இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!

பொதுவாகவே மனிதர்கள் வாய்ப்புக்கிடைக்கும் தருணங்களில் சக மனிதர்கள் குறித்து மீது ஏதேனும் ஒரு காரணத்தை முன் வைத்து புகார் சொல்பவர்களாவே அறியப்படுகின்றனர். தமக்கு சமமாக இருக்கும் மனிதர்களின்பால் அப்படியான புகார்கள் இருப்பதொன்றும் பெரும் ஆச்சரியம் தருவதில்லை. ஆனால் நாற்பது முதல் அறுபதுகள் வரை வயது கொண்டோர் தற்போது அடுத்தடுத்த தலைமுறைகளாக இருக்கும் பதின் பருவம் மற்றும் இருபதுகளில் இருப்போர் மீது ஏன் கை நிறைய புகார்களை வைத்துகொண்டு போகுமிடமெல்லாம் பரிமாறுவதை பல தருணங்களில் பாத்திருப்போம். என்ன வகையான புகார்கள் என்பவை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தப் புகார்களைக் கடந்து அவர்களிடம் கற்றுக்கொள்ள நமக்கு எதுவுமே இல்லையா எனும் கேள்விக்கான விடைதேட ஆரம்பித்தால் வேறொரு உலகம் நமக்கு வசப்படும்.

ஒருதலைமுறையினரை குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டவிடாமல் வைத்திருந்த சில வெற்று நம்பிக்கைகளையும், காரணமற்ற கட்டுப்பாடுகளையும், தேவையற்ற திணிப்புகளையும் எளிதில் கேள்விக்குட்படுத்தும் தலைமுறையினராக அவர்கள் இருப்பதுவே பல நேரங்களில் அவர்களிடமிருந்து முரண்பட வைக்கின்றது என்பது அவர்கள் பிழை மட்டுமே அல்ல.

இந்த முரண்பாடுகள் முளைக்கும் தருணங்களில், தம்மோடு இணக்கமாக உரையாடி புரிதலை ஏற்படுத்த முனையும் மூத்த தலைமுறையோடு எளிதில் ஒட்டிக்கொள்கின்றனர். அவர்கள் குரல் இவர்களின் செவிகளில் நுழைகின்றது. அதேசமயம்நாங்கள் சொல்வது மட்டும்தான் சரிஎனும் தலைமுறையோடு அவர்கள் பெரிதாக பிணக்கு எதுவும் கொள்வதில்லை, மிக அமைதியாகப் புறக்கணிக்கின்றனர். சப்தமின்றி அறைக்கதவையும், மனக்கதவையும் மூடி தாழிட்டுக்கொள்கின்றனர். அமைதியான புறக்கணிப்பு என்பதைப் பழக்கப்படாத மூத்த தலைமுறை இயல்பாகவே பதட்டம் கொள்கின்றது.

இப்படியாக பதட்டமடையும் தலைமுறையினரிடம் நான் தன்மையாக எடுத்துச் சொல்வது, முதலில் பதட்டத்தைக் குறையுங்கள் என்பதைத்தான். அப்படிச்சொன்னது, இயல்பாகவே இந்த வயதில் பதட்டம் வருகின்றது என்கின்றனர். புன்னகையோடு அவர்களிடம் வலியுறுத்தலாகச் சொல்வது, இந்த வயதில் பதட்டம் கொள்ளாதீர்கள் என்பதைத்தான்.




இந்த உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டேயிருக்கின்றது. இந்த உலகத்தில் உள்ளவைகளும், அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. அப்படி தகவமைக்கும் தன்மை கொண்ட எதுவும் முற்றிலுமாக வீழ்ந்துவிடுவதில்லை. மனித குலத்தின் மிகப் பெரிய சிறப்பம்சமாக நான் உணர்வது அப்படியான தகவமைப்புத் தன்மையை தன்னில் கொண்டிருப்பதுவே.

ஆகவே, தம்மிடம் இருக்கும் அளவுகோல்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ‘இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!’ என ஆரம்பிக்கத் தேவையில்லை. முந்தைய தலைமுறைகளும் இதே சொற்களை வெவ்வேறு வடிவங்களில் ஒருகட்டத்தில் பயன்படுத்தியிருக்கும் சாத்தியமுண்டு.

ஒருதலைமுறையில் மிக மிகக் கடினமாக இருந்தவொன்றை இன்னொரு தலைமுறை நொடிப்பொழுதுகளில் மிக எளிதாக கையாள்கின்றது மறுக்க முடியாத நிதர்சனம். பல தருணங்களில் நான் சொல்லும் உதாரணம் ஒன்றை இங்கு சுட்ட விரும்புகின்றேன். ஒருகாலத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்காக சில மணி நேரம் வரிசையில் நின்றிருந்தது இன்றும் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இன்று மொபைல் ஃபோன் ரீசார்ஜ் என்பது சில நொடிகளில் அந்த மொபைல் வழியாகவே நடந்துவிடுகின்றது. இதுபோல் அன்று-இன்று எனப்பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டேயிருக்கும். இந்த இரண்டு அனுபவங்களையும் தம் முதல் அனுபவமாக உள்வாங்கும் இருவேறு தலைமுறைகளுக்கான மன இடைவெளிதான் முரண்பாடுகளுக்கான முதல் விதையாக இருக்கின்றது.

எதுவும் அதற்கான நிதானத்தோடும், பொறுமையோடும்தான் நிகழ வேண்டும் என்பதை தம் கொள்கையாக வைத்திருப்போருக்கும், உடனே நிகழும் சாத்தியங்களை கைக்கொள்வோருக்கும் இடையே இடைவெளியொன்று இருந்தே தீரும் என்பதை புரிந்துகொள்ளும் பொறுப்பு யாருக்கு அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டால் போதும்.

நான் கண்ட வரையில் இளம் தலைமுறை முன் தீர்மானத்தோடு இருப்பதில்லை. தம் கோபத்தை நீண்ட நேரம் வைத்து வளர்த்துக்கொண்டிருப்பதில்லை. தம் தேவைக்குயாரும் எதும் சொல்லிடுவாங்களோஎனத் தேவையற்ற பயம் கொண்டு தயங்கிக் கொண்டிருப்பதில்லை. கால மாற்றத்தில் கிடைக்கும் அனைத்துப் புதிய மாற்றங்களுக்கும் பொருந்தும் தன்மையுடையவராக இருக்கின்றனர். உறவுகள் பேணுவதில் தேவையற்ற பசப்புத் தன்மையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கும்.

அப்போ அவர்களிடம் குறைகளே இல்லையா எனும் கேள்வி எழுந்தால் தயவுசெய்து முதல் மற்றும் இரண்டாவது பத்திகளை இன்னொரு முறை வாசிக்க  அன்போடு வேண்டுகிறேன்.

இளம் தலைமுறைகள் குறித்த பதட்டங்களிலிருந்து மீள்வதற்கு நான் பாவிக்கும் முறை, அவர்களின் உலகத்தை அறிந்துகொள்ள முற்படுவதே. அதை அத்தனை எளிதில்லை என்றாலும் தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பது மிகவும் தேவையான ஒன்று.

இணைந்து இனிதே பயணிப்போம்!

பலரை இழிவு செய்து உணர்த்தப்படும் மனிதாபிமானம் கொடூரமானது

சிலருக்கு இந்தப் பதிவு பிடிக்காமல் போகலாம். அவர்கள் மனம் அமைதியுற முன்னதாகவே வேண்டிக்கொள்கிறேன்.

* மதுரையிலிருந்து இரவில் காரில் பயணம் துவங்கவுள்ள நிலையில் மகள் கழிவறை செல்ல வேண்டுகிறாள். அனுமதிக்க மறுத்து தந்தை அழைத்துச் செல்கிறார். வழியில் மிக மோசமான விபத்தைச் சந்திக்கிறது அந்தக் கார். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். அம்மா மற்றும் ஓட்டுனருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மற்ற யாருக்கும் எந்த முதலுதவிகூட அளிக்கப்படவில்லை. ஆபத்தான நிலையில் இருக்கும் அம்மாவை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருக்கும் மருத்துவர் பணிக்கிறார். சுமார் காலை 8 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்து புறப்படுகின்றனர். வழியில் உடல் நிலை மோசமடைகின்றது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுகின்றது. தாய் இறந்து போகிறார். மீண்டும் ஆம்புலன்ஸ் மதுரை நோக்கி புறப்படுகின்றது. அவர் இறந்ததை உறுதிப்படுத்த வழியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையை அணுக, அங்கிருக்கும் மருத்துவர் உறுதிப்படுத்துகிறார். அப்போது அந்தப் பெண் உதவிசெய்ய வந்த நாயகனிடம் இந்தியில் 'கழிவறை எங்கு இருக்கு?’ என்று கேட்கிறார்.
* தீபாவளி தினத்தில் காலை 11 மணி சுமாருக்குத்தான், C2 பெருங்குடி காவல் நிலையத்தில் மாமூலாக வந்த ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரிக்கப்படுகின்றன. பிணம் ஒன்றினை விமானத்தில் நேரடியாக அனுப்ப முயன்ற ஒரு கும்பலை விசாரிக்க வேண்டிய சூழலில் கைதி ஒருவரை ஆடிப் பாடவிட்டதோடு காவல்நிலையத்தையே ஆடவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
* உடற்கூறாய்வு முடிந்து உடலை ஒப்படைக்கும்போது பிணவறை ஊழியர் ”தீபாவளி பார்த்துக் கவனிங்க!” எனத் தலையைச் சொறிகிறார். நாயகனிடம் காசு இல்லை, நாயகனின் நண்பனிடமும் காசு இல்லை, அம்மாவின் சவத்தின் முன்னே குழந்தை உண்டியலை உடைத்து காசை அள்ளிக்கொண்டு வந்து தர, அந்த ஊழியர் அதை அப்படியே இரண்டு கைகளாலும் வாங்கிக் கொள்கிறார்.
Ayothi (அயோத்தி) திரைப்படத்தில்தான் மேலே குறிப்பிட்ட காட்சிகள் வருகின்றன.
** குறிப்பிட்ட முதற்காட்சியில் இரவில் ரயில் நிலையத்திலிருந்து காலை சுமார் ஒன்பது மணி வரைக்கும் அந்தப் பெண் சிறுநீர் கழிக்காமல் (சாட்சிக்கு... அப்பா முந்தையை இரவில் மகள் கேட்டதை நினைத்துப் பார்க்கிறார்) இருந்திருக்கிறார் என ஒருவேளை உணர்த்த முயன்றதாக இருந்தால் அது இயல்பான சென்டிமென்ட் வகை அல்ல, அந்தப் பாத்திரத்தின் மீது கொடூரமான பச்சாதாபத்தை திணிக்க முற்படும் வக்கிரமான சென்டிமென்ட் மட்டுமே!
** தீபாவளி தினத்தன்று காவல் நிலையத்தில் ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரித்தல், இன்ஸ்பெக்டர் கொளுந்தியாவுக்கு பங்கு, கைதியை அழைத்து காலை நேரத்தில் ஆடிப்பாட விடுவதெல்லாம் எதன் பொருட்டு இந்தக் கதையில்? தன்னை அடித்துவிட்டதாக ஒரு கம்பவுண்டர் புகார் தெரிவித்த பிறகும், எந்த அலைக்கழிப்பு இல்லாமல் தங்கள் கடமையை(!) காவல்துறை செய்ததுதானே. 04.11.2021 காலகட்டத்திலும் சிக்கலான ஒரு கேஸ் தொடர்பான ஐந்து பேரையும் காவல் நிலையத்தில் அமர வைத்துக்கொண்டே இன்ஸ்பெக்டர் அந்த ஆட்டம் போடுகிறார் என்பதன் மூலம் இயக்குனர் சொல்ல வருவது என்ன?
** பிணவறை உள்ளிட்ட சில இடங்களில், ஊழியர்கள் 'பார்த்து செலவுக்கு கொடுங்க!’ என்று தலை சொறிவதோ அல்லது சில இடங்களில் வற்புறுத்தி வாங்குவதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதுதான். ஆனாலும் அம்மாவின் பிணத்தின் முன்னே உண்டியலை உடைத்து கைகளில் பணத்தை அள்ளிக்கொண்டு வந்து ஒரு குழந்தை கொடுப்பதை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொள்ளும் அளவுக்கு அவர்களெல்லாம் மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருக்கவே மாட்டார்கள். இந்தக் காட்சியை வைக்க எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் வேண்டும்!
2011ம் ஆண்டில் எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்' எனும் உண்மைச் சம்பவ பதிவில் திரு.சாமுவேல் ஜோதிக்குமார், திரு.சுரேஷ்பாபு ஆகியோர் செய்த உதவியை அடிப்படையாகக் கொண்டுதான் (களவாடி) திரைக்கதை அமைத்துள்ளனர். (பதிவு இணைப்பு முதல் பின்னூட்டத்தில்)
அந்தப் பதிவைப் படிக்கும்போதே மனம் கனத்துப்போகும், கண்ணீர் துளிர்க்கும். அதில் பின்னூட்டமிட்ட பலரும் அந்த மனிதநேய உதவியில் நெகிழ்ந்துருகியிருக்கின்றனர். யாரென்றே அடையாளப்படுத்தப்படாத வினோத் ஸ்ரீவத்சவா குடும்பத்திற்கு சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ்பாபு ஆகியோர் பலவகைகளில் முயன்று உதவிவிட்டு, “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனது எத்தனை உருக்கமானது!
குறிப்பாக இந்த நிகழ்வுகள் //“நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர் சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்குமேல் விருந்தினர்கள் செல்லமுடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.//
படத்தின் நோக்கம் என்ன...?
மொழி தெரியாத இடத்தில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, கடும் இழப்பைச் சந்திக்கும்போது மனித நேயத்தோடு உதவ வேண்டும்... இதைத்தானே படம் வலியுறுத்துகின்றது.
அந்தக் குடும்பத்தலைவனை அநியாயத்திற்கு வில்லன் ஆக்காமல், படம் நெடுகிலும் கம்பவுண்டர், இன்ஸ்பெக்டர், பிணவறை ஊழியர், மருத்துவக்கல்லூரி டீன் வீட்டு செக்யூரிட்டி, ஏர்-கார்கோ ஆபிஸர் என்று அத்தனை பேரையும் அல்பமான மனிதர்களாக்காமல் அந்தப் பதிவில் கடத்திய உணர்வை காட்சிப்படுத்தலில் சிறப்பாக கடத்திவிட முடியாதா என்ன?
இலங்கையில் நான் பாஸ்போர்ட் தொலைத்தபோது, விமான நிலையை காவல் நிலையத்தில் இருந்த ஒரு சிங்களக் காவலர் தன்மையோடு அனைத்து உதவிகளையும் செய்து, செல்ஃபோன் எண் கொடுத்து மேலும் உதவிகள் தேவை என்றால் அழையுங்கள் என்றார். கொழும்பு இந்திய தூதரகத்தில் காவல் பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒரு மத்திய படை காவலர் மிகுந்த அன்போடும் கனிவோடும் என்னிடம் நடந்துகொண்டார். கோரோனா காலத்தில் மாவட்டம்விட்டு மாவட்டம் தாண்ட முடியாத கெடுபிடி இருந்தபோது, மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கொல்கத்தாவில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் தனிப்பட்ட முறையில் ரிஸ்க் எடுத்து ஒரு ஐபிஎஸ் அதிகாரி அனுப்பி வைத்தார். மனிதர்களிடமிருந்து மனிதம் அப்படியொன்றும் மங்கிப்போய்விடவில்லை.
இந்தக் கதை முற்றிலும் கற்பனையாக இருந்திருந்தால் மனம் உருகி அடடா என்றிருக்கலாம். இப்போதும் மனம் உருகாமல் இல்லை.
’மொழி தெரியாத இடத்தில் இழந்து தவிப்போர்’ குறித்து சசிக்குமார் இரண்டு முறை பேசும் வசனம் அத்தனை தரம். எவரையும் உலுக்கக்கூடிய ஒன்று. அந்த மகள் பாத்திரத்தில் மிகச் சிறப்பானதொரு நடிப்பின் மூலம் அந்தப் பெண் வென்றெடுக்கிறார். மேலோட்டமாக ரசித்துக் கடக்க வேண்டுமென்றால் நல்ல படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நடந்தவை நடந்தவிதமாக மட்டுமே இருந்து, திணிப்பு காட்சிகளும் செயற்கையான சென்டிமென்ட் காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் தரமான உலகப்பட வரிசையில் வைக்க வேண்டிய கதைதான்.
ஆனால் உண்மைச் சம்பவம் ஒன்றின் வழி நெடுகிலும் மனிதர்களைக் கோரமாக்குவதன் நோக்கம் மட்டும் புரியவேயில்லை. ஒரு மனிதாபிமானத்தை உயர்த்திக்காட்ட பலரை இழிவு செய்யும் உள்நோக்கம் மிகக் கொடூரமானது.

யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி - Iratta


Iratta - மலையாளம் (Spoiler Alert)
படம் பார்த்த பலருக்கும் இறுதிக்காட்சியின் அதிர்ச்சி மிகக் கனமானதாக இருப்பதாக உணர முடிகின்றது.
அது 'எது’ சார்ந்த அதிர்ச்சி என்பது குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
வழக்கமான மலையாள த்ரில்லர் வகை. DySP பிரமோத் - ASI வினோத் ஆகிய இரட்டையர் பாத்திரங்களிலும் ஜோஜு ஜார்ஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்பதையெல்லாம் சொல்ல வேண்டிய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார்.
மாலினியாக வரும் அஞ்சலியின் மீள் வருகை, அஞ்சலிக்கு இனி வாய்ப்புகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது.
மற்றபடி த்ரில்லர்கள் முடிக்கும்போது அவ்வளாக தொடர்பில்லாத, எதிர்பாராத ஒன்றில் கொண்டு வந்து முடிப்பார்கள். இதில் சற்றும் எதிர்பாராவண்ணம் சுருக்கென தைக்கும் ஒரு புள்ளியில் முடித்திருக்கிறார்கள். அந்தப் புள்ளிதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

”நான் பேசி முடிக்கும்வரை போன் கட் பண்ணிடாதே, 17 வருசம் ஆகிடுச்சு. எல்லாத் தப்பும் என்னோடதுதான். அதோட கணக்குவழக்கு எதும் வச்சுக்கல. மகள டிவில பார்த்துட்டு இருக்கேன். கம்பீரமா இருக்கா. உங்க ரெண்டு பேரையும் பார்க்கனும். அவகிட்ட என்னைப் பத்தி சொல்லிவை. அவளோட அப்பன் உயிரோட இருக்கானு தெரியும் உரிமை அவளுக்கு உண்டு” என பிரிந்துசென்ற அதுவரை பேசாதிருந்த மனைவியிடம் வேண்டும் பிரமோத்துக்கும்...

ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில், மகளுடன் சந்திக்க வருகிறோம் எனச் சொல்லும் அதே மனைவிடம் “வர வேண்டாம். மகள்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம். அவள் என்னோட முகத்தைப் பார்க்க வேண்டாம். இனி எப்பவும் என்னைக் கூப்பிட வேண்டாம்.” என உறுதியாக, இறுதியாகச் சொல்லும் பிரமோத்துக்கும்...

இடைப்பட்ட தருணத்தில் அறிய வந்ததுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

*

காவல் நிலையத்தில் உடன் பணிபுரியும் இரண்டு பேரின் வாழ்விலும் வினோத் செய்தது, செய்ய முனைந்தது மற்றும் பினீஸ் சொல்லும் அந்த லாட்ஜ் நிகழ்வு அனைத்தும் வழக்கமான சினிமா வில்லன் செய்வதுதானே!

வினோத் பிரமோத்தின் மனைவி மற்றும் கைக்குழந்தையாக இருக்கும் மகளை எந்த உணர்வுகளுமற்றவனாகச் சந்திக்கிறான். பிறகு பிரமோத்திடமே எள்ளி நகையாடுகிறான்

மாலினியின் பிரச்சனையில் அவள் ‘அழகான பெண்’ என்பதற்காகவே தானே வலிய வந்து உதவுகிறான். அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து வரும் நோக்கம் மற்றும் அந்த முதல் ’முயற்சி’யையும் நாம் அறிந்தே இருக்கின்றோம்.

இவை யாவும் ‘வில்லன்’ எனப்படும் வினோத் மீது வெறுப்பை, கோபத்தை, எரிச்சலை உண்டாக்கவே செய்தன.

இதன்பிறகு, வரும் காட்சிகளில்...
மும்பையில் பிரமோத் மனைவி-மகளைச் சந்தித்துவிட்டு திரும்பும் முன், சந்திப்பில் குழந்தைக்கென்று சில பொருட்களை வாங்கித் தந்துவிட்டு வருகின்றான்.

அந்த முதல் ‘முயற்சி’யால் மிரண்டோடும் மாலினியை தேடி அழைத்து வருகிறான். வேறொரு முகம் காட்டுகிறான். அவள் வேலை செய்யும் அங்கன்வாடி வகுப்பறையைக் கூட்டிவிடுகிறான். புடவை வாங்கித் தருகிறான். நெகிழ் மனதோடு தம் வாழ்க்கை முழுவதும் அழுக்கு என ஒப்புதல் தருகிறான். முன்பாக ஒரு மான்டேஜ் பாடல் உண்டு.

இவைகளுக்குப் பிறகு, அதுவரை வினோத் மீதிருந்த வெறுப்பு, கோபம், எரிச்சல் தணியவே செய்கின்றன.

அவனை அவன் கீழ்மைகளோடு ஏற்க(!) மனம் துணிகின்ற தருணத்தில்தான், அந்த க்ளைமாக்ஸ்.
பொதுவாகவே, எந்தவொரு குற்றமும், யாருக்கோ எனும்போது ஒரு மாதிரியும், தன்னைச் சார்ந்தவர் எனும்போது வேறொரு மாதிரியும் வடிவம் பெற்றுவிடுகின்றது. அதுதான் வினோத்திற்கும்!

ஆனால், மூன்றாவது துப்பாக்கிக் குண்டில் அங்கே செத்தொழிவது வினோத்தாக இருந்தாலும், செத்தொழிய வேண்டியது, 'யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி!’ என்றிருக்கும் எல்லா மனநிலைகளும்தான்.

போதைப் பழக்கத்தால், பணி அழுத்தத்தால், மன உளைச்சலால் என ஏதோ ஒரு காரணம் சொல்லி முடித்துவைக்கப்படும் தற்கொலை வழக்குகளின் பின்னே உண்மையில் இருக்கும் காரணங்கள் யாரும் அறியாத, யாரும் தாங்கவியலாத அளவுக்கு கொடூரம் நிறைந்ததாகவும்கூட இருக்கலாம்.
*

'நான் இருக்கேன் என்னை நம்புங்க’ எனும் அஸ்திரங்கள்

வங்கியில் ஒரு வேலையாகக் காத்திருந்தேன். எனக்கும் அடுத்த இருக்கையில் ஓர் இளம் தம்பதி. நடப்பு வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் நகைக்கடன் பெறுவது தொடர்பாக அந்த தனியார் வங்கி ஊழியருடன் உரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

நகைக்கடனுக்கு வட்டி எவ்வளவு என மனைவி கேட்டபோது 9.25% எனச் சொல்கிறார் ஊழியர். உடனே IOBயில் எவ்வளவு எனக் கேட்க, அந்த ஊழியர், வங்கி அதிகாரியை அழைக்கிறார். வந்தவர் ”IOBல சரியாத் தெரியல, அநேகமா 8.9%ஆக இருக்கலாம். இப்ப ரெப்போ ஏத்தினதால அங்கே கூடியிருக்கும், எங்க பேங்க்ல மாறலஎன்கிறார். கூடுதலாக அது கவர்மெண்ட் பேங்க், சர்வீஸ் எப்படியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்!என்கிறார்.

அங்கேயும் நெட்பேங்கிங் ப்ளஸ் எல்லா சர்வீஸும் இருக்கேஎன அந்தப் பெண் கேட்க, வங்கி அதிகாரி ஒருமாதிரியாக சமாளிக்கிறார். மீண்டும் அந்தப் பணியாளருடன் அவர்கள் தொடர்கின்றனர்.

ஊழியர் 'வெல்த் அக்கவுண்ட்' என்று விளக்கிக் கொண்டிருக்கிறார். கணவர் ஒற்றைக்காலில் நின்றபடி இங்கு கவனம் செலுத்தாமலேயே இருக்க, மனைவியுடன் மட்டுமே உரையாடல் மேற்கொண்டிருந்தார்.

சில நிமிடங்களுக்குள் என்ன வேலை பார்க்கிறீங்க? எங்கே, WFHல் இருக்கும் சாதக, பாதகம் குறித்தெல்லாம் உரையாடலை நகர்த்தி, அந்தப் பெண்ணை அடிக்கடி சிரிக்க வைத்து, இடையிடையே 'வெல்த் அக்கவுண்ட்' குறித்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்.

ஒருகட்டத்திற்குப் பிறகு ஏதோவொரு சமரசத்திற்கு அவர்கள் வந்தததுபோல் தோன்றியது. கடைசியாக அவர் நான் இருக்கேன் மேடம்.... நான் எல்லாம் பார்த்துக்குறேன்... என்னை நம்புங்க... ஒரு கவலையும் வேண்டாம்!எனும் அஸ்திரத்தைப் பயன்படுத்தியபோதுதான், அந்தப் பணியாளரை உற்றுப்பார்த்தேன். பார்த்த கணத்தில் என்னையுமறியாமல் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது.

பொதுவிடத்தில், நமக்குத் தொடர்பில்லாதவற்றில் அப்படியான சிரிப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும் அந்த ஊழியர் பயன்படுத்திய அந்த அஸ்திரம் செய்த பாவம் அது. என்னுடைய சிரிப்பைக் கவனித்துவிட்ட அவர் என்னை நோக்கி புருவத்தை உயர்த்தியபடி சார்என்றார்.

ஒண்ணுமில்ல!என்றேன்

இல்ல சார் பரவாயில்ல சொல்லுங்க!

நீங்க தல ஃபேனா, தளபதி ஃபேனா!?”

ஏன் சார்... திடீர்னு கேக்குறீங்க... தளபதி ஃபேன்

அப்படியா.... வாரிசு பார்த்திருப்பீங்க.... எதுக்கும் நேரம் கிடைக்கும்போது துணிவு ஒருமுறை பார்த்துடுங்க!

அவர் முகத்தில் குழப்ப ரேகை ஓட ஆரம்பித்தது.

நான் இருக்கேன்... என்னை நம்புங்க!' எனக் காலம் காலமாய் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் வாக்குறுதி கொடுத்தவர்களெல்லாம் சடசடவென நினைவுக்கும் வந்து போனார்கள்.