Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

Feb 9, 2016

கனவை நோக்கிய நெடும்பயணம்





கற்பனை செய்ய முடியாததொரு வேகத்தில் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலம் என்று எதைச் சொல்ல? இதோ இப்போது லாவகமாய் நழுவும் இந்த நொடியா, தத்தித் தாவும் நிமிடமா, கடக்கும் மணிப்பொழுதா, தன் போக்கில் கரையும் இரவும் பகலுமா? இவை எவற்றையும் கணக்கில் கொள்ள முடியாதபடி, ஆண்டுகளே அவசரமாய்த் தீர்கின்றன. சமீபத்தில் நடந்தது என நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் யோசித்துப் பார்த்தால் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்பொழுதுதான் நிகழ்ந்ததுபோல் இருப்பவையெல்லாம் எப்பொழுதோ நடந்து முடிந்து போனதாக இருக்கின்றன.

நாள், வாரம், மாதம், வருடம் என்பதில் எதுவும் மாறிவிடாத போதும், காலம் மட்டும் எப்படி விரைந்து ஓடுகின்றது!? இன்றைய நாட்களில் ஆக்கிரமிப்புகள் கூடிப்போய்விட்டதுதான் நாட்கள் வேகமாக ஓடுவதான தோற்றத்தைத் தருகிறதோ எனத் தோன்றுகிறது. நாள் துவங்கும்போதே ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று எனக் களைத்து நிமிர்கையில், நாள் தீர்ந்து போய்விடுகின்றது.

எப்போதும் இதுபோல் இருந்ததில்லையே. வாழ்ந்த காலம் வேறாகவும் வாழும் காலம் வேறாகவும்தான் இருக்கின்றன. வாழப்போகும் காலம் இன்னும் வேறானதாக, ’இப்படித்தான் இருக்கும்’ எனக் கற்பனை செய்யமுடியாததாக இருக்கலாம். இப்படியாக யோசிப்பதும், பேசுவதும் நிகழ்காலத்தின் மீது எப்போதும் புகார் வாசிக்கும் ஒருவித மனநிலையா!? அப்படியாகவே இருப்பினும்,  நிகழ்காலம் குறைகளற்றதாக எப்படி இருக்க முடியும்.

கால் நூற்றாண்டு காலம் பின்னோக்கி எந்த ஒரு தினத்திற்குச் சென்று பார்த்தாலும், அப்படியான நாட்களை ஆக்கிரமிக்க ஒன்றுமே இல்லையென்பதுதான் உண்மை. வாழ்க்கையில் ’இது வேண்டும், இப்படியாக இருக்க வேண்டும்’ எனும் கனவுகள் இல்லை. பெரிய தேவைகளற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். கனவுகள் இரவுகளொடும், உறத்தோடும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.

இன்றைய நாட்களை எந்நேரமும் எதுவோ ஒன்று ஆக்கிரமித்திருக்கின்றது. புதிய உருவாக்கங்கள் வாழ்வின் அங்கங்களாக மாறத்தொடங்கிவிட்டன. நேற்று அடைந்தது இன்றும், இன்று அடைவது நாளையும் பழையதாகிவிடுகின்றன. புதிதாய், மிகப் புதிதாய்த் தேவை எனும் வேட்கையோடு பயணம் நீள்கிறது. புதிது புதிதாய் வேண்டும் எனும் தேடலை, ஆசையை, இவை தேவையில்லாத ஆசை / பேராசை எனும் வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது.

ஆக்கிரமிப்பு மிகுந்த நாட்களை இலகுவானதாய்க் கடந்திட மிகுந்த திட்டமிடலும், ’எதிர்காலத்தில் இப்படியாக வேண்டும்’ எனும் தீர்க்கமான கனவும் அவசியமாக இருக்கின்றது. திட்டமிடாத அன்றாடங்கள் நெருக்கடி மிகுந்ததாக இருக்கின்றன. எதிர்காலத்தில் இது வேண்டும், இப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவற்ற வாழ்க்கை குழப்பம் சூழ்ந்ததாகவே அமைகின்றது.

ஒவ்வொரு நாளும் நம் முன் புதிய வாய்ப்புகளை முன்னிறுத்துக்கின்றன. சில நாட்கள் சிலவற்றை முற்றிலும் புறந்தள்ளி ’இவை பயன்பாட்டுக்கு உகந்ததன்று’ என முடக்குகின்றன. இவை இரண்டையும் சமன் செய்து வாழ்க்கையை நகர்த்திட, எதிர்காலம் குறித்த நம்பிக்கை மிகுந்த கூரிய பார்வையும், அந்த பார்வைக்கான கற்றலும், அதைச் செயல்படுத்துவதற்கான உழைப்பும் அவசியம்.

எதிர்காலத்தில் நமக்கு எது தேவை என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்து இப்போது கவலைப்பட வேண்டியதில்லை. அப்படியான கவலைகளற்ற கனவுதான் பாரதிக்கு இருந்திருக்க வேண்டும். பாரதியின் துணிச்சல்மிகு கனவுகளில் என்னை எப்போதும் உலுக்கிக் கொண்டிருப்பவை இரண்டு

”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற கவிதை வரிகள் நினைக்கும் கணந்தோறும் வியப்பேற்படுத்துவது ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பு எப்படி பாரதியால் அப்படியொன்றை தன் விருப்பமாக, கனவாகக் கொண்டிருக்க முடிந்தது என்பதுதான்.

தனக்கு வேண்டுவதைக்கூட ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதிலிருந்து எளிதாகத் தேடி எடுத்துக்கொள்ளவே தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில் ’காசியில் பேசும் உரையை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி வேண்டும்’ என நினைக்க எத்தனை துணிச்சலும் பேராவலும் இருந்திருக்க வேண்டும். ’அப்படியான கருவி எப்படியிருக்கும், எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எதன் மூலம் இயங்கும்’ என எதையுமே கற்பனை செய்திட முடியாத காலத்தில், தான் விரும்பும் காரியத்தைச் செய்ய ஒரு கருவி வேண்டும் எனக் கற்பனை செய்வது அல்லது கனவு காண்பது நிகழ்ந்திருக்கின்றது.

இக்கருவி செய்யும் கனவை விடவும், கூடுதலான வேட்கை நிறைந்த கனவொன்றும் பாரதியிடமிருந்து தெறித்ததை மறந்துவிட முடியாது. அடிமை விலங்கொடிக்க தேசம் முழுதும் வேள்வி நடந்த காலகட்டத்தில் விடுதலையை அடைந்தே விட்டதாகவே கனவு கண்டிட்ட துணிச்சல்தான் அது.

”ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”
எனும் கனவோ, தீர்க்கதரிசனமோ பாரதிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

பின்வருவதை முன் உணர்வதே தீர்க்கதரிசனம் எனில், பாரதியிடம் தீர்க்கதரிசனம் எனும் வல்லமை இருந்தது; பின்னால் வருமா வராதா என்று தெரியாதபோதும், அது தனக்கு வேண்டுமெனும் தீராத கனவு இருந்தது. கனவு அவரால் அடையக்கூடியதாகவோ, அவர் காலத்திற்குள்ளேனும் அடைக்கூடியதாகவோ இல்லாவிடினும், அவர் கண்ட கனவை காலம் மெய்யாக்கியது.

தீவிரமும், வேட்கையும், தேடலும் நிறைந்தவொரு கனவுதான் நமக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. ஒரு கனவை தீர்மானிப்பது மட்டுமே போதுமானதாக இல்லை. தீர்மானித்த கனவின் பாதையில் தெளிவு கொள்ளுதல் முதல் தேவை. கனவை நோக்கிச் செல்வதென்பது ஒரு நெடும்பயணம். அந்த நெடும்பயணத்தை எங்கு துவக்குகிறோம் என்பதிலிருந்து, கடக்கும் தொலைவின் ஒவ்வொரு படிநிலையையும் உணர்ந்து, தெளிந்து, மகிழ்ந்து பயணித்தல் அவசியம்.

கனவை நோக்கிய நெடும்பயணத்தில் ஒவ்வொரு நிலையை எட்டுவதையும் ”வெற்றி” என்கிறோம். அப்படியான எட்டல்களும், கருதும் வெற்றிகளும் இணைந்த தொகுப்புதான் அந்தப் பயணப்பாதை. கிட்டும் ஒவ்வொரு வெற்றியும் பயணத்திற்கான உந்து சக்தி. அடையும் ஒவ்வொரு தோல்வியும் அனுபவச் சேர்க்கை.

ஒட்டுமொத்தக் கனவை நோக்கிய பயணமோ, அதிலிருக்கும் இலக்குகளை நோக்கிய பயணமோ, அது முதலில் கோருவது நேர்மையான, அர்ப்பணிப்பு மிகுந்த பங்கேற்பை மட்டுமே. அதில் பிறழ்ச்சி ஏற்பட்டால் பயணம் மிகப்பெரிய தொய்வைச் சந்திப்பதை தவிர்க்கமுடியாது. கோரும் உழைப்பை பொய்யின்றி, சமரசமின்றி, வெற்றுச் சமாதானங்களின்றி முழுத்திறனோடு அளிக்கவேண்டும்

உதாரணத்திற்கு உழைப்பு கோரப்படும்போது அளிக்கப்படும் பதில்கள்….. ”நான் செய்கிறேன் / செய்வேன்” (I will do) அல்லது ”செய்ய முயற்சிக்கிறேன்” (I will try to do”)  என்பதுதான். ஒரு காரியத்தில் ”நான் செய்கிறேன்” என்பதை முழு ஒப்புக்கொள்ளலாகக் கருதலாம். ”செய்ய முயற்சி செய்கிறேன்” என்பதில் உண்மை முயற்சிகள் இருக்கலாம்; அல்லது மகிழ்வூட்டும் பதிலாகவோ, கேட்பவரை திருப்தி செய்வதற்கான பதிலாகவோ இருக்கலாம்.

“நாளை வருகிறாயா!?” எனக் கேட்கப்படுவதில், ”ஆமாம் வருகிறேன்” எனப் பதில் சொல்பவர்களில் 80% பேர் அவ்விதமே வருகிறார்கள். ”ஐ வில் ட்ரை” எனச் சொல்பவர்களில் 80% பேர் வருவதே இல்லை. முயற்சி செய்தலை நிகழ்த்தாமல், முயற்சி செய்கிறேன் என்பதை ஒரு தப்பித்தலுக்கான பதிலாக மட்டும் பிரகடனப்படுத்துகிறார்கள்

பயிலரங்கு ஒன்றில் ”Try” குறித்து உரையாடுகையில் நான்கு பேரைச் சுட்டி, ”எழுந்து நிற்க முயற்சி செய்யுங்கள்” என்றேன். நால்வரும் எழுந்து நின்றனர். ”ஏன் எழுந்து நிற்கிறீகள்?” எனக் கேட்டேன். சற்று குழம்பியபடி ”நீங்க தானே எழுந்திருக்கச் சொன்னீர்கள்!?” என்றனர். நான் ”எழுந்து நில்லுங்கள் என்றா!?” சொன்னேன் என அழுத்தமாகக் கேட்டேன். தங்களுக்குள் கிசுகிசுப்பாய் பேசிவிட்டு “இல்லை…. எழுந்திரிக்க ட்ரை பண்ணச் சொன்னீங்க!”

“எழுந்திருக்க ட்ரை பண்ணுங்கனுதானே சொன்னேன். எழுந்திரிக்கச் சொல்லலையே….!”

“ட்ரை பண்ணினாலே எழுந்து நிற்க வேண்டியதாகி விடுகிறது”

உண்மையில் முயற்சித்தல் என்பது எழுந்து நிற்பதல்ல, எழுந்து நிற்க முயற்சி செய்தல் மட்டுமே. அதாவது கால்களை சற்று வலுப்படுத்தி, உடலை இருக்கையிலிருந்து மேல் நோக்கி பெயர்த்துதல். முயற்சி என்பது வெறும் ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிடுதல் எனில், அதை மட்டுமே செய்துவிட்டால் போதும். இருக்கையிலிருந்து ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிட்டு அதோடு நின்றுவிட முடியுமா!? அப்படி நிற்பதை உடல் ஏற்றுக்கொள்ளாது. அந்த ஒரு அங்குல உயரத்தில் எவ்வளவு நேரம் சமநிலை பாவித்துத் தொடரமுடியும். இங்குதான் ’செய் அல்லது செத்துமடி’ எனும் பாடத்தை உணர்த்துகிறது முயற்சி.

எழுந்து நிற்க முயற்சி செய்ததில் நாற்காலியிருந்து சுமார் ஒரு அங்குலம் உயரத்தில் கால்களின் பலத்தில் மட்டுமே நிற்கிறோம். அச்சூழலில் வலி தவிர்க்க, சமநிலை காப்பாற்ற இருக்கும் வழிகள் ஒன்று வீழ்ந்துவிட வேண்டும் அல்லது எழுந்து நின்று விடவேண்டும். வீழ்வதற்காக முயற்சி செய்யவில்லை, எழுவதற்காகத்தான் அந்த முயற்சியினை மேற்கொண்டோம் என்பதால் அது நம்மையுமறியாமல் நிகழ்ந்து விடுகின்றது.

செயல்களில் காட்டும் அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும், தீவிரமும் வெற்றிகளைக் கையகப்படுத்தும். வெற்றிகளின்  தொகுப்பு தானாகவே கனவினை வசப்படுத்தும்.

-

நம் தோழி பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரை

-

Nov 23, 2015

கூடுகள் உடைபட வேண்டும்


நாம் ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும் ஒரு இணக்கமான, சுபமான, பிடித்த ஒரு முடிவை எட்டுவதுதான் நம் விருப்பமாகவும் ஆசையாகவும் இருக்கின்றன. அப்படி எட்டுவதைத்தான் வெற்றி என்றும் கருதுகிறோம். நம் அன்றாடத்தில் எடுத்துக் கொண்டாலே களைத்த நேரத்தில் பூரண ஓய்வு, இரவுகளில் முழுமையான உறக்கம், பசித்த வேளைகளில் பிடித்த உணவு, குளியலின் முடிவில் புத்துணர்வு, வாசித்து நிமிர்கையில் திருப்தி மற்றும் அறிதலின் ஒளி, பயணங்களில் அழகிய அனுபவங்கள் என நாம் மேற்கொள்ளும் ஒவ்வொன்றிலும் ஒன்றை விரும்பிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஒருவகையில் நாம் எதிர்பார்த்ததை அடைவதை அல்லது  சுபமான நிறைவடைதலைத் தான் வெற்றி என்றும் அழைக்கிறோம்.

ஆனால் வெற்றியென்பது அது மட்டுமேயன்று. வெற்றி என்பதை அளவிட குறைந்தபட்சம் மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. நிர்ணயித்ததை அடைந்திருக்க வேண்டும். அடைய வேண்டியதை குறித்த கால எல்லைக்குள் அடைந்துவிட வேண்டும். மிக முக்கியமானது முறையான வழிகளில் அடைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட வெற்றிதான் உண்மையில் அங்கீகரிக்கப்படும். சில வேளைகளில் மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்யாமலும் வெற்றியாக அறிவிக்கப்படுவதும் உண்டு. அது, ஊருக்கும் உலகத்திற்கும் வெற்றியாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அதில் ஈடுபவருக்கு, நிகழ்த்த முனைபவருக்கு இந்த மூன்றையும் பூர்த்தி செய்து அடையப்படும் வெற்றி மட்டுமே பரிபூரண வெற்றியாக மனநிறைவைத் தரும். 



இலக்கை அடையாமல் வெற்றியீட்டியதாக நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். குறித்த காலத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர் ஏறத்தாழ அந்தக் குறித்த காலத்திற்குள் திருணம் செய்து கொண்டால் மட்டுமே அது வெற்றியாகக் கருதப்படும். மிக முக்கியமாக, அடைய வேண்டிய எதையும் அதற்கான முறையான, நியாயமான வழிகளிலேயே அடைய வேண்டும். காசு சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கில் மனநிறைவையும் தன்னம்பிக்கையும் தரும் வெற்றி என்பது நேர்மையான வழியில் சரியான உழைப்பின் வாயிலாக ஈட்டப்படும் காசு மட்டுமே.

வெற்றி என்பது நினைத்த ஒன்றை, குறித்த காலத்திற்குள், சரியான வழிகளில் அடைந்து விடுவது மட்டுமல்ல. நினைத்த ஒன்றை அடைதலில் ஏற்படும் மனநிறைவும், அதன் மூலம் கிட்டும் தன்னம்பிக்கையும் சேர்ந்ததுதான். மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றம் தான். தன்னால் அடைய முடிந்தது எனும் ’தனக்குள் ஜீவிக்கும் தனக்கான நம்பிக்கை’.

பிறந்த எந்தக் குழந்தையும் உடனே எழுந்து நடக்கவோ, ஓடவோ செய்து விடுகிறதா என்ன? அதற்கான வலுவும், அவசியமும் வரும்வரை காத்திருந்து அதன்பின்தானே அதை நிகழ்த்த முற்படுகின்றது. முதலில் குப்புற விழ முயல்கிறது. வயிற்றில் உந்தித் தவழ முற்படுகிறது. மண்டியிட்டு நடைபயில ஆரம்பிக்கிறது. எதையேனும் பற்றி எழுந்து நிற்கிறது. தத்தித் தத்தி நடக்க முயற்சி செய்கிறது. இவை ஒவ்வொன்றிலும் முதல் வெற்றிக்கு முன்பான பல தோல்விகளை, சவால்களை எதிர்கொள்கிறது. ஆனாலும் முயல்கிறது. எல்லாம் கை வருகிறது. ஒரு கட்டத்தில் ஓட்டப் பந்தயத்திலும்கூட கலந்து கொள்ளும் அளவிற்கு முன்னேறுகின்றது. ஒவ்வொரு கட்டத்திலும் அதன் முயற்சிக்கு கிடைத்த வெற்றியில் சேகரமான மனநிறைவும் தன்னம்பிக்கையும் அந்தக் குழந்தையை வளர்ந்த பிறகும் ஒவ்வொரு சவால்களையும் சந்தித்து வெல்லும் ஆற்றலை, நம்பிக்கை, வலுவைத் தருகிறது.

உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு ஒரு போட்டி வைத்து சில சாக்லெட்டுகளைப் பரிசளிக்கின்றோம் என வைத்துக்கொள்வோம். வெல்லும் குழந்தைகளுக்கு சிறப்பான சாக்லெட்டுகள் அளிக்கின்றோம். குழந்தைகளும் மகிழ்ந்து விரும்பி உண்கின்றனர். சாக்லெட்டின் சுவை அந்தக் குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் இருந்துவிடப் போகின்றது?. எளிதில் மறந்துபோகும் சாக்லெட் சுவைகளுக்காகத்தான் போட்டியில் முனைப்போடு செயல்பட்டு வெற்றியீட்டினார்களா? இப்போது எண்ணிப்பார்த்தால், போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசாக கிடைத்த சாக்லெட்டுகள் குறித்து எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. ஆனால் அந்தப் போட்டியில் வெல்லும் சூத்திரம், அதற்கு எவ்வாறான உழைப்பினைக் கொடுக்க வேண்டும், எவ்வளவு திறன், வலு தேவை என்பவை காலம் முழுமைக்கும் மனதில் அழியாமல் இருக்கும்.

ஆக, வெற்றி என்பது ஒரு பொருளை, பதவியை, இடத்தை அடைந்து விடுதல் மட்டுமே அல்ல. மனதால் உணரப்படுவது. நம்பிக்கையை இன்னும் உயர்த்திப் பிடிப்பது அல்லது பொருத்தமான பாடத்தைக் கற்பிப்பது.

எல்லோருக்குமே வெற்றியின் மீது தீராத மோகம் தான். எனினும் ஏன் வெல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது என்பதற்கு விடை காண்பதும் மிக அவசியம். வெற்றியை நோக்கி பயணத்தைத் துவங்க வேண்டியவர்களில், அனைவருமே அதற்கான பயணத்தைத் துவங்கி விடுவதில்லை. அதனால் பயணமே துவங்காதவர்கள் எந்தவகையிலும் பலனையும், சிறப்பையும், நிறைவையும் எதிர்பார்க்க நியாயமில்லை.

மக்கள் நிறைந்திருக்கும் கூட்டத்தை நோக்கி ”இரண்டு பேர் மேடைக்கு வாருங்கள்” என அழைப்பு அல்லது அறைகூவல் விடுக்கப்படும்போது அந்த அரங்கில் இருக்கும் அனைவருமே தாம் அந்த இரண்டில் ஒருவர் என ஓடிவருவதில்லை. முதல் ஐந்து பத்து நொடிகளுக்குள் எழுந்து வருகின்றவர்கள் மட்டுமே பயணத்திற்கு தாம் தயார் என அறிவிக்கின்றவர்கள். அவர்களே களத்தில் நிற்கும் மனநிலை வாய்த்தவர்கள். வெற்றிக்கான பயணத்தில் தன்னை தகுதியானவராய் உணர்கிறவர்கள். பொதுவாக அப்படியான அறைகூவல் விடுக்கப்படும்போது அந்தக் கூட்டத்தில் 99% மனிதர்கள் ’அழைக்கப்பட்ட அந்த இருவர் நாமல்ல’ என நம்புகிறார்கள். அப்பெருங்கூட்டத்திலிருக்கும் அந்த இருவரை ’தமக்குத் தொடர்பற்று எங்கோ இருப்பவர்கள்’ எனக் கருதுகிறார்கள். அப்படியாக அவர்கள் எழுந்து போகும் போது அமர்ந்திருக்கும் பலர் ‘தாம் தப்பித்தோம்’ என ஒருவித நிறைவு கொள்கிறார்கள், சிலர் ”அட நாம போயிருந்திருக்கலாமோ!?” என வருத்தப் படுகிறார்கள்.

மேடைக்கு அழைக்கப்படும்போது ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக அக்கம் பக்கம் பார்க்கும் கணப்பொழுதில்தான் அதற்குத் தகுதியானவர்கள் என்றெழுந்தோடும் அந்த இருவருக்குள் சில முக்கியக் காரணிகள் இருக்கின்றன.

அரங்கின் முக்கியப் புள்ளியிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது “உங்களில் இருவர் மேடைக்கு வாருங்களென” அது மிகச் சரியான நேரத்தில் ஏறத்தாழ சம அளவில் அங்கிருக்கும் அனைவரின் காதுகளிலும் நுழைந்து மூளைக்கு எட்டுகிறது. ”எதுக்காக கூப்பிட்டிருப்பாங்க? ஏன் போகனும்? போனா என்ன நடக்கும்? போகனுமா? நமக்கெதுக்கு அந்த வேலை?” இது போன்ற கேள்விகள் சுரந்து கொண்டிருக்கும் தருணத்தில், இந்தக் கேள்விகளுக்கு பதில் தயாரித்து சமாதானப்படுத்திக்கொள்ளும் முன்பாகவே “எதுக்காக இருந்தாலும் சரி, நாம போவோமே” என நொடிப்பொழுதில் மேடைக்குச் செல்லும் முனைப்பிருப்பவர்கள், ’தாம் யார்” என முதலில் தம்மிடம் நிறுவுகிறார்கள்.

அழைத்த காரணம் என்னவாக இருந்தாலும், அதில் தான் பங்கெடுக்க முடியும் என தனக்கு நிறுவியதோடு அங்கிருக்கும் அனைவரிடமும் தான் அதற்கு தயாராக இருப்பதாக பிரகடனப்படுத்துகிறார்கள். அதன்பின் எதற்காக அழைக்கப்பட்டிருந்தார்களோ அதை எதிர்கொள்கிறார்கள். அந்த எதிர்கொள்ளல்தான் பல நேரங்களில் மிக அற்புதமான வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அது பல திறப்புகளை ஏற்படுத்துகிறது.

“இப்போது செய்து கொண்டிருப்பதையே தொடர்ந்து செய்தால், இப்போது கிடைத்துக் கொண்டிருப்பதுதான் தொடர்ந்து கிடைக்கும்” என்பது மிக எளிதான, நிதர்சனமான ஆனால் மிக முக்கியமான விதி. யாரொருவருக்கு தற்போது கிடைத்துக்கொண்டிருப்பதில் திருப்தி இல்லையோ, போதாமை இருக்கின்றதோ அவர்கள் அதுவரை செய்து கொண்டிருந்ததையே தொடர்ந்து செய்தால் ஒருபோதும் போதாமையும், திருப்தியும் சரியாகி விடாது.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டியதும், அதையே செய்து கொண்டிருந்தால் அதே பலன்கள்தான் கிடைக்கும் என்பதை உணர வேண்டியதும்தான் மிக அவசியமானது. மாற்றம் வேண்டுமென நினைக்கின்றவர்கள், தாம் அதுவரையில் தம்மைச் சுற்றி பின்னியிருந்த கூட்டினை உடைக்கிறார்கள். வேண்டிய பலனுக்குத் தேவையான மாற்றங்களை நிகழ்த்த முற்படுகிறார்கள். அதற்குத் தோதான செயல்களைச் செய்யத் துவங்குகிறார்கள். வேண்டியதை அடைகிறார்கள்.

-

“நம் தோழி” நவம்பர் இதழில் வெளியான கட்டுரை

Jul 13, 2011

பகிர்தல் (13.07.2011)


வெற்றி பண்பலைக்கு நன்றி:

இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் வெற்றி வானொலியின் விடியல் நிகழ்ச்சியில் ”நாள் ஒரு தளம்” என்ற தலைப்பில் பல தரப்பட்ட இணையதளங்களை, வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்! 
 

அதில் ”கசியும்மௌனம்” வலைப்பக்கத்தை 10.06.2011 அன்று அறிமுகப்படுத்திய இனிய நண்பர் பதிவர் லோஷன் அவர்களுக்கும் வெற்றி வானொலிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.


படம் காட்டலில் உதவி : வானம்பாடிகள்

அழகாய்ச் சிறப்பித்த அரிமா சங்கம்:

நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து சற்று வித்தியாசமாக ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து செய்துவருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக பாரதிகிருஷ்ணகுமார், எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், பெருமாள்முருகன், ச.தமிழ்செல்வன், கண்மணி குணசேகரன், லஷ்மணப்பெருமாள், ஆதவன்தீட்சன்யா என படைப்பாளர்களையே முன்னிருத்தும் எங்கள் சங்கம் இந்த முறை எழுத்தாளர் பவா. செல்லத்துரை அவர்களை அழைத்திருந்தது.

நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை தவிர, வேறு யாரையும் இதுவரை மேடைக்கு அழைப்பதில்லை என்பதிலும், திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் எதன்பொருட்டும், சமரசம், மாற்றம் செய்துகொள்வதில்லை என்பதிலும் உறுதியாக நிற்கும் சங்கம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சு,வெங்கடேசன் அவர்களின் உரையை கேட்க திடீரென, விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியரைக்கூட முன் வரிசையில் மட்டுமே இருக்கை ஒதுக்கி அமரவைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்சியரும் அதை மிக நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டு, உரை முடிந்தவுடன் சென்றுவிட்டார்.



இந்த முறை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த பவா.செல்லத்துரை தனது மனைவி கே.வி.சைலஜா-வுடன் வருகை தந்திருந்தார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பவா.செல்லத்துரையை மேடைக்கு அழைக்கும்போது, அவர் மனைவியையும் மேடைக்கு அழைத்து அமர வைத்து பெருமைப்படுத்தினர். "ஏன் தம்பதிகளாக மேடைக்கு அழைத்தோம்" என்பதை தனது உரையின் போது முன்னாள் ஆளுநர் அரிமா தனபாலன் விளக்கினார். எங்கள் அரிமா சங்கம் குறித்து பெருமையும், பெருமகிழ்வும் அடைகிறேன்.

பாடாய்படுத்தும் பாதாள சாக்கடைகள்:

ஈரோடு நகரின் குடியிருப்புப் பகுதி வீதிகளை, பாதாளச் சாக்கடைக்காக தோண்ட ஆரம்பித்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இப்போதைக்கு அது நிறைவடைவதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா வீதிகளுமே வயிற்றைக் கிழித்து கடனே என்று தையல் போட்டது போல் காட்சியளிக்கின்றன. தோண்டி மூடப்பட்டவைகளில் 99% வீதிகள் இன்னும் தார் போடப்படாமல் இருக்கின்றன. எந்த வீதியிலும் தைரியமாக திரும்ப முடிவதில்லை, பெரும்பாலான வீதிகளில் பாதிவரை சென்றுவிட்டு வேறு வழியில்லாமல் திரும்பி பின்னால் வந்து, வேறு எந்தவீதி வழியாக  தேவையான இடத்தை அடைவது என பட்டிமன்றம் நடத்தும் ஆட்களை ஆங்காங்கே வீதிகளின் பிரிவுகளில் காணலாம்! இந்தக் கொடுமை எப்போது முடியுமென்று தெரியவில்லை!


நேரலைக் கொலை:

”சண்டையில் கிழியாத சட்டை உண்டா” என்பது போல, ”போதையில் நிகழாத கொலைகள் உண்டா” என்பதை சமீபத்திய கோவைக் கொலை நிரூபித்திருக்கிறது. சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் முன்பு நடுச்சாலையில் நிமிடநேரத்தில் நான்கு பேரால், நிகழ்த்தப்பட்ட கொலைத்தாக்குதல், இறந்தவரோடு சேர்ந்து ஐந்து குடும்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வன்மத்தை கீழே கிடப்பவனின் மேல் கல்லைத் தூக்கிப்போடுவதில் தெரிகிறது.


எதேச்சையாக சிக்னலில் இருக்கும் காவல்துறை கேமரா வழியே இந்தக் கொலைக்காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் தெரியவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:

பதவி விலகல் அதிர்ச்சியோடு தயாநிதிக்கு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை. எதிர்பாராத விதமாக விமான நிலையத்திலேயே சக்சேனா கைது, அதோடு குவியும் அடுக்கடுக்கான புகார்கள். விசாரணைக்கு கலாநிதி மாறன் அழைப்பு என தின்ற உப்புக்கு கொஞ்சமாய் தண்ணி குடிக்கத் துவங்கியிருக்கிறது சன் நெட்வொர்க் குழுமம்.

இந்நிலையில், வீடியோ ஒளிபரப்புக்குப் பிறகு ஊர் ஊராய் ஓடி ஒளிந்த நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் சன்டிவிக்கு எதிராக புகார் கொடுக்கும் மொக்கைத் தருணமாகவும் மாறியிருக்கிறது. கதவைத்திற காற்றுவரும் என்று சொன்னவனுக்கு ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது புரியாதா என்ன?

குறுந்தகவலில் வந்தது:

சராசரியாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 4 பொய் சொல்கிறோம். வருடத்திற்கு 1460. அதில் அதிகமாகச் சொல்லும் பொய் “I am fine” 


-0-

Apr 9, 2011

ஈரோட்டில் பற்றியெரிந்த ஊழலுக்கெதிரான பெருநெருப்பு


அன்னா ஹசாராவின் உண்ணா நிலை அடைந்த வெற்றியை எல்லோர் மனதிலும் விதைக்கும் வண்ணம் ஈரோடு நகரின் பல்வேறு பொதுநல, வணிக, மருத்துவ, வழக்குரைஞர்கள் அமைப்புகளைச் சார்ந்த நண்பர்கள், பள்ளிச்சிறுவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் ஈரோட்டில் நடந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைபாரதம், இமயம், ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமம், ஈரோடு வாசிப்பு இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். நிறைய நண்பர்களைச் சென்றடைய தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவிய ஜெயமோகன்.இன்  ஈரோடு லைவ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். கலந்துகொண்ட ஊடகத்துறை நண்பர்களுக்கு எங்களது அன்புகள்.

தேர்தல் சமயம் என்பதால் அனுமதி, இடம் கிடைப்பதில் சிக்கல், குறைந்த கால இடைவெளியில் குறுந்தகவல்கள் மூலம் மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய நிலை என பல தடைகளைத் தாண்டி 6 மணிக்கு ஐம்பது பேர் எனக்கூடிய கூட்டம் அடுத்த சில நிமிடங்களில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது. பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், குடும்பத்தலைவிகள், பொதுநல அமைப்பு சார் நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி ஓங்கிய குரலில் எழுப்பிய சப்தம் ஊழல் அரக்கனை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. 

ஊழல் அரக்கனிடம் அடைப்பட்டு அழுத்தத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் மனித சமூகம், சுவர்களை உடைத்து வெளியேறி சுதந்திரக்காற்றை சுவாசிக்கத் தவிப்பது இவர்கள் வருகையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. 

இதோ இன்று மெழுகுவர்த்தியில் ஏற்றிய அக்கினிக்குஞ்சு பெருநெருப்பாய் பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூடியவர்கள் இறுதியாய் கலையும் போது மெழுகுவர்த்தியில் இருந்த நெருப்பை இதயத்தில் ஏந்திச் சென்றிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நெருப்பை அப்படியே அடைகாப்போம்… வளமான இந்தியாவிற்காக தகிக்கும் மனதோடு உழைக்கத் தொடங்குவோம்…







-0-
மேலதிகப் படங்களுக்கு....
-0-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...