சிங்கப்பூர் பயணம் - 6


பின் தூங்கி பின் எழுந்த அந்த ஞாயிறு அதனுள் பொதிந்து வைத்திருந்த அதிசயங்களின் அறிகுறிகள் ஏதும் எழுந்தபோது தெரியவில்லை. காலையில் பயிலரங்கம், அதன்பின் என்ன செய்யலாம் என்பது குறித்த திட்டமேதுமின்றி கிளம்பினோம்.

பயிலரங்கம் நடந்துகொண்டிருந்த ஆங் மோ கியோ நூலகத்தை அடைந்தபோது, நாங்கள் தாமதமாக வந்தடைந்திருக்கிறோம் என்பது புரிந்தது. நெய்தல் திணை மக்கள் குறித்தும், தம் எழுத்து குறித்தும் ஜோ.டி.க்ரூஸ் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். 





வாசகர் வட்டம் அமைப்பின் ஏற்பாடுகளும், செயல்பாடுகளும் என்னை பெரு வியப்பில் ஆழ்த்தின. முதல் நாள் ஆண்டு விழா கூட்டத்திற்கான ஏற்பாடுகளாய் இருந்தாலும், அன்று நடைபெற்ற பயிலரங்கத்தின் ஏற்பாடுகளாய் இருந்தாலும் மிகுந்த சிரத்தையெடுத்து நடத்துகிறார்கள். நம் ஊரில் அதுபோன்ற விழாக்களை, நிகழ்வுகளை சமரசங்களின்றி ஏன் நாம் நடத்த முற்படுவதில்லை எனும் கேள்வியெழுந்தது. தொடர்ந்து தொடர்ந்து இலக்கியத்தை முன்னிறுத்தி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இவ்வாறு இயங்கிக் கொண்டிருப்பது போற்றுதலுக்குரிய ஒன்று.





தமது உரையை நிறைவு செய்த ஜோ.டி.குரூஸ் கேள்விகளுக்காக அரங்கை திறந்துவிட்டார். மக்கள் ஆர்வமாகக் கேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு அவர் வைத்திருக்கும் பதில்கள் கேட்பவரின் ஆர்வத்தை மிக நேர்த்தியாக அங்கீகரிப்பவை. ஆளுமையோடு அவர் மேடையைக் கையாளும் விதம், ஒரு பேச்சாளன் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அழகியல்.

கேள்விகளை நிறைவு செய்யும் தருணத்திற்கு முன்பு, சிலரின் கேள்விகளுக்கான என் பார்வை, புரிதலை க்ரூஸ் அவர்களின் அனுமதியோடு பகிர்ந்துகொண்டேன். குறிப்பாக ஐந்து திணை வாழ்க்கையே தமிழர்களின் வாழ்வு சார்ந்தது, ஆனால் இப்போது ஆறாம் திணையாக பணம் சம்பாதிப்பது மட்டுமே என்று வாழும் வாழ்க்கை குறித்த ஒரு நண்பரின் கேள்விக்கு, ஆறாம் திணை என்று ஒன்றில்லை, அதை ஒருவித திணை மயக்கமாகவே நாம் கருத வேண்டும் எனும் ரீதியில் என் கருத்தை பதிவு செய்தேன். குறிப்பாக இப்படியான திணை மயக்கம் அப்ரூட்டிங் எனப்படும் வேர் அறுத்தலின் ஒரு அங்கம் என்பதையும், முதலில் திணை மயக்கத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதே ஒருவித விழிப்பு நிலை எனப் பகிர்ந்து கொண்டேன். எப்படி எழுதத் துவங்குவது எனக் கேள்விகேட்ட முத்துக்குமாருக்கு “முதல் சொல்லை எப்படியாவது எழுதிவிட முயற்சி செய்யுங்கள், அது அடுத்தடுத்த சொற்களைத் தேடிக்கொள்ளும்” என்பதையும் ஒரு உதாரணத்தோடு பகிர்ந்து கொண்டேன்.





இறுதிக் கேள்வியாக மரியான் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜோ.டி.க்ரூஸ் பகிர்ந்து கொண்டவை அற்புதமான ஒரு அனுபவம். பாலையில் கடல் தேடி துவண்டு அலைபவனின் முதுகை வருடும் கடலின் வெப்ப காற்றும், கடல் திசை நோக்கி ஓடுபவனுக்கு பாறையில் ஒட்டியிருக்கும் கடற்குதிரையின் எச்சமும் குறித்துச் சொல்லும் போது அந்தச் சூழலுக்குள் நம்மை அப்படியே இழுத்துச் சென்றுவிடுகிறார். விரைவில் மரியான் பார்க்கவேண்டும், அவர் சொன்னதை காட்சிகளில் கண்டு நெகிழவேண்டும் எனத் தோன்றியது.

மிக அருமையான மதிய உணவு. உணவுப் பொழுதின் உரையாடல் இனிதானதொன்று. எழுத்தாளர் கிருத்திகா, முதல் நாள் நான் பேசியதில் இருந்து, அந்த குழந்தை சம்பவத்தில் இருந்த அப்பா குறித்து தனது கருத்தை கேள்வியாக பகிர்ந்து கொண்டார்.  தனது சொகுசுக் கப்பல் பயண அனுபவத்தை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருப்பது குறித்துச் சொன்னதோடு புத்தகத்தையும் அளித்தார். பயணம் குறித்து விரிவாக படங்களோடு மிகுந்த மெனக்கெடல்களோடு வெளியிட்டிருக்கிறார்.

முதல் நாள் சந்திப்பிலேயே ஏ.பி.ராமன் அவர்கள் குறித்து நான் எழுதிய பதிவு குறித்து இரண்டு முறை பாராட்டிய ராம் சந்தானம், மீண்டும் ஒருமுறை பொறுமையாக வாசித்ததாகச் சொல்லி மீண்டும் பாராட்டினார். அதுமாதிரியான பகிர்வுகள் பொதுவாக மனதிற்குள் ஒரு தெறிப்பாய் சூழ்கொண்டு, தானே வளர்ந்து, சுயமாக அழுத்தமடைந்து, உடனுக்குடன் வெடித்து எழுத்தாக விழுந்து ஒருவித நிம்மதியை பரவவிடுபவை. அதில் எவ்வித திட்டமிடலுக்கும் நேரமோ, மனநிலையோ அமைவதில்லை, எழுதிவிட்டவுடன் ஒருவித விடுதலை உணரும் பாக்கியம் கிட்டிவிடுகிறதென்றேன்.

2013ல் வந்திருந்தபோதே நண்பர் முத்துக்குமார், அவர் வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்திருந்தார். அப்போது முடியவில்லை. இப்போது தட்ட முடியவில்லை. ஆனாலும் உணவுக்கான நேரமில்லையென்பதால், ஒரு தேநீராவது பருக வேண்டுமென அழைத்தார். அன்பின் அழைப்பை மறுக்க முடியாமல் நான், ஹாஜா, அனிதா, அனிதா அம்மா, அதியன், வெற்றிக்கதிரவன் என ஒரு படையாக முற்றுகையிட்டோம்.

முத்துக்குமார் இல்லத்தில் வழங்கப்பட்ட கொத்தமல்லித்தூள், சுக்கு கலந்திருந்த அந்த கருப்பட்டிக் காபி பால்ய காலத்திற்குள்ளும், விழுமியங்களுக்குள்ளும் இழுத்துச் சென்றது. அவர்கள் குடும்பத்தை மனதுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்து வைத்தது.




அங்கிருந்து தேசிய அருங்காட்சியகம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. சிங்கப்பூரின் 700 ஆண்டு காலம் குறித்த ஆவணங்களை பார்வைக்கு வைத்திருக்கிறது தேசிய அருகாட்சியகம். அந்த தேசத்தின் 700 ஆண்டுக்கான ஆவணங்களைப் பத்திரப்படுத்தி போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது, அட நம்ம ஊரு காலிங்கராயன் கால்வாய்க்கு 740 ஆண்டுகால வரலாறு இருக்க வேண்டுமே, அதையெல்லாம் எங்கு, எவ்விதம் தேடுவது என்ற சிந்தனை மனதுக்குள் குடைந்து கொண்டேயிருந்தது. சென்றிருக்கும் இடத்தில் அங்கிருப்பதை ரசிப்பதைவிடுத்து, தன்னிடமிருப்பதோடு ஒப்பிட்டு பெருமையோ, பொறாமையோ கொள்ளும் மனதை எப்படி நல்லவிதமாய் சமன்படுத்துவது என்பது இன்னும் புரிபடவில்லை.








700 ஆண்டுகால வரலாற்றில் ராஜேந்திர சோழன் குறித்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. கலிங்கா என அங்கே குறிப்பிட்டிருப்பதற்கு ஹாஜா கொடுத்த விளக்கம் மிகச் சுவாரஸ்யமானவை. இந்தியக் குடும்பம் என ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நிழற்படத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணின் காட்சி மனசுக்குள் ஆழப்பதிந்து விட்டது. 






சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிநாட்டு செட்டியார்கள் சிங்கப்பூர் சென்றடைந்தது, சிலைகளே இல்லாத தேசத்தில் சிலையாய் நிற்கும் ராஃபிள்ஸ் வருகையும், ஆளுமையும் ஜப்பானின் அடாவடி போர் மற்றும் ஆக்கிரமிப்பு, ஆங்கிலேயர்கள் ஆட்சி, வாக்கெடுப்பு நடத்தி தங்களை மலேசியாவோடு இணைத்துக் கொண்ட குடிக்க தண்ணீர்கூட இல்லாத சிங்கப்பூரின் அவல நிலை, 1965ல் தாங்கள் துளியும் விரும்பாத நிலையில் தங்களுக்கு திணிக்கப்பட்ட சுதந்திரத்தை சிங்கப்பூர் எதிர்கொண்டது என எல்லாவற்றையும் வரிசையாகக் கண்டுவர முடிகிறது.

ஜப்பான் போர் காலகட்ட நிகழ்வுகளைக் காணும்போது, ஒலி ஒளி அமைப்பு மூலம், நாமும் போர்முனைக்குள் இருக்கும் சூழலை உணர வைக்கிறார்கள். மலேசியாவுடன் இணைய நடத்திய வாக்கெடுப்பு முறை, மலேசியாவிலிருந்து பிரித்துவிடப்பட்ட காலத்திற்குப் பின் லீ மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த இராஜரத்தினம் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்களும் இடம் பெற்றிருக்கின்றன.







அதுவரை உடனிருந்த அதியன் விடைபெற விரும்பினார். பதின்ம வயதில் தமது எழுத்து மற்றும் கவிதைகளால் கலக்கிக் கொண்டிருக்கும் அதியன் ஒரு அதிசயம்தான். அதுவரை என் நட்பு வட்டத்தில் இல்லையென்றாலும் உடன் வரும் நட்புகள் அதியன் குறித்துச் சொன்னவை வியப்பில் ஆழ்த்தியது. அந்த பகல் பொழுதில் அதியன் எடுத்த பரிமாணங்களும் வியப்பில் ஆழ்த்தியவைதான். அவரை அனுப்பிவைக்க லிட்டில் இந்தியா பகுதிக்கு வந்தோம்.

சாலையோரம் தம் ஊர் நண்பர்களைச் சந்திக்க காத்திருக்கும் தொழிலாளர்களாய் பணியாற்றும் தமிழர்களின் முகங்களில் பலவிதமான உணர்வுகளைக் காண முடிகிறது. லிட்டில் இந்தியா கலவரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கென தளர்த்தப்பட்டிருந்த விதிகள் மீண்டும் இறுக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. வெஸ்டர்ன் யூனியனில் காசு அனுப்ப காத்திருக்கும் ஒவ்வொருவரின் மனசிலும் தம் ஊருக்குச் சொல்ல, உறவுகளிடம் சொல்ல, பிள்ளைகளிடம் பெற்றவர்களிடம் மனைவியிடம் தன்னை உணர்த்த, தான் உணர என எத்தனையோ உணர்வுகள் குவிந்து கனத்திருக்கும் என்பதை உணர முடிகிறது

அங்கிருந்து மெரினா பே பகுதிக்கு நகர்ந்தோம். முன்னிரவுப் பொழுதில் அங்கு தண்ணீரில் நிகழும் லேசர் காட்சி அசரடிக்கிறது. பேச்சு மூச்சற்று முழுக்க முழுக்க அதற்குள் மூழ்கி கவனிக்க உந்துகிறது. இசையும் பாடலும், நீரின் நடனமும், கலந்துருகும் ஒளியில் நிறங்களும் என அந்த சில நிமிடங்கள் நம்மை முற்றிலும் உறைய வைக்கும் வல்லமை அந்தக் காட்சிக்கு இருக்கின்றது. 




ஒவ்வொரு இடமாய் தொடர் ஓட்டம், அலைச்சல் என நாள் முழுக்க இயங்கியிருந்தாலும்கூட, அந்த தினமளித்த மகிழ்ச்சி அவ்வளவு எளிதாய் உறங்கிவிட அனுமதிக்கவில்லை. அந்நாளின் நிகழ்வுகளை மீட்டி மீட்டி அசைபோடவே மீண்டும் மீண்டும் பணித்துக் கொண்டிருந்தது.

சிங்கப்பூர் பயணம் - 5



வாசகர் வட்ட ஆண்டு விழா முடிந்து உணவு உண்டுவிட்டு கிளம்பும்போது இரவு 10 மணி இருக்கும். எங்கு செல்கிறோம் என எதுவும் சொல்லாமல் நண்பர்கள் அழைத்துச்சென்றனர். ஹாஜா கார் ஓட்டிக் கொண்டிருந்தார். கோபல் கண்ணன், கருணாகரசு உடன் இருந்தார்கள். 2013ல் நான் சிங்கப்பூர் வந்திருந்தபோது, எனக்கு இவ்வளவு நண்பர்கள் இல்லை. ஊரிலிருந்து என்னோடு வந்திருந்தவர்கள் இந்தோனேஷியா சென்றுவிட நான் மட்டும் தனித்திருந்த ஒரு முழுநாளை உடன் இருந்து, சுற்றித்திரிந்து பயனுள்ளதாக்கியவர் கருணாகரசு. அவரோடு அப்போது தேசிய நூலகமும், மெரினா பே பகுதிக்கும் சென்றது மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

அறச்சீற்றம் பொங்கும் ஒரு கவிஞனாய் மட்டுமே வலைப்பக்கத்தில் கருணாகரசுவை அறிவேன். உரையாடும்போது பேச்சுவாக்கில் நறுக்குகளாய் விழும் அவரின் நகைச்சுவை துணுக்குகள் அசரடிப்பவை. ஒரு கட்டத்தில் ”கருணாகரசு இனி கவிதை எழுதுறதை நிறுத்திட்டு உரைநடை எழுத ஆரம்பியுங்கள்” எனச் சொல்லுமளவுக்கு அவரின் நகைச்சுவைத் துணுக்குகள் வழியெங்கும் சிதறிக் கொண்டேயிருந்தன.

வண்டி நிற்கும்போதுதான் கடற்கரைக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். அலைகளற்ற தண்ணீரும், தூரத்தில் நிற்கும் பிரமாண்ட கப்பல்களில் மின்னும் விளக்குகளுமாய் கடல் எங்களுக்காக தம் கரையில் கொஞ்சம் இடம் வைத்திருந்தது. நண்பர்கள் குயில்தோப்பு என்ற குழுவாய் இருப்பவர்கள். ஹாஜா, ரமேஷ் ராஜு, தாம் சண்முகம், கண்ணன், கருணாகரசு, பனசை நடராஜன் ஆகியோரோடு நானுமாய் அந்த இரவின் நிமிடங்களைத் தின்ன ஆரம்பித்தேன்.

அவர்களில் கண்ணன், கருணாகரசு தவிர்த்து அனைவருக்கும் நான் மிக மிகப்புதியவன். ஆனாலும் காலம் காலமாய் பழகிய பால்ய நட்புகளின் உரையாடல் போலே, கிண்டலும் கேலியும், தீவிரமான பகிர்வுகளுமென பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்.



கடற்கரையெங்கும் திட்டுத்திட்டாய் விதவிதமான மனிதர்களின் கூட்டம். இருளும் ஒளியும் கலந்து காற்றாய் வீசும் அந்தக் கடற்கரையில் எவரும் எவரைப் பற்றியும் சிந்தனைகொள்ளாது, அவரவர் அவரவர் நிமிடங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எவரும் எவர் குறித்தும் அச்சமின்றி, அங்கு இருப்பதே அந்த தேசத்தின் அடையாளம் என்றால் அது மிகையாகாது.

அனுமதி பெற்று, கடற்கரையில் நண்பர்களாக, குடும்பமாக கூடாரம் அமைத்து இரவு முழுக்க தங்கி பேசி, தூங்கிவிட்டுச் செல்லலாம் என அறிகையில் பெருமையாகவும், பொறாமையாகவும் இருந்தது. காலணிகளில் மின்னும் விளக்கோடு இரவிலும் ஸ்கேட்டிங் செல்கிறார்கள் அல்லது ஓடுகிறார்கள். சக்கரங்களில் மின்னும் விளக்கோடு மிதி வண்டிகள் வளைந்து நெளிந்து செல்கின்றன. வாழ்தலின் மிக ரசனையான பக்கங்களை அப்போது அங்கிருக்கும் மனிதர்கள் எழுதியும், வாசித்தும் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. இருக்கும் கொஞ்சம் கடற்கரையை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தும் அவர்களின் பழக்க வழக்கமும் நமக்கு ஒரு பாடம்தான்.


இலக்கியம், எழுத்தாளர்கள், இந்திய அரசியல், புத்தக வெளியீடுகள், கூட்டங்கள், விழாக்கள் என கலந்துகட்டி உரையாடியதில் நான் அறிந்து கொண்டவை சிங்கப்பூரின் எழுச்சி, சிங்கப்பூரின் தந்தை, சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை என வித்தியாசமானவை.

-
சிங்கப்பூர் பயணம் - 1

 
சிங்கப்பூர் பயணம் - 2
 

சிங்கப்பூர் பயணம் - 3

சிங்கப்பூர் பயணம் - 4

-

சிங்கப்பூர் பயணம் - 4



உட்லண்ட்ஸ் நூலகத்தின் அந்த சரிவான அரங்கம் அமைதியாய்க் காத்திருந்தது. இதுவரையிலான எல்லா நிகழ்வுகளுக்கும், உரைகளுக்கும் சாட்சியமாய் அந்த அமைதி தென்பட்டது. வாசகர் வட்ட தோழமைகள் அங்குமிங்குமாய் நிகழ்வின் துவக்கத்திற்காக இயங்கிக்கொண்டிருந்தனர். பொதுவாக எந்த ஒரு நிகழ்வும், துவக்கப் புள்ளி வரைதான் அழுத்தமும், அலை பாய்ச்சலும், பதட்டமும், நெருக்கடியும். துவங்கிய நொடியிலிருந்து ஆற்றில் விழுந்த மழைத்துளிபோல அதன் போக்கில், அது செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றுவிடும்.

முன் வரிசையில் அமர வைக்கப்பட்டேன். தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவராய் வந்து ஆங்காங்கே அமரத் தொடங்கினர். சிலரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். பலர் அடையாளம் கண்டு பேசினார்கள்.

ஒரு நிறுவன ஒழுங்கோடு நிகழ்ச்சி கச்சிதமாகத் துவங்கியது. நேர நிர்வாகத்தில் உறுதியாக இருப்பார்கள் என முன்பே எனக்கு பல வகைகளில் உணர்த்தப்பட்டிருந்தவாறே நிகழத் தொடங்கியது.

அழகுநிலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளருக்கான ஆளுமையும், நளினமும் அவருக்கு மிகப் பெரிய பலம். மாணவி ஒருவரின் இறை வணக்கம், மாணவிகளின் நடனம், அனிதாவின் வரவேற்புரை, சித்ரா ரமேஷின் வாசகர் வட்ட நிகழ்வுக் குறிப்புகள், புத்தக அறிமுகங்கள் என ஒவ்வொன்றாய் அதனதனன் அளவுக்குள் நேர்த்தியாக நிறைவேறின. புத்தக வெளியீடுகள், நினைவுப் பரிசுகள் என எல்லாமே கச்சிதம். இது போன்ற கச்சிதமான விழாக்களை நாங்களும் பலமுறை நடத்தியுள்ளதால், ஒவ்வொன்றையும் அதன் இயல்போடும் நேர்த்தியோடும் பொருத்திப் பார்த்துக்கொண்டேன். நேரம் அதிகம் எடுத்துக்கொண்டவரை அழகு நிலா கையாண்ட விதம் சுவாரஸ்யத்துக்குரியது.

புத்தக அறிமுகங்களுக்கு பிறகு, புத்தக விற்பனைக்காக மேடை ஒத்திவைக்கப்பட்டது ஒரு நல்ல செயல் எனப்பட்டது. பொதுவாக விழாவின் இடையில் இடைவெளி விடுதல், தொய்வை ஏற்படுத்தும் என்பது நான் கருதியிருந்த ஒன்று. ஆனால், நிகழ்வின் முக்கிய நோக்கத்தில் குறிப்பிடத்தக்கது புத்தக வெளியீடுகள் எனும்போது அதற்கான நேரம் ஒதுக்கியது நான் கற்றுக்கொண்ட ஒரு செயல். இடைவெளிக்குப் பிறகு வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டேன்.






படைப்பாளிகள் குறித்த ஒரு சிறுகவிதையோடு துவங்கி, ஒவ்வொருவருடைய புத்தகங்களின் உள்ளடக்கங்களை நானறிந்த வரையில் பாராட்டி, ஷானவாஸ் புத்தகத்தை படிக்க ஆவல் கொண்ட நண்பன் குறித்த சம்பவத்தில் நிறுத்தி… ஆழ்கடலையும், அந்த உப்புக்காற்றையும், அடர் மேகங்களையும் கடந்து வந்திருப்பது, வழங்கப்படும் 600 நொடிகளுக்குள் வாழ்த்துரையாற்றிட மட்டுமே என்பதாக இல்லாமல், சற்றே அவர்கள் மனதோடு உரையாட வந்திருப்பதையும் சொன்னேன்.

அங்கு சென்றதிலிருந்து அண்ணா, தம்பி, மாப்ள, நண்பா, சார் என அவரவருக்குப் பிரியப்பட்ட மாதிரி அழைத்த நட்புகளிடமிருந்தது, இவர் ஃபேஸ்புக் நண்பர், வலைப்பதிவர், எழுதுகிறவர் என்பதையெல்லாம் கடந்து, தம் மண்ணிலிருந்து, தம் மண் வாசனையை, தம் வட்டார மொழியை, தாம் சுவாசித்த காற்றை சுமந்து வந்திருக்கிறவர் என்பதாகவே இருந்ததாய் நான் உணர்ந்தேன்.

சிங்கப்பூரென்றால் ஒரு சுற்றுலா தளம், விதிகள் கடுமையானவை, சுத்தமாக இருக்கும் என்பதோடு, வருமானத்தையும், செலவையும் 45 ரூபாயால் பெருக்கி அவரவர் நிலைக்கேற்ப பெருமிதமும், பொறாமையும் கொள்ளும் ஒரு நாடாகவே பெரும்பாலும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அத்தோடு சென்னையை சிங்கப்பூராக்குகிறேன் என அரசியல்வாதிகளும், எங்கோ விளைந்துகொண்டிருந்த நிலத்தை விலை நிலமாக்கி அதற்கு சிங்கப்பூர் சிட்டி எனப் பெயர் வைத்த வியாபாரிகளும் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் என்பது வேறொரு தனிக்கதை.

உண்மையான சிங்கப்பூரை நமக்கு அடையாளப்படுத்த வேண்டிய கடமை அங்கிருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் மிக முக்கியமாய் இருக்கின்றது. நானெல்லாம் எழுத வந்த காலத்தில் வலையுலகத்தை ஆளுமையோடு ஆண்டு கொண்டிருந்த பல வலைப்பதிவர்கள் சமீப காலங்களில் எழுதுவதில்லை என்ற ஆதங்கம் எப்போதுமுண்டு. எழுத்தாளன் செத்துவிட்டதாக அறிவித்த எழுத்தாளரைச் சந்தித்தபோதும்கூட, அவரே முன்பு கூறியிருந்ததை வைத்து, அவர் இன்னும் எழுத வேண்டிய பதினைந்து நாவல்களின் கடன் மிச்சமிருப்பதாகச் சொன்னதை நினைவு கூர்ந்தேன். அதேபோல் ஒவ்வொரு பதிவருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும், வாசகருக்கும் தாம் எழுதவேண்டிய அளவுக்கான பக்கங்கள் எழுதப்படத் தயாராகவே இருக்கின்றன, அவர்கள் எழுத வேண்டியது மட்டுமே அப்போது அவசியமாய் இருக்கிறதென்பதைச் சொன்னேன்.

ஆயிரம் சொற்கள் எழுதி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத நிலையில், இரண்டு வரி நிலைத்தகவலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திட முடியும் என்பதை, நான் சமீபத்தில் தந்தைக்கும் மகளுக்குமான ஒரு நிகழ்வினை, ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாய் எழுதியதையும், அதன் விளைவுகளையும் கூறி, உரை நிறைவு செய்து இறங்கினேன்.

சிறப்புரையாற்றிய எழுத்தாளர் ஜோ.டி.க்ரூஸ், நான் இறுதியாகச் சொன்ன அந்த குழந்தை உதாரணத்தை மிக அழகாக மீனவர்கள், அரசு குறித்து பொருத்தி இரண்டு முறை பேசினார். ஆளுமையும், உடல் மொழியுமாய் மிகச் சிறப்பாகப் பேசிய ஜோ.டி.க்ரூஸ், உரையின் நிறைவில் கேள்வி கேளுங்கள் என்றார். உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற ரீதியில் எழுந்த கேள்விகள் கண்டு ஆச்சரியமாய் இருந்ததைவிட, அயர்ச்சியாய் இருந்தது. சில கேள்விகள் சவாலாய் அமைந்தன.

அன்பிற்குரிய ஏ.பி.ராமன் என்னருகில் இருந்தார். ஒரு பத்திரிக்கையாளருக்கே உரிய கவனத்தோடு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த நாள் அது அழகியதொரு பகிர்வாக வந்தபோது, குறிப்பேட்டில் சேகரித்த கிறுக்கல்கள் இத்தனை அழகாய் பூக்குமா என ஆச்சரியப்பட்டேன்.

2008ல் நான் முதன் முதலில் பதிவுலகத்திற்கு வந்திருந்தபோது, பதிவுலகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நண்பர்கள் கோவி.கண்ணன், குழலி புருஷோத்தமன், வெட்டிக்காடு ரவிச்சந்திரன், கே.வி.ஆர், சிங்கைநாதன், தம்பிகள் முஸ்தபா & வெற்றிக்கதிரவன் ஆகிய மூத்தபதிவர்களின் வருகை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். அவர்களில் கே.வி.ராஜாவை மட்டும் முதன்முறையாக சந்தித்தேன். கே.வி.ஆருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என்பதற்கு, தனிப்பட்ட காரணமும் உண்டு.

ஹரிகிருஷ்ணன், ஆமருவி தேவநாதன், எம்.கே.குமார், அபிராமி. பழனியப்பன், முனைவர்.தின்னப்பன், புஷ்பலதா நாயுடு, தினமலர் புருஷோத்தமன், நிர்மலா, அமல் ஆனந்த், தியாக ரமேஷ், அன்வர், சரவணன், முத்துக்குமார், நசீர், அதியன், ராம் சந்தானம், லலிதா சுந்தர், ஆறுமுகம், டாம் சண்முகம், கருணாகரசு, கண்ணன், பனசை நடராஜன், ரமேஷ், ஹாஜா, சசிக்குமார் என அன்பு ததும்பும் பலரை ஒரே இடத்தில் சந்தித்தது மிக மகிழ்வான ஒன்று.

உணவு அரங்கில் திகட்ட திகட்டப் பாராட்டினார்கள். அநேகமாக நான் வாழ்நாளில் எதிர்கொண்ட அடர்த்தியான, அதிகமான பாராட்டு அதுவாகத்தான் இருக்கும். ஒரு வகையாய் பாராட்டு அலைகளிலிருந்து சற்றே விலகி நிதர்சனத்திற்குள் நடக்க ஆரம்பித்தேன். இவர்கள் பாராட்டும் அளவிற்கு பேசியிருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் குறுக்கும் மறுக்குமாய் ஓடிக்கொண்டேயிருந்தது. பதிவுலக நண்பர்களின் பாராட்டு கூடுதலாய்த் தெம்பு தந்தது. எனினும் வழக்கம்போல் இன்னும் சிறப்பாக பேசியிருக்கலாம் என்பதாய் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இதுவரையிலும் இந்த உரைதான் சிறப்பு, கச்சிதம் என்ற நிறைவினை நான் உணர்ந்ததேயில்லை. யார் எவ்விதம் பாராட்டினாலும், இன்னும் சிறப்பாய் பங்களித்திருக்கலாம் எனும் ஒருவித குறுகுறுப்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது. அதே நேரம் வாசகர் வட்ட நிகழ்வில் நான் சிறப்பாக ஏதேனும் செயல்பட்டிருந்ததாக பெருமை கொண்டால், அது அத்தனையும் அனிதாவிற்கும், ஷானவாஸ், சித்ரா ரமேஷ் உள்ளிட்ட வாசகர் வட்ட நண்பர்களுக்குமே சாரும்.

-

நிகழ்ச்சி குறித்த தாளம் நிகழ்ச்சி காணொளி


மேலும் வாசிக்க..


சிங்கப்பூர் பயணம் - 1
சிங்கப்பூர் பயணம் - 2

சிங்கப்பூர் பயணம் - 3

-

சிங்கப்பூர் பயணம் - 3 (லீ க்வான் யூ - அஞ்சலி)


விடியலொன்றில் மரணச் செய்தியைக் கேள்வியுறுவதொன்றும் எனக்குப் புதிதல்ல. அப்படியான ஒரு விடியல்தான் இன்றும். விழித்தபின் அணைத்து வைத்திருந்த கைபேசியை இயக்கி, இணையத்தை முடுக்கியபோது வாட்ஸப்பில் இருக்கும் குயில் தோப்பு நண்பர்கள் குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்திருந்தனர். சிங்கப்பூரின் சிற்பி ”லீ க்வான் யூ” அவர்களின் மரணச் செய்திதான் அது. உண்மையில் எனக்கு அதுவொன்றும் அதிர்ச்சியான செய்தியாகப்படவில்லை. ஆனால் மிகக்கனமானதொரு செய்தி. நிதானமாய் எழுத நினைத்திருந்ததை சற்று அவசரமாக்கியிருக்கும் செய்தி. மரணம் என்பது உண்மை. எவராலும் பொய்யாக்க முடியாத உண்மை. அந்த மரணம் ”லீ க்வான் யூ” மூலமாகவும் தன் உண்மையை நிரூபித்திருக்கிறது.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரு பயிற்சி வகுப்பில், சிங்கப்பூரின் எழுச்சியை உதாரணம் காட்டிப்பேசியதாக நினைவிலிருக்கிறது. மேலோட்டமாக ஏதோ ஒன்றை வாசித்தோ அல்லது கேள்விப்பட்டதன் வாயிலாகவோதான் அதை நான் அப்போது பேசியிருந்தேன். அது தவிர்த்து சிங்கப்பூர் குறித்து வேறொன்றும் தெரியாது. 2013ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது கூட, ஊரைச் சுற்றவும், கட்டிடங்களின் உயரங்களில் வியக்கவும், போக்குவரத்து வளர்ச்சி கண்டு மயங்கவும், நண்பர்களைச் சந்தித்து உரையாடவும் மட்டுமே என்னால் இயன்றது. ஒரு வெளிநாட்டுப் பயணம், அதுவும் சிங்கப்பூர் பயணம் என்பதாக மட்டுமே ஊர் திரும்பினேன். எதற்கு சிங்கப்பூர் போனாய், அங்கிருந்து என்ன கொண்டு வந்தாய் என்பதற்கு என்னிடம் பதிலெதுவுமே இல்லை.

மிகச்சரியாக 17 மாதங்கள் கழித்து இந்த முறை மேற்கொண்ட பயணம் தந்த அனுபவம் சொற்களில் அடங்காதவை. எதற்குப் போனாய் என்பதற்கும் பதிலிருக்கிறது, என்ன கொண்டு வந்தாய் என்பதற்கும் பதிலிருக்கிறது. இரண்டாவது கேள்விக்கான பதில் “லீ க்வான் யூ”



இந்த முறை எனக்கு இடங்களைப் பார்ப்பதில் விருப்பமிருக்கவில்லை. விரும்பியவண்ணம் நண்பர்களைச் சந்தித்தேன். நான் சந்தித்தேன் என்பதைவிட, அவர்களாக என்னை வியப்பிற்குள், பெருமிதத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். எந்தவித திட்டமிடலும் இல்லாமல், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், எந்தவித கேள்விகளும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் ஒருமித்த குரலில் பேசியது சிங்கப்பூரின் மேன்மை, உயர்வு் மற்றும் அதையெல்லாம் சாத்தியமாக்கிய அந்தத் தலைவர் ” லீ க்வான் யூ” குறித்துதான்.

எங்களுக்கு வாழ்க்கையில் பயம், வருத்தம், கோபம், பதட்டம் உட்பட எதுவுமேயில்லை என ஈரோடு வந்திருந்த ஏ.பி.ராமன் சார் சொன்னதில் தொடங்கி, எப்படிப்பட்டவரையும் தனக்கேற்ற மாதிரி செதுக்கிக்கொள்ளும் சிங்கப்பூர் எனச் சொன்ன ஷானவாஸ் உரையாடலில் வழியாக, நான்கு நாட்கள் இருந்த அனிதா குடும்பத்தின் சிங்கப்பூர் வாழ்க்கைமுறை உட்பட, இறுதியாக விமான நிலையத்தில் கை அசைத்த அமல் ஆனந்த், வெற்றி வரை ஒவ்வொருவரிடமும் சிங்கப்பூரின் மேன்மைகள் குறித்தே நான் கேட்கவும், உணரவும் வேண்டியிருந்தது.

சிங்கப்பூர் அரசியல் குறித்தும், லீ க்வான் யூ குறித்தும் எதுவும் பேசாமல் இருத்தல் நலம் என வாசகர் வட்ட நண்பர்கள் அவர்களுக்கும் உரையாடிக்கொண்டிருந்ததை, அரசியல் மீது, தங்கள் தலைவன் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையாகவே நான் உணர்ந்தேன். இரவு குயில்தோப்பு நண்பர்களோடு கடற்கரை உரையாடலில் இடையிடையே அவர்கள் ”லீ க்வான் யூ” குறித்துப் பகிர்ந்த செய்திகளையும், அதை அவர்கள் பகிரும்போது குரலில் இருந்த நெகிழ்வினையும் மிகப்பெரிய ஆச்சரியத்தோடே பார்த்தேன். அருங்காட்சியகத்தில் 700 ஆண்டுகால சிங்கப்பூரைச் சுற்றிவரும்போது, மலேசியாவுடன் இணைந்து பின், உதறிவிடப்பட்டு வீழ்ந்து எழுந்ததை அறிந்தபோது பிரமித்து நின்றேன். மெரினா பே பகுதியில் கண்ணன் கேட்ட ஒரு கேள்வியையும், சொன்ன நகைச்சுவையையும் ஒட்டி நகர்ந்த உரையாடலில், ஊர் நினைவுகள் குறித்து வெற்றியிடம் கிளறிவிட, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் தான் இறங்கும்போது ”ரொம்ப பாதுகாப்பா உணர்வேண்ணே” எனச் சொன்னபோது எனக்குப் பெருமூச்சு வந்தது.

தேசிய நூலகத்தில் புஷ்பலதா நாயுடு அவர்களிடம் உரையாடும்போது, நூலகம், அதன் கட்டமைப்பு, சிங்கப்பூர் இலக்கியங்களுக்கான இடம் என்றெல்லாம் அவர் உதிர்த்த சொற்களில் பிரமித்து சிலையாய் நின்றுகொண்டிருந்தேன்.

வெட்டிக்காடு ரவி அண்ணனுடனான, இரவு உணவின்போது அவருடைய இருபது ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கையையும், பல பயணங்களையும் குறித்துப் பேசும்போது, அவர் உதிர்த்த சொற்களில் நிரம்பியிருந்த சுவை கண்டும், குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அமல் ஆனந்த் சொன்னதில் இருந்த நிம்மதி கண்டும் பெருமிதமும், பொறாமையும் கொண்டேன்.

மூத்தவர் ஏ.பி.ராமன், திரு.ஹரிகிருஷ்ணன், தாம் சண்முகம், ஹாஜா என ஒவ்வொருவருடனுமான தனிப்பட்ட சந்திப்புகளில் நேரிடையாகவும், அவர்களையறியாலும் சிங்கப்பூரின் பெருமைகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன. கனக்கக்கனக்க நான் சுமந்து கொண்டேயிருந்தேன்.

அதே நாட்களில் இத்தனை பெருமைகளுக்கும், பிரமிப்புகளுக்கும் காரணமான சிங்கப்பூரின் சிற்பி “லீ க்வான் யூ” தன் கடைசி நாட்களை மருத்துவமனையில் கழித்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் இருப்பதாய்ச் சொல்லும்போது எல்லோருக்கும் குரல் தணிந்துபோகிறது.

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தைச் சுற்றி முடித்தபோதுதான், சிங்கப்பூர் கடந்து வந்திருந்த நாட்கள் குறித்தும் பாதை குறித்தும் ஓரளவு அறிந்திருந்தேன். அதன்பின் ஒவ்வொருவரும் கடந்த ஐம்பதாண்டுகள் குறித்துப் பேசுவதைக் கேட்டு வியப்பின் உச்சத்தில் இருந்தேன்.

பதினான்காம் நூற்றாண்டில் ஒரு முக்கியத் துறைமுகமாக மாறிய சிங்கப்பூர், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிடம் பிடிபடுகிறது. மிகப்பெரிய தாக்குதலையும் பாதிப்பையும் அடைந்த சிங்கப்பூர் போரின் முடிவில், தன்னாட்சி பெற்ற அரசாக மாறுகிறது. குடிக்க தண்ணீர்கூட இல்லாத ஒரு தீவா, நாடாக இருக்கும் சிங்கப்பூர் தாமாக விரும்பி 1963ஆம் ஆண்டு தன்னை மலேசியாவுடன் இணைத்துக் கொள்கிறது. 1965ல் மலேசியா சிங்கப்பூரை தன்னிடமிருந்து விடுவிக்கிறது, பிரித்துவிடுகிறது அல்லது சுதந்திரம் கொடுக்கிறது. உலக வரலாற்றில் தாம் விரும்பாமல், கேட்காமல் சுதந்திரம் என்ற பெயரில் கழட்டிவிடப்பட்ட ஒரு தேசம் சிங்கப்பூராகத்தான் இருக்க வேண்டும்.

1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மலேசியாவின் தந்தை என அழைக்கப்படும் அப்போதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் சிங்கப்பூர் பிரித்துவிடப்பட்டதை அறிவிப்பதையும், பிரித்துவிடப்பட்டது குறித்து தன் உணர்வுகளை அழுகையோடு சிங்கப்பூரின் தந்தை ”லீ க்வான் யூ” வெளிப்படுத்துவதையும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு ஆவணம். 50 ஆண்டுகளுக்கு முன் அவர் கண்ணில் துளிர்த்த நீரைக் காண்கையில், ஒரு கணம் என் கண்களிலும் நீர் திரண்டது.

1965ல் பிரித்துவிடப்பட்ட சிங்கப்பூர் தனது பொன்விழாவைக் கொண்டாடுகிறது. SG50 என்ற முழக்கம் நாடெங்கும் ஒளிர்கிறது. நான் சந்தித்த அத்தனை மக்களின் பிரார்த்தனையும் ”லீ க்வான் யூ” குறைந்தபட்சம் வருகின்ற ஆகஸ்ட் 9 வரையேனும் நலமாய் இருக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. ஆனாலும் மரணம் சற்று முன்கூட்டியே வென்றிருக்கிறது.



அந்தக் காணொளியில் பால்ய காலம் முழுதும் மலேசியாவுடனானது என வலியோடு பகிரும் ”லீ க்வான் யூ”, மலேசியா இல்லாமல் ”சிங்கப்பூர் வாழமுடியாது” என்றும் பிரகடனப்படுத்துகிறார். உழைப்பும், தீர்க்கமும், காலமும்,  அவருடைய பிரகடனத்தையே அவருடைய மற்றொரு பிரகடனம் கொண்டு முறித்துப் போடுகிறது. அவரின் நம்பிக்கை அவராலேயே தோற்கடிக்கப்படுகிறது. ஆமாம், பிறிதொரு சமயத்தில், எந்த வாயால் சிங்கப்பூரால் வாழமுடியாது என்று சொன்னாரோ அதே வாயால் திடமாய், உரத்த குரலில் அவரே பிரகடனப்படுத்துகிறார் ”மற்றவர்களின் விளையாட்டை ஆடுவதற்காக நான் இங்கில்லை. நான் பல லட்சம் மக்களின் வாழ்வைக் கொண்டிருக்கிறேன்.” ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு அழுத்தமாய் அறிவிக்கிறார் ”சிங்கப்பூர் வாழ்ந்து காட்டும்”. சிங்கப்பூர் வாழ மட்டும் செய்யவில்லை… உலகத்தின் முன் வென்று காட்டியிருக்கிறது.

வணக்கங்கள் ”லீ க்வான் யூ”

-