Showing posts with label சகாயம். Show all posts
Showing posts with label சகாயம். Show all posts

Dec 6, 2011

நேர்மைக்கும் நேசிக்கப்படுவதற்கும்


சமீப காலத்தில் நேர்மை எனும் வார்த்தையை எங்காவது வாசிக்கும்போதோ, கேட்கும்போதோ, பேசும்போதோ என்னையறியாமல் மனதிற்குள் வந்து சம்மணமிட்டு அமரும் பெயர் சகாயம் என்பதுதான். நாமக்கல் மாவட்டத்தில் நிகரற்ற பணி, மதுரையில் சிறப்பான தேர்தல்கால செயல்பாடுகள், அதன் பின்னரும் தொடரும் சிறந்த நிர்வாகம் என எப்போதுமே அவர் குறித்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். 

இந்நிலையில் நாமக்கல்-மோகனூர் சுப்பிரமணியம் கலைக்கல்லூரியின் தாளாளரும் நண்பருமான திரு. பழனியாண்டி அவர்கள், சில நாட்களுக்கு முன் தங்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வடிவமைக்க வேண்டுமெனக் கேட்டபோது. எதேச்சையாக ”இந்த ஆண்டு சிறப்புவிருந்தினர் யாரெ”னக் கேட்டேன். ” கலெக்டர் சகாயம்ங்க” என்றபோது மனதிற்குள் ஒரு மின்னல் அடித்தது. “ஆஹா, கண்டிப்பா நானும் வர்றேங்க, அழைப்பிதழை நானே அமைத்துக்கொடுக்கிறேன்” என மகிழ்ச்சியோடு தெரிவித்தேன்

சனிக்கிழமை (03.12.2011) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு நிச்சயம் செல்லவேண்டும் என ஒரு வாரமாக மனதில் குறித்துவைத்திருந்தது, சனிக்கிழமை திடீரென முளைத்த ஒரு தவிர்க்க முடியாத பணியால் தடைபட்டுப்போனது. மிகுந்த மனவருத்தத்தோடு அன்றைய நாளைக் கடத்திக்கொண்டிருக்கும்போது, முன் மதிய நேரத்தில் நாமக்கல் நகர அரிமா சங்கத்தின் தலைவர் நண்பர் ’சாந்தி’ மணி அவர்கள் திடீரென கைபேசியில் அழைத்தார். “இன்னிக்கு சாயந்திரம், எங்க அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் தினம், சகாயம் கலெக்டர் வர்றார். ஈரோட்ல இருந்து தனபாலன் வர்றார், அவரோடு நீங்களும் கட்டாயம் வரவேண்டும்” என அழைத்தார். அதுவரை இருந்த மனச்சோர்வு மாயமாகிப்போனது.

சகாயம் உரை. மேடையில் பழனியாண்டி, சந்திரசேகரன், ’சாந்தி’மணி
 

இதற்குமுன் சகாயம் அவர்கள் கூட்டத்தில் பேசியதைக் கேட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது. முன்பு இருந்ததைவிட இளைத்துக்காணப்பட்டார். ஆனால் இதற்குமுன் கண்டதைவிட அதி உற்சாகமாய்த் தெரிந்தார். நாமக்கல் நகரத்தில் இருப்பதில் கொஞ்சம் கூடுதல் சந்தோஷமாய் இருக்கிறார் என்பதும் புரிந்தது.

ஒலி வாங்கி அவர் வசம் சென்றது. இதற்குமுன் பலமுறை உரை நிகழ்த்தியைப் பார்த்திருக்கிறேன். இம்முறை பேசும்போது உடல்மொழி மிகச்சிறப்பாக தாண்டவமாடியது. நாமக்கல் ஆட்சியராக பணியாற்றிய போது நிகழ்ந்த சிறப்பான நிகழ்வுகள் குறித்து, அதில் மாவட்ட மக்களின் ஒத்துழைப்பு குறித்து நினைவுகூர்ந்து நிறைய செய்திகளைப் பகிர்ந்தார். நாமக்கல்லில் நம்பிக்கை இல்லம்” உருவாக்கப்பட்டதின் பின்னனியில் இருந்த வலிமிகுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார். அந்த இல்லம் திறம்படச் செயல்பட முன்கூட்டியே உருவாக்கிய திட்டம் குறித்துப் பேசினார்.

பணிக்கு வந்த 19 வருடங்களில் சந்தித்த 18 பணியிட மாற்றங்கள் குறித்துப் பேசும்போது, அதுவே அவர் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம் என்பது புரிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒருமுறை நெடுஞ்சாலையில் தன் வாகனத்திற்கு முன் இருசக்கரவாகனத்தில் தடுமாற்றத்தோடு சென்ற குடிகாரர்களை மடக்கி விசாரித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னபோது, அந்தக் குடிகாரர்களில் ஒரு ஆள் தன் சட்டைப்பையில் இருந்து 100 ரூபாய் எடுத்து நீட்டி லஞ்சமாக வைத்துக்கொண்டு தன்னை விடுவிக்ககோரியதை நினைவு கூர்ந்தார். “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என சொல்லிக்கொண்டிருக்கும் தன்னிடமே லஞ்சம் அளிக்கப்பட்டதைக் குறிப்பிட்டதோடு, “வாகனத்தை இயக்கமுடியாமல் தடுமாறும் குடிகாரனுக்கும் கூடத் தெரிந்திருக்கிறது காசு கொடுத்தால் காரியம் சாதித்துக்கொள்ளலாம்” எனக்கூறியபோது நிஜம் சுட்டது.

பட்டயநாள் விழா கேக்

பயிற்சிக்காக வடஇந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து தன்னை பணிமாற்றம் செய்த  போது, பிள்ளைகளின் படிப்பு, பயிற்சியிலிருந்து உடனே திரும்பமுடியாத நிலை. புதிய ஆட்சியர் பொறுப்பேற்றதால் வீட்டைக் காலி செய்யவேண்டிய சூழல் என குடும்பம் சற்றே சிரமப்பட்டிருக்கின்றனர். 45 நாட்கள் கழித்தே பயிற்சியிலிருந்து திரும்பியிருக்கிறார். அதன்பின் புதுதிருப்பூர் திட்டக்குழுமத்தின் அதிகாரியாகப் பணியாற்றும் வேளையில், ஒரு முன்னிரவுப் பொழுதில் அலைபேசி அழைக்கிறது. எடுத்தால் மறுபக்கம் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவின்குமார். 

”சகாயம் நீங்கள் மதுரைக்குச் செல்லவேண்டும்”

“எதற்கு அய்யா என்ன விசயம்”

“அங்கு சென்று ஆட்சியராகப் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள். இது மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆணை”

அடுத்த நான்கைந்து நாட்களில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அதன்பின் நடந்தவைகளை பரபரப்பாக அவ்வப்போது செய்திகளில் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். மதுரையில் சிறப்பாகச் செய்துவிட்டீர்கள் என யாராவது புகழ முற்பட்டால், சிறுபுன்னகையோடு மறுத்துவிட்டு, ”சட்டம் பெரிது, அதன்படி செயல்படுகிறேன்” என்கிறார் உறுதியான பார்வையோடு.

உற்சாகமான உரை

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு நகரத்தில் அறிமுகம் செய்த உழவர் உணவகங்களில் 11 மாதங்களில் 1 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்ததைப் பெருமையோடு நினைவுகூறும்போது, அதில் பயன்பெற்ற விவசாயிகளின் பெயர்களைக்கூட பட்டியலிடுகிறார். வெண்ணந்தூரில் பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் எடுத்து, மாவட்டத்தில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இரண்டு அரசுப்பள்ளி மாணவர்கள், உயர்கல்விக்கு அரசு அளித்த நிதியைப் பெற மறுத்து, அதே அரசுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிப்போம் என்று கூடுகின்றனர். இந்த ஆண்டு 1174, 1164 மதிப்பெண்கள் பெற்று இருவரும் மருத்துவக் கல்லூரியில் இணைந்திருப்பது வரை தகவல்களைப் பகிரும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.

நாமக்கல் மாவட்டத்தை விட்டுச் சென்று ஆண்டுக் கணக்காகின்றது. மதுரை மாவட்டத்தில் நிறைய உழைத்து, உழைத்தும் கொண்டிருக்கிறார். ஆனாலும் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகளை, அதில் இருந்த நபர்களின் பெயர்களோடு எந்தக் குறிப்பும் இல்லாமல் படபடவெனச் சொல்லிக்கொண்டே போவதைக் காணும் போது ஆச்சரியத்தில் விழிகள் விரிகின்றன. மனம் மலர்கின்றது.

அரிமா தனபாலன் உரை


அவருக்குப் பின் சில அரிமா சங்கத் தலைவர்கள் பேசுவதைப் பொறுமையோடு கேட்கிறார். கூட்டம் நிறைவடைகின்றது. அரங்கை விட்டு வெளியேவந்து மிக இயல்பாக உரையாடிக்கொண்டே தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு சகஜமாக எல்லோரோடும் உணவருந்துகிறார். இருநூறுக்கும் மேற்பட்டிருந்த அரிமா சங்க உறுப்பினர்களும், ஏனையோரும் அவரையே சூழ்ந்து சூழ்ந்து நகர்ந்து தங்கள் உணவை உண்கின்றனர். அவரை நெருங்கும் ஒவ்வொரு மனிதனிடமும் மிகப்பெரிய நேசம் வழிந்தோடுகிறது.

எல்லோரின் வாய்களும் உணவை மட்டும் மெல்லவில்லை, உடன் சகாயம் குறித்த வார்த்தைகளையும் மென்றுகொண்டிருப்பதை உணரமுடிகின்றது. அவரைக்குறித்துப் பேசும் முகங்களில் ஒருவித துள்ளல் தாண்டவமாடுகிறது.

நாமக்கல் நகர அரிமா சங்க அமைப்பினர் திரு.சகாயம் அவர்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்துவந்துவிட ஆறுமாதங்களுக்கு மேலாக முயற்சித்திருக்கின்றனர். மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் கிராமத்தோப்பு அமைக்க அரிமா சங்கத்தினர் பெரிதும் துணைநின்றதால், அவராலும் தட்டமுடியவில்லை. எனினும் பணிச்சூழலில் காலம் தாழ்த்தி தற்போது வந்திருக்கிறார். அப்படி வந்தவர் மேல் அவர்கள் காட்டிய அன்பும், நேசமும் அவ்வளவு எளிதில் ஒரு மனிதனுக்கு கிட்டிவிடாது.

உணவு முடித்து கிளம்பும் தருணம் வந்த போதிலும் மக்கள் மொய்த்துக் கொண்டேயிருந்தனர். மிகப்பொறுமையாக அவர்களோடு உரையாடினார். அவ்வப்போது அழைக்கும் அலைபேசிக்குப் பதிலளித்தார். பின்னிரவு நேரத்திலும் அந்த மனிதர்களின் பிணைப்பிலிருந்து விடுபட அவர் ஆழ்மனமும் இடமளிக்கவில்லையென்றே தோன்றியது. அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடுவதை உணர்வுப்பூர்வமாக அவர் விரும்பி அனுபவிப்பதை அவரின் உடல்மொழியில் புரிந்துகொள்ள முடிந்தது. 

ஒருவழியாய்ப் புறப்பட்டு, வாகனத்தை நோக்கி நகர, பெருங்கூட்டம் அப்படியே அந்த திசையில் நகர்ந்தது. வாகனத்தில் ஏறி அமர்ந்து, வாகனம் வேகம் பிடிக்க கூட்டம் நெகிழ்ச்சியோடு தளும்பிக்கொண்டிருந்தது.

இதுபோல் பற்பல கூட்டங்களில், முக்கியப் பதவி வகிப்போரை, எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அரசியல் தலைவர்களை என விதவிதமாய் நேசிக்கும் கூட்டத்தினரை பலவிதங்களில் கண்டதுண்டு. ஆனாலும் இங்கு வழிந்தோடிய அடர்த்தியான நேசிப்பு எனக்கு, இது ஒரு புதுவிதமான, இதுவரைக் காணாத ஒரு அனுபவமாகவே பட்டது.

திரும்பும் வழிநெடுகிலும், அவர் மீது மக்கள் கொண்டிருந்த நேசம் குறித்தே பேச்சும் சிந்தனையும் ஓடிக்கொண்டிருந்தது. யார் இவர்? ஒரு அரசு அதிகாரிதானே? அதுவும் மாவட்டத்திலிருந்து வருடத்திற்கு முன்பே மாற்றலாகிப்போய்விட்ட ஒருவர். அதிலும் அங்கு கூடியிருந்தவர்களில் யாருமே அவரிடம் நேரிடையாகப் பயன்பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது எனவும் தோன்றியது. ஆனாலும் இப்படி ஒட்டுமொத்த நேசிப்புக்கு உகந்த மனிதனாக எப்படி மாறிப்போனார்.

சிறப்பான செயல்பாடுகள் மூலம் நேசிப்புக்கு உகந்தவராக மாறுவதற்கு இவர் ஒரு நிஜமான உதாரணம் எனத் தோன்றியது. நேர்மையாக இருப்பதற்கும், நேசிக்கப்படுவதற்கும் இவரே சரியான ஒரு முன் மாதிரி எனவும் தோன்றியது. இன்னும்கூட அவ்வாறே தோன்றிக்கொண்டிருக்கிறது.

~



Apr 5, 2011

எனது ஓட்டு மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கே!


சகாயம் குறித்த எழுத்தாளர் பெருமாள்முருகனின் இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலத்தைக் கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர்” என்ற வரிகளோடு தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறப்பானதொரு நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்த போதுதான் ஊடகங்களின் பார்வை சகாயம் அவர்கள் மேல் விழத்தொடங்கியது. அதன்பின்னரே அதுவரை அவர்கடந்து வந்த பாதையில் அவருடைய நேர்மையும், அதற்காக அவர் தாண்டி வந்த இடர்களும் தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் அவர் ஆட்சித்தலைவராக இருந்த காலத்தில் அரசு பள்ளிகள் மேல் செலுத்திய கவனம், சுற்றுச்சூழல் காக்க நட்ட பல லட்சம் மரக்கன்றுகள், விவசாயிகளை நோக்கி கிராமம் கிராமமாக ஒவ்வொரு இரவுகளில் தன் பரிவாரங்களோடு புயலாய் புறப்பட்டு நல்ல ஆட்சியை வழங்கிய விதம், நள்ளிரவுகளில் நெடுஞ்சாலைகள் மேற்கொண்ட சோதனைகள், கிராமங்களில் கணினி நிறுவி இணையத்தில் புகார்களைப் பெற்று உடனே தீர்வுகண்ட வேகம் என, இப்படித்தான் ஒரு மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்.

கிராம நிர்வாக அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் கிராம எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் இட்ட கட்டளைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டுமொத்த கிராம நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ய, அதுகண்டு மக்கள் வெகுண்டெழுந்து கிராம நிர்வாக அதிகாரிகளை விரட்டியடித்த வரலாறும் உண்டு.

நேர்மை எப்போதும் ஆள்வோருக்கு பிடிப்பதில்லை என்பதற்கிணங்க ஆட்சித்தலைவர் பதவியிலிருந்து சகாயம் விலக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக பணிக்கு அனுப்பப்பட்டார். நாமக்கல் மாவட்டம் அதுவரை காணாத ஒரு கொந்தளிப்பை மக்கள் மூலம் கண்டது, ஆனாலும் எல்லாக்கொந்தளிப்பு போல அதுவும் கரைந்து போனது கூடவே சகாயம் ஆற்றிவந்த மக்கள் சார் நற்பணிகளும் கரையத் தொடங்கியது.

காலங்கள் கரைந்ததில், இதுவரை இந்தியா காணாத புரட்சியாக தமிழகத் தேர்தல் ஆணையம் தேர்தலைச் செம்மையாக நடத்த புதிய புதிய யுக்திகளை வகுத்து வந்தநிலையில், தேர்தலை நேர்மையாக நடத்த சரிவராது என நினைத்த அதிகாரிகளை (மாநில காவல்துறைத் தலைவர் உட்பட) ஒரே இரவில் மாற்றியமைத்ததில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தூக்கப்பட்டார், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் நியமிக்கப்பட்டார்.

திருமங்கலம் சூத்திரத்தை பயன்படுத்த நினைத்த மதுரையை மையம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு சகாயத்தின் நேர்மை சிம்ம சொப்பனமாக அமைந்தது. அதிர்ந்த ஆளும்கட்சி தேர்தல் ஆணையத்தை எதிரியாக பாவிக்கத் துவங்கியது, மக்கள் நேசிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை  ”நெருக்கடி நிலை” என பிரகடனப்படுத்தச் செய்தது. ”சகாயம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று” பேசுகிறார் என பொய்யாக அலறியது. ”சகாயம் மிரட்டுகிறார்” என கீழே பணிபுரியும் அதிகாரியைவிட்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கச் சொன்னது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

பாரபட்சமின்றி தனக்கு கிடைத்த வாய்ப்பை நேர்மையாக செயல்படுத்த நினைக்கும் ஒரு மிகச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவரை நாளொரு புகார் பொழுதொரு புலம்பல் என தங்கள் சொந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை தோற்கடிக்க முயற்சி செய்கிறது ஆளும்கட்சி!

இதுவரை சகாயம் குறித்த புகார்களை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் அவர்கள் தள்ளுபடி செய்திருக்கிறார். கூடுதலாக சகாயம் மீது பொய்ப் புகார் கூறிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்ததோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டிருக்கிறது.

இதோ இப்போது மதுரையில் இருக்கும் பல பொதுநல அமைப்புகள் ஒட்டுமொத்தமாக சகாயத்தின் நேர்மையான செயல்பாடுகளை ஆதரித்து குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன.

எந்தக்கட்சியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், நல்ல வேட்பாளர் என மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கட்டும், தகுதியான நபர் வெற்றியடையட்டும். 



ஆனால்
எதிர்க்கட்சிகளைவிட தங்களுக்கு இடையூறாக இருக்கும் நேர்மையான ஆட்சியர் சகாயம் அவர்களை எதிரியாக நினைக்கும் இந்தத் தேர்தலில்…….. தேர்தல் என்பதை விட இந்தப் போரில் சகாயம் வெல்ல வேண்டும்.

நேர்மைக்கு மரியாதை செலுத்த, நேர்மையின் கரங்களை வலுப்படுத்த நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்

-0-
-0-


Aug 9, 2010

புத்தகத் திருவிழா- சகாயம் – நேர்மை


               கொங்கு மண்டலமே கொண்டாடும் ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் உழைப்பில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை நான் சென்றிருந்த போது பதிவுலக நண்பர்கள் மதுரையிலிருந்து கார்த்திகை பாண்டியன், மதுரை சரவணன், திருப்பூரிலிருந்து முரளிகுமார், ஈரோடு குழுமத்தூண்கள் ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு, கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாலை நேரம் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. நேற்றைய விழாவின் பேச்சாளர்கள் விஜய் டிவி விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம். மழைச்சாரல் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சாளார்கள் பேசத் துவங்கும் முன்பே ஒரு கட்டத்தில் மழையின் மிரட்டலுக்குப் பயந்து மக்கள் களைந்து, ஆனாலும் சகாயம் அவர்களின் உரை கேட்க சற்று ஒதுங்கி மீண்டும் அமர்ந்தனர். விழாவிற்கு எஸ்.கே.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.

அகல்விளக்கு, க.பாலாசி, நான், மதுரை சரவணன், கார்த்திகை பாண்டியன்

முதலில் விஜயன் உரையைத் துவங்கினார். அருமையான குரல் வளம், கட்டிப்போடும் பேச்சுத்திறன், இருந்தும் என்ன செய்ய, மனதில் ஒன்றும் பதியவில்லை. ”தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கான பல்கழைக் கழகம்” என்ற போது சிரிப்பு வந்தது. பேச்சில் இன்னும் பக்குவம் கைவரவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (ஓராண்டுக்கு முன் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பேசியதும் இது போன்றே). 

புத்தகத் திருவிழாவில் கல்லூரி அளவில் நடந்த பேச்சுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் தலா நான்கு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். 

எல்லாம் நிறைந்து திரு. சகாயம் அவர்கள் ஒலி வாங்கியைப் பிடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததற்கு மிகச் சரியான தீனியாக அமைந்தது உரை.
 
உரை நிகழ்த்தும் திரு. சகாயம்



நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் இ.ஆ.ப. – உரை ஒரு பார்வை

நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம், எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய உரை மிகத் தெளிவாக காட்டியது. நேர்மையாக இருப்பதால் நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எதிரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய உறவுகளும், நட்புகளும், உடன் பணி புரியும் அதிகாரிகளும், கீழே பணிபுரியும் அலுவலர்களும் இவருடை நேர்மையின் பொருட்டு விலகிப்போவதைச் சொல்லும் போது வலியாய் உணரமுடிந்தது. தான் நேர்மையாக இருப்பதற்கு தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்று மனைவியின் முழு ஒத்துழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்றார். அதில் இருந்த உண்மை அவருடைய துணைவியார் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது.

பத்து வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் சர்வ வல்லமை படைத்த பெப்சி(Pepsi) நிறுவனத்தின் குளிர்பானத்தில் பாட்டிலில் மாசு படிந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தி, இறுதியாக நிரூபித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருக்கும் பெப்சி ஆலையை சீல் வைத்து மூடிய செய்தி பற்றிக் கூறும் போது, அந்த ஆலையை சீல் வைத்து இழுத்து மூட வேண்டிய முடிவினை எடுக்க வெறும் பனிரெண்டு பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் தயார் செய்து அளிக்கக்கூடிய அறிவு மட்டும் போதாது, தன் பணியில் துளியும் கறைபடியாத நேர்மை தந்த துணிவுதான் மிக முக்கியம் என்று சொன்னபோது, பெருமிதத்தில் மனம் சிலிர்த்தது.

அரசு பள்ளிகள் மேல் தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக தொடர்ந்து தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய தான் பெரும் முயற்சியெடுப்பதை சில உதாரணங்களுடன் விவரித்தார்.

பெற்றோர்களுக்கான ஒரு தனிப்பட்ட குடும்பச் சண்டையில், பள்ளியில் படிக்கும் மகன், தன்னைத் தேடி மனு அளிக்க வந்த சம்பவம் குறித்து பேசும் போது, மாணவனை ஊக்குவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கயெத்தனித்த நேரத்தில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறுக்கிட, அதே சமயம் தன் கீழ் உள்ள அதிகாரியை அதற்கு நியமித்தும், அந்த மாணவனின் தாய் தீர்வுக்கு ஒத்துவராத நேரத்தில் அந்தத் தந்தை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள, தன்னால் தீர்வு வழங்கமுடியாமல் போனதை கனத்த இதயத்தோடு, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.

தேசம் போலிகளின் தேசமாய் மாறிப்போனதை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.

குவிந்து கிடந்த மக்களில், ஆட்சித் தலைவரின் உரை கேட்க பலநூறு பள்ளிக் குழந்தைகளும் பள்ளி சீருடையுடன் குவிந்து கிடந்தது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.





வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...