கொங்கு மண்டலமே கொண்டாடும் ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் உழைப்பில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை நான் சென்றிருந்த போது பதிவுலக நண்பர்கள் மதுரையிலிருந்து கார்த்திகை பாண்டியன், மதுரை சரவணன், திருப்பூரிலிருந்து முரளிகுமார், ஈரோடு குழுமத்தூண்கள் ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு, கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாலை நேரம் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. நேற்றைய விழாவின் பேச்சாளர்கள் விஜய் டிவி விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம். மழைச்சாரல் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சாளார்கள் பேசத் துவங்கும் முன்பே ஒரு கட்டத்தில் மழையின் மிரட்டலுக்குப் பயந்து மக்கள் களைந்து, ஆனாலும் சகாயம் அவர்களின் உரை கேட்க சற்று ஒதுங்கி மீண்டும் அமர்ந்தனர். விழாவிற்கு எஸ்.கே.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.
| அகல்விளக்கு, க.பாலாசி, நான், மதுரை சரவணன், கார்த்திகை பாண்டியன் |
முதலில் விஜயன் உரையைத் துவங்கினார். அருமையான குரல் வளம், கட்டிப்போடும் பேச்சுத்திறன், இருந்தும் என்ன செய்ய, மனதில் ஒன்றும் பதியவில்லை. ”தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கான பல்கழைக் கழகம்” என்ற போது சிரிப்பு வந்தது. பேச்சில் இன்னும் பக்குவம் கைவரவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (ஓராண்டுக்கு முன் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பேசியதும் இது போன்றே).
புத்தகத் திருவிழாவில் கல்லூரி அளவில் நடந்த பேச்சுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் தலா நான்கு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
எல்லாம் நிறைந்து திரு. சகாயம் அவர்கள் ஒலி வாங்கியைப் பிடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததற்கு மிகச் சரியான தீனியாக அமைந்தது உரை.
| உரை நிகழ்த்தும் திரு. சகாயம் |
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் இ.ஆ.ப. – உரை ஒரு பார்வை
நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம், எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய உரை மிகத் தெளிவாக காட்டியது. நேர்மையாக இருப்பதால் நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எதிரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய உறவுகளும், நட்புகளும், உடன் பணி புரியும் அதிகாரிகளும், கீழே பணிபுரியும் அலுவலர்களும் இவருடை நேர்மையின் பொருட்டு விலகிப்போவதைச் சொல்லும் போது வலியாய் உணரமுடிந்தது. தான் நேர்மையாக இருப்பதற்கு தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்று மனைவியின் முழு ஒத்துழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்றார். அதில் இருந்த உண்மை அவருடைய துணைவியார் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது.
பத்து வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் சர்வ வல்லமை படைத்த பெப்சி(Pepsi) நிறுவனத்தின் குளிர்பானத்தில் பாட்டிலில் மாசு படிந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தி, இறுதியாக நிரூபித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருக்கும் பெப்சி ஆலையை சீல் வைத்து மூடிய செய்தி பற்றிக் கூறும் போது, அந்த ஆலையை சீல் வைத்து இழுத்து மூட வேண்டிய முடிவினை எடுக்க வெறும் பனிரெண்டு பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் தயார் செய்து அளிக்கக்கூடிய அறிவு மட்டும் போதாது, தன் பணியில் துளியும் கறைபடியாத நேர்மை தந்த துணிவுதான் மிக முக்கியம் என்று சொன்னபோது, பெருமிதத்தில் மனம் சிலிர்த்தது.
அரசு பள்ளிகள் மேல் தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக தொடர்ந்து தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய தான் பெரும் முயற்சியெடுப்பதை சில உதாரணங்களுடன் விவரித்தார்.
பெற்றோர்களுக்கான ஒரு தனிப்பட்ட குடும்பச் சண்டையில், பள்ளியில் படிக்கும் மகன், தன்னைத் தேடி மனு அளிக்க வந்த சம்பவம் குறித்து பேசும் போது, மாணவனை ஊக்குவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கயெத்தனித்த நேரத்தில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறுக்கிட, அதே சமயம் தன் கீழ் உள்ள அதிகாரியை அதற்கு நியமித்தும், அந்த மாணவனின் தாய் தீர்வுக்கு ஒத்துவராத நேரத்தில் அந்தத் தந்தை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள, தன்னால் தீர்வு வழங்கமுடியாமல் போனதை கனத்த இதயத்தோடு, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.
தேசம் போலிகளின் தேசமாய் மாறிப்போனதை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.
குவிந்து கிடந்த மக்களில், ஆட்சித் தலைவரின் உரை கேட்க பலநூறு பள்ளிக் குழந்தைகளும் பள்ளி சீருடையுடன் குவிந்து கிடந்தது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
