Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Jul 21, 2020

குபீர் வானிலை ஆராய்ச்சியாளர்

நேற்று மாலை துணி காய வைக்கக்கூடாத நேரத்தில் அம்மணி காயவைக்கப் போனார். அவர் கீழே இறங்கியதும் இருட்டத் தொடங்கியது. விளைவு...
“ஏங்க நான் குளிக்கப்போறேன், ‘சும்மாதானே இருக்கீங்க’ தூறல் விழுந்தா துணி ஒண்ணுவிடாம எடுத்தாந்து போட்டுடுங்க”.
இந்தத் தூறல் எப்ப விழும்னுதான் தெரியாதே. வெளியில் வந்து காவல் இருக்கத் துவங்கினேன். சரி எதற்கும் துணி அருகிலேயே இருப்பதுதான் உத்தமம் என மொட்டை மாடிக்குச் சென்று வானத்தை நோக்கி வழி மேல் விழி வைத்து...
வாவ்.... என்ன ஒரு அற்புதமான காட்சி. நடுவில் மட்டும் நீலமும், வெண்மையும் பிச்சுப் போட்ட பஞ்சு பொதிகளாய், குறிப்பிட்ட வட்டத்தைத் சுற்றி ஏறிக்கட்டி நிற்கும் கரு மேகங்கள். கரு மேகங்களைத் தாண்டி நடுவில் இருக்கும் நீலத்திற்குள் துளைத்துப் பாயும் மாலை ஐந்தரை மணி சூரிய ஒளி...
நான் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். முன்னப்பின்ன மேகத்தையே பார்க்காதவன்போல நானும் வளைச்சு வளைச்சு கழுத்து வலிக்கப் பார்க்க, துணிகளும் உலர்ந்த பாடில்லை, தூறலும் விழுந்த பாடில்லை.
ஒரு வழியாக இரவு மழை வந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய செய்திகள் வந்தன. வழக்கம்போல் பின்னரவில்தான் தூங்கப் போனேன். அப்படித் தூங்கப்போனால் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும் எனும் எண்ணம் சில மாதங்களாய்.
சில முக்கியமான கூட்டங்களுக்கு செல்லவிருக்கும் தினங்களில் மட்டும் அன்றைய தினத்தை முன்வைத்த கனவுகள் வந்து இம்சைப் படுத்தும். மற்றபடி நிகழ்காலத்தையொட்டி கனவுகள் பெரிதாக ஆக்கிரமிப்பதில்லை.
மாலையில் கழுத்து வலிக்க ஆராய்ச்சி செய்த மேகக்கூட்டமும், இரவு ஆங்காங்கே கொட்டிய மழைச் செய்திகளும் இணைந்து கனவில் வந்தன.
நான் ‘குபீர்’ வானிலை ஆராய்ச்சியாளராக அவதாரம் எடுத்திருந்தேன் அந்தக் கனவில். என் கண்டுபிடிப்பில் ஊரையே மூழ்கடிக்கும் மழையொன்று அங்கே நிகழப்போவதாக எல்லோரையும் எச்சரித்திருத்திருந்தேன். மிகச் சரியான நேரமும், எப்படி மழை கொட்டும், எவ்வளவு அளவு என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்த மழை ஒரு மேக வெடிப்பு மூலம் நிகழும் என்பதையும் தெரிவித்திருந்தேன்.
எல்லோரும் காத்திருக்கிறார்கள். மாலையில் பார்த்த அதே வடிவில் மேகங்கள் திரண்டிருக்கின்றன. நடுவில் இருந்த பஞ்சுப் பொதியின் ஓரங்களில் தீ எரிகின்றது. வனத்தில் எரியும் நெருப்பிற்கு ஒப்பானது அது. மேகத்தில் பற்றிய தீ, சரசரவெனப் பரவி வெடிக்கும்போது மேகம் வெடிக்கும், அதையடுத்து மழை அப்படியே நயாகரா அருவிபோல் கொட்டப்போகின்றது எனக் காத்திருக்கிறேன்.
அதற்குள்ளாக காற்று வீசியிருந்தது. முன்பே எச்சரித்திருந்தேன். இரண்டு சக்கர வாகனங்களைக்கூட நிலத்தில் படுக்க வைத்து விடுங்கள் என்று. யாரும் கேட்ட பாடில்லை. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றைக் காணவில்லை. காற்றில் கரைந்து போயிருக்கலாம். மற்றொரு வண்டியான மிலிடரி பச்சை நிற புல்லட் சிதைந்திருக்கின்றது. பெட்ரோல் டேங்க் ஓரிடத்தில் கிடக்க, டெயில் லேம்ப் இன்னொரு இடத்தில் கிடக்க... அந்தக் காற்று பயபுள்ள என்ஜினையும் அடித்துப் பெயர்த்துப் போயிருந்தது. மொத்தத்தில் அங்கே புல்லட் இருந்த சுவடே இப்போது இல்லை.
எனினும் மழையைக் காணவில்லை. இது தப்பாச்சே... எரிந்து கொண்டிருந்த மேகத்தைப் பார்க்கிறேன். எண்ணெய் இல்லாத திரிபோல் சோம்பலாய் மினுக்குகின்றது. இரவு நீள்கின்றது. நீளாமல் என்ன செய்யும். மேகத்தில் நெருப்பு பரவவில்லையே. நானும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவான் கோட்டைசாமி என்பதாக, மேகம் எப்படியாவது எரிந்து மேக வெடிப்பு நிகழ்ந்து... ம்ஹூம்...
“அடேய் நவுத்துப் போன மேகமே....!”
இறுதியில் நானே பெருந்தன்மையோடு குபீர் வானிலை ஆராய்ச்சியாளர் பதவியை உடனடியாக ராஜினமா செய்து விட்டேன்.
சமையலறையில் பாத்திரங்கள் உருளும் ஓசை. மெல்ல எழுந்து வருகிறேன்.
“என்னங்க கண்ணு ரெண்டும் நெருப்பாட்ட சிவந்திருக்கு!”
“மேகத்துக்கு அனுப்ப ராத்திரி முழுக்க உருவாக்கிக் கொண்டிருந்த நெருப்பு”னு சொல்லவா முடியும்!?
“நேரங்கெட்ட நேரத்தில் துணியை மெஷின்ல போட்டு எடுத்து, காய வைக்கிறதுக்கு காவல் இருக்கச் சொன்னா கண்ணு இப்படித்தான் செவக்குமாம்!”
“யாரு சொன்னது!?”
“குபீர் வானிலை ஆராய்ச்சியாளர்!”
*

Oct 1, 2018

கனவொன்றின் பாதியில்




நீந்திய மலை
ஏறிய கடல்
பறந்த நிலம்
தவழ்ந்த வானம்
நுகர்ந்த கோபம்
உணர்ந்த மணம்
தொடும் மகிழ்ச்சி
நினைத்த வருடல்
ஒலித்த கண்ணீர்
வழிந்த சொல்
தழுவிய நிழல்
படிந்த தேகம்
உறங்கும் விண்மீன்
ஒளிரும் இருள்
இவைகளைச் சற்றே மிச்சம் வைத்திருக்கும்
கரைந்தொழுகும் கனவொன்றின்
முதற் புள்ளியை
அடைந்துவிடும்
கனவொன்றின்
பாதியில் இருக்கிறேன்!

Nov 7, 2017

111% ஜிஎஸ்டி

கனரக வாகன ஓட்டுனராக தேர்ச்சி பெற்ற அந்த இளைஞர், தன் கனவாக “ஐபிஎஸ்” என்றார். “என்ன படிச்சிருக்கீங்க!?” “பத்தாங்கிளாஸ்” “வயசு?” “25” “மேல ஏன் படிக்கல?” “குடும்பச் சூழல்” “சரி... ஐபிஎஸ் எப்படி? எப்போ?” “2018ல் நேரடியா +2 எழுதுவேன் 2021ல் டிகிரி முடிப்பேன். அப்புறம் மூனு வருசம் ப்ரிபேர் செய்து 2024ற்குள் ஐபிஎஸ் ஆகிடுவேன்” - வேறொரு சந்தர்ப்பத்தில் எம்.ஏ இறுதி ஆண்டு படிக்கும் மாணவரிடம் “அடுத்து என்ன செய்யப்போறீங்க!?” “ஐஏஎஸ்” “என்ன காரணம்!?” “அது ஒரு செம்ம கெத்து!” “எப்போ!?” “ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ!” “ப்ரிப்ரேசன்!?” “இனிமேதான்” அதன்பின் கேட்ட எந்தக் கேள்விக்கும் பொருத்தமான பதில் வரவில்லை. இறுதியாகத் தான் ஒரு உண்மை தெரிந்தது 'TNPSC / UPSC' என்பவற்றைக்கூட அவர் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. * இங்கு பெரும் அச்சுறுத்தலைத் தரும் கேள்வி “அடுத்தது என்ன... எதை நோக்கி!?” என்பதுதான். வாழ்க்கைச் சாலைகளில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த இடத்தை அடைவதற்கான பயணம் என எந்தத் தீர்மானமும் இல்லாமல், தீரத் தீர பெட்ரோல் நிரப்பி்க்கொண்டு ஓடும் பென்ஸ் கார்களும், சென்னை (அ) பெங்களூர் என இடத்தைத் தீர்மானித்துவிட்டு இரண்டாம் முறை எஃப்.சிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பழைய ஃபியட் கார்களும் சென்று கொண்டிருக்கின்றன. என் கவனம் அந்த ஃபியட் கார்கள் அடைய வேண்டிய இடங்களை அடைந்துவிட வேண்டும் அல்லது நெருங்கிவிட வேண்டும் என்பதுதான். அப்போ அந்த பென்ஸ் கார்கள்!? வேறென்ன அவைகளின் பெட்ரோலுக்கு மட்டும் 111% ஜி.எஸ்.டி போடச் சொல்ல வேண்டும்!

Feb 9, 2016

கனவை நோக்கிய நெடும்பயணம்





கற்பனை செய்ய முடியாததொரு வேகத்தில் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலம் என்று எதைச் சொல்ல? இதோ இப்போது லாவகமாய் நழுவும் இந்த நொடியா, தத்தித் தாவும் நிமிடமா, கடக்கும் மணிப்பொழுதா, தன் போக்கில் கரையும் இரவும் பகலுமா? இவை எவற்றையும் கணக்கில் கொள்ள முடியாதபடி, ஆண்டுகளே அவசரமாய்த் தீர்கின்றன. சமீபத்தில் நடந்தது என நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் யோசித்துப் பார்த்தால் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்பொழுதுதான் நிகழ்ந்ததுபோல் இருப்பவையெல்லாம் எப்பொழுதோ நடந்து முடிந்து போனதாக இருக்கின்றன.

நாள், வாரம், மாதம், வருடம் என்பதில் எதுவும் மாறிவிடாத போதும், காலம் மட்டும் எப்படி விரைந்து ஓடுகின்றது!? இன்றைய நாட்களில் ஆக்கிரமிப்புகள் கூடிப்போய்விட்டதுதான் நாட்கள் வேகமாக ஓடுவதான தோற்றத்தைத் தருகிறதோ எனத் தோன்றுகிறது. நாள் துவங்கும்போதே ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று எனக் களைத்து நிமிர்கையில், நாள் தீர்ந்து போய்விடுகின்றது.

எப்போதும் இதுபோல் இருந்ததில்லையே. வாழ்ந்த காலம் வேறாகவும் வாழும் காலம் வேறாகவும்தான் இருக்கின்றன. வாழப்போகும் காலம் இன்னும் வேறானதாக, ’இப்படித்தான் இருக்கும்’ எனக் கற்பனை செய்யமுடியாததாக இருக்கலாம். இப்படியாக யோசிப்பதும், பேசுவதும் நிகழ்காலத்தின் மீது எப்போதும் புகார் வாசிக்கும் ஒருவித மனநிலையா!? அப்படியாகவே இருப்பினும்,  நிகழ்காலம் குறைகளற்றதாக எப்படி இருக்க முடியும்.

கால் நூற்றாண்டு காலம் பின்னோக்கி எந்த ஒரு தினத்திற்குச் சென்று பார்த்தாலும், அப்படியான நாட்களை ஆக்கிரமிக்க ஒன்றுமே இல்லையென்பதுதான் உண்மை. வாழ்க்கையில் ’இது வேண்டும், இப்படியாக இருக்க வேண்டும்’ எனும் கனவுகள் இல்லை. பெரிய தேவைகளற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். கனவுகள் இரவுகளொடும், உறத்தோடும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.

இன்றைய நாட்களை எந்நேரமும் எதுவோ ஒன்று ஆக்கிரமித்திருக்கின்றது. புதிய உருவாக்கங்கள் வாழ்வின் அங்கங்களாக மாறத்தொடங்கிவிட்டன. நேற்று அடைந்தது இன்றும், இன்று அடைவது நாளையும் பழையதாகிவிடுகின்றன. புதிதாய், மிகப் புதிதாய்த் தேவை எனும் வேட்கையோடு பயணம் நீள்கிறது. புதிது புதிதாய் வேண்டும் எனும் தேடலை, ஆசையை, இவை தேவையில்லாத ஆசை / பேராசை எனும் வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது.

ஆக்கிரமிப்பு மிகுந்த நாட்களை இலகுவானதாய்க் கடந்திட மிகுந்த திட்டமிடலும், ’எதிர்காலத்தில் இப்படியாக வேண்டும்’ எனும் தீர்க்கமான கனவும் அவசியமாக இருக்கின்றது. திட்டமிடாத அன்றாடங்கள் நெருக்கடி மிகுந்ததாக இருக்கின்றன. எதிர்காலத்தில் இது வேண்டும், இப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவற்ற வாழ்க்கை குழப்பம் சூழ்ந்ததாகவே அமைகின்றது.

ஒவ்வொரு நாளும் நம் முன் புதிய வாய்ப்புகளை முன்னிறுத்துக்கின்றன. சில நாட்கள் சிலவற்றை முற்றிலும் புறந்தள்ளி ’இவை பயன்பாட்டுக்கு உகந்ததன்று’ என முடக்குகின்றன. இவை இரண்டையும் சமன் செய்து வாழ்க்கையை நகர்த்திட, எதிர்காலம் குறித்த நம்பிக்கை மிகுந்த கூரிய பார்வையும், அந்த பார்வைக்கான கற்றலும், அதைச் செயல்படுத்துவதற்கான உழைப்பும் அவசியம்.

எதிர்காலத்தில் நமக்கு எது தேவை என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்து இப்போது கவலைப்பட வேண்டியதில்லை. அப்படியான கவலைகளற்ற கனவுதான் பாரதிக்கு இருந்திருக்க வேண்டும். பாரதியின் துணிச்சல்மிகு கனவுகளில் என்னை எப்போதும் உலுக்கிக் கொண்டிருப்பவை இரண்டு

”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற கவிதை வரிகள் நினைக்கும் கணந்தோறும் வியப்பேற்படுத்துவது ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பு எப்படி பாரதியால் அப்படியொன்றை தன் விருப்பமாக, கனவாகக் கொண்டிருக்க முடிந்தது என்பதுதான்.

தனக்கு வேண்டுவதைக்கூட ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதிலிருந்து எளிதாகத் தேடி எடுத்துக்கொள்ளவே தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில் ’காசியில் பேசும் உரையை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி வேண்டும்’ என நினைக்க எத்தனை துணிச்சலும் பேராவலும் இருந்திருக்க வேண்டும். ’அப்படியான கருவி எப்படியிருக்கும், எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எதன் மூலம் இயங்கும்’ என எதையுமே கற்பனை செய்திட முடியாத காலத்தில், தான் விரும்பும் காரியத்தைச் செய்ய ஒரு கருவி வேண்டும் எனக் கற்பனை செய்வது அல்லது கனவு காண்பது நிகழ்ந்திருக்கின்றது.

இக்கருவி செய்யும் கனவை விடவும், கூடுதலான வேட்கை நிறைந்த கனவொன்றும் பாரதியிடமிருந்து தெறித்ததை மறந்துவிட முடியாது. அடிமை விலங்கொடிக்க தேசம் முழுதும் வேள்வி நடந்த காலகட்டத்தில் விடுதலையை அடைந்தே விட்டதாகவே கனவு கண்டிட்ட துணிச்சல்தான் அது.

”ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”
எனும் கனவோ, தீர்க்கதரிசனமோ பாரதிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

பின்வருவதை முன் உணர்வதே தீர்க்கதரிசனம் எனில், பாரதியிடம் தீர்க்கதரிசனம் எனும் வல்லமை இருந்தது; பின்னால் வருமா வராதா என்று தெரியாதபோதும், அது தனக்கு வேண்டுமெனும் தீராத கனவு இருந்தது. கனவு அவரால் அடையக்கூடியதாகவோ, அவர் காலத்திற்குள்ளேனும் அடைக்கூடியதாகவோ இல்லாவிடினும், அவர் கண்ட கனவை காலம் மெய்யாக்கியது.

தீவிரமும், வேட்கையும், தேடலும் நிறைந்தவொரு கனவுதான் நமக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. ஒரு கனவை தீர்மானிப்பது மட்டுமே போதுமானதாக இல்லை. தீர்மானித்த கனவின் பாதையில் தெளிவு கொள்ளுதல் முதல் தேவை. கனவை நோக்கிச் செல்வதென்பது ஒரு நெடும்பயணம். அந்த நெடும்பயணத்தை எங்கு துவக்குகிறோம் என்பதிலிருந்து, கடக்கும் தொலைவின் ஒவ்வொரு படிநிலையையும் உணர்ந்து, தெளிந்து, மகிழ்ந்து பயணித்தல் அவசியம்.

கனவை நோக்கிய நெடும்பயணத்தில் ஒவ்வொரு நிலையை எட்டுவதையும் ”வெற்றி” என்கிறோம். அப்படியான எட்டல்களும், கருதும் வெற்றிகளும் இணைந்த தொகுப்புதான் அந்தப் பயணப்பாதை. கிட்டும் ஒவ்வொரு வெற்றியும் பயணத்திற்கான உந்து சக்தி. அடையும் ஒவ்வொரு தோல்வியும் அனுபவச் சேர்க்கை.

ஒட்டுமொத்தக் கனவை நோக்கிய பயணமோ, அதிலிருக்கும் இலக்குகளை நோக்கிய பயணமோ, அது முதலில் கோருவது நேர்மையான, அர்ப்பணிப்பு மிகுந்த பங்கேற்பை மட்டுமே. அதில் பிறழ்ச்சி ஏற்பட்டால் பயணம் மிகப்பெரிய தொய்வைச் சந்திப்பதை தவிர்க்கமுடியாது. கோரும் உழைப்பை பொய்யின்றி, சமரசமின்றி, வெற்றுச் சமாதானங்களின்றி முழுத்திறனோடு அளிக்கவேண்டும்

உதாரணத்திற்கு உழைப்பு கோரப்படும்போது அளிக்கப்படும் பதில்கள்….. ”நான் செய்கிறேன் / செய்வேன்” (I will do) அல்லது ”செய்ய முயற்சிக்கிறேன்” (I will try to do”)  என்பதுதான். ஒரு காரியத்தில் ”நான் செய்கிறேன்” என்பதை முழு ஒப்புக்கொள்ளலாகக் கருதலாம். ”செய்ய முயற்சி செய்கிறேன்” என்பதில் உண்மை முயற்சிகள் இருக்கலாம்; அல்லது மகிழ்வூட்டும் பதிலாகவோ, கேட்பவரை திருப்தி செய்வதற்கான பதிலாகவோ இருக்கலாம்.

“நாளை வருகிறாயா!?” எனக் கேட்கப்படுவதில், ”ஆமாம் வருகிறேன்” எனப் பதில் சொல்பவர்களில் 80% பேர் அவ்விதமே வருகிறார்கள். ”ஐ வில் ட்ரை” எனச் சொல்பவர்களில் 80% பேர் வருவதே இல்லை. முயற்சி செய்தலை நிகழ்த்தாமல், முயற்சி செய்கிறேன் என்பதை ஒரு தப்பித்தலுக்கான பதிலாக மட்டும் பிரகடனப்படுத்துகிறார்கள்

பயிலரங்கு ஒன்றில் ”Try” குறித்து உரையாடுகையில் நான்கு பேரைச் சுட்டி, ”எழுந்து நிற்க முயற்சி செய்யுங்கள்” என்றேன். நால்வரும் எழுந்து நின்றனர். ”ஏன் எழுந்து நிற்கிறீகள்?” எனக் கேட்டேன். சற்று குழம்பியபடி ”நீங்க தானே எழுந்திருக்கச் சொன்னீர்கள்!?” என்றனர். நான் ”எழுந்து நில்லுங்கள் என்றா!?” சொன்னேன் என அழுத்தமாகக் கேட்டேன். தங்களுக்குள் கிசுகிசுப்பாய் பேசிவிட்டு “இல்லை…. எழுந்திரிக்க ட்ரை பண்ணச் சொன்னீங்க!”

“எழுந்திருக்க ட்ரை பண்ணுங்கனுதானே சொன்னேன். எழுந்திரிக்கச் சொல்லலையே….!”

“ட்ரை பண்ணினாலே எழுந்து நிற்க வேண்டியதாகி விடுகிறது”

உண்மையில் முயற்சித்தல் என்பது எழுந்து நிற்பதல்ல, எழுந்து நிற்க முயற்சி செய்தல் மட்டுமே. அதாவது கால்களை சற்று வலுப்படுத்தி, உடலை இருக்கையிலிருந்து மேல் நோக்கி பெயர்த்துதல். முயற்சி என்பது வெறும் ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிடுதல் எனில், அதை மட்டுமே செய்துவிட்டால் போதும். இருக்கையிலிருந்து ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிட்டு அதோடு நின்றுவிட முடியுமா!? அப்படி நிற்பதை உடல் ஏற்றுக்கொள்ளாது. அந்த ஒரு அங்குல உயரத்தில் எவ்வளவு நேரம் சமநிலை பாவித்துத் தொடரமுடியும். இங்குதான் ’செய் அல்லது செத்துமடி’ எனும் பாடத்தை உணர்த்துகிறது முயற்சி.

எழுந்து நிற்க முயற்சி செய்ததில் நாற்காலியிருந்து சுமார் ஒரு அங்குலம் உயரத்தில் கால்களின் பலத்தில் மட்டுமே நிற்கிறோம். அச்சூழலில் வலி தவிர்க்க, சமநிலை காப்பாற்ற இருக்கும் வழிகள் ஒன்று வீழ்ந்துவிட வேண்டும் அல்லது எழுந்து நின்று விடவேண்டும். வீழ்வதற்காக முயற்சி செய்யவில்லை, எழுவதற்காகத்தான் அந்த முயற்சியினை மேற்கொண்டோம் என்பதால் அது நம்மையுமறியாமல் நிகழ்ந்து விடுகின்றது.

செயல்களில் காட்டும் அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும், தீவிரமும் வெற்றிகளைக் கையகப்படுத்தும். வெற்றிகளின்  தொகுப்பு தானாகவே கனவினை வசப்படுத்தும்.

-

நம் தோழி பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரை

-

Dec 2, 2014

விடுபட மறுக்கும் விரல்கள்





அதிகாலைக் கனவொன்றில்
அடர்ந்து பூத்திருக்கும்
தாமரைக் குளத்தில்
தவறி விழுகின்றேன்

உடலெங்கும் பிணையும்
தாமரைத் தண்டுகளில்
தண்ணீர்ப் பாம்பொன்றின்
தழுவல் இருந்ததை
தாமதமாகவே உணர்கின்றேன்

கூடிய பதட்டத்தில்
நீந்திக் கரையேற
நினைக்குமென் கைகளை
தாமரை மேலிருக்கும்
தேவதையொருத்தி பற்றுகிறாள்

அவள் எடையோடு
என் எடையும் தாங்கும்
தாமரை மலர்த் தண்டின்
வலிமையை வியந்தபடி கரையேறி
கைகளை விடுவிக்க முனைகின்றேன்

கனவிலிருந்து விடுபட்டபின்னே
கைகள் விடுபடுமென
உறக்கத்தின் கதவுகளைத் திறந்து
விடியலை அனுமதிக்கின்றேன்
 
விடுபட மறுக்கின்றன
பிணைந்து கிடக்கும்
பிள்ளையின் பிஞ்சு விரல்கள்!

-

Jul 14, 2010

கனவாகவே




பொறந்த ஏழாம் நாள் மூனுநாள் கூலிக்கு வாங்கினது
கருவாச்சி கருப்புன்னா கருப்பு  தொட்டா ஒட்டிக்கிற மாதிரி
பாட்டில் பாலும், பச்சப்புல்லும், நெறையப் பாசமும்
கொழுகொழுன்னு ஊர் கண்ணு ஒன்னாப் பட

மொத ஈத்து மூனு குட்டி புண்ணியத்துல
மூத்தவ குத்தவச்சதுக்கு மூனுவேள சோறு குண்டுமணியளவு தோடு
ரெண்டான் ஈத்து நாலு குட்டியில மிஞ்சுன மூனுல
சின்னவனுக்கு பழைய சைக்கிளு, படலுக்கு பதிலா தகரக் கதவு
மூனாம் ஈத்துல போட்ட நாலுகுட்டி
இருமியே செத்த புருசனுக்கு வாங்குன வைத்திய கடனுக்கும் வட்டிக்கும்


பெருத்த வவுறும், பெருந்தீனியும்
எப்படியும் இந்த ஈத்துல எனக்கு எதுனாச்சும் செய்வானு
மெதப்பா இருந்த நெனப்புல பொசக்கெட்ட மானம்
பொளிச்சுனு அடிச்ச மின்னலுல எறங்கி வந்த இடியில
கருகிப்போனது கருவாச்சி மட்டுமில்ல
இந்த பாழாப்போனவளோட கனாவும்தான்

___________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...