புதிய மொந்தை

இரண்டு வருடங்கள் இருக்கும், வழக்கம்போல் மதிய உணவுக்காக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தைக் கிளப்பிய, என் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் முகப்பில் கடை வைத்திருக்கும் நண்பரும் அதே சமயம் தன் இரு சக்கர வாகனத்தை கிளப்புகிறார். ஒரு விநாடி நேருக்கு நேராக பார்த்து சம்பிரதாயமாக மின்னல் போல் புன்னகைத்து புறப்படுகிறேன், அவரும் நான் போகும் சாலையிலேயே உடன் வருகிறார், சுமார் அரை மைல் தொலைவு தூரம் வரை அவர் எனக்கு சற்று பின்னால் வருவதை பக்கவாட்டில் இருக்கும் கண்ணாடி மூலம் எதேச்சையாக பார்த்தேன். அரசு மருத்துவ மனைக்கு எதிரில் இருக்கும் பிரிவில் நான் இடப்பக்கம் திரும்பி வீட்டுக்கு சென்று விட்டேன்...

சரியாக முப்பது நிமிடங்கள் கழித்து மதிய உணவை முடித்துக்கொண்டு அலுவலகம் வந்தபோது, அலுவலக கட்டிடத்தின் முன்பு கொஞ்சம் கூட்டம், எல்லோர் முகத்திலும் கடும் இறுக்கம்.

என்னவென்று விசாரிக்க, கடைக்காரர் விபத்தில் இறந்துவிட்டதாகவும், உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் ஒருவர் கூறினார்.

அரை மணி நேரம் முன்பு தானே பார்த்தோம், நான் போன சாலையில்தானே வந்தார் என பதறியடித்து அரசு மருத்துவமனைக்கு ஓடினேன்... பத்து வருடங்களுக்கு மேல் அவரோடு பழக்கம்.

அரசு மருத்துமனை பிரிவு வரை அவரைப் பார்த்தது நினைவிருக்கிறது. அதிலிருந்து வெறும் ஐம்படி தூரத்தில் விபத்து நடந்திருக்கிறது. அவருடைய வண்டி மற்றும் உடலில் சிறு சிராய்ப்பு கூட இல்லை. தட்டிவிட்டுப்போன வாகனத்தில் பட்டோ அல்லது விழுந்த வேகத்தில் நிலத்தில் பட்டோ தலையில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்தது.

மனைவி, வயதான தாயார், கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள் என இருந்த அந்தக் குடும்பத்தின் ஆணிவேரே அவர்தான். இத்தனைக்கும் அவர் சென்றது டி.வி.எஸ் 50 மொபட்தான். ஒருவேளை அவர் தலைக்கவசம் அணிந்திருந்திருந்தால் அன்று பிழைத்திருக்க வாய்ப்புண்டு என எல்லோருமே பேசிக்கொண்டோம்.

சாப்பிட புறப்படும்போது அவரை சந்திக்கிறேன். சாப்பிட்டு விட்டு திரும்பும் போது அவர் உயிருடன் இல்லை என்பதை எதன் பொருட்டும் ஜீரணிக்க முடியவில்லை....

அடுத்த சில நாட்கள், வாரங்களாக அந்த விபத்தும், அவருடைய இழப்பும் மிகப் பெரிய பாடமாக எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேயிருந்தது. பல வருடங்களுக்கு முன்பே தலைக்கவசம் வாங்கியிருந்தாலும்... தொலைவாக செல்லும் (அதில் ஒரு சல்ஜாப்பு, பக்கமா போனா மெதுவா போவோம், தொலைவா போனா வேகமா போவோமாம்) போது மட்டும் கவசம் அணிந்து வந்த நான்.... அன்று முதல் வாகனத்தை எடுக்கும் போதே தலைக்கவசம் அணிய ஆரம்பித்தேன், கவனம் கூடியிருந்தது, வேகம் குறைந்திருந்தது... காலப்போக்கில் (நாலாஞ்சு நாளிலேயே...) எல்லோரையும் பின்பற்றி தலைக்கவசம் அட்டாலிக்கு போனது, வேகம் சர்வசாதாரணம் ஆனது...

கடந்த மாதம் சென்னை சென்ற போதும், நேற்று கோவை சென்ற போதும் ஒன்றைக் கவனித்தேன், இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் எல்லோரும் தலையில் கவசம் போட்டிருந்தனர்... சட்டம் இயற்றி பலவருடம் அரசாங்கம் அதைக் கிடப்பில் போட்டாலும், ”அப்பாடா மக்கள் திருந்திட்டாங்களே”னு சந்தோசப்பட நண்பர் சொன்னார் “மக்கள் திருந்தல, அரசாங்கம்தான் வேற வழியில்லாம திருந்திடுச்சு” என்று. இந்த நாட்டில் மட்டும் தான் சட்டம் போட்டால் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து, எப்படியும் அதை அமல் படுத்த மாட்டார்கள். ஆனாலும் காலம் கடந்தேனும், தலைக்கவசம் ஒருவழியாக கட்டாயமாகி வருகிறது.

தலைக்கவசம் அணிவதால் இரண்டு நன்மைகள். கீழே விழுந்தால் முகம், தலை, ஓரளவு காக்கப்படும், அடுத்து வாகனத்தில் போகும்போது கழுத்தை வளைத்து தலைக்கும், தோளுக்கும் இடையே அலைபேசியை வைத்து கோணிக்கொண்டு பேசும் சர்கஸ் நின்று போகும். ஆனாலும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே அலைபேசியை எடுத்து, தலைக் கவசத்துக்குள் திணித்து பேசி இன்னும் சாகசம் புரிவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு தலைக்கவசம் கட்டாயம் எனச் சட்டம் வந்தபோது, அடித்துப்பிடித்து தலைக்கவசம் வாங்கியர்கள், அந்தச் சட்டம் அமல் படுத்தப்படாமல் காற்றில் மிதந்தபோது தலைக்கவசம் வாங்கிய தண்டச் செலவுக்காக கப்பல் மூழ்கிப் போனதற்கு நிகராக கவலைப்பட்டார்கள். இப்போது மீண்டும் ஆங்காங்கே அமல் படுத்தும் போது, காசு போட்டு வாங்கி, அட்டாலியில் கிடக்கும் தூசு படிந்த தலைக்கவசம் உயிர் பெறுவதை நினைத்து... மெதுவாய் மகிழ்ச்சி பிறக்கிறது...

போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கவிருக்கும் சில நூறு ரூபாய் அபராதத்திற்கும், பிடிபட்டால் குறைந்தது அரை மணி நேரமாவது சாலையோரம் நிற்க வேண்டுமே என்ற சிரமத்திற்கும் பயந்து கட்டாயமாக தலைக் கவசம் அணிவது என உறுதி பூண்டிருக்கிறேன்.... சட்டத்தை தொடர்ந்து அமல் படுத்தி காவல்துறை நான் பூண்டிருக்கும் உறுதியை நிலை நிறுத்துமா...


(ங்கொய்யாலே!!! ரொம்பத்தான் ஏத்தம்னு மனசாட்சி(!!!) திட்டுதுங்க)

_________________________________________________________

34 comments:

Prathap Kumar S. said...

அண்ணே தேவையான பதிவுதான். சாலைபாதுகாப்பு வாரத்திற்கு பொருத்தமான பதிவு.

பைக்குல போகும்போது நிறைய பேர் சர்க்கஸ் பண்றாய்ஙகளே, ரோட்டு நடந்து போறவங்களுக்கும் சேர்த்து டிக்கெட்டி வாங்கிகொடுக்கறனங்களே அதுக்கு என்ன பண்ணலாம்...

Anonymous said...

உண்மை தான், தலை கவசம் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு விபத்தில் மயிரிழையில் தப்பிய பின்பே நான் உணர்ந்தேன்

பிரபாகர் said...

இது சம்மந்தமாய் வேறொரு விஷயத்தோடு ஒரு இடுகையிட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்துக்காக எத்தனை இடுகை வேண்டுமானாலும் எழுதலாம். நண்பருக்கு நடந்தது நினைத்து மனம் கனக்கிறது.

தேவையான இடுகை கதிர்.

பிரபாகர்.

க.பாலாசி said...

//வாகனத்தில் பட்டோ அல்லது விழுந்த வேகத்தில் நிலத்தில் பட்டோ தலையில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்தது.//

மண்டையில அடிபட்ட இடமே தெரியாம பரலோகத்திற்கு பறந்த மக்களும் இருக்கிறார்கள்.

அவசியமான இடுகை.

Unknown said...

.// சட்டத்தை தொடர்ந்து அமல் படுத்தி காவல்துறை நான் பூண்டிருக்கும் உறுதியை நிலை நிறுத்துமா...\\

இதான்ன வேண்டாங்கறது. அப்ப காவல்துறைக்கு பயந்துக்கிட்டுத்தா தலை கவசமா?

Sivamjothi said...

We can escape from dusts on road.
If i dont wear helmet my eyes/head are filled with dusts.

கலகலப்ரியா said...

//சாப்பிட்டு விட்டு திரும்பும் போது அவர் உயிருடன் இல்லை என்பதை எதன் பொருட்டும் ஜீரணிக்க முடியவில்லை....//

this is life...

vasu balaji said...

(ங்கொய்யாலே!!! ரொம்பத்தான் ஏத்தம்னு மனசாட்சி(!!!) திட்டுதுங்க)//

சரியாத்தான் திட்டுச்சி:)). அதுக்குன்னு கார்ல போறப்ப கூட போட வேணாம்.

Unknown said...

நல்ல பதிவு ..
வாகனங்களில் செல்பவர்களை சிந்திக்க வைக்கும் பதிவு ..
நானும் உங்கள் எண்ணத்தை ஆமோதிக்கிறேன் .
http://vittalankavithaigal.blogspot.com

ஆரூரன் விசுவநாதன் said...

அவசியமான பதிவு....சரியான நேரத்தில் இடப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

தேவையான பதிவு:-)

நிலாமதி said...

அடிக்கடி நினைவூட்ட படவேண்டிய பதிவு..புதுவருட சங்கற்பமாக நடை முறை படுத்தலாமே.வருமுன் காப்போம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தேவையான பதிவு கதிர். நான் கடந்த 5 வருடங்களாக எப்பொழுது வண்டியை எடுத்தாலும் தலைக்கவசத்துடன் தான் எடுப்பேன்.

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் அண்ணே. தலைக் கவசம் அவசியம். மிக மிக அவசியம்.

இதில் நல்ல தலைக் கவசம் வாங்க வேண்டியதும் அவசியம். ISI தரச் சான்றிதழ் பெற்ற தலைக் கவசம் மிக மிக அவசியம்.

வினோத் கெளதம் said...

முடிவு எடுத்த வரைக்கும் நல்லது..

Kumky said...

:-))

Kumky said...

அவசியம்தான்...நகரத்திற்குள் அருகருகே சென்று வர தேவையில்லை என தோன்றுகிறது...
போலிசார் நகரத்தின் உள்ளே வாகன வேகங்களை கட்டுப்படுத்தியும், நகரங்களின் வெளியே தலைக்கவசத்தினை கட்டாயப்படுத்தியும் செயலாற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்...ஆனால் நடப்பதோ தலை கீழ்.

நசரேயன் said...

தலைகவசம் அவசியம்

திருவாரூர் சரவணா said...

உன் நல்லதுக்குதான்யான்னான்னா யாரும் கேட்க மாட்டாங்க. ஆனா ஒரு மரணத்தை முன்னிறுத்தி பார்க்கும்போது கசிவது மாவுநம் இல்லைங்க. வலி.

Romeoboy said...

\\சாப்பிட புறப்படும்போது அவரை சந்திக்கிறேன். சாப்பிட்டு விட்டு திரும்பும் போது அவர் உயிருடன் இல்லை என்பதை எதன் பொருட்டும் ஜீரணிக்க முடியவில்லை....//


இத படிக்கும் போது மனசுக்குள்ள ஏதோ செய்யுது அண்ணே

Anonymous said...

கதிர் இந்தச் சட்டம் வருமுன்பிருந்தே நான் தலைக் கவசம் அணிந்துதான் வண்டி ஓட்டுகிறேன். இதில் நகரத்திற்குள், வெளியே என்ற கும்கியின் கருத்தை எதிர்க்கிறேன். உங்கள் நண்பர் அடிபட்டதும் நகரத்திற்குள்தான்.

நகரத்திற்கு வெளியே அதிக இடம் இருப்பதால் ஒதுங்கவோ, வழி விடவோ வாய்ப்பதிகம். நகரத்திற்குள் நெரிசலில் சிக்கி விபத்துக்கள் அதிகம்.

Kumky said...

அண்ணே,
நகரங்களில் ஆங்காங்கே சிறு வேகத்தடைகள் மூலம் ஒட்டு மொத்த வாகன வேகங்களையும் கட்டுபடுத்த இயலுவதோடு அதிக ட்ராபிக் இருக்கும் இடங்களில் தானியங்கி சிகனல்கள் மூலமும் வாய்ப்பில்லாத சாலை சந்திப்புக்களில் ஒரு சில போக்கு வரத்து போலிசார் மூலமும் ஒட்டு மொத்த விபத்துக்களையுமே எளிதாக தடுக்க இயலும்.


ஒரு உதாரணத்திற்க்கு சொல்கிறேன்...
விற்பனை பிரதிநிதிகள் போல நகரங்களில் அருகருகே வாகனத்திலிருந்து இறங்கிச்செல்பவர்களுக்கு தலைக்கவசம் எவ்வளவு தலைவலி..

.அதே போல தலைக்கவசம் அனிந்த பின் நமது பார்வை முன்னால் மட்டுமே...

பக்கவாட்டு குறுக்கிடல்கள் தெரிவதில்லை..
.நகரங்களில் பக்கவாட்டு குறுக்கிடல்களே அதிகமென்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்..

மேலும் நகரங்களில் விபத்தினால் லேசான காயம் ஏற்படுவது தவிர்க்க இயலா சந்தர்ப்பங்களில் நடைபெறும்..அது பெரு வாகனங்களுக்கும் இடையே புகுந்து வேகமெடுக்க எத்தனிக்கும் டூ வீலர்களுக்கும் ஏற்படும் மயிரிழை தவறான புரிந்துகொள்ளல்தான்..

உயிர் இழப்புக்கள் நகரங்களுக்கு வெளியே ஏற்படும் விபத்துக்களால்தான் பெரும்பாலும்...

ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா..?

இப்போது போலிசார் என்ன செய்கின்றனர்....டி.வி.எஸ் எக்செலில் 30-40 கி மீ வேகத்தில் வந்து கொண்டிருப்பவரை வசமாக பிடித்து பைன் போட்டுக்கொண்டிருக்கின்றனர்...

ஊருக்கு வெளியே ஹெல்மட் பற்றி கவனிக்க கூட ஆளில்லை...

ஒரு பொது விஷயத்தினை அமல் படுத்துகையில் எல்லாவிதமான சாதக பாதகங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமல்லவா..?

Unknown said...

வனக்கம், நல்ல பதிவு
இப்பத்தான் ஆரம்பம்

CS. Mohan Kumar said...

அவசியமான பதிவு. ஜனவரி 1 முதல் 7 வரை சாலை பாது காப்பு வாரம். (நான் கூட இதனால் ஒரு தொடர் இடுகை இட்டேன்). இது தெரியாமலே கூட நீங்க இந்த பதிவு எழுதி உள்ளீர்கள்.

ஆமா போட்டோ மாத்திகிட்டே இருக்கீங்க??

Thamira said...

விபத்துகள் குறித்த கும்க்கியின் கருத்துகள் ஓரளவு ஏற்புடையதாயினும் முழுது ஏற்கத்தக்கதல்ல..

நானும் இந்த சட்டம் வருமுன்பிருந்தே ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் வண்டியை ஓட்டுகிறேன். இப்போதும் தவறுவதில்லை.

ஆனால் எப்போதாகிலும் (பொதுவாக விடுமுறையில் ஊருக்குச்செல்லும் போது) ஆளில்லா சுகமான காலை, அந்திவேளைகளில் ஹெல்மெட் இன்றி எதிர்காற்று முகத்தில் மோத செய்யும் ஏகாந்தமான பயணம் சுகமானது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதும் தவறு என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நாஞ்சில் பிரதாப்
(சர்கஸ் பண்றவனப் பார்த்த கொலவெறி வரும், என்ன பண்றது பேசாமதான் போகவேண்டியிருக்கு


நன்றி @@ பிரபாகர்
(ஆமாங்க, ஏற்கனவே “பட்டியலில் ஒரு வரியாகனு ஒரு இடுகை எழுதியிருக்கேன்)

நன்றி @@ க.பாலாசி

நன்றி @@ தாமோதர் சந்துரு
(பார்த்தீங்களாண்ணா, நானும் எல்லோர் மாதிரினு உண்மைய கும்முறீங்களே)

நன்றி @@ Balu

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ வானம்பாடிகள்
(சீட் பெல்ட்க்கு ஒரு இடுகையிருக்குது)

நன்றி @@ vittalan

நன்றி @@ ஆரூரன்

நன்றி @@ இய‌ற்கை
(ராஜி... நீங்க எழுதின விழிப்புணர்வு இடுகைதான் என்னை எழுத தூண்டியது)

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ ச.செந்தில்வேலன்

நன்றி @@ இராகவன் நைஜிரியா
(ஆமாங்க ISI தலைக் கவசம் மிக முக்கியம்தான்)


நன்றி @@ வினோத்கெளதம்

நன்றி @@ கும்க்கி

நன்றி @@ நசரேயன்

நன்றி @@ சரண்
(நாமே பின்பற்றுவது இல்லை, இதுல நாம எப்படிங்க மத்தவங்களுக்குச் சொல்லி....)

நன்றி @@ Romeoboy

நன்றி @@ வடகரை வேலன்
(கவனித்தேன் கார் ஓட்டும் போது கூட அலைபேசி அதிகம் தவிர்த்தீர்கள்)

நன்றி @@ கும்க்கி
(ஊருக்கு வெளியே தலைக்கவசம் பற்றி யாரும் கண்டுகொள்ளாதது வருத்தமான ஒன்றுதான்)

நன்றி @@ jaffer

நன்றி @@ மோகன் குமார்
(நானும் போட்டோ மாத்தி மாத்திப் பார்கிறேன்... ஒருத்தர் கூட நான் அழகா இருக்கேனு சொல்ல மாட்டேன்கிறாங்களே மோகன்... இஃகிஃகி)

நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்
(ஆஹா... தலைக்கவசம் இல்லாம இருக்கிற சுகத்தை(!!!) கவிதை மாதிரி சொல்றீங்க

Unknown said...

கட்டாயம்னு சொல்லுற இடத்தில் தான் ஹெல்மெட் அணிகிறேன்.. :-(

//.. சர்கஸ் பண்றவனப் பார்த்த கொலவெறி வரும், என்ன பண்றது பேசாமதான் போகவேண்டியிருக்கு ..//
வேற என்ன செய்ய முடியும்..??!!

//.. ஒருத்தர் கூட நான் அழகா இருக்கேனு சொல்ல மாட்டேன்கிறாங்களே ..//
ஒருத்தர சந்தோசப்படுத்துற பொய் கூட தப்பு இல்லைன்னு சொல்லுறாங்களே..

கமலேஷ் said...

மிகவும் பயனுள்ள பதிவு...வலியும், பயமும் நிறைந்து வழிகிறது..... உங்களின் பகிர்வுக்கு நன்றி....

சீமான்கனி said...

நல்ல பகிர்வு அண்ணே...நான் ஓட்டுனர் உரிமம் தவிர மற்ற எல்லா பாதுகாப்புடன் போவேன்...சில நூறு உட்பட...(இப்போ இல்லை...)

Chitra said...

பயனுள்ள இடுகை. இதை படித்து சில பேராவது தலை கவசம் அணிய ஆராம்பித்தால் நன்று.

புலவன் புலிகேசி said...

உண்மையில் உபயோகமான பதிவுண்ணே..நான் கூட ஒரு நேரம் தலைக்கவசத்தை முன்னால் வைத்து தான் சென்று கொண்டிருந்தேன். ஆனால் இப்பல்லாம் எங்க போனாலும் தலைக்கவசம் போடாமல் போறதில்ல

குடந்தை அன்புமணி said...

தலைக்கவசம் எவ்வளவு அவசியம் என்பதை தங்கள் இடுகையை படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே நேரத்தில் அண்ணன் நைஜீரியா ராகவன் அவர்கள் சொன்னதும் கருத்தில் கொள்ள வேண்டும். போலீஸ்காரர்களை ஏமாத்துவதாக நினைத்க் கொண்டு சாலையில் விற்கும் விலைமலிவான தலைக்கவசம் வாங்கி அணியக்கூடாது.

பனித்துளி சங்கர் said...

உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் !


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

கே. பி. ஜனா... said...

தேவையான பதிவு.
கவசம் அணிவோம், திவசம் தவிர்ப்போம்!