நன்றி! நன்றி!! நன்றி!!!

>> Dec 21, 2009


என்றோ மனதில் தோன்றிய ஒரு சிறு கனவு
இன்று மிகப் பிரமாண்டமாய் நிகழ்ந்தேறியது...

மிகுந்த நெகிழ்ச்சியோடு, மனதில் பொங்கும் நன்றியோடு, நீண்ட நாள் கனவு கண்ட பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம் வெற்றிகரமாய்.

சுமார் அறுபது பதிவர்கள், பத்து வாசகர்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட நண்பர்களோடு மாலை மிகச்சரியாக நான்கு மணிக்கு மிகச்சுவையான, சூடான தேநீரோடு ஆரம்பித்த சங்கமம் துல்லியமாக ஏழு மணிக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு நிறைவடைந்தது.

இனிய நண்பர் ஆரூரன் தலைமை தாங்க, புலவர் முனைவர். இராசு மற்றும் தமிழ்மணம் காசி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள...

பதிவர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசு ஆகியோர் தனிப்பட்ட தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள...

பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” துவக்கி வைக்கப்பட...

பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோரால் மிகச் சிறப்பாக கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட...

மிகச்சரியாக கூட்டம் ஏழு மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

சங்மத்திற்கான அனைத்து செலவுகளையும் ஈரோடு சார் பதிவுலக நண்பர்கள் ஆரூரன், சண்முகராஜன் , ஈரோடு கதிர், கார்த்திக், நந்து, லவ்டேல்மேடி, தங்கமணி, அப்பன், தாமோதர் சந்துரு, க.பாலாசி, பட்டிக்காட்டான், அகல்விளக்கு, பீம்பாய், இரா.வசந்த்குமார், கோடீஸ்வரன், வால்பையன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

தொடர்ந்து மூன்று மணி நேரம், அனைவரையும் அரங்கினுள் அமர்த்தி, மிக நேர்த்தியாக நடத்திய ஆரூரன் அவர்களே சங்மத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக பதிவர்கள் பாலாசி, அகல்விளக்கு, கோடீசுவரன் மற்றும் வாசகர்கள் ஜாபர், பைஜு செய்த பணிகள் மறக்க முடியாதவை.

மூத்த பதிவர்களான கார்த்திக், நந்து மிக ஆதரவாக, இணக்கமாக குறிப்பாக மிகுந்த மனோதைரியத்தை அளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியை வெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ் ஆகியோருக்கு நன்றிகள்.
கடந்த பல நாட்களாக அமெரிக்காவில் இருந்து என்னைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வழிநடத்திய கொங்கு வாசல் நா. கணேசன் அவர்களுக்கு நன்றி.

இருக்கும் திசைதோறும் தென்றலாய் வீசிய பதிர்வர்களின் வருகை இந்த சங்மத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை...

அந்த மகிழ்ச்சியை வெறும் நன்றி என்ற மூன்று எழுத்தால் என்னால் நிரப்பமுடியவில்லை....

ஒவ்வொருவர் கைபற்றிய போதும், புன்னகைத்த போதும், தோள் அணைத்த போதும் எ..............ன் உடன் பிறந்த சொந்தமாகவே நினைத்து மனம் நெகிழ்கிறேன்...

இந்த சங்கமம் வெற்றிகரமாக நடந்ததாக யார் கருதினாலும் அதற்கு இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும் பங்கு உண்டு.

சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம் என்று கூறி வரும்காலத்தில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
__________________________________________

Read more...

சரக்கும் சைடு டிஷ்சும் பின்னே ஆறு டவுட்டும்

>> Dec 18, 2009

ரவுண்ட் 1:
சாமிக்கு(!!!) மாலை போட்டு சரக்கு கடைக்கு முன்னே வரிசை கட்டி நிற்கும் சாமிகளுக்கு தனி டம்ளர்ளே சரக்கு கொடுக்குறாய்களாமே... குடிக்கிறவனயோ, ஊத்தறவனையோ யாரும் கண்ணக் குத்தமாட்டாய்ங்களா!!!???

ரவுண்ட் 2:
தெளிவா இருக்கிறவங்க யாரும் ’போதையில’ இருக்குறோம்னு சொல்லாத போது, போதையில இருக்கும் போது மட்டும் அடிக்கடி ”ன்ன்ன்...ஞான் ஸ்டெடி’னு தெளிவா சொல்றாய்ங்களே.... லாஜிக் படி இது சரியா?

ரவுண்ட் 3:
கொஞ்சம் போதையேறுனதும், எப்போதோ நடந்த ஒன்று நினைவுக்கு வந்து ஈகோவை தூண்டிவிட, எப்பாடுபட்டாவது போனைப் போட்டு சண்டைய இழுக்குறவரு, சரக்கு மீறிப்போயி சாக்கடையோரம் கிடக்கும் போது மட்டும் தெருநாய் வந்து உச்சா போனாக்கூட “ஈகோ” இல்லாம சமத்துவத்தோட கெடக்க முடியுதே அது எப்புடி!!!!???

ரவுண்ட் 4:
சரக்கு மீறுனதுக்கப்புறம் எட்டுக்கட்டையில் பழைய சினிமா பாட்டும், கேள்விப்படாத சில கெட்டவார்த்தைகளும் சரளமா வருதே... அட அதுவரைக்கும் இந்த திறமையையெல்லாம் (!!!) எங்க ஸ்டாக் வச்சிருப்பாய்ங்க?

ரவுண்ட் 5:
சரக்கு வாங்கிகிட்டு மீதி சில்லறையை வாங்காதப்போ, பிளாஸ்டிக் டம்ளர மூனு ரூபா கொடுத்து வாங்குறப்போ, சோடாவ ரெண்டு மடங்கு வெல கொடுத்து வாங்குறப்போ, சைடு டிஷ்க்கு சிக்கனை நாலு மடங்கு கொடுத்து வாங்குறப்போ இருக்கிற தாரள பிரபு கொள்கை, பிறந்ததிலிருந்தே வந்ததா இல்லை தற்செயலா சரக்கு கடைக்கு மட்டுமா!!!???

சைட் டிஷ்....
பஸ்ல, ரயில்ல போகும் போது சரக்கடிச்சா புடிச்சுக்குறாங்களே, ஃபிளைட்ல போறப்ப மட்டும் சரக்கடிச்சா போலீசு புடிக்கமாட்டேங்குதே, சரக்குக்குக்கான சட்டமும் எடத்துக்கு எடம் மாறுமா?
__________________________________________

Read more...