...

முளைத்த கோபம் முறிந்து போகிறது
முச்சந்தியில் பிரிகிறது சாலை
வலது பக்கம் பிரிகிறார்கள் அவர்கள்
இடது பக்கம் பிரிய வேண்டி நான்...

எனினும்
அவர்கள் பின்னே கொஞ்சம் தொடர்ந்துவிட்டு
தளர்ச்சியோடு திரும்புகிறது மனது
சாயம் அடிக்க மறந்துபோன
முன் பக்கத்து நரை முடியைச் சுமந்தபடி...

~

இணையும் புள்ளி தெரியாமல்



பிரபலமான பல்துறை மருத்துவமனை அது
நிறைமாத கர்ப்பிணி அடிவயிறு தாங்கி நகர்கிறாள்
ஒரு முதியவர் முனகிக் கொண்டிருக்கிறார்
ஒரு குழந்தை வீறிட்டழுகிறது

மருத்துவமனையின் “ட” வடிவ சுவரின்
ஒரு பக்கம் அவன், மறுபக்கம் அவள்
அருகருகே கைகள் இருந்தும்
இதயங்கள் தொடமுடியாத தூரத்தில்...

உடையும், அணிந்திருக்கும் நகையும்
பாதம் பதித்திருக்கும் காலணியும்
வைத்திருக்கும் பையும் அவர்களின்
பணக்காரத்தனத்தினை பட்டியலிடுகிறது...

அவள் அடிக்கடி கண் சுருக்குவதிலும்
பல் கடிப்பதிலும், தலையை சுவற்றில் சாய்ப்பதிலும்
வேதனையை துல்லியத்திற்கும் சற்று மேலாக
வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்...

அவன் அடிக்கடி அதிரும் அலைபேசிக்கு
நீளமாய் சிரித்து பேசுவதிலும்
கடந்து செல்லும் பெண்களை கவனிப்பதிலும்
இவளின் வலியை முற்றிலும் மறந்திருக்கிறான்...

வாழ்க்கை தண்டவாளமாய் நீண்டிருக்கிறது
இருபக்கமும் உறுதியான பிடிமானத்தோடு
இணையாக போய்க்கொண்டே
இணையும் புள்ளி தெரியாமல்...

சபிக்கப்பட்ட பதில்கள்



பலநாளாக பணியாத படுக்கைக்கு
பழியாக இழுத்தடிக்கும் மேஸ்திரியிடம்
கிடைக்காத சம்பளத்தோடு
இழக்காத கற்போடு...

அடியெல்லாம் தேய்ந்துபோன
வாரறுந்த செருப்பை தைக்க
இரண்டு ரூபாய் கேட்டவனை
எக்காளமாய் ஏசிவிட்டு...

ஒடுங்கிய தூக்குப்போசியோடு
ஒட்டிப்போன வயிறோடு
சுருங்கிப்போன சதைகளோடு
கருகிப்போன கனவுகளோடு...

பசியோடு காத்திருக்கும்
பால் மறவாத பிள்ளைக்கு
சுண்டிப்போன மார்பின்
சுரக்க மறுக்கும் காம்புகளோடு...

கிடைக்காத சம்பளத்திற்கு
காத்திருக்கும் கந்துக்காரனுக்கு
மறந்து போன மானத்தோடு
தீர்ந்துபோன பதில்களோடு...

வற்றிப்போன காமத்திற்கு காத்திருக்கும்
வேலைக்கு போகாத கணவனுக்கு
உறைந்து போன மவுனங்களோடு
மறுத்துப் போன வடுக்களோடு...

எட்டுவைத்து ஓடுகிறாள்
எந்த விடையும் இல்லாத
எண்ணற்ற கேள்விகளை
இதயமெல்லாம் நிரப்பிக்கொண்டு...

தாயின் ஸ்பரிசத்தை உணர்கிறேன்...

பெரும்பாலும் என் அம்மாவிற்கு
என்னை முறையாக பாரட்டக்கூட
தெரியாமலிருக்கும்...

ஆனால் என் வெற்றிக்கு
இதயத்தில் சிரிப்போடு...
நரம்புகளில் மகிழ்ச்சியோடு...
தலையை தடவி மகிழும் தருணத்தில்
அவருடைய இதயத்திலிருந்து
ஒரு இனம் புரியாத வாழ்த்தொலியின்
அதிர்வை என் இதயம் உணரும்...

அதற்கு நிகரான ஒரு உணர்வை

பிரியமுடன் வசந்த் சுவாரஸ்யப் பதிவர் விருது வழங்கிய போதும்

பழமைபேசி நயம்மிகு பதிவர் விருது வழங்கிய போதும் உணர்ந்தேன்.


அப்படிப்பட்ட உணர்வோடு என் இதயத்தில் புரளும்
செல்லமான இந்த விருதை நானும் உங்களில்
சிலருக்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.

நான் பகிர நினைக்கும், என்னைக் கவர்ந்த சில இதயங்கள்

பழமைபேசி தங்கத்திற்கு நிகரான என் செல்லமான பதிவர்.

காமராஜ் மனதைப் பிசையும் நுணுக்கமான சிந்தனை கொண்ட நான் நேசிக்கும் பதிவர்.

நாகா தவமிருந்து பெறத் தகுதியான நட்புக்குரிய பதிவர்.

ராமலஷ்சுமி வார்த்தைகளை வலிக்காமல் வழங்கும் நேசம் மிகுந்த பதிவர்.

நிகழ்காலத்தில் அன்பும் அறிவும் இணைந்த பதிவர்.


பாலாஜி வளர வேண்டிய இனிய, வலிமையுள்ள பதிவர்.


இந்த விருது ஏற்கனவே ஒருவேளை இவர்களில் யாருக்கேனும் கிடைத்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
இனிய இதயங்களே வாழ்த்துக்கள்!

ஒரு 25 நிமிட நடையின் வரலாறு(!!??)


புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல், எங்கு பார்த்தாலும் மனிதர்கள் சமீபமாக வாக்கிங் போய் கொண்டிருப்பதைக் கண்டு, நானும் வாக்கிங் போகலாம் என்று முடிவு செய்து ஷூ வாங்கி வைத்து இரண்டு வருடமாகி விட்டது. ஷூ வாங்கிய முதல் இரண்டு மூன்று நாட்கள் அலாரம் வைத்து, அது அடிக்கும் போது ஆப் செய்து விட்டு, சுகமாய் தூக்கத்தை தொடர, சில நாள் மட்டும் வாக்கிங் போவது போல் கனவு வர... வாக்கிங் வெறும் கனவாகவே போய்விடும் போல் தோன்றியது. அவ்வப்போது அம்மா வேறு போன் செய்து “என்ன சாமி... வாக்கிங் போனையா!!??” என்று கேட்க, நானும் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்க, சிறிது நாட்களில் எங்கள் பகுதியில் நான் போகாத வாக்கிங்கும், புதுசா வாங்கின ஷூவும் ரொம்ப பிரபலமாகிவிட்டது.

எங்க பாப்பா ஸ்கூல் போய்ட்டு வந்து, உபயோகப் படுத்தாமலே அழுக்காகி கொண்டிருந்த என் ஷூவை தன்னுடைய விளையாட்டுப் பொருளாக, பல விதங்களில் பயன் படுத்தத் துவங்க, தங்கமணி வேறு “க்கும் இந்த ஷூவ வாங்குனுதுக்கு, ஒரு சீல எடுத்துக் கொடுத்திருந்தாலாவது ஆகும் னு” சொல்ல, என்னுடைய இயலாமையை நினைத்து லேசாக மனது வலிக்க ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அம்மா மறுபடியும் போன் செய்து நெஞ்சு வலி பற்றி ஒரு விரிவான லெக்சர் கொடுத்து வாக்கிங் போவென்று கண்டிப்போடு அறிவுறுத்த மறுபடியும் ஷூவை தூசு தட்ட முடிவு செய்து வீட்டில் “நாளை முதல் வாக்கிங் போகிறேன்” என்று பந்தாவாக சபதம் செய்ய... எங்கள் விட்டு கொள்கை பரப்பு செயலாலர் (அட... எங்க பாப்பா தான்) பக்கத்து வீட்டிற்கெல்லாம் போய் “மாமா எங்கப்பா வாக்கிங் போறாங்களே”, “அத்த எங்கப்பா வாக்கிங் போறாங்களே”னு பந்தாவிட, எனக்கு மிகப்பெரிய கட்டாயமாகி விட்டது.

சரி கண்டிப்பாக வாக்கிங் போய்விட வேண்டும் என முடிவு செய்து, காலை 5.30 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க, நடு இரவிலேயே ஆர்வத்தில் இரண்டு, மூன்று முறை அலாரம் அடித்திருக்குமோ என்று எடுத்துப் பார்த்ததில் ரொம்ப டயர்டு ஆகி ஆழ்ந்து தூங்கும் போது “கவுசல்யா சுப்ரஜா”னு மொபைல் அலற ஆரம்பித்தது. கண்ணைத் திறக்காமலே ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, ... ம்... என்ன படிக்க முடியலையா? படிக்கிற உங்களுக்கே இப்படி இருந்தா எனக்கு எப்படியிருந்திருக்கும்...

12-13 தடவை ஸ்னூஸ் பட்டனை அழுத்தி அழுத்தி, ஒரு கட்டத்தில் ஸ்னூஸ் பட்டனை அழுத்த எனக்கே வெட்கமாக இருந்ததால் கடைசியாக ஒரு வழியாக எழுந்து பார்த்த போது மணி 6.40... ஆஹா வழக்கமா எழுந்திருக்கும் 7.30 மணிக்கு பதிலாக 6.40க்கே எழுந்துவிட்ட என்னுடைய திறமையை நானே கொஞ்சம் வெட்கத்தோடு மெச்சிக்கொண்டு... ஷூவை மாட்டிக்கொண்டு வெளியில் வரவும் பக்கத்து வீட்டிலிருந்து “என்னங்க வாக்கிங் கிளம்பிட்டீங்க போலிருக்கே”னு சொன்னது இன்னைக்கு வரைக்கும் புரியல, அது பாராட்டா, கிண்டலானு.

வீட்டிலிருந்து கிளம்பி எந்த வழியா வாக்கிங் போறதுன்னு கொஞ்சம் குழப்பத்தோடு இரண்டு வீதி தாண்டுவதற்குள் மூன்று தெரிந்த முகங்கள் வாக்கிங் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், எல்லோரும் “ஹலோ என்ன வாக்கிங் போறீங்களா!!???” என்ற கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டார்கள். நானும் கொஞ்சம் கூச்சத்தோடு “ஆமாங்க”னு சொல்ல, “ஓ வெரி குட் எப்போயிருந்து போறீங்க” அய்யயோ என்ன சொல்லலாம் இன்னைக்குத் தான் பர்ஸ்ட்னு எப்படி சொல்றது, பிரஸ்டீஜ் (!!!???) என்ன ஆகுறதுனு நினைத்துக்கொண்டே “இப்போ ஒரு நாலு மாசமாங்க”னு கூச்சப்படாம பொய் சொல்ல, அடுத்த விநாடி யோசிக்க கூட விடாமல் “அப்படியா, ஒரு நா கூட உங்கள பாக்கலையேன்னு” கேட்க நான் பேய் முழி முழிக்க “ஓ வேற ரூட்ல போவீங்களோ”னு கேட்க, நான் தலையை இட வலமாய், மேலும் கீழுமாய் தலையை ஆட்டி, இப்படியாக அந்த மூன்று நபர்களையும் தாண்டுவதற்கே மூச்சு முட்டி லேசாக வியர்த்தது. 25 நிமிடம் நடந்ததிலேயே கால் வலிப்பது போல் உணர... வீட்டிற்கு திரும்பினேன்.

வீட்டிற்கு வந்தும் வராமல் கேட்ட கேள்வி எவ்வளவு தூரம் போனீங்கனு, உடனே நானும் போன வீதிகளின் பெயரையெல்லாம் கொஞ்சம் இழுத்து, நீ...ட்ட்ட்ட்ட்...டி, நீ...ள...மா...க... சொன்னேன். உடனே பாப்பா “அப்பா எங்கள் ஸ்கூல் வேன் அந்த வழியாத்தான் போகும்பா” என்றதும், ஒரு நிம்மதி வந்தது “ஆகா... நாம போன வாக்கிங்க நம்பிட்டாங்க”னு.

பல நாட்கள் அதிகாலையில் வாகனத்தில் போகும் போது பார்த்த, சாலைகளில் வாக்கிங் போன உருவங்கள் நினைவுக்கு வந்தனர், அவர்களும் அப்படித்தான் ஆரம்பித்திருப்பார்களோ என்று?

தீண்டத்தகாத சொற்களா?

இட்டேரி
பிரவக்குட்டி
மூட்டுக்குட்டி
வட்டில்
சோறாக்குறது
சாறுகாய்ச்சறது
மொளசாறு...

இந்த சொற்கள் உங்களுக்கு பழக்கப்பட்டதா!!!???
இவை கொங்கு மண்டலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளில் சில...

மேலே குறிப்பிட்ட வட்டார சொற்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பகிர்ந்து கொண்டவை.

இட்டேரி:
பட்டி அல்லது கட்டுத்தறையிலிருந்து விவசாய பூமி வழியாக ஆடு, மாடுகளை மற்றோரு நிலத்திற்கு ஓட்டிச் செல்வதற்கு பயன் படுத்தப்படும் பாதை. முக்கியமான செய்தி இந்தப் பாதையின் இரு பக்கமும் ஆடு, மாடுகள் விவசாய பூமியிலிருக்கும் பயிர்களை கடித்து விடாமல் இருக்க முள் செடி அல்லது கிளுவை மரம் கொண்டு வேலி அமைக்கப் பட்டிருக்கும்.

பிரவக்குட்டி, மூட்டுக்குட்டி:
ஆடுகளில் இரண்டு வகை உண்டு. செம்மறி(செம்புளி) ஆடு, வெள்ளாடு. பொதுவாக எல்லோரும் இரண்டு வகை ஆடுகளின் குட்டிகளையும் ஆட்டுக்குட்டியென்றே அழைப்பது வழக்கம். ஆனால் கொங்கு மண்டலத்தில் செம்மறி ஆட்டின் குட்டிகளை பிரவக்குட்டி எனவும், வெள்ளாட்டின் குட்டிகளை மூட்டுக்குட்டி எனவும் அழைப்பதுண்டு.

வட்டில்:
சாப்பிடப் பயன்படுத்தும் வட்டிலை இன்று தட்டு என்றோ அல்லது பிளேட் என்றோ அழைக்கிறோம். தட்டு என்பது முழுவதும் தட்டையாக இருப்பது. அதுவே பெரிதாக இருந்தால் அதன் பெயர் பராத்து. வட்டில் என்பது தட்டையாக இருந்து விழிம்பு வளைந்து உயரமாக இருக்கும். இன்று எங்கும் வட்டிலை வட்டில் என்று அழைப்பதில்லை.

சோறாக்குதல்:
நாம் வெகு இயல்பாக பயன்படுத்தும் சாதம் அல்லது ரைஸ் என்பதின் உண்மையான பெயர் சோறு. சோறாக்குதல் என்பது மிகப் பெரிய அர்த்தம் பொதிந்த வார்த்தை இது... அரிசியை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வக்கும் போது அரிசி சோறாக பெருகி வரும். சோறாக பெருகுவதைத்தான் சோறாக்குதல் என்பர்.

சாறுகாய்ச்சுதல்:
நாம் வெகு இயல்பாக பயன்படுத்தும் குழம்பு அல்லது சாம்பார் என்பதின் உண்மையான பெயர் சாறு. சாறுகாய்ச்சுதல் என்பது தேவையானவற்றை போட்டு காய்ச்சியெடுத்தால் வருவதுதான் சாறு.

மொளசாறு:
நாம் ரசம் என்றழைப்பது தான் மிளகு சாறு. மிளகு கொண்டு (மிளகாய் சிலி நாட்டிலிருந்து 15ம் நூற்றாண்டில் வந்தது) காய்ச்சுவது மிளகு சாறு, இது மருவி மொளசாறு என்றழைக்கப்பட்டது.
........................................................................................................................................
ந்த வார்த்தைகளை திரு. பெருமாள்முருகன் பகிர்ந்து கொண்டு விளக்கியபோது எனக்கு முழுக்க முழுக்க என் ஆயாவின் (இங்கு பாட்டியை ஆயா என்றுதான் அழைப்போம்) நினைவு வந்தது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் ஆயா மேலே குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளையும் (வட்டாராச் சொற்கள்) மிக இயல்பாக பயன்படுத்தி வந்தார். கடந்த 25 வருட காலத்தில் என் ஆயாவும் கூட இந்த வார்த்தைகளை (கிராமத்தில் வசித்தாலும்) கட்டாயமாக புறந்தள்ளிவிட்டு கொஞ்சம் நெருடலோடு எங்களுக்காக சாப்பாடு எனவும், குழம்பு எனவும், ரசம் எனவும் உபயோகப்படுத்துவதை உணர்கிறேன். அதே ஆயா தன் வயதொத்த மற்ற பாட்டிகளுடன் பேசும்போது அந்த வட்டாரச் சொற்கள் உயிர் வாழ்வது மெலிதாக காதுகளிலும் விழத்தான் செய்கிறது.

இன்று மதியம் சாப்பிடும் போது வட்டிலில் சோறு போட்டு, சாறு ஊத்தி சாப்பிடுவோம் என்ற போது நேற்று என்னுடன் கூட்டத்திற்கு வந்த நண்பர் சேது மிக சத்தமாக சிரித்தார்.

வட்டாரச் சொற்கள் ஏன் இன்று தீண்டத்தகாத சொற்கள் போல் புறந்தள்ளப்பட்டுவிட்டன. நாகரீகம் என்ற நினைப்பில் நாம் பயன்படுத்தும் சொற்கள் எந்த வகையில் இவற்றை விட மேம்பட்டவை?

பள்ளி வாகனம்

மஞ்சள் நிற (பே)பருந்துகள்
வீதி வீதியாய், வீடு வீடாய்
அடை காத்த கோழிக்குஞ்சுகளை
கொத்திச் செல்கின்றன
வித்தியாச சிறைச் சாலைக்கு...

நன்றி - குங்குமம் (கொஞ்சம் தாமதமாய்)



கடந்த மாதம் நிகழ்ந்த சம்பவத்தை அடிப்படையாக (உண்மை பாதி, பொய்மை பாதி) கொண்டு என் வலைப்பூவில் நகைச்சுவையாக பதிந்த “இன்னொரு 37 ரூபாய் 40 பைசா தள்ளுபடி”
http://maaruthal.blogspot.com/2009/06/37-40.html

பதிவு ஜூலை 2ம் தேதி குங்குமத்தில் 34ம் பக்கம் வந்துள்ளது.
இணையத்தில் வாசிக்க கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி 34ம் பக்கம் செல்லவும்..
http://ebooks.dinakaran.com/kungumam/ebook/2009/jul/02/default.html.

இரண்டு நாள் முன்பு “வீட்டுப் புறா” சக்தி இது பற்றி பின்னூட்டம் அனுப்ப,
நிச்சயமாக நம்பினேன் அவர் தவறுதலாக இன்னொருவருக்கு அனுப்ப வேண்டியதை
மாற்றி அனுப்பி விட்டாரென்று, அதே சமயம் துக்கினியூண்டு நம்பிக்கையோடு (இது தான் பலமே) அவரையே கேட்டேன் என்ன குங்குமத்திலா!!!??? என்று

இன்று மீண்டும் அவர் தன் பின்னூட்டத்தில் விபரமாக ஜூலை 2ம் தேதி குங்குமம் இதழ் எனக் கூற நம்பிக்கை நம்பிக்கையோடு வளர்ந்தது. கடைகளில் தேட கடைக்காரர் கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க, புத்தகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தளர்த்திக்கொண்டு, ஊரில இருக்கிற எல்லாத்துக்கும் போன் போட்டு கேட்டாலும் எல்லோரும் ஒரே பதில சொன்னாங்க, குங்குமம் அந்த இதழ் இல்லையென்று.

மீண்டும் சோர்ந்து போய் உட்கார சந்துருவின் நெய்தல் வலைத்தளத்தில் குங்குமம் குறித்த அவர் பதிவை படிக்கும் போது என் பதிவு பற்றி அவர் குறிப்பிட்டதை படித்து

குங்குமத்தை இணையத்தில் தேடி.. கண்டுபிடித்து...

தாங்க முடியலையா!!! சரி சரி இத்தோட சுயபுராணத்தை நிறுத்திக்கரேன்..

மீண்டும் சந்திப்போம்... நன்றி குங்குமம், நன்றி சக்தி, நன்றி சந்துரு.

இடைவிடா இருமல்





நாள் முழுதும் வந்துபோன
மனிதர்களால் கசங்கிப்போன
நகரம் களைப்போடு
கண் அயர்ந்து கிடக்கிறது...

அடைக்கப்பட்ட கடைகளில்
நடந்த வரவு-செலவு கணக்கு
மணல் துகள்களாக சிதறிக்கிடக்கின்றன
வாசற்படிகளில் ...

மாநகராட்சி குழாய்களில்
சாக்கடை கலந்து குறுகுறுவெனவரும்
கொஞ்சம் தண்ணீருக்கு
காத்திருக்கின்றன காலிக்குடங்கள்...

புதிதாக ஒட்டிய போஸ்டரை
பசையின் வாசனையோடு தின்னும்
மாட்டின் சுருங்கிப்போன காம்பை
சப்பியிழுக்கிறது கன்றுக்குட்டி...

சளசளத்து ஒடும் சாக்கடையோரம்
அசந்து தூங்கும் பிச்சைக்காரனின்
அலுமினியப் பாத்திரத்தை சுரண்டுகிறது
கொழுத்த பெருச்சாளி...

இவர்களோடு...

பிரமாண்ட நுழைவு வாயிலருகே
மப்ளர் சுத்திய வயதான காவல்காரர்
இடைவிடாது இருமிக்கொண்டிருக்கிறார்
புறந்தள்ளிய மகனை நினைத்து...

~

வாடிய நரம்புகளோடு



ஓங்கியடித்த சம்மட்டியில்
உதிர்ந்துபோன மோதிர விரலின்
முக்கால் பாகம்...

காய்த்துப் போன
கை விரல்களின் நகக் கண்ணில்
கெட்டித்துப்போன கிரீஸ் மை...

ஆணித் துண்டுகள் தைத்து
யானைத் தோல்போல்
ஆன உள்ளங்கால்...

தகிக்கும் இரும்புத்துண்டு
எகிறிப் பறந்து விழுந்ததிலான
கன்னத்து தழும்பு...

சனிக்கிழமை சாயந்திரம்
சம்பளப் பணத்திற்கு காத்திருக்கும்
அம்மாவின் நம்பிக்கை...

நடுச்சாமத்திலும் தீராத
முதலாளியின் டாஸ்மாக் சரக்கும்,
மீன் துண்டும்...

இதுவரை எதுவுமே
மாறிவிடவில்லை...

ஆனாலும்...
அவன் பொறந்ததிலிருந்து
பொற்கால ஆட்சிதான் நடக்கிறதாம்
இந்த பொய்யர்கள் ஆளும் தேசத்தில்...

விழித்திருந்து உழைக்கும் இரவுகளில்
இமை மேல் விழித்துக் கிடக்கும்
உறக்கம் போல்...

வதங்கிய வயிரோடு
வாடிய நரம்புகளோடு
நம்பிக்கையோடு காத்திருக்கிறான்...

விகடனில் என்னுடைய கவிதை

என்னவென்றே தெரியாமல்
எதை எழுதுவதென்றே தெரியாமல் தான்
என்னுடைய ‘கசியும் மௌனம்’
வலைப்பக்கத்தை தொடங்கினேன்...

கடந்து இரண்டு மாதங்களில்
கடினமான வேலைப்பளுவிற்கிடையே (!!!)
பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன்..

நன்றாக இருப்பதாய் நினைத்த
பதிவிற்கு சில சமயம் குறைவான
கருத்துகள் மட்டுமே வரும் போது
மனது துவண்டுபோனதும் உண்டு...

சாதாரணமாக இருப்பதாய் நினைத்த
பதிவிற்கு கூடுதலாய் கருத்துகள்
வரும்போது மனது ஆச்சரியப்பட்டதும் உண்டு

நேற்று “எதுவுமே இழப்பாகத் தெரியவில்லை” என்று
ஒரு கவிதையை(!!!???)
பதிவேற்றிவிட்டு (25வது பதிவு வேற)
பின்னூட்டம் பெற கடைவிரித்திருந்த போது

இன்று காலை பிரியமுடன் வசந்த்
அனுப்பியிருந்த பின்னூட்டத்தில்
இளமை விகடனில்
கவிதை வெளிவந்திருப்பதாக.. வாழ்த்த

சிறிது நேரம் தலைகால் புரியவில்லை

எங்கே என்று தேடி
கண்டுபிடிக்கமுடியாமல்
தள்ளாடி, மூச்சு திணறிய போது

நாகா அவர்கள் அனுப்பிய
http://youthful.vikatan.com/youth/index.asp
சொடுக்க மனது பரவசமானது.

விகடனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள், நன்றி பிரியமுடன் வசந்த் மற்றும் நாகா)

நட்புடன்
கதிர்

இட்டு நிரப்பிட...




கோடைமழையில் கரைந்த
சாலையில் தீட்டியிருந்த
ஓவியம்...

சுழற்றியடித்த சூரைக்காற்றில்
நூலறுந்து சிறகடித்த
பட்டம்...

ஓடிவந்த கடலலை
கரைத்துவிட்டுப்போன
மணற்கோட்டை...

சுவாரசியமிகு புதினத்தின்
களவு போயிருந்த
கடைசிப் பக்கங்கள்...

இது எதுவுமே இழப்பாக
தெரியவில்லை...

தொடர்வண்டிப் பயணத்தில்
சன்னல் வழியே விழுந்த
மகளின் கிலுகிலுப்பைக்கு முன்னே...

~

உறங்காத முயல்குட்டியாய்



வெயில் தணியும்
மாலை நேரமது
கிழக்கு நோக்கி
மெல்ல நடக்கின்றோம்...

நிழல் நீண்டு
வளர்ந்து கொண்டிருக்கிறது
என் மேல் இருக்கும்
உன் நேசம் போல்...

வெதுவெதுப்பாய்
முதுகில் தடவும் சூரியன்
கதகதப்பாய்
இதயத்தில் முழுதும் நீ...

நடக்கும் அசைவில்
உரசிப் பற்றும் விரல்களில்
சொட்டுச் சொட்டாய்
ஊடுருவுகிறது புத்துணர்ச்சி...

உன் கண்கள் படபடத்து
பேசும் போதெல்லாம்
என் உதடுகள்
இரண்டும் உறைநிலையில்

நீ மௌனிக்கும்
நிமிடங்களிலெல்லாம்
மணந்து கொண்டிருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள்...

உன் உள்ளங்கையில்
என் முகத்தை ஏந்துகையில்
உலகம் சுருங்குகிறது
உள்ளம் விரிகிறது...

குளிர் சூழும் இரவுகளில்
மூடிய போர்வைக்குள்
கதகதப்பான முயல்குட்டியாய்
உறங்காமல் உன் நினைவு...

~

வாழ்க்கை அர்த்த‌ம் மிகுந்த‌து

நம்மை அறியாமல் தான் நமது பிறப்பு நிகழ்கின்றது. அந்த பிறப்பிற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஆனால் நமக்கு நாமே உருவாக்கும் பிறப்பின் மூலமாக நம் நேற்றைய வாழ்க்கையை விட இன்றைய வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்த முடியும். நமக்குள் நாமே இன்னொரு முறை பிறப்பது எளிதல்ல. ஒரு கடும் பிரசவ வலிக்கு நிகரான போராட்டம் தேவைப்படும்.


கடலில் குளித்து எழுந்து புத்துணர்ச்சியோடு வரும் புதுச் சூரியன் போல் எண்ண அழுக்குகளை அடித்து துவத்தோ, மென்மையாக ஊதி விட்டோ புதியதொரு வாழ்க்கையை தொடங்க முடியும். உல‌கில் உள்ள‌ அனைத்துமே ந‌ம்மை விட்டு வில‌கிவிட்டாலும் கூட‌ நாம் சுவாசிப்ப‌த‌ற்கான‌ காற்று ந‌ம்மை நேசிக்கும் வ‌ரை.... வாழ்க்கை அர்த்த‌ம் மிகுந்த‌து


இர‌வு விடியும், உற‌க்க‌ம் க‌லையும் எனும் ந‌ம்பிக்கை ம‌ட்டுமே ம‌னித‌னுக்கு நிம்ம‌தியான‌ உற‌க்க‌த்தை த‌ருகிற‌து. குழந்தையாய் தவழ்ந்து, நடக்க முயன்று தடுக்கி விழுந்த போது... தன்னம்பிக்கை தளர்ந்து போய் முயற்சியை கைவிட்டிருந்தால் இன்னும் மனிதன் நான்கு கால்களில் தானே நடந்து கொண்டிருப்பான்.

தடம் புதிது



வெள்ளரிக்கொடியாய் சாலைகள்
கிளைத்துக் கிடக்கின்றன...

ஒருபோதும்
தீர்ந்து போய்விடுவதில்லை
என் நம்பிக்கை மூட்டை போல்....


முட்டுச் சந்துகளில்
முற்றுப்பெறும் சாலைகளில்
சிலசமயம் குறுகிப்போய்
உடல் சிலிர்க்க‌ உறைந்து நிற்கிறேன்....


பின்வாங்கி திரும்புகையில்
குறைக்கும் நாய் கண்டு
குமைகிறது மனது
மேகம் கவ்விய‌ வெயில்போல்....


சாலைப்பிரிவுகளில் மட்டும்
தயங்கி நிற்கிறேன்
தொட‌ர்வ‌ண்டி நிலைய‌த்தில்
தந்தையின் கை பிரிந்த சிறுவனாய்....


கால்கள் இழுத்துச்செல்கிறது
நேற்று போலவே
புதியதொரு பாதையில்
வளைவுகளுடனும் நெளிவுகளுடனும்....

-0-

தொடரும் உறுத்தல்...

செருப்பில்லாதவன் ந‌ட‌க்கும்
பாதையிலே உமிழ்ந்த எச்சில்
காலணிக்குள் உறுத்துகிறது
சிறு கல்லாய்...


புகைவண்டியில் சீப்பு
விற்கும் குருடனிடம்
பேசிய பேரம் எரிகிறது
கண்ணுக்குள் நெருப்பாய்..


ழுகையோடு உறங்கிய‌
என் குழந்தையின் கண்ணீர்
இரவு முழுவதும் மழைநீராய்
சொட்டுகிறது கனவில்......................