நம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா புனைவு ஆபாசப் படம்?


ஒரு அநியாய மரணத்திற்குப் பின்பான போராட்டங்களென்பது தமிழகத்திற்கொன்றும் புதிதல்ல. அதே நேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போகச் செய்வதென்பது அதிகார மையங்களுக்கொன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொணி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்தும்கூட விரட்டி போராட்டம் ஒடுக்கப்படும்.

இதில் சேலம்,’வினுப்பிரியா’ தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க ”மன்னிப்பு” கேட்டு பிரச்சனையை தற்காலிகமாக முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார். எந்தவித சமாளிப்பும், திசை திருப்பல்களும், அவதூறுகளும், மிரட்டல்களுமின்றி பகிரங்க மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு ஒரு அதிகாரி இறங்கி வந்திருப்பது என்பது நமக்கு புதுமையானதுதான். ஆனால் காக்கிச் சட்டைகள் இப்படியான மன்னிப்புக் கோரல்களை எப்போதோ துவங்கியிருந்திருந்தால் இன்னும் சில மாற்றங்களை நாம் அனுபவித்திருக்கத் தவறியிருக்க மாட்டோம்.

இந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் செயல்பாடின்மை, ஊழல், பாரபட்சம் என்பது நபர்களுக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொருமுறையும் தன்னை தகவமைத்திருக்கின்றன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் இங்குண்டு. பாடகி ஒருவருக்கு எதிராக ஆபாசமாக இணையத்தில் பேசியதாக, வழக்குப் பதிந்து விரைந்து கைது செய்த காவல்துறை, அதற்கு நிகராக, வேறு எந்த இணையக்குற்றங்களிலும் இதுவரை செயல்பட்டதாக நான் அறிந்திருக்கவேயில்லை.

இந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் மாவட்டக் காவல்துறை, மிக வேகமாகச் சாட்டையைச் சுழற்றும். குற்றவாளி விரைந்து பிடிக்கப்படலாம், தவறு செய்த காவல்துறையினர் தண்டிக்கப்படலாம். இவை மட்டுமே தன் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுக்கு, பெண்ணை இழந்த பெற்றோருக்கு போதுமா என்ற கேள்வியெழும் முன்… 



ஒட்டுமொத்தப் பெற்றோர்களிடமும் கொஞ்சம் உரையாட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இந்த உரையாடல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தால், அதற்காக நானும் முன்பாகவே பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெண்ணின் பெற்றோர்களை மட்டுமே குறை சொல்லும் நோக்கம் என்னிடமில்லை. ஒரு தந்தையாக நானே என்னை இதில் பொருத்தி அந்த உரையாடலை நிகழ்த்த வேண்டியும் உள்ளது.

ஒரு பெண்ணை அடிபணிய வைக்க, தோற்கடிக்க, பழிவாங்க, குலைக்கச்செய்ய அவளின் பெண்மை மீது தாக்குதல் நடத்தினால் போதுமென வக்கிரம் மிகுந்த, கோழைத்தனமான ஆண்கள் நினைப்பதை மறுக்கவே முடியாது. ஆண் மட்டுமல்ல, பெண்களும்கூட பெண்களை அவ்வாறு மிரட்டியதைக் கேள்விப்பட்டதுண்டு. நான் முப்பது ஃபேக் ஐடி வச்சிருக்கேன், அதிலிருந்து உன் படத்தை மார்ஃபிங் செய்து போட்டு சாவடிப்பேன் என சவால்விட்ட ஒரு பெண் குறித்து அறிந்தபோது பேச்சு மூச்சற்றுப்போனேன். ஆகா, ஆணோ பெண்ணோ இன்னொரு பெண்ணை ஆபாசமாகச் சித்தரிப்பதன் மூலம் வீழ்த்த முடியும், அழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வினுப்பிரியா எழுதியதென இணையத்தில் வெளியான கடிதத்தில் இருக்கும் வரிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சூழலில், செயல்படாத சைபர் கிரைம் போலீசாரை மற்றும் குற்றவாளியைப் பிடித்து தண்டித்துவிடுதல் மட்டுமே ஒட்டுமொத்தத் தீர்வாகுமா?

என்னோட லைஃப் போனதுக்கப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்” என்ற ஒரு பெண்ணின் மனநிலைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம். ஒரு பெண்ணின் படம் மார்பிங் செய்யப்பட்டோ அல்லது உண்மையாகவோ ஆபாசமாக வெளிவந்துவிட்டால், அத்தோடு வாழ்க்கையே போய்விட்டது என்ற தீர்ப்பை அந்த 22 வயது பெண்ணுக்கு வழங்கியது யார்? மேம்போக்காக, ”படிச்ச புள்ள இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா?” எனக் கேள்வி கேட்கும் முன், ஒரு படத்தின் மூலம் வாழ்க்கையை அழித்துவிடமுடியும் என்ற மனநிலையை யார் புகட்டியது? அப்படியான அறியாமை மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு நான் சொல்லும் நியாயமான விளக்கங்கள் என்ன?.

சத்தியமா சொல்றேன் என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பல. நம்புங்க” எனும் அவளின் ஆயாசமான குரல் மரண ஓலமாய் எதிரொலிக்கிறது. ’ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும்?’ என்ற ஒரு அல்பமான உதாரணத்தை மட்டுமே பெண்ணின் பாலியல் குறித்த எல்லா நிகழ்வுகளிலும் எளியதொரு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ”நீ அனுப்பாம அவனுக்கு எப்படிக் கிடைச்சுது?” என பெற்றோரோ, உறவினரோ, காவல் துறையோ திரும்பத் திரும்பக் கேட்டிருந்தால் மட்டுமே, தோற்றுப்போன மனநிலையில்,  இப்படியான ஒரு அழுகுரல் வரிகள் வந்திருக்கலாம்.

அப்பா அம்மாவே என்ன நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னப்பத்தி கேவலமாக பேசுறாங்க   இந்த வரிகளோடு, கடைசியா அடித்துவிடப்பட்டிருக்கும் வரிக்குள் என்ன இருக்கும் என்ற யோசனையும்தான் மிகக்கடுமையாக மிரட்டுகிறது.

”உனக்கெதிராக கோழைத்தனமாக, வக்கிரத்தோடு ஏவிவிடப்படும் தாக்குதலின்போது, ஊரும் உலகமும் உனக்கு எதிராக நின்றாலும், ஒரு தாயாக, தந்தையாக நான் உன் பக்கம் நிற்கிறேன்” எனத் தரும் உறுதி, நம்பிக்கை, உத்திரவாதம்தானே அடித்து வீழ்த்தப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டெடுக்கும்.

காவல்துறையினரின் அலைக்கழிப்பு, செயலின்மை, லஞ்சம் வாங்கிய கொடூரத்தனம் மட்டுமே அந்த பெண்ணின் சுயகொலைக்கு காரணமென நாம் இந்தத் தற்கொலையைக் கடந்துபோவதென்றால், காவல்துறை கண்காணிப்பாளர் கேட்ட பகிரங்க மன்னிப்போடு திருப்தியடைந்து விடுவதுதான் சரியெனப்படுகிறது. மகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள் முன் விரல் சுட்டி, நீங்க ஏன் இப்படிச் செய்தீர்கள், ஏன் இப்படிச் செய்யவில்லை எனக் கேட்பது இந்தச் சூழலில் எந்த வகையிலும் நியாயமான செயலாகாது.

கோழைகள், வக்கிரம் மிகுந்தவர்கள் பெண்களை வீழ்த்த இதுபோன்ற ஆயுதங்களை, ஒரு குற்றத்தின் தண்டனைக்குப் பின்பு இனி முன்னெடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் முடிவெடுத்துவிட முடியாது. ஒரு அதிகாரியின் பகிரங்க மன்னிப்போடு, தவறிழைத்த காவல்துறையினர் பாவமன்னிப்புப் பெற்று, தங்களை உணர்ந்து புனிதர்களாக மாறிவிடுவார்கள் என்றும் நம்பிவிட முடியாது.

ஆனால் வினுப்பிரியாவின் இந்தக் கடிதம், வினுப்பிரியாவை ஒத்த பெண்களுக்கு, ஒரு சித்தரிக்கப்படும் ஆபாசப் படம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடுவதாக நம்புகிறீர்களா என்பதையும், வினுப்பிரியாவின் பெற்றோர், உறவினர், தொடர்புடைய அதிகாரிகளை “ஊசி – நூல்” என்று சந்தேகித்து, அவர்களைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நம்புகிறீர்களா எனும் மிகப்பெரிய கேள்விகளைத் தான் காற்றில் விதைத்துள்ளது!

இனி எஞ்சியுள்ளவர்கள் தீர்மானிக்க வேண்டியது எது வாழ்க்கை, எது அவமானம், எது தவறு என்பதைத்தான். வினுப்பிரியாக்கள் தற்கொலை செய்துகொள்வதை நிறுத்தும்வரை, பெற்றோரும் உற்றாரும் வினுப்பிரியாக்களோடு உரத்து உடன் நிற்கும் வரை, வக்கிரம் மிகுந்த கோழைகளும், ஊழல் அதிகாரிகளும் ஒடுங்கிவிடுவார்கள் என நம்பாதீர்கள்.

தேன் இல்லாப் பூவிலமர்ந்து



மெல்ல நெளியும்
பாம்பின் உடல் போல்
மின்னி மின்னி வளர்கிறது
பிரியமிகு வெயில்

புழுவொன்றைத் தேடும்
கழுகின் நிழலில் இளைப்பாறுகிறது
காலடியில் கிடக்கும்
சற்றுமுன் உதிர்ந்த மாவிலையொன்று

சொற்கள் கூடமறுத்து
வெம்பி நிற்கும் கவிதையாய்
வாடிக் கிடக்கிறது
அற்ற குளத்து தாமரை வேரொன்று

முட்டை சுமக்கும்
பசித்தலையும் வெண்புறாவொன்று
அலையடிக்கும் கானல் நீர் நோக்கி
திசை மாறுகிறது

தேன் இல்லாப் பூவிலமர்ந்த
தேனீயொன்று கால்களில் படிந்த
மகரந்தத்துகள்களோடு
மேகம் நோக்கி பறக்கின்றது!

சவால்தனையது உள்ளம்


எச்சரிக்கை :  இதுவொரு சுயபுராணக் கட்டுரை

ஈரோட்டிற்கு குடி பெயர்ந்து பத்து ஆண்டுகளில் எனக்கென்று மிகப்பெரிதாக இருந்த ஒரு சிறிய கனவு, ’காலையில் நேரத்தில் எழுந்து இந்த உடலின் நல்லதுக்கு எதாச்சும் செய்யனும்’ என்பதுதான். அதற்காக வாக்கிங் (நடைப்பயிற்சி) துவங்கலாம் என பல முறை துவங்குவதும் ஓரிரு நாட்களில் கை விடுவதுமான கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன். அந்தக் கோமாளித்தனம் குறித்து 2009ல் ஒரு கட்டுரை (http://maaruthal.blogspot.in/2009/07/25.html) கூட எழுதிப்பார்த்தும்…. ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை.

வாக்கிங் செல்ல ஒரு துணையிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்க, நான் எது சொன்னாலும் கேட்கும் இளவல் ரமேஷ் சிக்கினார். அவர் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு 5 கி.மீ பைக்கில் வந்து சேர, அதன்பின் இருவரும் கிளம்பினோம். இரண்டு மாத கால அளவில் மொத்தமாக ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்திருப்போம். அதன்பின் பெரியதொரு இடைவெளி… இடைவெளி என்றால் நாட் கணக்கு, வாரக் கணக்கு கிடையாது… மாதக் கணக்கு, வருடக் கணக்குதான். அதன் பின் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு பாதைகள், வெவ்வேறு நேரங்கள் என நடந்துவிட எடுத்த முயற்சிகளும் தோல்விதான்.

இதற்கிடையில்  வீட்டிலேயே யோக கற்றுக்கொள்ள ஆரம்பித்து அதுவும் நான்கைந்து தினங்களில் ஓய்ந்து போனது. ஒரு கட்டத்தில் மனைவியும், என் அம்மாவும் புதிதாக யோகா, உடற்பயிற்சிகள் எனத் தொடங்கி, ஏதேதோ வித்தைகள் செய்ய… “அடச்சே…. நாமெல்லாம் உருப்படவே வாய்ப்பில்ல போல!” என்றாகிப் போனது. எப்படியாவது நாளைக்கு ஆறு மணிக்கு முன்பு எழுந்துவிடவேண்டுமென தீர்மானித்த எல்லா விடியல்களிலும் தோற்றுப்போனேன்.

இந்தச் சூழலில்தான் நீச்சல், சைக்கிள், மாரத்தான் ஓட்டம் எனக் கலக்கிக் கொண்டிருந்த நண்பர் ஷான் கருப்புசாமி தம் 21 நாள் சவாலைத் தொடங்கினார். எதையும் மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாக மாறிப்போகும் சாத்தியமுண்டு என்பதை தீர்க்கமாக நம்புபவன் நான் என்பதாலும், ஷான் மீதான அன்பினாலும் அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவனித்தலில் இயலாமையின் பொறாமையும் இருந்திருக்கலாம்.

அவரின் சவால் நிறைவு தினத்தில் 21 கி.மீ தூரம் ஓடிவிட்டு… புதிதாக சவாலை ஏற்க என்னை அழைத்தார். ஒரு வகையில் நான அந்தச் சவாலுக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் ஆவலிலும், எனக்கான சுய நிர்பந்தத்திலும் இருந்தேன். அவர் அழைத்துப் பேசும்போது, ”செய்றேன் ஆனா, வீடு மாத்துற வேலை இருக்கு, முடிஞ்சவுடன் தொடங்குகிறேன்” எனச் சொல்லிவிட்டு, அவரின் ஃபேஸ்புக் அழைப்பில் என் பதிலாக ”தொடங்குவது குறித்து 21 நாட்களில் அறிவிக்கிறேன்!” என சமாளித்தேன்.

ஜூன் இரண்டாம் வாரத்தில்தான் துவங்கமுடியுமென்றிருந்த மனநிலையை சட்டென மாற்றி ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்த பழைய ஷூவைத் துடைத்து, ஜூன் 3ம் தேதி காலையில் சமரசங்களின்றி துவங்கினேன். முதல் நாள் நடந்து முடித்து வீடு வந்து வியர்வையுடன் அமர்ந்து சிலுசிலுவென காற்று வியர்வையில் உரச… உடல் சிலிர்த்து குழைந்து கிறங்க… “ஒரு உணர்வு வந்துது பாருங்க... ம்ம்ம்... அத எப்படிச் சொல்றது.... எப்படியாச்சும் சொல்லியாகனுமே... ஆங்...

கவுண்டமணிக்கு லாட்டரில காசு விழுந்தவுடனே... “அய்யோ... நான் இப்ப எதையாச்சும் வாங்கியாகனுமே.... அடேய்... இந்த வீதி என்ன வெலைனு கேளுடா” என்பாரே... அந்த மாதிரி ஒரு ஃபீல்ல்ல்!


இரண்டாம் நாள் பேருற்சாகம். மூன்றாம் நாள் மனசு கெஞ்சியது. நான்காம் நாள் மனசு முரண்டு பிடித்தது. மனசு பின் வாங்கு எனச் சொன்னபோதெல்லாம் புத்தி இன்னும் கூடுதலாய் முன் செல் என்றது.

பத்தாம் நாள் அதிகாலையிலேயே ஒரு மலைக்கிராமத்திற்கு பயணம் இருந்ததால், வழக்கத்திற்கு மாறாக முன்பே எழுந்து நடையை முடித்தேன். மலைப்பாதைகளில் வாகனம் தடுமாறிய சில கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு ஏற்றத்தில் நடக்க வேண்டிய சூழலை, குறையேதும் சொல்லாமல் விரும்பி நடந்தேன்.

பதினொராம் நாள் நிறைவில் 21 நாள் சவால் குறித்து ஃபேஸ்புக்கில் எழுத, ”உள்ளத்தனைய உடல்” குழுமத்தில் பலர் இணைந்தனர். அதில் உடற்பயிற்சியில், நடைப்பயிற்சியில் மிகப் பெரிய எல்லைகளைத் தொட்டவர்கள் இருந்தாலும், புதிதாக சவாலைத் துவங்கியவர்கள் எனக்குள் இன்னும் கூடுதல் பொறுப்புகளை ஏற்படுத்தினார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். நடைக்காக ஒதுக்கப்பட்ட நேரங்களில் உழவர் சந்தைக்குச் செல்லவேண்டும் என இரண்டு முறை மனைவி மூலம் சவால் வந்தபோது, அவரை உழவர் சந்தை வரை வண்டியில் சென்றுவிட்டு, அங்கிருந்து நடந்து திரும்பினேன். இரண்டாம் வாரத்தில் பழைய ஷூ நார்நாராய் கிழிந்துபோக, அமேசானில் புது ஷூ வாங்கி அது காலுக்கு வரும் வரை கிழிந்த ஷூவோடு சமாளித்து, புதிய ஷூ காலுக்குப் பழகும் வரை மாறி இரண்டு கால்களிலும் மாறி மாறி கொப்புளங்களை பெற்றதும் உண்டு. 
21ஆம் நாள் குறித்த நினைவுகள் ஒரு பரவசத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தன. திடீரென 21ம் நாளான இன்று அதிகாலை கூடுதல் தூரம் கூடுதல் நேரம் என்ற ஆசையோடு தயாராகி சூரியன் படத்தில் "காந்தக் கண்ணழகி... ஆங்... லெப்ட்ல பூசு.... இந்தா ரைட்ல பூசு" என பூ மிதிக்கப்போன கவுண்டமணி மாதிரி உற்சாகமான மனநிலையோடு வீட்டின் கதவைக் திறக்கையில் சாரல் மழை பொழிந்துகொண்டிருந்தது. சிலபல தயக்கங்களுக்குப் பிறகு, மனைவியின் கண்டிப்புகளையும் மீறி கூடுதலாய் ஒரு தொப்பியோடு துவங்கிவிட்டேன். வழக்கமான அந்தப் பாதைகளில் தென்படும் நபர்களில் ஒரே ஒருவரைக்கூட இன்று பார்க்க முடியவில்லை. பூந்தூறலில் வியர்க்க வியர்க்க இருபது நாட்களில் ஒரு போதும் எட்டாத 6 கி.மீ தொலைவை முன், பின் நடை, மித ஓட்டம் என 50 நிமிடங்களில் முடித்தேன்.





இந்த 21 நாட்களின் இடையில் தோப்புக்கரணத்தை இணைத்துக் கொண்டேன். கடந்த இரண்டு நாட்களாக பின் பக்கமாக நடக்கும்-ஓடும் முயற்சிகளை செயல்படுத்துகிறேன். எந்த இலக்கையும் அடைய, அந்த இலக்கை அடைந்தால் என்ன பலன் கிட்டும் என்பதை அறியவேண்டுமெனச் சொல்வார்கள். ஒவ்வொரு நாள் நடைக்கும் நான் எதிர்பார்த்து காத்திருக்கும் பலன், நிறைவில் உடல் முழுக்க பொங்கி வழியும் வியர்வை. தொப்பலாய் வியர்வையில் நனைந்தபடி ஆசுவாசமாய் சிலுசிலுக்கும் காற்றில் வியர்வை கரையக் காத்திருக்கும் அந்தச் சுகம் வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு கவிதை. அந்த கவிதையான அனுபவம்தான் கூடுதல் தொலைவிற்கும், நடையை விரைவாக்குவதற்குமான காரணங்களாகவும் இருந்தன.

  • இந்த 21 நாட்களில் ஒருபோதும் சவாலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் வரவில்லை. ஆனால் இந்தச் சவால் இல்லாமல் இருந்திருந்தால் குறைந்தது ஐந்து தருணங்களிலேனும் நடையைக் கைவிட்டிருப்பேன். எப்போது 21 நாட்கள் ஆகும் எனும் தவிப்பு இருந்தது உண்மை.
  • இந்த 21 நாட்களில் பல தருணங்களில் மனது கெஞ்சிய போதும், முரண்டு பிடித்தபோதும், கெஞ்சிய மற்றும் முரண்டு பிடித்த மனதிற்கு அபராதமாக நடக்கும் தொலைவினைக் கூட்டினேன்.
  • இந்த 21 நாட்களில் அலாரம் இல்லாவிட்டாலும் கூட 4.45 மணிக்கு விழித்துக் கொள்ளுமளவிற்குத் தயாராகியிருக்கிறேன். சராசரியாக இரவு 10.30 மணிக்குள் தூங்கப் பழகிவிட்டேன். அதில் ஒருநாள் 9.15 மணிக்கே உறங்கிப்போனேன். சராசரியாக 6 – 6.30 மணி நேரங்கள் மட்டுமே தூங்கும் பழக்கத்திற்கு மாறியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் புதியதொரு முயற்சியாக காலை நேரங்களில் எழுதத் துவங்கியிருக்கிறேன். குங்குமத்திற்கு இரண்டு, நம்தோழிக்கு ஒன்று என மூன்று கட்டுரைகளை இந்த சவாலால் எனக்குக் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் கூடுதலாய் ஆங்கில தினசரியொன்று வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.
இனி இது இவ்வாறே தொடரும். சுவாரஸ்யமான புதிய முயற்சிகள் இணையும். சைக்கிள் ஒன்று வாங்குவது அடுத்த ஆசை. நீச்சலும், அருகில் உள்ள மலைகளில் ஏறுதலும் இன்னபிறவும் இணையலாம்.

இதனால் கிட்டிய மகிழ்ச்சி அனைத்திற்கும் நண்பர் ஷான் மட்டுமே காரணம் எனச் சொல்வதிலும் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி் ஷான்… நன்றி ”உள்ளத்தனைய உடல்” குழும நட்புகளே!

நான் நிறைவு செய்ததன் நினைவாக, இந்தச் சவாலை புதிதாய் ஏற்க என்னோடு முதன்முதலில் நடக்க வந்த இளவல் ரமேஷ் @ கோபாலகிருஷ்ணனை அழைக்கிறேன். 21 நாட்கள் சவாலை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த எவரும் முன்வரலாம். அப்படி முன்வருபவர்களை 21 நாட்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த நானும், குழுமத்திலும் பலரும் இருக்கின்றனர்..

உள்ளத்தனைய உடல் என்பது நிதர்சனமான ஒன்றுதான். கூடுதலாக நான் அதில் இணைக்க விரும்புவது ”சவால்தனைய உள்ளம்





அடுத்த 21 நாட்கள் சவாலாக நான் நாளையிலிருந்து தொடங்க விரும்புவது.


  1. ஒரு நாளில் சமூக வலை தளங்களுக்கு ஒதுக்கும் நேரம் மொத்தமாக 60 நிமிடங்கள் மட்டுமே.
  2. தினசரி 60 நிமிடங்கள் புத்தக வாசிப்பை வாசித்த நேரம், பக்கங்களோடு உறுதி செய்வது
  3. இருக்கும் இடத்தில், சூழலில் 30 நிமிடங்கள் எந்தச் செயலும் செய்யாமல், அமைதியாக மட்டுமே இருப்பது


சவால்தனைய உள்ளம் – உள்ளத்தனைய உடலும் செயல்களும்!

-