Showing posts with label ஆவணப்படம். Show all posts
Showing posts with label ஆவணப்படம். Show all posts

Dec 31, 2012

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி


பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள்.

தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல், ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் ”தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது. இரத்தத்தை மாற்றி தாய்ப் பாலைத் தருவதைப் புனிதமாக கருதும் சமூகம், அதே பெண் தன் கர்ப்பப்பையை சுத்திகரித்து வெளியேற்றும் உதிரத்தை ஒரு தீண்டத்தகாத பொருளாக, மறைக்க வேண்டிய சங்கடமாக, தீட்டாக பாவிப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.



என் வாழ்வுலகம் சார்ந்த பெண்கள், இந்த மாத சுழற்சியில் உதிரம் கழியும் செயலில் உடல் ரீதியாகத் துவண்டு, தளர்ந்து, பொறுக்க முடியாமல் வலி பொறுத்துக் கடப்பதை உணர்ந்திருக்கிறேன், அதேநேரம் அவர்களுக்கு அந்த நிகழ்வை சமூக ரீதியாகக் கடப்பதில் இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளில் அடைபட்டிருக்கும் அவலம் குறித்து செவிட்டில் அறைந்து வலி தெறிக்கத் தெறிக்கத் தருகிறது மாதவிடாய் ஆவணப்படம்.

மாதவிடாய் என்றால் என்ன என்பது கூட, அதை மாதந்தோறும் சந்தித்துவரும் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக மிகத்தெளிவாக விளக்க வாய்ப்பளிக்காத கல்விச்சூழலும் இருக்கும் சமூகத்தில் இதை யார் எப்படி யாருக்கு புகட்டுவது?

சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இன்னும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தபட்டு தள்ளிவைக்க ”மட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் உபயோகிக்க தனிப் பாத்திரங்களும் இருப்பதைக் கண்டு கிராமத்தைச் சபிக்கவே தோன்றுகிறது. சாதியைச் சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர்களைவிடவும் சம்பிரதாயங்களைச் சொல்லி இன்னும் கடைபிடிக்கும் ”ட்டு வீடு” மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

நூறு ரூபா கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் இருப்பதுபோல், பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் இதற்கான ’நாப்கின்’னை மாற்ற வாய்ப்பற்று இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் காணத் துன்பமே மிகுகிறது.

பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அழிக்க வெகு அரிதாக, சில இடங்களில் மட்டுமே பொருத்தமான இயந்திரங்கள், வாய்ப்புகள் கொண்ட சூழல் அமைந்திருக்கின்றன. பொதுக் கழிப்பிடங்களில், வேறுவழியின்றி தூக்கிவீசப்படும் பயன்படுத்திய நாப்கின்களை சுத்த செய்ய அங்கு பணியில் இருக்கும் பெண்கள் படும் துன்பமும் கொடியதாக இருக்கின்றது.

சமூக நலன் கருதி இதைத் தயாரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்தின் துணைப்பொதுமேலாளர் திரு. இளங்கோவன் (geetaiis@gmail.com) அவர்களுக்கும், இயக்கிய திருமதி கீதா இளங்கோவன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இந்தப்படத்தின் குறுந்தகடு இலவசமாக தரப்படுவதாகவும் அறிகிறேன்.

பல தரப்பட்ட சூழல், பலதரப்பட்ட, பல நிலைப்பெண்கள் என மிகுந்த உழைப்பில், அருமையான திட்டமிடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் மிக நிச்சயமாகக் காணவேண்டும். 

இந்த உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், உடனடியாக தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு, இயற்கையான ஒரு நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
 
இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்டிகிறது, நான் இது குடும்பத்திற்கான படம் என்றே பார்க்கிறேன். படத்தை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.




ன்றி தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்

-

Aug 10, 2012

”நாளி” காடு சிந்திய ரத்தம் - ஆனந்தவிகடன் கட்டுரை

வ்வொரு மலைப் பயணத்திலும் உயிர் தொட்டுத் தாலாட்டும் குளிரை அனுபவித்தபடி உயரச் செல்லச் செல்ல... நீளமான விறகுக்கட்டினைத் தலைச் சுமையுடன் கடந்துசெல்லும் பழங்குடியினப் பெண்கள் கண்களில் படத்தான் செய்கிறார்கள். அவர்கள், காட்டில் காய்ந்த விறகுகளைப் பொறுக்கிப் பிழைக்கிறார்கள். காடு அவர்களுக்கு இலவசமாக விறகு தருகிறது என்ற மனோபாவத்தோடு கடந்துபோகிறோம் நாம். ஆனால், இன்று அந்த சுள்ளிகளுக்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம்.


 
காடு... அவர்களின் தாய்மடி. பூமி...கருவறை. ஆனால், இன்று அவர்களே அங்கு அகதிகளாக மௌனம் சுமந்து இருக்கிறார்கள் என்பதை எத்தனை சுகவாசிகள் உணர்கிறோம்?

தமிழகத்தின் வடமேற்கு எல்லையில் கேரளா, கர்நாடகத்தோடு இணைந்து பிணைந்துகிடக்கும் நீலமலை எப்படி சிதைக்கப்பட்டது என்ற வரலாற்று ஆவணம்தான் 'நாளி’ ஆவணப்படம். இரா.முருகவேள், 'ஒடியன்’ லட்சுமணன் இணைந்து எழுதி, இயக்கி இருக்கிறார்கள்.

காடுகளில் வாழும் அத்தனை விதமான உயிரினங்களில், தானும் ஒரு உயிரினமாக வாழ்ந்துவருகிறார்கள் பழங்குடியினர். சமவெளிகளில் வாழும் நாகரிகம் (!) அடைந்ததாக நம்பும் அறிவுஜீவிகள் அவர்களை எப்படிச் சீரழித்தார்கள் என்பதை ஆவணப்படுத்துகிறது 'நாளி’. சமவெளியில் இருந்தவன் சந்தன மரத்தில் வீடுகளை இழைக்க, ஆதிவாசி, மூங்கில்களாலே தன் குடியிருப்பை அமைத்துக்கொண்டான். சமவெளியில் இருப்பவன் பொழுதுபோக்குக்காக வேட்டையாட... ஆதிவாசி தன் உணவின் அவசியம்  தவிர, வேறு எதன் பொருட்டும் விலங்குகளைத் தொடவே இல்லை. 1830-களில் ஆங்கிலேயன் அழித்த சோலைக் காடுகளால், ஓடைகளில் நீர்வளம் பாதிக்கப்பட்டதாக அப்போதைய கோவை ஆட்சியர் சல்லிலன் ஆவணப்படுத்தியதை நினைக்கும்போது, அதன் பின் அழிந்த சோலைக் காடுகளும் சிதைந்த ஓடைகளும் மனதில் ரத்தம்  வடியவைக்கின்றன.

பணத்துக்காக நடப்பட்ட தேக்கு மரங்கள் தன் அருகே எதையும் வளரவிடாமல், மண்ணை மணலாக மாற்றி வனங்களை அழிக்கிறது. சீனாவில் இருந்துவந்த தேயிலை தென் இந்தியா, அஸ்ஸாமில் இருந்த அடர் வனங்களை அழித்தது மட்டும்  அல்லாமல் அங்கு இருந்த பழங்குடியின மக்களையும் கொத்தடிமை ஆக்கியது. காட்டில் இருந்த மனிதர்கள் சமவெளி மனிதர்களால் இப்படி சிதைக்கப்பட்ட கசப் பான வரலாற்றைத்தான் விவரிக்கிறது 'நாளி’.


வரி செலுத்தாத விவசாயிகள் மலைப் பாதைகளை அமைக்க அடிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதும் தேக்குக் காடுகளை அமைக்க ஒவ்வோர் இடமாக அழிக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட பழங்குடிகள் ஒருகட்டத்தில் தங்கள் பூர்வீக வசிப்பிடங்களையே தொலைத்ததும் திடுக்கிட வைக்கிறது.

தங்கவேட்டை என்ற பெயரில் தோண்டி அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டக் காடுகள், நீர் வளத்துக்கு எனத் தேக்கப்பட்ட அணைகளால் மூழ்கி அழிந்த காடுகள், நீர் மின் திட்டங்களுக்கு எனச் சுரங்கங்களில் புதைந்துபோன காடுகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் காடு சிந்திய ரத்தம் அடர்த்தியான கவிச்சிவாடை அடிப் பதாகத் தோன்றுகிறது.

குடியிருப்பு, சொகுசு விடுதிகளைச் சுற்றிப் போடப்படும் கம்பி வேலிகளில் காலம் கால மாகப் பயணப்பட்ட தடங்களைத் தொலைத்த யானைகள் பாதை மாறி, வேலிகள் அமைத்து பழக்கப்படாத பழங்குடியினரின் பகுதிகளுக்குள் புகுந்து, அவர்களின் விளை நிலத்தைத் துண்டாடும் அவலம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

நாட்டில் 30 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும் என்னும் அரசியல்தனத்தில் இந்தச் சமூகத்துக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதைக்  கொதிப்பாகப் பதிவு செய்கிறது 'நாளி’.  

பூர்வகுடிகளை விரட்டிவிட்டுத் தேக்கு மர வீடு, காபி, தேநீர், சுற்றுலா, சொகுசுஅரசியல் எனச் சிலர் இப்போது வாழ்ந்துகொண்டு இருப் பது எல்லாம் ஒரு வாழ்க்கையா?

இந்தக் கருத்துகளை மிகுந்த மெனக்கெடலுடன் ஆவணப்படமாக்கி இருக்கும் கோவன் வெளியீட் டகத்துக்குப் பாராட்டுக்கள்!
-
விபரங்களுக்கு : 91590 33939

நன்றி : ஆனந்தவிகடன்

-

Jul 23, 2012

ஈரோட்டில் மறந்துபோன மாமனிதர்கள்! - ஆனந்த விகடன் என்விகடன் கட்டுரை

ல்லோரும் தனி மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட மனிதனாகத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரின் தியாகங்களைக் காணும் போதுதான் இந்தப் பூமி அன்பினாலும் தியாகங்களினாலும் கட்டமைக்கப்பட்டது என்பது புரிகிறது.




ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 650 ஏக்கர் விளைநிலம், புகையிலை மண்டி, மஞ்சள் மண்டி, 100 ஆண்டுகளுக்கு முன்பே http://www.vikatan.com/images/rupee_symbol.png40 லட்சம் முதலீடு கொண்ட சொந்த வங்கி எனச் செழிப்பான ஒரு குடும்பம் இருந்தது. ஆனால், மக்களுக்காக அவர்கள் எல்லாவற்றையும் துறந்தார்கள். வெளியில் அதிகம் தெரியாத இந்தக் கதையை 'ஓயாமாரிஎன்ற பெயரில் ஆவணப்படம் ஆக்கி இருக்கிறார்  'சோளகர் தொட்டிநாவல் எழுதிய .பால முருகன்.


இந்த ஆவணப்படம் டி.சீனிவாச அய்யர் மற்றும் அவருடைய மகன் ஜி.எஸ்.லட்சுமண அய்யர் ஆகியோரின் தியாகம் குறித்துப் பேசுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு துவக்கத்தில் லட்சுண அய்யர் காலமானார். அவர் மறைவுக்குச் சில மாதங்கள் முன்பாக அவரைச் சந்தித்து ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றிய சீனிவாச அய்யர் தலித் மக்களுக்கு அக்ரஹாரத்தில் உள்ள தன் வீட்டில் சமபந்தி உணவு அளிக்கின்றார். இதனால், அக்ரஹாரம் அவரை ஒதுக்கி வைக்கிறது. சீனிவாச அய்யரின் மகளை வாழா வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது.

சீனிவாச அய்யர் கோபியில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைக் கொடுப்பதுடன், தலித் மாணவர்களுக்காக கல்வி நிறுவனங்களையும் இலவச விடுதியையும் துவக்குகிறார். தலித் மக்களும் எல்லாரையும்போல் சுகாதாரமாக, சுதந்திரமாக வாழத் தன் னுடைய சொந்த நிலத்தில் காற்றோட்டமான வீடுகள், அகலமான சாலைகள் என காலனி அமைத்துக் கொடுக்கிறார்.

ராஜாஜி சுதந்திராக் கட்சி துவங்கியபோது, காங்கிரஸ்காரர்களின் போக்குப் பிடிக்காத சீனிவாச அய்யர் சுதந்திரா கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கிறார். உடனே எதிர் அணியினர் சீனிவாச அய்யரின் வங்கியில் முதலீடு செய்து இருந்த தங்களின் மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் திருப்பிக் கேட்கிறார்கள். அசராமல் தன்னுடைய மொத்த சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து வங்கிக் கணக்கினைத் தீர்க்கிறார் சீனிவாச அய்யர். இதனால், அவருக்கு எதுவுமே மிஞ்சாமல் போகிறது.

தொடர்ந்து அவருடைய மகன் லட்சுமண அய்யருக்கு, ஊர்க்காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள். பழநியில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் இவரைப் பற்றி கேள்விப்பட்டு, தன்னுடைய குடும்பத்துப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறார். சத்தியாக் கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமண அய்யர், அவருடைய மனைவி லட்சுமி அம்மாள் இருவரும் சிறை செல்கின்றனர்.  

பெல்லாரி சிறையில் இருந்த காலத்தில் லட்சுமண அய்யர் மனித மலத்தை அள்ளும் வேலையைச் செய்கிறார். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்து, குஜராத் சென்று காந்தியைச் சந்திக்கிறார். அப்போது காந்தி, 'தலித் மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் உழைக்க வேண்டும்என்று லட்சுமண அய்யரிடம் உறுதிமொழி பெறுகிறார்.

1951, 1981- என இரண்டு முறை கோபி நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற லட்சுமண அய்யர், பொதுக் கிணறுகளில் தலித் சமூகத்தினர் தண்ணீர் எடுக்கும் உரிமைக் காகப் பல வழிகளிலும் போராடுகிறார். தலித் கள் வாழும் பகுதியிலேயே கிணறு வெட்டிக் கொடுக்கிறார். நகராட்சி மூலம் அதிரடித் திட்டங்கள் தீட்டி வீடுகளில் இருந்த உலர் கழிப்பிடங்களை, நீர் வழிக் கழிப்பிடங்களாக மாற்றி இந்தியாவிலேயே மனித மலத்தை மனிதன் அள்ளாத முதல் நகராட்சியாக கோபியை மாற்றுகிறார். தேசத்தில் நிகழ வேண்டிய நல்ல மாற்றங்களைத் தன்னளவில் துவங்கி, தொடர்ந்து செயல்படுத்துகிறார் லட்சுமண அய்யர்.

இவற்றை எல்லாம் மிக அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டது குறித்து விசாரிக்கும் காட்சியில், சிறுவர்களை அழைத்து வயிற்றைக் காட்டச் சொல்லி, வயிறு புடைப்பாக இருக்கிறதா எனச் சோதிப்பதன் மூலம் ஒரு தாத்தாவின் கவிதைத்தனமான அன்பை வெளிப்படுத்துகிறார்.


ஈரோடு மாவட்டத்தின் அடையாள மனிதர்கள் என்பதில் தீரன் சின்னமலை, தந்தை பெரியார் என்பவர்களுடன் லட்சுமண அய்யரின் பெயரும் இடம்பெற வேண்டியது காலத்தின் அவசியம். அதற்கு இந்த ஆவணப் படம் ஓர் அவசியமான ஆரம்பம்.




***
26.07.2012 ஆனந்த விகடன் - கோவை என்விகடனில் வெளியான விமர்சனக் கட்டுரை.

நன்றி : ஆனந்தவிகடன், ச.பாலமுருகன்.

தொடர்புக்கு : ச.பாலமுருகன் (94432-13501)

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...