Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Apr 20, 2018

இன்றிருக்கும் நான்


நினைவுகள் பின்னோக்கிச் சுழன்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் கடந்த கணங்கள் யாவும் அனுபவங்கள்தான். சில இனிப்பானவை. சில கசப்பானவை. இனிப்பானவைகள் மறந்திடினும் கசப்பானவைகள் மேலே மிதந்து கொண்டும் இருக்கின்றன. கொஞ்சம் அடிப்பக்கம் கெட்டித்துப் போய்க் கிடக்கின்றன.

பதினேழு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஆண்டின் பிற்பாதி. இத்தனை ஆண்டுகள் ஓடிப்போய்விட்டனவா? இப்படியான ஒரு வெயில் காலத்தில்தான் அமைப்பு ஒன்றின் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட ஒப்புக்கொண்டேன். போட்டியிட விரும்பினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. உடனிருப்பவர்கள் ஏதேதோ நகர்த்திய விளையாட்டில் எனக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. வண்ணமயமாய் எதைக் காட்டினாலும் ஆசைப்படும் குழந்தை மனம் இருந்திருக்க வேண்டும். ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது, என்னை அந்த இடத்திற்கு நகர்த்தியிருந்தவர் ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்திருந்தார். என்ன நடந்தாலும், எக்காரணம் கொண்டும் பின் வாங்கக் கூடாது.

அந்த பின் வாங்கக்கூடாது எனும் நிபந்தனை மட்டுமே களத்தில் என்னை இறுதி வரை நிறுத்தியிருந்தது. தனிப்பட்ட முறையில் சொந்தக் காரணங்களுக்காக பின்வாங்கும் சூழல்களுக்கு ஆட்பட்டேன். மூச்சுத் திணறியது. எனினும் ஒப்புக்கொண்ட வாக்கைக் காக்க வேண்டுமெனும் அறத்திற்காக மட்டுமே களத்தில் தொடர்ந்தேன். உண்மையில் அது குருவி தலையில் பனங்காய் வைத்த பாரம்தான்.

அனுபவப்பட்ட ஒருவருக்கும், ஓடுற பாம்பை மிதிக்கிற துள்ளலில் இருந்த எனக்குமான போட்டி அது. என்னை இயக்குபர்களை அவருக்கும், அவரை இயக்குபவர்களை எனக்கும் நன்கு தெரியும். களத்தில் நாங்கள் இருவர் மட்டுமே முக்கியமில்லை. அந்த வெற்றி தோல்வி எங்களை இயக்குபவர்களுக்கானதும்கூட. இதுதான் முறை, இதுதான் ஒழுங்கு எனச் சொல்லப்பட்டதைத் தாண்டி நான் என் போக்கில் ஓடிக் கொண்டிருந்தேன். சென்று ஆதரவு கேள் என எனக்குப் பணிக்கப்பட்ட இடத்திற்கு, கணக்குகள் போட்டு அது எனக்குத் தேவையில்லையென வேறு திசைக்குத் திரும்பினேன்.

ஒரு கட்டத்தில், எனக்கு எதிராக களத்தில் நின்றவரை இயக்கும் பெரிய ஆளுமையைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தேன். களம் பரபரப்பானது. அதேநேரம் எனக்குத் தொழிலில் நெருக்கமாகவும், எதிரணியில் மிக முக்கியமானவராகவும் இருந்த இன்னொருவரை சந்தித்துப் பேச மறுத்தேன். அந்த ஆளுமையைச் சந்திக்க நேரம்  கேட்டிருந்ததைக் கேள்விப்பட்ட என் அணி சார்ந்தவர்கள்ஏன் ஏன்!’ என சற்று பதட்டமாக, காரணத்தோடுதான் சந்திக்கிறேன் என்று மட்டும் சென்றேன். வழக்கமான சம்பிரதாயமான வழவழகொழகொழ எதுவும் இல்லாமல் அவரோடு பேசத் தொடங்கியது இன்றும் நினைவில் இருக்கிறது.

என் போட்டியாளரை ஆதரிக்க அவருக்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தன. அவை யாவும் அவர் பகிர்ந்தார். அத்தனையும் அவரளவில் நியாயமானவைகளே. ஏறத்தாழ வாழ்வா சாவா போர் அது. போட்டியாளருக்கான அவருடைய ஆதரவினை எந்தப் புகாரும் கூறாமல் ஒப்புக்கொண்டேன். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறேன் என்றதோடு ஒரே ஒரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்க வேண்டுமெனக் கூறினேன். அதுஎன்னை ஏன் மூர்க்கமாய் எதிர்க்கிறீர்கள்!” எனும் கேள்விதான். கேள்வியே முரணானதாக இருக்கலாம். தான் ஆதரிப்பவரின் எதிரியை எதிர்ப்பதுதானே வழக்கம். அவரும் தம் வேட்பாளரை ஆதரிப்பதால், என்னை எதிர்க்க வேண்டி வருகிறது என்றார்.

அவரை ஆயிரம் மடங்கு ஆதரியுங்கள், ஆனால் என்னை ஏன் எதிர்க்க வேண்டும். நாம் ஏதேனும் புள்ளியில் சந்தித்திருக்கிறோமா? என்னைக் குறித்து ஏதேனும் அனுபவங்கள் உண்டா?” என்பதான ரீதியில் என் விவாதத்தை தொடர்ந்தேன். சந்திப்பு, அனுபவம், தொடர்பு எதுவுமற்று என்னை உக்கிரமாய் எதிர்ப்பது எந்தவகையில் நியாயம் எனக் கேட்டேன். அந்தச் சந்திப்புக்கு முன்பு வரை நானும் அவரும் பழகியதோ, பேசியதோ கிடையாது. என்னைச் சுற்றியிருப்பவர்களும் கொண்டாடும் ஆளுமைதான் அவர். ஆனால் ஏனோ நான் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை. எனினும் காலம் எங்களை எதிரெதிர் அணியில் நிறுத்தியிருந்தது. இறுதியாக என் வாதங்களுக்குப் பரிசாக என்ன  வேண்டுமெனக் கேட்டார். ”அவரை ஆதரித்து எந்த அரசியலும் செய்து கொள்ளுங்கள், எந்த வகையிலும் உங்களோடு உறவும், தொடர்பும் இல்லாத என்னைக் குறித்து எந்த எதிர்மறையும் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டுமென!” வேண்டினேன். ஒப்புக்கொண்டார். அதன்பின்னும் தம் அணி வேட்பாளருக்கு ஆதரவாய் உக்கிரமாக உழைத்தார். என்னைக் குறித்து எதிர்மறையாகப் பேசியதாக என் கவனத்திற்கு அதன்பின் எதுவும் வரவில்லை.

தேர்தல் முடிந்தது. வென்றேன். அந்த இடத்திற்கு வர என்னென்ன அரசியல்கள் செய்தேனோ அவையாவையும் மிக விரைவில், மிகமிக விரைவில் கை விட்டிருந்தேன். போதுமெனத் தெளிந்தேன். ஆண்டுகள் ஓடிவிட்டன. மிகச் சொற்பமே நினைவில் தங்கியிருக்கின்றன. அவற்றில் இந்த ஒன்று ஏன் மிதந்து வந்ததெனும் கேள்வி வருகிறதா?

இத்தனையாண்டுகள் கழித்து அந்த ஆளுமையை ஒரு புள்ளியில் சந்தித்திருக்கிறேன். அந்த தேடல், போராட்டம், வீரியம், வீம்பு, போட்டி, ஆசை என எதுவுமற்ற மனநிலையில் இந்தப் புள்ளியில் அந்த நினைவுகளை அசை போட்டபடி இந்தத் தினம் கழிகிறது.

உண்மையில் அந்த முன் இரவுப் பொழுதை மனம் விரும்பித் தேடிக் கொண்டிருக்கிறது. காலவோட்டத்தில் கரைந்துபோன அந்த என்னையும்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அந்த நான் கிடைத்தால் அதுவும் சற்று நேரத்தில் அலுத்துப் போகும். ஏனெனில் இன்றிருக்கும் நான்தான் இந்தக் காலத்தின் நானாக இருப்பது நலம். எனக்கு மட்டுமல்ல என்னைச் சார்ந்த எல்லோருக்கும்!.





May 7, 2017

வால்பாறை

மீண்டும் வால்பாறை எனும் முழுவதுமான நினைவு சனிக்கிழமை காலையில் வந்தபோது உண்மையில் சோர்ந்து போயிருந்தேன். சரியாக 45 தினங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக் கழக விவேகானந்தர் உயராய்வு மைய நிகழ்ச்சிச் சென்று வந்ததுதான் வால்பாறைக்கான ஓரளவு முழுமையான பயணம். 1989-91 வரை பொள்ளாச்சி அருகே ஒரு பள்ளியில் படித்திருந்தாலும், ஓங்கி நிற்கும் மலை ஒரு வியப்பாக இருக்குமே தவிர வால்பாறைக்குச் சென்று திரும்பும் வாய்ப்பெல்லாம் சாத்தியப்படவேயில்லை. 1999ல் ஒருமுறை நண்பர்களோடு சுற்றுலா சென்று வந்த பிறகு அங்கு செல்லும் வாய்ப்பு வாய்க்கவேயில்லை. 2002ம் ஆண்டு ஜேசிஸ் இயக்கத்தில் மண்டலத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, ஒவ்வொரு சங்கத்திற்கும் ஓரிரு முறையேனும் சென்று வாக்கு சேகரிக்கவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அவ்வளவு தூரம் சென்று திரும்புவதெல்லாம் ஆகாது எனக் காரணம் சொல்லி, ஓட்டு சேகரிக்கச்கூட நான் வால்பாறை சங்கத்திற்குச் சென்றிருக்கவில்லை.

அப்படியான ஊருக்குத்தான் 45 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறை வர ஒப்புக் கொண்டிருந்திருக்கிறேன். ஒப்புக்கொண்டது சுமார் 15 நாட்களுக்கு முன்பு. சிக்கிம் பயணத்தில் இருந்தபோது மே 7ம்தேதி வர முடியுமா எனக் கேட்டார்கள். எதுவும் யோசிக்காமல் வருகிறேன் என்று ஒப்புதல் கொடுத்துவிட்டேன். சிலிகுரி – டார்ஜிலிங் – கேங்க்டாக் – நதுல்லா பாஸ் – கேங்க்டாக் – சிலிகுரி என கடந்த வாரம் மலைமலையாய் ஏறியேறி இறங்கியதில் இப்போதைக்கு மலைப்பயணம் முடியவே முடியாது என்றிருந்த நிலையில், ஒப்புக்கொண்டிருந்த ஏழாம் தேதியும் அருகில் வந்துவிட்டது. இந்த நிலையில் எட்டு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து திரும்பி மூன்று நாட்கள் இடைவெளியில் சென்னையில் இரண்டு ஒருநாள் பயிலரங்குகளை முடித்துவிட்டு சனிக்கிழமை காலைதான் வீடு திரும்பியிருந்தேன். வெள்ளிக்கிழமையே கல்லூரி முதல்வர் அழைத்து வருகை குறித்துக் கேட்டிருந்தார். தொடர் பயணம், பயிலரங்குகள், சராசரி தூக்கம் நான்கு மணி நேரங்கள்தான் என்றிருந்த நிலையில் எப்போது வருவேன் என்று தீர்மானிக்க முடியவில்லை, ஆனால் நிகழ்ச்சிக்குத் தவறாது வந்துவிடுவேன் என்று மட்டும் உறுதிப்படுத்தியிருந்தேன்.

வால்பாறையில் இருக்கும் அனைத்துக் கிராமங்களிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவ, மாணவியர்களை பெற்றோர்களுடன் அழைத்து அவர்களைக் கல்லூரிக் கல்விக்கு ஊக்கப்படுத்துவதே நிகழ்ச்சியின் நோக்கம். பாரதியார் பல்கலைக் கழகத்தின் நேரடிக் கல்லூரியான வால்பாறைக் கல்லூரி தன்னிச்சையாக இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்துவது பெருமைக்குரிய ஒன்றுதான். ஆகவே எந்தக் காரணத்தை முன்வைத்தும் அதில் கலந்துகொள்வதை தவறவிட்டுவிட முடியாது. ஆகா, எல்லா வகையிலான உடலின் அலுப்பு, சலிப்புகளை ஒதுக்கி மாலை புறப்பட்டு இரவு சென்றடைந்தேன். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக வால்பாறையில் தங்கும் இரவு.

இரவின் தட்பவெப்பத்தை உணர்ந்தபின், இந்த கோடைக்கும் ஏதுவான மலைப்பகுதியாக வால்பாறை இருப்பதாகவே தோன்றியது. கோடையில் இரண்டு விதமான மனிதர்கள் உண்டு. குளிரூட்டிகள் துணையோடு உறங்கும் இவர்களில், இரவில் வெம்மையில்லாமல் உறங்கினால் போதுமென குளிரூட்டியை குறைவாக இயங்கும் வகையில் வைத்துக் கொள்கிறவர்கள் ஒருவகை, குளிர வேண்டும் என தட்பவெப்பநிலையை அதளபாதாளத்தில் வைத்து போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்குபவர்கள் இன்னொரு வகை.

வால்பாறை முதல் வகை மனிதர்களுக்குப் போதுமானது. காற்றாடியை முதல் அல்லது இரண்டாம் வேகத்தில் வைத்துக் கொண்டு எளிதாய் உறங்கிப் போகலாம். உதகை, குன்னூர், கொடைக்கானல், ஏற்காடு போல் தண்ணீரைத் தொடுவதற்கு நடுங்க வேண்டியதில்லை. அமைதியாய் ஓய்வெடுக்கவும், இரவு பகலை ஓரளவு இனிதாய்க் கடப்பதற்கும் வால்பாறை மிகத்தோதான ஒரு இடமாகவே மனதில் பதிந்துபோனது.



பயணிக்க இவ்வளவு அழகான மற்றும் நெரிசல் குறைந்த சாலை வேறு மலைப்பகுதிகளில் இல்லையென்றே கருதுகிறேன். செல்லும் பாதையெங்கும் அடர் வனமாய் இருந்து, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த வனமும் அழிக்கப்பட்டு, முழுக்க முழுக்க தேயிலைத் தோட்டங்களாக இருப்பதைக் காணும்போது வருத்தம் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கு மனிதன் மட்டுமே எதனினும் சுயநலம் மிகுந்தவனாக இருக்கும் சாபம் புரிபடவேயில்லை.

கல்லூரியினர் செலுத்தியிருந்த உழைப்பிற்கு நிகரான எண்ணிக்கையில் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் இந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்து சேரவில்லை என்ற சிறு வருத்தம் அவர்களுக்கு இருந்தாலும், வந்திருந்த மாணவ மாணவிகள் தம் படிப்பை கல்லூரிக் கட்டத்திற்கு நகர்த்துவார்கள் எனும் நம்பிக்கை இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களுக்குக் கிட்டியிருக்கும். அதைவிட முக்கியம், இம்மாதிரியான ஒரு செயலுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒட்டுமொத்தமாய் கூடியிருந்த கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் கல்லூரி மீது நன்மதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.



எங்கிருந்தோ அழைத்து, இழுத்து, பிடித்து வரப்பட்டவர்களால் தான் இன்றைய வால்பாறையும், அதன் தேயிலைத் தோட்ட அடையாளங்களும். தலைமுறை தலைமுறையாய் தோட்ட வேலையிலிருப்பவர்களின் பிள்ளைகள் சிலர் முதன்முறையாக கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறார்கள், நுழையப்போகிறார்கள். அவர்கள்தான் அதுவரையிலான குடும்ப வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைப் பக்கங்களை எழுதப்போகிறவர்கள். அதற்கு உயர்கல்வி மிக முக்கியமான ஒன்றும்கூட.

அவர்களோடு பயனுள்ள வகையில் ஒரு பொழுதைக் கழிப்பதை நினைக்கும்போது, பயணம், வேலைப்பளு என்றிருக்கும் அலுப்பு சலிப்பை ஒதுக்கிவிட்டு சிரமப்பட்டேனும் சென்றுவிடுவது ஒன்றும் ஆகாத காரியமில்லை. விரும்பியதைச் செய்தேன்… நிறைவாய் இருக்கிறது.

-



Jun 23, 2016

சவால்தனையது உள்ளம்


எச்சரிக்கை :  இதுவொரு சுயபுராணக் கட்டுரை

ஈரோட்டிற்கு குடி பெயர்ந்து பத்து ஆண்டுகளில் எனக்கென்று மிகப்பெரிதாக இருந்த ஒரு சிறிய கனவு, ’காலையில் நேரத்தில் எழுந்து இந்த உடலின் நல்லதுக்கு எதாச்சும் செய்யனும்’ என்பதுதான். அதற்காக வாக்கிங் (நடைப்பயிற்சி) துவங்கலாம் என பல முறை துவங்குவதும் ஓரிரு நாட்களில் கை விடுவதுமான கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன். அந்தக் கோமாளித்தனம் குறித்து 2009ல் ஒரு கட்டுரை (http://maaruthal.blogspot.in/2009/07/25.html) கூட எழுதிப்பார்த்தும்…. ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை.

வாக்கிங் செல்ல ஒரு துணையிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்க, நான் எது சொன்னாலும் கேட்கும் இளவல் ரமேஷ் சிக்கினார். அவர் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு 5 கி.மீ பைக்கில் வந்து சேர, அதன்பின் இருவரும் கிளம்பினோம். இரண்டு மாத கால அளவில் மொத்தமாக ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்திருப்போம். அதன்பின் பெரியதொரு இடைவெளி… இடைவெளி என்றால் நாட் கணக்கு, வாரக் கணக்கு கிடையாது… மாதக் கணக்கு, வருடக் கணக்குதான். அதன் பின் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு பாதைகள், வெவ்வேறு நேரங்கள் என நடந்துவிட எடுத்த முயற்சிகளும் தோல்விதான்.

இதற்கிடையில்  வீட்டிலேயே யோக கற்றுக்கொள்ள ஆரம்பித்து அதுவும் நான்கைந்து தினங்களில் ஓய்ந்து போனது. ஒரு கட்டத்தில் மனைவியும், என் அம்மாவும் புதிதாக யோகா, உடற்பயிற்சிகள் எனத் தொடங்கி, ஏதேதோ வித்தைகள் செய்ய… “அடச்சே…. நாமெல்லாம் உருப்படவே வாய்ப்பில்ல போல!” என்றாகிப் போனது. எப்படியாவது நாளைக்கு ஆறு மணிக்கு முன்பு எழுந்துவிடவேண்டுமென தீர்மானித்த எல்லா விடியல்களிலும் தோற்றுப்போனேன்.

இந்தச் சூழலில்தான் நீச்சல், சைக்கிள், மாரத்தான் ஓட்டம் எனக் கலக்கிக் கொண்டிருந்த நண்பர் ஷான் கருப்புசாமி தம் 21 நாள் சவாலைத் தொடங்கினார். எதையும் மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாக மாறிப்போகும் சாத்தியமுண்டு என்பதை தீர்க்கமாக நம்புபவன் நான் என்பதாலும், ஷான் மீதான அன்பினாலும் அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவனித்தலில் இயலாமையின் பொறாமையும் இருந்திருக்கலாம்.

அவரின் சவால் நிறைவு தினத்தில் 21 கி.மீ தூரம் ஓடிவிட்டு… புதிதாக சவாலை ஏற்க என்னை அழைத்தார். ஒரு வகையில் நான அந்தச் சவாலுக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் ஆவலிலும், எனக்கான சுய நிர்பந்தத்திலும் இருந்தேன். அவர் அழைத்துப் பேசும்போது, ”செய்றேன் ஆனா, வீடு மாத்துற வேலை இருக்கு, முடிஞ்சவுடன் தொடங்குகிறேன்” எனச் சொல்லிவிட்டு, அவரின் ஃபேஸ்புக் அழைப்பில் என் பதிலாக ”தொடங்குவது குறித்து 21 நாட்களில் அறிவிக்கிறேன்!” என சமாளித்தேன்.

ஜூன் இரண்டாம் வாரத்தில்தான் துவங்கமுடியுமென்றிருந்த மனநிலையை சட்டென மாற்றி ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்த பழைய ஷூவைத் துடைத்து, ஜூன் 3ம் தேதி காலையில் சமரசங்களின்றி துவங்கினேன். முதல் நாள் நடந்து முடித்து வீடு வந்து வியர்வையுடன் அமர்ந்து சிலுசிலுவென காற்று வியர்வையில் உரச… உடல் சிலிர்த்து குழைந்து கிறங்க… “ஒரு உணர்வு வந்துது பாருங்க... ம்ம்ம்... அத எப்படிச் சொல்றது.... எப்படியாச்சும் சொல்லியாகனுமே... ஆங்...

கவுண்டமணிக்கு லாட்டரில காசு விழுந்தவுடனே... “அய்யோ... நான் இப்ப எதையாச்சும் வாங்கியாகனுமே.... அடேய்... இந்த வீதி என்ன வெலைனு கேளுடா” என்பாரே... அந்த மாதிரி ஒரு ஃபீல்ல்ல்!


இரண்டாம் நாள் பேருற்சாகம். மூன்றாம் நாள் மனசு கெஞ்சியது. நான்காம் நாள் மனசு முரண்டு பிடித்தது. மனசு பின் வாங்கு எனச் சொன்னபோதெல்லாம் புத்தி இன்னும் கூடுதலாய் முன் செல் என்றது.

பத்தாம் நாள் அதிகாலையிலேயே ஒரு மலைக்கிராமத்திற்கு பயணம் இருந்ததால், வழக்கத்திற்கு மாறாக முன்பே எழுந்து நடையை முடித்தேன். மலைப்பாதைகளில் வாகனம் தடுமாறிய சில கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு ஏற்றத்தில் நடக்க வேண்டிய சூழலை, குறையேதும் சொல்லாமல் விரும்பி நடந்தேன்.

பதினொராம் நாள் நிறைவில் 21 நாள் சவால் குறித்து ஃபேஸ்புக்கில் எழுத, ”உள்ளத்தனைய உடல்” குழுமத்தில் பலர் இணைந்தனர். அதில் உடற்பயிற்சியில், நடைப்பயிற்சியில் மிகப் பெரிய எல்லைகளைத் தொட்டவர்கள் இருந்தாலும், புதிதாக சவாலைத் துவங்கியவர்கள் எனக்குள் இன்னும் கூடுதல் பொறுப்புகளை ஏற்படுத்தினார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். நடைக்காக ஒதுக்கப்பட்ட நேரங்களில் உழவர் சந்தைக்குச் செல்லவேண்டும் என இரண்டு முறை மனைவி மூலம் சவால் வந்தபோது, அவரை உழவர் சந்தை வரை வண்டியில் சென்றுவிட்டு, அங்கிருந்து நடந்து திரும்பினேன். இரண்டாம் வாரத்தில் பழைய ஷூ நார்நாராய் கிழிந்துபோக, அமேசானில் புது ஷூ வாங்கி அது காலுக்கு வரும் வரை கிழிந்த ஷூவோடு சமாளித்து, புதிய ஷூ காலுக்குப் பழகும் வரை மாறி இரண்டு கால்களிலும் மாறி மாறி கொப்புளங்களை பெற்றதும் உண்டு. 
21ஆம் நாள் குறித்த நினைவுகள் ஒரு பரவசத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தன. திடீரென 21ம் நாளான இன்று அதிகாலை கூடுதல் தூரம் கூடுதல் நேரம் என்ற ஆசையோடு தயாராகி சூரியன் படத்தில் "காந்தக் கண்ணழகி... ஆங்... லெப்ட்ல பூசு.... இந்தா ரைட்ல பூசு" என பூ மிதிக்கப்போன கவுண்டமணி மாதிரி உற்சாகமான மனநிலையோடு வீட்டின் கதவைக் திறக்கையில் சாரல் மழை பொழிந்துகொண்டிருந்தது. சிலபல தயக்கங்களுக்குப் பிறகு, மனைவியின் கண்டிப்புகளையும் மீறி கூடுதலாய் ஒரு தொப்பியோடு துவங்கிவிட்டேன். வழக்கமான அந்தப் பாதைகளில் தென்படும் நபர்களில் ஒரே ஒருவரைக்கூட இன்று பார்க்க முடியவில்லை. பூந்தூறலில் வியர்க்க வியர்க்க இருபது நாட்களில் ஒரு போதும் எட்டாத 6 கி.மீ தொலைவை முன், பின் நடை, மித ஓட்டம் என 50 நிமிடங்களில் முடித்தேன்.





இந்த 21 நாட்களின் இடையில் தோப்புக்கரணத்தை இணைத்துக் கொண்டேன். கடந்த இரண்டு நாட்களாக பின் பக்கமாக நடக்கும்-ஓடும் முயற்சிகளை செயல்படுத்துகிறேன். எந்த இலக்கையும் அடைய, அந்த இலக்கை அடைந்தால் என்ன பலன் கிட்டும் என்பதை அறியவேண்டுமெனச் சொல்வார்கள். ஒவ்வொரு நாள் நடைக்கும் நான் எதிர்பார்த்து காத்திருக்கும் பலன், நிறைவில் உடல் முழுக்க பொங்கி வழியும் வியர்வை. தொப்பலாய் வியர்வையில் நனைந்தபடி ஆசுவாசமாய் சிலுசிலுக்கும் காற்றில் வியர்வை கரையக் காத்திருக்கும் அந்தச் சுகம் வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு கவிதை. அந்த கவிதையான அனுபவம்தான் கூடுதல் தொலைவிற்கும், நடையை விரைவாக்குவதற்குமான காரணங்களாகவும் இருந்தன.

  • இந்த 21 நாட்களில் ஒருபோதும் சவாலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் வரவில்லை. ஆனால் இந்தச் சவால் இல்லாமல் இருந்திருந்தால் குறைந்தது ஐந்து தருணங்களிலேனும் நடையைக் கைவிட்டிருப்பேன். எப்போது 21 நாட்கள் ஆகும் எனும் தவிப்பு இருந்தது உண்மை.
  • இந்த 21 நாட்களில் பல தருணங்களில் மனது கெஞ்சிய போதும், முரண்டு பிடித்தபோதும், கெஞ்சிய மற்றும் முரண்டு பிடித்த மனதிற்கு அபராதமாக நடக்கும் தொலைவினைக் கூட்டினேன்.
  • இந்த 21 நாட்களில் அலாரம் இல்லாவிட்டாலும் கூட 4.45 மணிக்கு விழித்துக் கொள்ளுமளவிற்குத் தயாராகியிருக்கிறேன். சராசரியாக இரவு 10.30 மணிக்குள் தூங்கப் பழகிவிட்டேன். அதில் ஒருநாள் 9.15 மணிக்கே உறங்கிப்போனேன். சராசரியாக 6 – 6.30 மணி நேரங்கள் மட்டுமே தூங்கும் பழக்கத்திற்கு மாறியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் புதியதொரு முயற்சியாக காலை நேரங்களில் எழுதத் துவங்கியிருக்கிறேன். குங்குமத்திற்கு இரண்டு, நம்தோழிக்கு ஒன்று என மூன்று கட்டுரைகளை இந்த சவாலால் எனக்குக் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் கூடுதலாய் ஆங்கில தினசரியொன்று வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.
இனி இது இவ்வாறே தொடரும். சுவாரஸ்யமான புதிய முயற்சிகள் இணையும். சைக்கிள் ஒன்று வாங்குவது அடுத்த ஆசை. நீச்சலும், அருகில் உள்ள மலைகளில் ஏறுதலும் இன்னபிறவும் இணையலாம்.

இதனால் கிட்டிய மகிழ்ச்சி அனைத்திற்கும் நண்பர் ஷான் மட்டுமே காரணம் எனச் சொல்வதிலும் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி் ஷான்… நன்றி ”உள்ளத்தனைய உடல்” குழும நட்புகளே!

நான் நிறைவு செய்ததன் நினைவாக, இந்தச் சவாலை புதிதாய் ஏற்க என்னோடு முதன்முதலில் நடக்க வந்த இளவல் ரமேஷ் @ கோபாலகிருஷ்ணனை அழைக்கிறேன். 21 நாட்கள் சவாலை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த எவரும் முன்வரலாம். அப்படி முன்வருபவர்களை 21 நாட்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த நானும், குழுமத்திலும் பலரும் இருக்கின்றனர்..

உள்ளத்தனைய உடல் என்பது நிதர்சனமான ஒன்றுதான். கூடுதலாக நான் அதில் இணைக்க விரும்புவது ”சவால்தனைய உள்ளம்





அடுத்த 21 நாட்கள் சவாலாக நான் நாளையிலிருந்து தொடங்க விரும்புவது.


  1. ஒரு நாளில் சமூக வலை தளங்களுக்கு ஒதுக்கும் நேரம் மொத்தமாக 60 நிமிடங்கள் மட்டுமே.
  2. தினசரி 60 நிமிடங்கள் புத்தக வாசிப்பை வாசித்த நேரம், பக்கங்களோடு உறுதி செய்வது
  3. இருக்கும் இடத்தில், சூழலில் 30 நிமிடங்கள் எந்தச் செயலும் செய்யாமல், அமைதியாக மட்டுமே இருப்பது


சவால்தனைய உள்ளம் – உள்ளத்தனைய உடலும் செயல்களும்!

-

Dec 31, 2013

ஒரு ஆண்டு வேறென்ன பெரிதாய் தந்துவிட முடியும்



கண்ணெதிரே தன் கடைசிச் சொட்டு உயிரை காற்றில் மெல்ல அசைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது நாட்காட்டி. நாளை புதிய நாட்காட்டி அங்கே அமர்ந்துவிடும். இதுவரையிலும் எந்தவொரு ஆண்டின் இறுதியிலும், ஆண்டு குறித்து அலசவோ, அடுத்த ஆண்டு குறித்து எதிர்பார்ப்புகளைப் பொறுக்கவோ நினைத்ததில்லை. ஒருபோதும் ஆண்டுகள், மாதங்கள், நாட்கள் குறித்து எனக்கு உணர்ச்சிக்கனிவு இருந்ததில்லை. அதே மனநிலையோடுதான் கடக்கும் இந்த ஆண்டை அணுகிடப் பார்க்கிறேன், ஆனாலும் அவ்வளவு எளிதாய் என்னால் கடந்துவிடமுடியவில்லை. காரணம் நான் சந்தித்த சவால்களும், கிடைத்த வாய்ப்புகளும், அனுபவித்த பிரியங்களும் இதுவரை எந்த ஆண்டிலும் கிட்டாதது.

 

ஆண்டின் துவக்கத்தில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து வலைப்பக்கத்தில் எழுதிய ஒரு கடிதப்பதிவு ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. வாசித்துவிட்டு, மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய இரண்டு புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்த ஒரு எழுத்தாளரும், திரையில் பிரபலமாகயிருக்கும் ஒருவரும் அழைத்துப் பாராட்டிய வார்த்தைகள், உண்மையிலேயே அந்தப்பாராட்டுகளுக்கு நிகராக எழுதியிருக்கின்றேனா என்ற சந்தேகத்தையும், ஓரளவு எழுதுகிறோம் என்ற சமாதானத்தையும் சரிவிகிதத்தில் கொடுத்தன. அதேசமயம் சில வசவுகளையும், ஒரு கொலை மிரட்டல் அழைப்பையும் மௌனச் சிரிப்போடுதான் கடந்துபோனேன்.

எழுத்திற்கான எந்தவொரு திட்டமிடலும், இலக்கும், தயாரிப்புமின்றியே இந்த ஆண்டு கடந்தது. வார இதழ்களில் சில கவிதைகள், கட்டுரைகளென மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறேன். வலைப்பக்கத்தில் இந்த ஆண்டின் கணக்கில் 76 இடுகைகள் காட்டுகிறது. அலசிக் காயப்போட்டால் 50 இடுகைகள் தேறலாம். எழுத மனதில் நிறைய கருக்கள் தோன்றினாலும் வளர்த்துப் பிரசவிப்பதில் தொடர்ந்து தோற்றுக்கொண்டேயிருக்கின்றேன். கட்டுரைகள், பத்திகளுக்கானவற்றை தொடர்ந்து ஓரிரு வரிகளில் குறைப்பிரசவமாக பிரசவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கமேதுமில்லை.

கவிதை ஒன்று,  கல்லூரி ஒன்றின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மகிழ்வும், பொதிகைத் தொலைக்காட்சியில் ’கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியில் மூன்று வாரங்கள் பங்கெடுத்ததும், சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் இரண்டு முறை பங்கெடுத்ததும் எனக்கலவையாய் மோதிய வாய்ப்புகள் மிகுந்த இதம் அளிப்பதாகவும், இன்னும் ஓடு என உத்வேகப்படுத்துவதாகவும் அமைந்தன. நுழைவு வாயில்களைப் பார்த்து அதிசயித்த கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றும் வாய்ப்பு பெருமகிழ்வை ஏற்படுத்தின.

மார்ச் மாத இறுதியில் எதிர்பாராத ஒரு இடர்பாடாக அம்மாவிற்கு கண்ணில் ஒரு கட்டி இருந்தது தெரியவந்தது. அதன் விபரீதம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில் அறிக்கையை எதிர்கொண்ட நொடியில் கலங்கி நின்றது இப்போதும் அப்படியே கசப்பாய் நினைவில் இருக்கின்றது. அடுத்து என்ன என்ற அம்புகளாய்த் தைத்த கேள்விகளுக்கு அந்த நேரத்தில் என்னிடம் பதிலேதுமில்லை. என்ன செய்வதென்று குழம்பிய நொடியில் இணைய நட்பிலிருந்த மருத்துவத்துறையில் ஜெர்மனியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் நண்பர் சுவாமி, மருத்துவர்கள் திரு.தரண், திரு.செந்தில், திருமதி.நள்ளினி, திருமதி.ரேவதி, திரு.ஹரி ஆகியோருக்கு அந்த அறிக்கையை அனுப்பி ஆலோசனை கேட்டேன். அந்தச் சூழலில் ஆழ்ந்த குழப்பத்திலிருந்த என்னை மீட்ட எவரையும் வாழ்நாளின் எந்தத் தருணத்திலும் மறக்கவியலாது.

சென்னை சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை என முடிவு செய்தபின், அறிக்கையிலிருந்த சில குழப்பங்களை சரி செய்வதற்காக தொடர்ந்து போராடிய அமெரிக்க நண்பர் Dr.செந்தில் அவர்களின் உழைப்பு என் வாழ்நாளின் கிடைத்தற்கரிய பரிசு. ஆய்வுகளுக்குப் பின் பிரேக்கிதெரபி சிகிச்சை, 6 வாரம் கழித்து ஆய்வு, ஒவ்வொரு ஆறுமாத இடைவெளிக்கும் ஆய்வு என ஓரளவு சிக்கலிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறோம். அதுவும் முதல் நூறு நாட்கள் மிகமிகக் கடினமானவை. அந்தக் கடினத்தை அவ்வளவு எளிதில் என்னால் வார்த்தைகளில் கொட்டிவிட முடியாது.

ஏப்ரல் 6ம் தேதி முதன்முறையாக அறிக்கையை கையில் பெற்றவுடன், அதிலிருக்கும் மருத்துவ வார்த்தைகள் புரியாமல் முதலில் அதை அனுப்பி ஆலோசனை கேட்டது டாக்டர் தரண் அவர்களிடம் தான். அன்று முதல் இன்று வரை சுமார் 20-30 தடவைகள் அவர் என்னை அழைத்திருப்பார். நேரில் ஒருமுறை கூட நாங்கள் சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும் அவரின் வழிகாட்டுதல்கள் இல்லையென்றால் நான் மிக நிச்சயமாக துவண்டு போயிருக்கும் சாத்தியமுண்டு.

தன் ஆராய்ச்சி தொடர்பான துறை என்பதால், நண்பர் சுவாமி அவர்கள் ஒவ்வொரு முறையும் அறிக்கைகளைக்கண்டு, அளித்த அறிவுரையும், நம்பிக்கையும் வாழ்நாளின் கடைசி நொடிவரைக்கும் மனதில் இருப்பவை. தொடந்து உணவு முறை, கவனம் என அவரின் ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவை.

கடந்த ஒன்பது மாதத்தில் எப்படியும் 20 முறைகளுக்கு மேலாக சென்னைக்குப் பயணித்திருப்பேன். ஒரு நாள், இரண்டு நாட்கள். நான்கு நாட்கள் என்று கூட தங்க வேண்டிய சூழல். ஒவ்வொருமுறை செல்லும்போதும் நாங்கள் இறங்குவதற்குமுன், அது எந்த நேரமாகயிருந்தாலும், பெரம்பூர் ரயில் நிலையத்தில் பாலா அண்ணன் நிற்பார். அத்தனை முறையும் அவரின் வீட்டிலேயே தங்கினேன். அவர் காரை எடுத்துக் கொண்டே சென்னையைச் சுற்றினேன். அவர் வீட்டிலேயே பசியாறினேன். ஒரு நட்புக்காக, பாலா அண்ணன் மட்டுமின்றி, அவர் குடும்பமே இத்தனை அன்பாய் கவனித்துக்கொண்டதை, உடனிருந்ததை நினைக்கும்போது, அதற்கான பிரதி, மாற்று அன்பை எங்கே செலுத்தப் போகிறேன் என்பதுதான் கனமாய் இருக்கின்றது.

உலகப்படங்களை தேடித்தேடிப் பார்த்ததிலிருந்து மலையாளப்படங்கள் சற்றே என்னை தடம்புரட்டிப் போட்டது. ஃபஹத்ஃபாசிலும் பிருத்திவிராஜ்ஜும் என்னை முழுமையாக ஆட்கொண்டார்கள். இந்த ஆண்டு வெளியான ஃபஹத்ஃபாசிலின் 12 படங்களில் 7 படங்களைப் பார்த்திருப்பதில் புரிகிறது நான் எவ்ளோ பெரிய மலையாளப் பட தீவிரவாதியாகியிருக்கிறேன் என்று. ஆனாலும் உஸ்தாத் ஓட்டல், 22FK, செல்லுலாயிட் கொடுத்த அதிர்வுகள் அவ்வளவு எளிதில் அடங்காதது. இந்த உலகத்திற்குள் என்னை இழுத்துவிட்ட பெருமை நண்பன் கார்த்தியையே சாரும்.

ஆண்டின் துவக்கத்தில் பாலா அண்ணன், சுவாமி, பிரபா ஆகியோருடனும், மத்தியில் மாப்பு பழமைபேசி, ஆரூரன், வீரா ஆகியோருடனும் ஆண்டின் இறுதியில் திடீரென சிங்கப்பூர், மலேசியா ஆரூரன், ஆனந்தி, சவணமூர்த்தியோடு சென்ற பயணமும் எப்போதும் மனதை சிலிர்க்க வைப்பவை. சிங்கப்பூர் மலேசியா பயணத்தில், தங்குதல், ஊர் சுற்றுதல் என அனைத்து வகைகளிலும் உதவிய, அன்பைப் பரிமாறிய அனிதா, மோகன்ராஜ், வெற்றி,  கோவி, கருணாகரசு, பாரதி, முஸ்தபா, கணபதி, கோமளா உள்ளிட்ட அனைத்து நட்புகளும் எனக்குச் சொன்னது இந்த உலகம் அன்பால் நிரம்பியது என்பதையேதான்.

பல சந்தர்ப்பங்களில் அமைதியாகவும், ஒதுங்கியிருப்பதின் மூலமாகவும் சரியானவர்களை நான் அங்கீகரிக்க மறந்துபோனதும், தவறவிட்டதும் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு இலக்கிய மாநாட்டில் முதல் வரிசையின் மையத்தில் அமர்ந்திருந்தேன். கலந்துகொண்ட பலரும் அங்கிருந்த பலருக்கும் நன்கு பழக்கமானவர்கள். நான் மட்டுமே புதிது. இடது பக்க நுழைவாயில் பகுதியில், சிறப்பு விருந்தினரான பெண் ஆளுமை ஒருவர் உள் நுழைகிறார். ஒவ்வொரு இருக்கையாக வணக்கம் சொல்லி, மகிழ்வாய்ப் பேசிக்கொண்டு நகர்ந்து வருகிறார். எனக்கு அவரைத் தெரியும், ஆனால் அவருக்கு என்னைத்தெரியாது. என் இடதுபக்க இருக்கையோடு பேசிவிட்டு நகர்கிறார். சற்றே பார்வைத் தாழ்த்தியவாறு அவர் என்னைக் கடந்து வலப்பக்க இருக்கைக்கு நகர்வதற்குக் காத்திருக்கிறேன். என் கால்களுக்கு சற்றே நெருக்கமாக எதிரில் அவர் நிற்பதை உணர்கிறேன். சில விநாடிகள் காத்திருக்கிறேன். ஏன் இன்னும் நகரவில்லையென சற்றே மேலே பார்வையை நகர்த்துகிறேன். முகத்தைச் சந்திக்கும் நொடியில் உணர்கிறேன், வழக்கமான சிரிப்போடு “கதிர் நல்லாருக்கீங்ளா” என எதிர்கொள்கிறார். அதுவரை எனக்குள் இருந்த மனத்தடைக்காக அப்போது அடைந்த வெட்கத்தை நினைத்தால் இப்போதும்கூட என் முன்முடிவுகள் மீது ஒரு கசப்பு தோன்றி மறைகிறது. அதுவொரு ஆகச்சிறந்த பாடம் எனக்கு. அதன்பின் என் இறுகியிருந்த விரல்களைச் சற்றே இலகுவாக்கிக்கொண்டு சக மனிதர்களை நோக்கி எளிதில் நீட்டப் பழகிக்கொண்டேன்.

இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைப்பது திரைப்படமொன்றில் சிறிய பாத்திரத்தில் நடிக்க நண்பர் ஜீவா கேட்ட நிமிடங்கள்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக சில முறை கேமரா முன் அமர்ந்திருந்தாலும், இதுநாள் வரையிலும் நான் திடமாக நம்பியது ’எனக்கு நடிப்பு வராது’ என்பதுதான். ஜீவாவிடம் வீட்டில் கேட்டுட்டு சொல்றேங்க என சமாளித்துப் பார்த்தேன். சரி என்றவர் அடுத்த நாள் அன்பாய் மேலும் அழுத்தம் கொடுத்தார். முயற்சித்துப் பார்ப்போம், சரிவரலைனா விட்டுடுவோம் என்று சொன்னதாலும், சரி அந்த உலகம் எப்படித்தான் இருக்கும் என்றுதான் பார்த்துவிடலாமே என்ற ஆர்வத்தாலும் ஒப்புக்கொண்டேன்.

ஒருநாள் உள்ளரங்கு படப்பிடிப்பு, நான்கு நாட்கள் வெளிப்புற படப்பிடிப்பு என்று அதையும் மகிழ்வாய்க் கடந்திருக்கிறேன். ஐந்து நாட்களில் அந்த உலகத்தில் இயங்குபவர்கள் மேற்கொள்ளும் கடினமான பணி கண்டு வியந்து, வியர்த்துப்போனேன். ஒன்று புரிந்தது வெற்றியோ தோல்வியோ எந்தப் படமாக இருந்தாலும் அவைகளுக்கான உழைப்பு ஏறத்தாழ ஒன்றுதான் என்பது. இரவு நேரப் படப்பிடிப்புக்காக அவர்கள் மேற்கொள்ளும் உழைப்பை எழுத வார்த்தைகள் போதாது. மூன்று நாட்கள் இரவு 8 மணியிலிருந்து 2 மணிவரை நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்தேன். அதே நாட்களில் பகலிலும் படப்பிடிப்பு இருந்தது. சில நடிகர்கள் தவிர்த்து, இயக்குனர், ஒளிப்பதிவாளர், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட படை பகல், இரவு என எப்படி 18 – 20 மணி நேரம் தொடர்ந்து உழைக்கிறார்கள் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அந்த உழைப்பின் பின்னால் எத்தனை கனவு இருக்கும் என்பதுதான் பாடம். ஓய்வில்லாமல் இரவு இரண்டு மணி சுமாருக்கு எடுக்கும் காட்சிகளில்கூட சற்றும் நிதானம் தவறாமல், புன்னகையோடு தனக்கு வேண்டியதை வரவழைக்க வைத்த இயக்குனர் திரு. மோகன், வாழ்நாளில் கண்ட ஒரு ஆச்சரியம் என்றே சொல்வேன்.

இதுவரையிலான வாழ்க்கையை உதறிப்போட்டு என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் எனப்பார்த்தால், ஒன்றுதான் புலப்படுகிறது சேகரித்து வைத்திருப்பவை நட்புகள் மட்டுமே. 20 வயது மூத்தவர்கள் முதல் 20 வயது குறைந்தவர்கள் வரை என்னால் சரி சமமாக அன்பைப் பரிமாற முடிகிறது, அவர்களிடமிருந்து அன்பை அள்ளிக்கொள்ள முடிகிறது.

நான் விரித்திருக்கும் என் இறக்கையின் சிறகுகளுக்கு சொடுக்கெடுத்தவர்கள் குறித்து உள்ளபடியே பெருமைப்படுகிறேன். எதிர்கொள்ளவியலா இடர்பாட்டினைச் சந்தித்தபோதும், அதைக்கடக்க உதவியதிலிருந்து, நல்லவற்றை தொடர்ந்து தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் நட்புகளையும் உறவுகளையும் நினைக்கையில் நெக்குருகிறது. எட்டாத் தொலைவிலிருந்தாலும் அன்பால் எவர் கண்ணீரையும் ஒருவரால் துடைக்கமுடியும் என்பதை மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். பிரியத்தை மொழியாக்கும் உறவுகளின் சொற்கள் ஒவ்வொன்றும் மெல்லத் தலைகோதும், விரல் பிடித்து சொடுக்கெடுக்கும், குழந்தைபோல் கால்களை மடிமீது போட்டு “கொஞ்சம் அமுத்தியுடுங்க” எனக் கேட்கும். அதுவே நம் மனநிலையை உன்னதமாகவும் உற்சாகமாகவுமே நகர்த்த எல்லாவற்றையும் முன்னெடுக்கும். என்னைக் குறித்து நான் அக்கறை கொள்வதைவிட ’இதை அப்படிச் செய், அதை இப்படிச் செய்’ எனும் நட்புகள் தந்தையாய், தாயாய், சகோதரமாய், காதலாய் என எல்லாவகையிலும் இயக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எழுது எழுது என துரத்திக் கொண்டேயிருக்கும் நட்புகளோடும் என் நாட்கள் நல்லபடியாகவே நகர்ந்திருக்கின்றன, நகர்கின்றன.




வேறென்ன……!?
வாழ்ந்த காலம் நினைவுகளாக…
எதிர்காலம் வாய்ப்புகளாக…!


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...