விரல் நுனியில் ஒட்டிய வண்ணம்

பிடிக்க யத்தனிக்கும் விரல் நுனியில்
கொஞ்சம் வண்ணம் துறந்து
தன் வெளிக்குள் படபடக்கிறது
பொன்மஞ்சள் வண்ணத்துப் பூச்சி

இறகிலிருந்து உதிர்ந்த வண்ணம் 
காயமெனில்
எம் விரல் நுனியில் ஒட்டிய வண்ணம் 
தழும்பென்பேன்!

சேமிப்பிலிருக்கும் சில சொற்கள்



கடந்தோடிய காலம் தன்னோடு அரவணைத்திருந்த உணர்வுகளின் கதகதப்பையும், கனத்திருக்கும் எண்ண மேகத்திலிருந்து நழுவும் சிறு தூறலின் குளிரையும் எத்தனை காலம் தான் மனதெங்கும் தூக்கிச் சுமக்கவியலும். தூக்கிச் சுமக்கும் நினைவுகளில் உயிர்க்கும் சிந்தனைகளைத் தோள் சாய்க்கையில், பாந்தமாய் அணைத்து வருடுகையில் விரலெங்கும் ஒட்டும் ஈரமான சொற்களின் தொகுப்போடு உங்கள் முன் நிற்கிறேன்.

தன் விருப்பம் போல், தன்னியல்பில் வாழ்க்கைச் சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கு ஓட முடிவதும், ஓட முடியாமல் போவதும்தான் இங்கிருக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டு சில நேரங்களில் திறனை நிரூபிக்கும் விளையாட்டு போலவும், சில நேரங்களில் விளையாட்டின் வெற்றி தோல்விகள் மூலம் ஏதோ ஒன்றை ஈட்ட எத்தனிக்கும் முயற்சி போலவும் காட்சியளிக்கின்றது. யார் யாரோ விளையாட, அவர்களின் வெற்றி தோல்விகள் மூலம் பலன் ஈட்டுவது, ஒருவகைப் பந்தயம் அல்லது சூதாட்ட வடிவமாகின்றது. இந்த வாழ்க்கை விளையாட்டில் நாம் இருப்பதும், நம்மைச்சுற்றி பல்வேறு பாத்திரங்கள் நிரப்பப்பட்டிருப்பதும் உண்மையிலேயே சுவாரசியமானதுதான்.

கற்றுக்கொள்ளல் எனும் தேடல் முதுகில் தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது. சலனமற்று அமைதியாய்க் கடக்க முடிவதில்லை, எதோ ஒன்றை மனம் இடைவிடாது தேடுகிறது. கற்றுக்கொள்வதற்கென இங்கு அச்சடித்த பாடங்களும், போதனைத் திட்டங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. அந்தத் தேடலை செம்மையாகப் பூர்த்தி செய்பவர்கள் சிலர். அதில் மிக முக்கியமானது காலம். கரைந்தோடும் வாழ்நாளில் இந்தக் கணத்தை அர்த்தமுள்ளதாக்கி இருக்கும் காலத்தைத்தான் எப்போதும் முதலில் வணங்க விரும்புகிறேன். அடுத்து தங்கள் ஒவ்வொரு அசைவுகளாலும் கற்றுக் கொடுத்தபடியிருக்கும் சக மனிதர்கள். சற்றே பார்வையை விசாலமாக்கிக் கொண்டால், திகட்டத் திகட்ட பாடமாய் வந்து குவிகிறார்கள். நிறைய நிறைய என நிறைவாய்க் கற்றுக் கொண்டேயிருக்கலாம். காலடியில் அமைதியாய் இருக்கும் புல் தொடங்கி, தலைக்கு மேல திரண்டு நிற்கும் மேகம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய் கற்றுக் கொடுத்தபடியே இருக்கின்றன.

அவ்வப்போது கற்றுக் கொண்டதிலிருந்து நிர்பந்தமாகவோ, விருப்பமாகவோ எழுதிய தேர்வுகளின் தொகுப்பே பெயரிடப்படாத புத்தகம்”. விடைகள் சரியோ தவறோ என்ற குழப்பங்கள் இருந்தாலும், ஏதேனும் ஒன்றை எழுதிக் கொண்டேயிருப்பதில் இருக்கும் பெரு விருப்பமும், வியப்பும், எழுதியவுடன் இறக்கி வைக்கும் தளர்வான நிம்மதியும் அலாதியானதொரு உணர்வு.  



என் உணர்வுகளை ஒரு விதையாய் தன்னுள் தாங்கி, செம்மையாய் வளர்த்தெடுக்கும் நம் தோழிஇதழுக்கும், இதழை நடத்தி வரும் சக்தி மசாலா குழுமத்திற்கும், இதழ் ஆசிரியர் திரு..செ.ஞானவேல் அவர்களுக்கும் பேரன்பும் பெரும் பிரியங்களும். வேர்களையும், கிளைகளையும் அவ்வப்போது அனுமதித்த அந்திமழை, தி இந்து இணையம், தமிழின் அமுதம் இதழ்களுக்கும் அன்பு நிறை நன்றிகள்.

பிரியத்தின் வழி நின்று எனது இரண்டாவது நூலான இதனையும் வெளியிட முன்வந்திருக்கும் இனிய நண்பர் வேடியப்பன் அவர்களுக்கு நெகிழ்வான பிரியம் நிறை நன்றிகள்.

இந்த கட்டுரைகளின் சொற்களுக்குள் தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ உறைந்திருக்கும் என் மகள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் என் கூடுதல் நேசமும் வாழ்த்துகளும். வாசித்த சொற்கள்தான், வாசித்த நடைதான், ஆயினும் வாசிப்போம், உடனிருப்போம், ஊக்குவிப்போம் எனும் மனது படைத்த உறவுகளுக்கும், தோழமைகளுக்கும், வாசக மனங்களும் அன்பும் நன்றிகளும்.

இந்தப் பயணத்தில் இடையிடையே நாம் சந்தித்துக் கொண்டேயிருப்போம்! 

பிரியங்களுடன்
-கதிர்

இரண்டு புத்தகங்களும் ஈரோடும் பின்னே நானும்



நினைக்காத ஒரு செயல், திட்டமிடாத ஒரு காரியம் கை கூடி வரும்போது கிளர்ந்தெழும் மகிழ்ச்சி வார்த்தைகளில் அடங்காதது. முதல் தொகுப்பானகிளையிலிருந்து வேர் வரைவெளியான பின்பு அடுத்தது, அதுவரை எழுதப்பட்டிருக்கும் கவிதைகளைத் தொகுப்பதென்றே இருந்தேன். தொகுத்து அச்சுக்கு தயார் என்ற நிலையில் கால நேரம் குறிக்காமல் தள்ளிப் போட்டேன்.




இந்த நிலையில்நம் தோழிஇதழுக்கு மட்டும் தொடர்ந்து எழுதினாலும், மற்றபடி கட்டுரைகளின் எண்ணிக்கை மெல்லமெல்லக் குறைந்து கொண்டேயிருக்க, ஏனைய வேலைகளில் கவனம் கூடிக் கொண்டேயிருந்தது. அந்தச் சூழலில்தான் குங்குமம் வாய்ப்பு. அந்தத் தொடர் சாத்தியமானது ஆசிரியர் தி.முருகன் வைத்த நம்பிக்கையால் மட்டுமே. ஆண்டின் இறுதியை நெருங்கும்போது குங்குமம் கட்டுரைகளே ஒரு தொகுப்புக்கு தயாராக இருப்பது புரிந்தது. அப்போதுதான் மற்ற கட்டுரைகள் குறித்த நினைவு வந்தது. அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அவையும் தொகுப்பாக மாறும் சாத்தியம் புரிந்தது.

பெயரிடப்படாத புத்தகம்டிஸ்கவரி பதிப்பகத்தாலும், “உறவெனும் திரைக்கதைசூரியன் பதிப்பகத்தாலும் சென்னைப் புத்தக் காட்சிக்குத் தயார் நிலையில் இருந்தன. முதல் புத்தகத்திற்கு மிக எளிதாக டிஸ்கவரி வேடி ஏற்பாட்டில் வெளியீட்டு விழாக் கண்டுவிட்ட அனுபவம் உண்டென்றாலும், புத்தகக் காட்சி காலம் என்பதால் அது நேரடியாகக் களம் செல்லட்டும், புத்தக வெளியீட்டுக்கென மெனக்கெடவியாலது என்பதுள்ளிட்ட காரணங்களால் வெளியீடு குறித்து எதுவும் முடிவெடுக்கவில்லை.

முதல் புத்தகம் சென்னையில் வெளியிட்டபோதே இங்கே ஒரு உரிமையான முணுமுணுப்பு இருந்தது. ஈரோட்ல இருந்துட்டு ஏன் சென்னைல எனும் அந்த முணுமுணுப்பு. சென்னையில் வைத்தபோது ஈரோட்டில் இருந்து மூன்று பேர் மட்டுமே சென்றோம். வேறு யாரையும் சிரமப்படுத்தக்கூடாது என்பதற்காகவே சென்னைக்கு அழைக்கக்கூட இல்லை. ஏன் அழைக்கவில்லை என அன்போடு கோபித்தவர்களிடம் தன்மையாகவும் சொல்லியிருக்கிறேன். இந்த நிலையில் இந்த தடவையாச்சும் ஈரோட்டில்தானே என்ற கேள்விகளே ஆசையை விதைக்கத் துவங்கின. ஆனால் எங்கு எவ்விதம் யாரை வைத்து நிகழ்ச்சி நடத்துவது எனும் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அமைப்புகளாய் ஒன்றிணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் எனக்கென ஒரு நிகழ்ச்சியை நானே திட்டமிடுவது எளிதானதாக இருக்கவில்லை. இந்த நிலையில் சந்தித்த நண்பர் ஆரூரனிடம் புத்தகம் தயாராகுது... ஈரோட்ல வெளியீடு வைக்கலாமானு யோசிக்கிறேன் எனச் சொல்லி முடிக்கும் முன்பே... “செய்வோம்... நாங்க பார்த்துக்குறோம்என்றார்.

புத்தகம் வெளிவருவது குறித்த அறிவிப்பு செய்தபோதுகூட தயக்கத்தோடுதான் ஈரோட்டில் வெளியீடு திட்டம் இருப்பதாகச் சொன்னேன். நிகழ்ச்சி தேவையா இல்லையா என்ற குழப்பம் இல்லாமல் இல்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த நேரத்தில் இது ஈரோட்டில் தேவையெனத் தீர்மானித்தோம். விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கியது. வெளியில் இருந்து யாரையும் சிரமப்படுத்த வேண்டாம் எனும் நோக்கில் மாட்டுப்பொங்கல் தினத்தில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு ஈரோட்டில் உள்ளவர்களால், ஈரோட்டில் உள்ளவர்களோடுஎன்ற அடிப்படையில் விருந்தினர்களை முடிவு செய்தோம். ஒவ்வொருவரையும் அழைத்ததில் அன்பு சார்ந்த தனிப்பட்ட சில காரணங்கள் எனக்குண்டு.

இணையம் பாவிக்காத விருந்தினர்களுக்கு மட்டும் அச்சு அழைப்பிதழ் மற்றபடி மின் அழைப்பிதழ் மட்டுமே. நெருங்கிய நண்பர்களை தற்காலிகமாக ஒரு வாட்சப் குழுமமாக ஒன்று திரட்டினோம். அனைவருக்கும் மின் அழைப்பிதழ்களே அனுப்பப்பட்டன நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் 90% ஃபேஸ்புக், வாட்சப் மூலம் அழைக்கப்பட்டவர்களே. உண்மையில் இதையும் ஒரு பரீட்சார்த்தமான முறையாகவே செய்து பார்க்க விரும்பினோம். ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. வியாழன், வெள்ளி, ஆகிய நாட்கள் முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக நான் சென்னையில் இருந்தாக வேண்டிய நிர்பந்தம். ஆரூரன் உள்ளிட்ட நண்பர்கள் இங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டார்கள்.



நிகழ்வு தினம் தன் இயல்பான வேகத்தில் வந்து சேர்ந்தது. 10.30க்கு நிகழ்வு எனக் குறிப்பிட்டிருந்தாலும், மனதளவில் ஞாயிறு / மாட்டுப்பொங்கல் தினம் ஆகியவற்றால் நிகழ்வு துவங்க எப்படியும் 11 மணியாகிவிடும் என்றிருந்தது. ஆனால் 10.45 மணிக்கே நிகழ்வைத் துவங்க முடிந்தது.

முனைவர் தனபாக்கியம் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்ய, ஈரோடு இலக்கியச் சுற்றத்தின் பொருளர் அண்ணன் தாமோதர் சந்துரு வரவேற்புரை நிகழ்த்தினார். “பெயரிடப்படாத புத்தகம்நூலை நண்பர் ஷான் மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தி வைத்தார். உடன் நட்புகளின் சார்பில் erodekathir.com இணையதளத்தை பரிசாக அளித்தனர். கவிஞர். மோகனரங்கன்உறவெனும் திரைக்கதைநூலை பக்கெட் லிஸ்ட் திரைப்பட உதாரணத்தோடு அறிமுகப்படுத்தினார்.



மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் புத்தகங்களை வெளியிட, “பெயரிடப்படாத புத்தகம்நூலை அரிமா சங்க பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பெற்றுக்கொண்டார். “உறவெனும் திரைக்கதைநூலை செங்குந்தர் கல்விக் கழக செயலர் சிவானந்தன் பெற்றுக்கொண்டார். மூன்று பேரும் மிகச் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கினார்கள். நண்பர் ஆரூரன் நன்றியுரையில் நிகழ்விற்கு வந்திருந்த என் பெற்றோர்களை மேடைக்கு அழைத்து நெகிழ்ச்சியூட்டினார்.

சுமார் 150 பேருக்கும் மேல் கலந்து கொண்டவர்களில் இருபத்தைந்து ஆண்டு கால நட்பு முதல் இதுவரை பார்த்திடாத நட்பு வரை உண்டு. இப்படியான கலவையாகவே வருவார்கள் என்றே தீர்மானித்திருந்தேன். அவர்கள் அனைவரிடமும் பகிர என்னிடமிருந்த மிக முக்கியமான செய்தி, நிகழ்ச்சியை ஈரோட்டில் நடத்த விரும்பியதன் காரணம். வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு கட்டத்தில் என்னோடு பயணித்தவர்கள். மிக நெருக்கமாக ஒருவரையொருவர் அறிந்திருந்திருக்கிறோம். ஆனால் திடீரென எழுத்து, மேடை, புத்தகங்கள் என நான் வேறு இடத்திற்கு நகர்ந்திருப்பதாய் அவர்களும், நானும் நினைக்கலாம். அது மிக இயல்பாக நிகழ்ந்ததும் கூட. ஆனாலும் அவர்களிடம் நான் சொல்ல விரும்பியது, எனக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளிகள் இல்லை. அவர்களும் நானும் ஒன்றாக இருந்த காலம் தொட்டு, கண்டிருந்த அனுபவங்களும், புழங்கிய சொற்களும் ஏறத்தாழ சமமானவையே. நான் எனக்கென ஒரு வாய்ப்புக் கிடைத்தபோது காணும், நினைக்கும், யோசிக்கும் விசயங்களை எழுதப் பழகினேன். எழுத்து என்னைப் பிடித்துக் கொண்டது. அதுவே தொடர்ந்து என்னை எழுதப் பணித்தது. மனதிற்கு இசைவான அனுபவங்களை, அங்கீகாரங்களை, பயணங்களை, நட்புகளை அந்த எழுத்தே பெற்றுத் தரவும் செய்தன. இதை என்னோடு இருந்தவர்கள். இருக்கின்றவர்கள், அறிந்தோர்கள் அறிமுகமற்றவர்கள் என பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதன் வெளிப்பாடே அந்த வெளியீட்டு விழா.

அடுத்து ஈரோடு புத்தகக் காட்சியில் தமிழகத்தில் மிகச்சிறந்தவொரு இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றது. வாசிப்பு கூடிக்கொண்டே போகிறதென்றே நேர்மறையாக நம்புகிறேன். ஆனாலும் கூட ஈரோடு எனச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படைப்பாளிகள் வரவில்லை எனும் மனக்குறை எப்போதுமுண்டு. அதற்கு பலரையும் தூண்டும் ஒரு நிகழ்வாகவும் இந்த விழா இருக்க வேண்டுமெனக் கருதினேன். இந்த மண்ணின் கதை, இம்மக்களின் கதை, வாழ்வியல், வரலாறுகள் என எழுதித் தீர்க்க ஆயிரமாயிரம் உண்டு இங்கே. அரங்கில் இருந்த பலரிடமும் அதற்கான தகுதிகளுண்டு. ஆனால் எழுத ஏதேனும் ஒரு துவக்கத் தயக்கம் இருக்கலாம் என்பதே என் கருத்து.

இந்தப் புள்ளியில் அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பாகவே இந்த நிகழ்வைக் கருதினேன். அதனடிப்படையிலேயே “ஈரோடு வாசல்” எனும் வாட்சப் குரூப் மூலம் ஒன்று திரளும் காரியத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

நிகழ்வு நிறைவாய் நிறைந்தது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் தம் பிள்ளைகளோடு பலர் வந்திருந்தனர். வெளியூர் நட்புகளை பயணிக்க வைத்து சிரமப்படுத்த வேண்டாம் என்ற நினைப்பிலிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக பலர் தொலைவிலிருந்து வந்திருந்தனர். நிகழ்வில் குறிப்பிடத்தகுந்த ஒரு குழுமமாகஉள்ளத்தனைய உடல்குழுமம் பங்கெடுத்திருந்தது.

என்னுடைய கட்டுரைகள் குறித்து செல்ஃபி வீடியோக்களில் தம் கருத்தைத் தெரிவித்திருந்த நட்புகளின் வீடியோக்களை நான்கு பகுதிகளாகத் தொகுத்தளித்த தம்பி சரவணமூர்த்தி, ஆலோசனைகள் வழங்கிய மேயர் ஆபீஸ் நண்பர்கள், பதிப்பாளர்கள் டிஸ்கவரி வேடியப்பன், சூரியன் பதிப்பகம், குங்குமம் ஆசிரியர் கே.என்.சிவராமன், முன்னாள் முதன்மை ஆசிரியர் தி.முருகன், நிகழ்வில் கலந்துகொண்ட அண்ணன் தாமோதர் சந்துரு, கவிஞர் மோகனரங்கன், நண்பர் ஷான், சிறப்பு விருந்தினர்கள் திரு.ஸ்டாலின் குணசேகரன், அரிமா. தனபாலன், திரு.சிவானந்தன், நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த முனைவர் தனபாக்கியம், நினைவுப்பரிசுகள் வழங்கிய பாரதி புத்தகாலயம் இளங்கோ, நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்களிப்பு செய்த Thomascook Travels, ஜெயச்சந்திரா மில்ஸ், BCS Computers, நண்பர் முருகவேல், மிக நேர்த்தியாக நிழற்படங்கள் எடுத்துக் கொடுத்த நண்பர் சுரேஷ்பாபு, காணொளி பதிவு செய்த ஈரோடு சசி, அரங்கினை வழங்கிய செங்குந்தர் பள்ளி நிர்வாகம், மரக்கன்றுகள் இலவசமா வழங்கிய சத்தியசீலன் ஆகிய அனைவருக்கும் தீரா அன்பும் தெவிட்டாத நன்றிகளும்.

இந்த இரண்டு நூல்களின் பின்னால் இருக்கும் இதழ் ஆசிரியர் தி.முருகன் மற்றும்மனுசனால ஆகாதது ஒண்ணுமில்ல” எனும் தாரக மந்திரத்தைக் கற்றுக் கொடுத்த என் அம்மா ஆகிய இருவருக்கும் இரண்டு நூல்களையும் சமர்பித்ததில் மீண்டும்  மகிழ்வெய்துகிறேன்.

நம்பிக்கையைக் கூட்டியிருக்கும் ஒரு நிகழ்வின் முதல் படியாக இதைக் கருதுகிறேன்... பயணம் தொடரும். உடன் இருங்கள்!

எச்சூஸ்மீ மிஸ்டர் முதுமை!

மனிதர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை நடத்துவது குறித்து இருக்கும் பயம், ஒரு கட்டத்தில் மெல்ல தம் மீது படரும் முதுமை மீதானதாகத் திரும்பி விடுகிறது. முதுமையை எதிர்கொள்ள அவர்கள் வைத்திருக்கும் இரண்டு வழிகள், ஒன்று தனக்கு வயதாகிவிட்டது என்பதை அடிக்கடி ஒப்புக்கொள்வதன் வாயிலாக அதையொட்டி ஏதேனும் சலுகையோ, பரிதாபமோ தேடிக்கொள்வது. மற்றொன்று, பல்வேறுபட்ட ஒப்பனைப் பொருட்கள், ஆடைகள் மூலமாய் தன் வயதை மறைக்கப் பிரயத்தனம் எடுப்பது.

இந்த அனுதாபம் தேடிக்கொள்ளும் முயற்சி, தன் இயல்பான வேகத்தைக் கூட்டி முதுமையை நோக்கி அவர்களை இழுத்துச் சென்று விடுகிறது. அறிந்தோ அறியாமலோ அதையே திரும்பத் திரும்பச் சொல்வதால், அவர்கள் விரும்புவதும் அதுவாகவே அமைகின்றது. ஒப்பனைகள் மூலம் இளமையாக தங்களை உலகுக்கு மட்டுமே காட்ட முயல்வதும்கூட ஒருவித ஏமாற்றுதானே!?. அது தற்காலிகமாக தன்னம்பிக்கை தருவதாகத் தோன்றினாலும், திடீரென ஒரு புள்ளியில் எல்லாவற்றையும் சட்டெனக் கலைத்து விடுவதாக, முறித்துப் போடுவதாக அமைந்துவிடுகிறது. அதிலிருக்கும் போலித்தன்மையே ஒரு கட்டத்தில் மிகப் பெரிய ஒவ்வாமையக் கொடுத்துவிடுகிறது.

இந்த இரண்டிலும் ஆட்படாத வெகு சிலரின் செயல்பாடுகள் மட்டுமே - வயதை மறைக்க முயலாமல், அனுதாபம் தேடாமல் - தன்னைக் கவ்வும் முதுமையை எதிர்கொள்ள மனம் மற்றும் உடலளவில் ஆரோக்கிய வழியில் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாக இருக்கின்றன. அவர்கள் தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும் வயதை பொருட்படுத்தாமல் இருப்பதற்கான காரியங்களை மேற்கொள்ளத் துவங்குகின்றனர். இதன் மூலம் முதுமையை மறைப்பது அவர்களின் நோக்கமாக இருப்பதில்லை. முதுமையின் ஆளுமைக்கு எதிராகத் தங்களை வலுப்படுத்தி நிறுத்திக் கொள்வது மட்டுமே.

வயது கூடக்கூட இளமை தீர்வதையும்ம், முதுமை சேர்வதையும் மிக இயல்பாக நாம் உணர்கிறோம். நினைத்த மாத்திரத்தில் ஒரு இடத்தில் தாண்டிக் குதிக்கவோ, சட்டென ஒரு இடத்தில் ஏறிப் பார்க்கவோ, ஓடவோ, எதையேனும் இழுக்கவோ, தூக்கவோ தயக்கம் ஏற்படுகிறது. இப்படியான செயல்களைச் செய்கையில் உணரும் தடுமாற்றங்களை இளமை தீர்வதற்கான அறிகுறி எனக் கொள்கிறோம். ஆனால் எல்லாமுமே பயிற்சியில் சாத்தியம் என்பதையும், தொடர்ந்து பழகுவதை நிறுத்தும்போதுதான் பெரும்பாலும் அது இயலாததாக மாறுகிறது என்பதையும் மறந்து விட்டதும் இம்மாதிரியான முடிவுக்கு ஒரு காரணம்.





ன்னுடைய இளம் பருவம் முழுவதும் கிராமத்தில் - அதுவும் விவசாய நிலத்தில் இருந்ததால், எல்லாக் காலமும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உழைப்பைச் செலுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம் இருந்தது. பல சமயங்களில் ஆர்வத்தினாலும், சில நேரங்களில் நிர்பந்தத்தினாலும், விவசாயப் பணிகளில் ஈடுபடுவோருடன் இணைந்து சரி சமமாக நின்று கடினமான உடல் உழைப்பு வேலைகளைச் செய்த அனுபவம் உண்டு. கிராமங்களில் எல்லா வயதினரும் தங்களால் இயன்ற அளவு உழைத்தே தீர வேண்டிய நிர்பந்தம் இயல்பாகவே அமைந்த ஒன்று.

ஒரு கட்டத்தில் காலம் நகர்ப்புற வாழ்க்கைக்கு நகர்த்துகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பிள்ளையின் கல்வி எனும் காரணங்களை முன்வைத்து முழுதாய் நகரத்தின் பிடிக்குள் பிணைத்துக் கொண்டாயிற்று. எல்லாவிதமான பசபசப்புகளோடு நகரமும் தனக்குள் பிடித்து வைத்துக் கொண்டது. நகரம் வேறு மாதிரியான சுழற்சியை மிக சீக்கிரத்தில் கற்றுக் கொடுத்து விட்டது. வெயில் ஒத்துக் கொள்வதில்லை. மழை சிரமம் கொடுக்க ஆரம்பித்தது. குளிர் ஒவ்வாமையைக் கொண்டு வந்தது. இரவு பகல் எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

பின்னிரவுப் பொழுது வரை ஊரும், வீடும் அடங்குவதில்லை. ஒன்பது மணிக்குள் ஒரு தூக்கம்தூங்கி விடுவோம் என்றிருந்த நிலை மாறி, ’சராசரியாக பத்து முதல் பதினொரு மணிக்குள் தூங்கினால் போதும்என்ற மனநிலையைத் திணித்து விட்டது. விடியல் ஐந்து மணியாக இருந்த காலம் மாறி, ஏழு மணிக்கு எழுவதொன்றும் ஆச்சரியமானதாக இல்லை. சில வீடுகளில் பிள்ளைகள் எழுந்து, குளித்து, உடையணிந்து, உணவு உண்டு பள்ளிக்குக் கிளம்பும் நேரத்திலும்கூட தந்தைகள் கூச்சமற்றுத் தூங்குவதை வெகு எளிதாகக் காணவியலும்.

நகரம் தந்திருக்கும் இன்னொரு மாய வாய்ப்பு, ஓய்வுக்கும் உழைப்பிற்கும் வித்தியாசம் இல்லாதது போன்றதொரு வாழ்க்கை முறையை அனுமதித்திருப்பது. வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என வாழ்க்கை சுருங்கச் சுருங்க, சொகுசு கூட ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பே இல்லாமல், உணவில் நேர்த்தி இல்லாமல், உறக்கத்தில் ஒழுங்கு இல்லாமல் ஒவ்வொரு வயதாகத் தீர்க்கும்போது, இரண்டு மடங்காய் உடல் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் அச்சம் எழுகிறது. விளைவாகஇனிமேலாச்சும் எதாச்சும் செய்யனும்எனும் வரியை, ஆசையைச் சொல்ல ஆரம்பிக்கின்றோம். ஆனாலும் அப்படி எதாச்சும் செய்வது” ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அப்படி எதாச்சும் செய்யணும்’ என்ற முயற்சியில்தான் உடற்பயிற்சிக் கூடம் செல்வது, யோகா கற்றுக்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, மிதிவண்டி ஓட்டுவது உள்ளிட்டவை தொடங்குகின்றன. இப்படியானவற்றைச் செய்யத் தொடங்கியவர்களில், தொடர்கிறவர்களைவிட கைவிட்டவர்களே மிக அதிகம் என்கின்றது வரலாறு.

தினசரி மதுபானக் கடைகளைத் தேடிச்சென்று, வரிசையில் நின்று, காசு கொடுத்து மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைவிட, காலைப் பொழுதில் விரைந்து எழுந்து, குறைந்தபட்சம் உடலுக்காக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எத்தனை வரி விதித்தாலும், விலையேற்றம் நிகழ்ந்தாலும், அது குறித்துக் கவலைப்படாமல் புகைப்பதில் மாயச் சுகம் உணர்பவர்களைவிட, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களுக்கு கவனம் கொடுப்பவர்களும், செலவு செய்பவர்கள் மிகக் குறைவுதான்.

எதைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்எனக் கேட்பது எத்தகையதொரு நகைமுரண். ஒவ்வொரு முறையும் இரண்டரை அங்குல நாக்கு இன்னும் இன்னும்எனக் கேட்டு விடுகிறது. வருத்தப்பட்டு பாரம் சுமப்பதென்னவோ வயிறுதான். நாக்கின் அடிப்பகுதியைக் கடந்து விட்டால் ருசியை நாம் அறிவதில்லையெனும் தெளிவு வந்துவிட்டாலே, பசி தணிந்த பிறகும் ருசி தூண்டுகிறதே என்பதற்காக உணவுப் பண்டங்களை வயிற்றில் திணிப்பது குறைந்துபோகும்.

திரைப்படம், தொலைக்காட்சி, இணைய அரட்டைகள் என இரவுகளைக் கருணையின்றி கரைப்பது ஒரு வியாதியாகிப் போய்விட்டதுஅவையனைத்துமே சொல்லொணாச் சுகம் தரும் அடங்காப் போதையூட்டிகள். அந்தச் சுகமும், போதையும் நம்மைக் கிறங்கடிப்பவை. போகப்போக கூடுதல் அழுத்தத்தையும், அதிலிருந்து அச்சத்தையும் ஊட்டுபவை. ஆழ்ந்துபோய் சிக்கிவிட்டால் ஒருபோதும் அவை தம் அரக்கப் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க விரும்புவதில்லை.

முதுமையும், முதிர்வும் காலத்தின் கட்டாயம். அதை எவ்விதமும் மறுப்பதோ, புறக்கணிப்பதோ இயலாத ஒன்று. அதை அதன் போக்கில் அனுமதிப்பதென்பது எவ்வகையிலும் தவறானதோ, குற்றமானதோ இல்லை. ஆனால் அதை நம் சோம்பல், உணவுப் பழக்கம், வேறு ஒவ்வாத பழக்கம் ஆகிய காரணங்களினால் முன்கூட்டியே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதென்பது எந்த வகையில் நியாயமாகும்!?.

பொதுத்துறை நிறுவனமொன்றில் பணியாற்றும் என் நண்பரின் மேலதிகாரி ஓய்வு பெறும் வயதை நெருங்கி விட்டவர். ஆனால் ஒருபோதும் முதுமை ஆளுமை செய்வதை அனுமதிக்காதவர். ஆம், இன்றளவும் அவர் தினசரி 35 கி.மீ தூரம் ஓடுகிறார். அதுவும் காலணிகளின்றி வெறும் கால்களில். இளமையாக, திடகாத்திரமாக இருக்கும் பலரும் அருகிலுள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனங்களைப் பயன்படுத்தியே தீருவேன் என்ற அளவிற்கு சோம்பியிருக்கும் இக்காலத்தில் அறுபதுகளை நெருங்கும் ஒருவர் வெறும் கால்களில் தினந்தோறும் ஓடுகிறார் என்பது, பத்தோடு பதினொன்றெனக் கடந்து போகும் செய்தியன்று.

வயது கூடுவதை அனுபவிக்க நாம் கம்பீரமானதொரு உடலைத் தயாரித்து வைத்துக் கொள்வது எதனினும் முக்கியமானது. உடல் மீது நாம் செலுத்தும் எந்த வன்முறையையும் உடனடியாக உடல் புறந்தள்ளி விடுவதில்லை. ’இதில் ஏதேனும் நியாயங்கள் இருக்குமாஎன ஆராய்கின்றது. ஏதேனும் இருப்பின் ஏற்றுக்கொள்ள முனைகின்றது. ‘முடியவே முடியாது, கூடவே கூடாதுஎன்பதைத்தான் புறக்கணிக்க முடிவு செய்யும். முதலில் முரண்டு பிடிக்கும், பின் ஒத்துழைக்க மறுக்கும், இறுதியாக எச்சரிக்கை செய்யும், அதையும் மதிக்காவிட்டால் சிதைவைத் தொடங்கும்.

வழங்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையைச் செலுத்தும் லகான் பெரும்பாலும் நம் கைகளிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அதை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் மனமும், உடலும் நம்மோடு ஒத்துழைக்கும்.

உடலினை உறுதி செய்திட உதவும் செயல்களைத் தொடர்வோம். அப்படியேதும் இல்லையெனில் இப்பொழுதே ஏதேனும் ஒன்றைத் தொடங்குவோம். அதை புத்தாண்டின் உறுதிமொழியாய் பழகுவோம்.

இப்போதும், எப்போதும் உறுதியாக நம்புவது.... ‘நம்மால் இயலும்’!

-

நம்தோழி ஜனவரி 2017