தேங்கிக் கடக்கும் கணம்

இன்னும் சன்னல் திரைகளை ஒதுக்கவில்லை. அந்த வெளிச்சம் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவித உறக்கக்கலைப்பைத் தரலாம். எதிர்வீட்டு குட்டி நாய் சன்னமாய் குரைக்கிறது. க்ரீச் க்ரீச்சென ஒரு சைக்கிள் கடந்துசெல்லும் ஓசை கேட்கிறது. அநேகமாக பேப்பர் போடும் ஆளாக இருக்கலாம். பால், பேப்பர் என எல்லாவற்றிற்கும் எக்ஸல் சூப்பர் வந்த பிறகும் சைக்கிளில் பேப்பர் போடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அலுவலத்தின் எதிர் டீக்கடைக்கு மாலைமலர் பேப்பர் போடும் ஒல்லி மனிதர் நினைவுக்கு வந்தார். வேட்டியை மடித்துக்கட்டியவாறு வெவ்வேறு சாலைகளில் சைக்கிள் மிதிக்கும் அவரைப் பார்ப்பதுண்டு.

வெளிச்சம் சூழும் ஒரு நாளை எதிர்கொள்வதில் என்னென்ன சுவாரசியம் இருக்கின்றது என்பதைக்கூட யோசிக்க நேரமின்றி ஓடிக்கொண்டுதானே இருக்கின்றோம். ஏனோ இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்து ஏதாவது எழுத வேண்டுமென்று மனதில் ஒரு ஆசை. ஆனால் எதை எழுத?. எழுதி, செப்பனிடாமல் போட்ட கட்டுரைகள் நான்கைந்து இருக்கின்றன, கிட்டத்தட்ட திருப்தியுற்ற கவிதைகள் பத்துக்கும் மேல் கிடக்கின்றன. முடித்த ஒரு சிறுகதையும், சில பத்திகளோடு கிடக்கும் சிறுகதைகள்(!) மூன்று இருக்கின்றன

எழுதி கிடப்பில் போட்ட எதையும் எடுத்துச் செப்பனிட, செதுக்கிட முனைகையில் ஒரு சோம்பேறித்தனமும் அயர்ச்சியும் வந்துவிடுகிறது. ஆனாலும் எழுதனும் என விரல்களின் நுனிகள் தவித்தபோது இந்த விடியலைத் தவிர வேறு எது குறித்தும் எழுதத் தோன்றவில்லை.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் முழுதாய் பொழுது விடிந்துவிடும். இரவுகள் அடைகாத்த ரகசியங்கள் அனைத்தும் விலகுவதுபோலே, வெளிச்சம் இண்டு இடுக்கெல்லாம் பரவும். இருளும், உறக்கமும் ஒருவித வரம், அமைதி. உறக்கம்போல் நம்மை ஆசுவாசப்படுத்துவதும், அணைத்துக்கொள்வதும் எதிலும் இல்லை என மனதில் தோன்றியது.

ஒருமுறை காவிரித் தடுப்பணையில், மதகிடுக்கில் கசிந்துவரும் நீரில் குளித்த உற்சாகம் அப்படியே மனதிற்குள் நிரம்பியது. அது ஒரு கடும் மதிய வேளை. கசகசத்த வெயிலில் அவ்வழியே வந்துகொண்டிருந்தபோது, குளிக்கும் எந்தத் திட்டமுமின்றி, சட்டென தண்ணீரைப் பார்த்தவுடன், எல்லாம் உருவிப் போட்டுவிட்டு மதகிடுக்குள் பீறிடும் நீரில் நனைந்து, விழுந்து, புரண்டு என திகட்டத் திகட்டக் குளித்தது நினைவிற்கு வந்தது. அதற்கென நேரம் ஒதுக்கி ஒருமுறை போய்வரவேண்டும் எனவும் தோன்றியது. திட்டமிடாமல் அமையும் சந்தர்ப்பங்களைவிட, திட்டமிட்டு, எதிர்பார்த்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் நிச்சயமாக சுவாரசியம் குறைவுதான்.



ஒரு விடியலை கொஞ்சம் லயித்து எதிர்கொள்வதில்தான் எத்தனை சுகம். இது எல்லா நாட்களிலும் கை வந்துவிடுகிறதா என்ன? இதோ என்னைக் கடந்துபோகும் இந்த நொடி எத்தனை புதுமையானது. ஆனால் கடந்தது கடந்ததுதானே. அற்ப ஆயுள் கொண்டதுதான் ஒரு கணமா.

இதோ இப்போது தழுவிச்செல்லும் காற்று, சன்னல் வழியே கசியும் இந்த மென் மஞ்சள் வெளிச்சம், மின்சாரம் தொலைந்த நகரத்திற்கே, வீட்டிற்கேயென்று இருக்கும் பிரத்தியேக அமைதி, அந்த அமைதியில் எங்கிருந்தோ கடந்து வரும் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத, அறிமுகமற்ற பறவையின் சப்தம், இவை எல்லாமே இப்போது, இந்தக்கணம் உருவான புதியவைகள்தானே… கடந்து செல்லும் அவை கரைந்துபோகும் ஒன்றுதானே. கொஞ்சம் ரசிக்க முற்பட்டால், இதில்தான் எத்தனையெத்தனை பொதிந்து கிடக்கின்றன.

ஆனாலும் நம்மை ஏதோ ஒன்றுதானே ஆண்டு கொண்டிருக்கின்றது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், நம்மை நாமே ஆளும் வாய்ப்பையும் கூட நாம் முற்றிலும் தூக்கிப் போட்டுவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது. ஒரு வல்லரசின் கீழ் சிக்குண்ட ஒரு காலணி நாடு, எப்படி ஒன்றைச் சுயமாய் சிந்தித்து, சுயமாய்த் திட்டமிட்டு செயல்படுத்திட வாய்ப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றனவோ, அதற்குச் சற்றும் கூடவோ குறையவோ நாமும் தடுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றோம் என்பதுதான் மிகுந்த அயர்ச்சியாக இருக்கின்றது.

ஒரு வரியை எழுதக்கூட யோசனை வந்துவிடுகிறது. ஒரு காலத்தில் போகின்ற போக்கில் எழுதிய வார்த்தைகளை, இன்றைக்கு எழுத ஏனோ தயக்கம் வந்துவிடுகிறது. நாம் நம்மேலோ, யாரோ நம்மேலோ கட்டமைத்திருப்பதாக நினைக்கும் அந்த மாய பிம்பமும் கூடக் காரணமாக இருக்கலாம். கண் விழித்த பொழுதிலேயே, அடுத்தடுத்துச் செய்தாக வேண்டிய காரியங்கள் மூளைக்குள் வரிசை கட்டி நிற்கும்போது, இயற்கையாய் நம்மைத் தழுவும் இவைகளில் லயித்து ரசித்துக் கடப்பது எங்கனம்? நானும் கூட எழுத்தை ரசிப்பதாக, எழுத்தில் லயிப்பதாக நினைத்துக்கொண்டு எதையோ நிரூபிக்க, நிறுவ இப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேனோ என்றும் சந்தேகமாக இருக்கின்றது.

சமீபத்தில் வண்ணதாசன் நாஞ்சில்நாடனுக்கு எழுதிய கடிதத்தில்//உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும்சீக்குஉண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல். ஆளை உள்ளே இழுக்கும்.// எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதை வாசித்ததில் இருந்து, இந்த சொரிமணல் எனும் வார்த்தை மட்டும் மூளைக்குள் அப்படியே ஒட்டிக்கொண்டது. பெரும்பாலான நேரங்களில் சிந்தனைக்குள் அது சுழன்றடித்துக் கொண்டே இருக்கின்றது. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்பிளஸ், அரட்டை, அவ்வப்போது பேசும் இணைய நட்புகள் குறித்தவை, SMS, தொலைக்காட்சி செய்தி சானல்கள், அரசியல் பகடிகள், அரசியல் எரிச்சல்கள், அரசியல் குறித்த கையாலாகத்தனங்கள் என எத்தனையெத்தனையோ சொரிமணல் சூழல்கள், பாதத்தின் கீழே அப்படியே உள்வாங்க காத்திருக்கின்றதோ எனவும் தோன்றுகிறது.

இணையமும், அதில் இருக்கும் எழுத்தின் ருசியும் தனக்குள்ளே இழுத்து இழுத்து தின்றுகொண்டிருக்கின்றது என்பதை நினைக்கும்போது, இரையாகிக் கொண்டேயிருப்பது குறித்தும் ஒருவகையில் பரிதாபமாகவும் இருக்கின்றது. இப்போது எழுதிக்கொண்டிருப்பதும்கூட அப்படிப்பட்ட சொரிமணல் தானோ எனும் சந்தேகத்தை நேர்மையாகவே எழுப்ப வேண்டியிருக்கின்றது.

கணினியின் பின் புலத்தில் சமீபத்தில் தரவிறக்கம் செய்த Laya Project காணொளிகள் சில ஓடிக்கொண்டிருக்கின்றன. இசை மட்டும் காதுகளில் தளும்பிக் கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட வகையான இசை, குரல், சூழல் என அதுவும் ஒரு சொரிமணலாக மீண்டும் மீண்டும் என்னை தன்னுள் இழுத்துக்கொண்டிருக்கின்றது. எத்தனையாவது முறையாகக் கேட்கிறேன் என்று தெரியவில்லை. எத்தனையாவது முறையில் அது சலித்துப்போகுமென்று தெரியவில்லை.

அறையின் கதவு திறக்கப்படுகிறது. நிமிர்ந்து பார்க்கும்முன்னே நாசி தழுவும் வாசனை, காபியின் வருகையை உணர்த்துகிறது. இன்ஸ்டன்ட் காபித் தூளின் கரைந்த வாசனை மெல்ல நாக்கில் ஒரு சுவையை முன்கூட்டியே கற்பனை செய்ய வைக்கிறது. அருகில் படுக்கையில் கவிழ்ந்தவாறு மகள் உறங்கிக்கொண்டிருக்கிறாள். சிறிது நேரத்திற்கு முன் போர்த்திவிட்டு வந்த போர்வை சுருண்டு வித்தியாசமான வடிவில் கிடக்கின்றது. காபியை அருந்துமுன்னே மிகமிகச் சின்னதாய் ஒரு தயக்கம் வருகிறது. காபியில் இருப்பது ப்ரிட்ஜில் இருந்த பால்தானே. பால்காரர் வர ஏழுமணிக்கு மேலாகும். ப்ரிட்ஜ் பாலுக்கென்று ஒரு சொதப்பல் சுவை இருக்கத்தான் செய்கின்றது. அதைச் ’சுவை’ என்று சொல்லலாமோ? எப்படிச் சொல்ல முடியும்….

அநேகமாக நான் இதையெல்லாம் எழுதிய நேரத்தில், இதை வாசிக்கும் நீங்கள் விழிக்காமல் இருந்திருக்கவும் சாத்தியமுண்டு. இதை வாசிக்கும் சாத்தியம் ஏற்படும்போது நகரத்தின் பரபரப்பும், நாளின் அழுத்தமும் கூடி வேறொரு மனோநிலையில் இருக்கக்கூடும். வாசிக்கும்போது குறைந்தபட்சம் ஒரு சிறு புன்னகை இதழோரம் சிந்தும் சாத்தியம் என்பது மட்டுமே எதிர்பார்ப்பு.

வேறென்ன…

இந்த நாளும் சிந்தனைகளாலேயே நிரம்பி, வெளியேறி, அழுத்தம் கொடுத்து, வெப்பமூட்டி, அலையடித்து, நனையவைத்து, குளிரூட்டி, சோகப்படுத்தி, மகிழ்வூட்டி என நகரப்போகின்றது.

-0-

9 comments:

பழமைபேசி said...

நன்று நன்று வைகறை யாமம் நன்று!

//இந்த நாளும் சிந்தனைகளாலேயே நிரம்பி, வெளியேறி, அழுத்தம் கொடுத்து, வெப்பமூட்டி, அலையடித்து, நனையவைத்து, குளிரூட்டி, சோகப்படுத்தி, மகிழ்வூட்டி என நகரப்போகின்றது.//

சினமூட்டி எனும் சொல் விடுபட்டு இருக்கிறபடியால், இன்னும் ஒரு பொழுது நேரம் மின்சக்தி இல்லாதிருக்கக் கடவது!!

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...
பொழுதின் புலர்ச்சியும்
காபியின் மணமும்
கலக்கலாய் கட்டுரையில்...

ILA (a) இளா said...

அ..அ..அ..அருமை

நாஞ்சில் நாதம் said...

//Laya Project - tapatam ///nice music. ரெண்டு மூணு வருசமாக கேட்டு கொண்டிருக்கிறேன் இன்னும் சலிக்கவேயில்ல.
நல்ல இடுகை.

\\எத்தனையாவது முறையில் அது சலித்துப்போகுமென்று தெரியவில்லை.\\

கண்டிப்பா சலிக்காது

மதுமிதா said...

///ஒரு விடியலை கொஞ்சம் லயித்து எதிர்கொள்வதில்தான் எத்தனை சுகம்///

இலக்கிய ரசனை கொஞ்சும் கணங்கள் கதிர்

மதுமிதா said...

///ஒரு விடியலை கொஞ்சம் லயித்து எதிர்கொள்வதில்தான் எத்தனை சுகம்///

இலக்கிய ரசனை கொஞ்சும் கணங்கள் கதிர்

மதுமிதா said...

/// இதோ இப்போது தழுவிச்செல்லும் காற்று, சன்னல் வழியே கசியும் இந்த மென் மஞ்சள் வெளிச்சம், மின்சாரம் தொலைந்த நகரத்திற்கே, வீட்டிற்கேயென்று இருக்கும் பிரத்தியேக அமைதி, அந்த அமைதியில் எங்கிருந்தோ கடந்து வரும் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத, அறிமுகமற்ற பறவையின் சப்தம், இவை எல்லாமே இப்போது, இந்தக்கணம் உருவான புதியவைகள்தானே… ///

இவையே நம்மை புத்துயிர்ப்புடன் வாழக்செய்யும் கணங்கள்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - நீண்ட நிகழ்வுகளை கட்டுரையாக வடித்தமை நன்று - முதல் மறுமொழியான பழமைபேசியின் மறுமொழியினை அப்படியே வழி மொழிகிறேன். நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

thamilarasi said...

எதார்த்தம் எதார்த்தம் அப்படியே சர்வ சாதாரணமா இண்டு இடுக்கெல்லாம் விளையாடுது இயல்பின் நடை
தனித்துவம் வாய்ந்திருக்கிறது எழுத்தும் நடையும்..