Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Feb 5, 2018

இதுதான் சானிட்டரி நாப்கின், இதில் எந்த அவமானமும் இல்லை.

இதோ இதுதான் சானிட்டரி நாப்கின். இதில் எந்த அவமானமும் இல்லை. இது இயற்கையான விஷயம். அவ்வளவுதான்.

Yes... that’s a Pad in my hand & I don’t feel weird. It's natural, Period!

#PadmanChallenge

*


பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.
இது கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் ஆவணப்படம் ( http://maaruthal.blogspot.in/2012/12/blog-post_31.html ) குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரையின் முதல் வரி.
ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தரும் கருப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் (ஆரோக்கியம் எனும் காரணம் தவிர்த்து) “தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது என்பது குறித்து எப்போதும் கேள்வியுண்டு.
என் மகள் 9-10 வயதாக வளரும்போதே அவள் பருவமடைந்தால், அந்த நிகழ்வை திரட்டி சீர் (பூப்பு நன்னீராட்டு விழா) செய்வது குறித்து விதவிதமான பேச்சு எழுந்து கொண்டேயிருந்தது. மிக உறுதியாக, மென்மையான அப்படியான ஒரு நிகழ்வு மட்டும் நடந்துவிடக்கூடாது என்பதை விடாப்பிடியாக வலியுறுத்திக் கொண்டே வந்தேன். முதலில், நகை, புத்தாடை என கொண்டாட்டமாய் கருதிவிடும் சாத்தியமுள்ள மகள் மனதை வசப்படுத்தினேன். அடுத்து மனைவி, அம்மா என ஒவ்வொருவராய் நகர்த்தி, இறுதியாக உங்கள் திருப்திக்கு சடங்கு எதும் செய்ய வேண்டுமெனில் (பத்து-இருபது பேர்) முதல் வட்ட உறவுகளோடு முடித்துக்கொள்ளலாம் என்றளவில் தயார்படுத்தி வைத்திருந்தேன்.
எதிர்பாராத ஒரு நாளில் அவள் பருவமெய்திட, சடங்கு, சாங்கியம் எனும் பெயரில் வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது எனத் தடுக்கப்பட்டிருந்தாள். மூன்றாம் நாளே பள்ளிக்கு போகனும் என விரும்பியவளை, உறவுகளிடம் வீட்டில்தான் இருக்கிறாள் எனச் சொல்லி, பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். அவளிடம் மிக அழுத்தம் திருத்தமாக இது உடலில் நிகழும் ஒரு மாற்றம், உடல் நலனில் கவனம் எடுத்துக்கொள் என்றளவிலேயே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறேன்.
அவளுடைய மாதாந்திர நாட்களில் உன்னால் முடிந்த எதையும் செய்துகொள் எனும் ஊக்கம் தந்து, அது தீட்டு என ஒரு போதும் முடங்கிப் போகாதே என்பதை அழுத்திச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். இதோ சமீபத்தில்கூட நானும் அவளும் ஒரு மளிகைக் கடையில் 'நாப்கின்’ வாங்கும்போது, அந்தப் பாக்கெட்டை ஒரு காகிதக் கவரில் போட்டு, கேரி பேக்கில் போட்டுக் கொடுக்க, இரண்டையும் அங்கேயே வைத்துவிட்டு அந்தப் பாக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு வா என்று சொன்னேன்.
என்னளவில் ஒரு கடைக்குச் சென்று ஒரு ‘நாப்கின்’ பாக்கெட்டை காகிகப் பையில் போட்டு மறைக்காமல் வாங்கி வருவதில் கூச்சமோ தயக்கமோ கிடையாது. அவ்விதமே உணரும்படி குடும்பத்திலும் வலியுறுத்திச் சொல்கிறேன். என் மகளோ, உறவுகளோ, ஏனைய தோழமைகளோ, அவர்கள் தம் மாதவிடாய் காலத்தைக் கடப்பதில் ஒரு ஆணாக உறுதுணையாக நிற்பது என் குறைந்தபட்ச கடமையென்றே கருதுகிறேன்.
*
சானிட்டரி நாப்கின்னில் எந்த அசிங்கமும் அவமானமும் இல்லை என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புரட்சியின் முக்கிய கருவி ஒரு ஆண் என்பதுதான் விசேஷம். கோவையை சேர்ந்த முருகானந்தம் கதை எல்லாருக்கும் தெரியும். மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரித்து ஊரகப் பெண்களுக்கு வழங்கும் அவர் முயற்சி இப்போது உலக அளவில் புகழ் பெற்று ஐக்கிய நாடுகள் சபையில் அவர் உரையாற்றுவது வரை போனது. இப்போது அவரின் 'நாப்கின் இயந்திரம்' இந்தியாவின் பிற்பட்ட வடமாநிலங்களில் எல்லாம் அரசாங்கங்களால் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. முருகானந்தத்தின் பயணம் ஐஐஎம் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.
அதுவே இப்போது திரைப்படமாக பாட்மேன் (Padman) என்று அக்சய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவர இருக்கிறது. அதனை விளம்பரப் படுத்த முருகானந்தம் 'பாட்மேன் சவால்' என்று துவங்கினார். அதாவது திரைப் பிரபலங்கள் ஒரு நாப்கினை கையில் பிடித்து செல்பி எடுத்து வெளியிட வேண்டும். அதில் இன்னொருவரை டேக் செய்ய வேண்டும். அவர் அக்சய் குமார் மனைவியை டேக் செய்ய, அவர் அமீர் கானை டேக் செய்ய, ஆலியா பட், தீபிகா, அர்ஜுன் கபூர் என்று படங்கள் தொடர்ந்து வெளிவர, சானிட்டரி நாப்கின் பற்றிய விவாதங்கள் துவங்க ஆரம்பித்து விட்டன. அவர்கள் படங்களோடு 'இதோ இதுதான் சானிட்டரி நாப்கின். இதில் எந்த அவமானமும் இல்லை. இது இயற்கையான விஷயம். அவ்வளவுதான்.' என்ற வார்த்தைகளையும் காபி பேஸ்ட் செய்தும் வெளியிடுகிறார்கள்.
இது மிகவும் பாராட்டத் தகுந்த விஷயம். இதையே நம் தமிழ் நடிக நடிகைகள் செய்து யோசித்துப் பாருங்கள். அது எப்பேர்ப்பட்ட மாற்றங்களை நம் சிந்தனையில் விதைக்கும் என்று? அதனால்தான் நான் அடிக்கடி சொல்கிறேன். பாலிவுட்டின் பொற்காலம் இதுதான்.

May 8, 2017

தலைப்புகளும் செய்திகளும்

சமீபத்தில் ஒரு செய்தித்தாளின் ஏழாம் பக்கத்தில் மூன்று கால அளவிலான ஒரு செய்தியின் தலைப்புச் செய்தியாக பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை - பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைதுகண்ணில் அறைகிறது.

தலைப்பைப் படித்தவுடன் பள்ளித் தாளாளர் தம் பள்ளியில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவே கருதத் தோன்றியது. இப்படியாக தலைப்பு வைத்து ஈர்ப்பதில் ஊடகத்தினர் எப்போதும் ஒரு அறம்வைத்திருக்கவே செய்கின்றனர். ‘அப்படி தலைப்பு போட்டாதான் சார் படிப்பாங்க!’ என்கிறார்கள். அவர்களின் கூற்றை பெரும்பாலும் மெய்பிப்பவர்களாகவே நாமும் இருக்கின்றோம்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த தலைப்பிற்குள் ஒரு கணம் உறைந்து, கீழே நகர்ந்து  வாசித்தால், பலாத்காரத்திற்கு உட்பட்டிருப்பது 15 வயதே நிரம்பிய  மாணவி என்பதும், பலாத்காரத்தால் அவள் கர்ப்பம் அடைந்ததும் தெரிய வருகிறது. அந்தக் கர்ப்பம் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கின்றது. இந்த நிலையில் பலாத்காரம் செய்தவன், அந்தப் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதும் தெரிகின்றது. இந்தச் சூழலில் அந்தப் பெண் தன் உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்து போகிறாள். அந்தச் சூழலில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை எழுதி வைத்திருக்கிறாள். ஒருவேளை தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்திருக்காவிட்டால், அது ஒரு தேர்வு பயத்தினால் நிகழ்ந்த மரணமாகவோ, காதல்(!) தோல்வியால் நிகழ்ந்த மரணமாகவோ முடிந்திருக்கலாம்.

பாலத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாய் அமைந்த அந்த நபர் ஒரு பள்ளியின் தாளாளராக இருக்கிறார். அந்தப் பள்ளி இந்த மாணவி படித்த பள்ளி என்பதாக உணர்த்தப்படவில்லை. அந்தக் கொடுஞ்செயலைச் செய்தவன் ஒரு பள்ளியின் தாளாளர் என்பது ஒரு கொடுமை என்றால், தற்கொலை செய்துகொண்ட  பெண்ணின் தந்தையின் சகோதரியினுடைய கணவன் என்பதுதான் மிகப் பெரிய கொடுமை. அதாவது அத்தை வழி மாமா. அடிக்கடி வீடு வந்து செல்லும் உறவினர்.

மேலோட்டமாக தலைப்புச் செய்தியோடு கடந்து போயிருந்தால், ஒரு பள்ளித் தாளாளர், தம் பள்ளி மாணவியை சிதைத்திருக்கிறார் எனும் எண்ணத்தோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக அது தொடர்பான சிந்தனைகளை மட்டும் அதையொட்டி குவிக்கச் சொல்லும். பள்ளிகள் மீது, தாளாளர்கள் மீது ஒரு அவநம்பிக்கையை உண்டாக்கும். அதேநேரம் அப்படியான சில கொடுமைகளும் சில பள்ளிகளில் தாளாளர்களால் நடந்தேறியிருக்கலாம்.

ஆனால் இந்த தலைப்புச் செய்தியில் அமுங்கிப் போனது மற்றும் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுகுடும்ப உறவுகளில் முதல் வட்டத்திற்குள் இருக்கும் உறவுகளால் குழந்தைகள் பாலியல் வக்கிரங்கள், சீண்டல்கள் மற்றும் பலாத்காரங்களுக்குள் ஆட்படுவதுதான். இன்றளவும் தங்களுக்கு இப்படியான கொடுமைகள் நிகழ்ந்தால், என்ன செய்ய வேண்டும், எப்படிக் கடந்து மீள வேண்டும்? எனும் அறிவுறுத்தல்களை, விழிப்புணர்வை முழுமையாக இன்னும் நாம் அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்து விடவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தது வரை அப்பா, அம்மாவிற்கு தெரிந்திருக்கிறதென செய்தி சொல்கிறது. அந்தச் சூழலில், அந்த இக்கட்டிலிருந்து மனம் மற்றும் உடலளவில் தம் மகளை மீட்க எப்படி பெற்றோர்கள் மறந்து போனார்கள்? தம் பெண்ணிற்கு நம்பிக்கையளித்து எவ்வகையிலேனும் மீட்டிருத்தல் நலம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவியைக் கடத்தி ஒரு மாதம் அடைத்து வைத்திருந்த டாக்ஸி ஓட்டுனர் என்றொரு செய்தி வருகிறது. அதையும் முழுவதுமாகப் படித்தால், அந்த ஆள் அந்தப் பெண்ணின் சித்தப்பா முறை உறவினராக இருக்கிறான். ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் சூழலில் இந்த மாணவியை கடத்தியிருக்கிறான்.



உறவுகளின் நெருக்கத்தில் இருக்கும் வக்கிரம் பிடித்தோரை இனம் கண்டு அவர்களிடம் நம் பிள்ளைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கவும் நாம் தொடர்ந்து வழி நடத்தவேண்டும். அதைவிட முக்கியம் குணத்தின் கண்ணியில் எங்கோ ஒரு பிறழ்வு தோன்றி வக்கிரம் கூடுகையில், அதிலிருந்து வெளியேறிட உடல் மற்றும் மன நலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் பெறுவதும் அவசியம்

தன் மேல் ஏவப்படும் பலாத்காரத்தை எதிர்க்கும் உறுதியை பெண் பிள்ளைகளிடம் போர்க்கால நடவடிக்கையாய் புகட்ட வேண்டும். அப்படிதேனும் கொடுமைகள் நிகழ்ந்தால், அது உடலில் நிகழ்ந்த ஒரு விபத்திற்கு நிகரானது எனும் தெளிவினை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உடல் மற்றும் மனக்காயத்திலிருந்து மீண்டு விடலாம் எனும் நம்பிக்கையை தந்தே ஆகவேண்டும். இன்னும் மிச்சம் இருக்கும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவ, சமூகத்திற்கு பாடுபட, சுயமாய் சாதித்து முன்னேறிட ஆயிரமாயிரம் காரணங்கள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமையில் சிதைந்து மீண்டு சாதித்திருக்கும் பெண்களின் காணொளிகள் இணையவெளியெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அதை பதின் மற்றும் பருவ வயதுப் பெண்களிடம் காட்டிவிடுவது அவசியமெனத் தோன்றுகிறது. தாங்க முடியாததைத் தாங்கி, கடக்க முடியாததைக் கடந்து வந்திருப்பவர்கள் வாழ்க்கையையும், அதிலிருக்கும் உறுதியையும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிக அவசியமானது.

-



Dec 31, 2012

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி


பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள்.

தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல், ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் ”தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது. இரத்தத்தை மாற்றி தாய்ப் பாலைத் தருவதைப் புனிதமாக கருதும் சமூகம், அதே பெண் தன் கர்ப்பப்பையை சுத்திகரித்து வெளியேற்றும் உதிரத்தை ஒரு தீண்டத்தகாத பொருளாக, மறைக்க வேண்டிய சங்கடமாக, தீட்டாக பாவிப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.



என் வாழ்வுலகம் சார்ந்த பெண்கள், இந்த மாத சுழற்சியில் உதிரம் கழியும் செயலில் உடல் ரீதியாகத் துவண்டு, தளர்ந்து, பொறுக்க முடியாமல் வலி பொறுத்துக் கடப்பதை உணர்ந்திருக்கிறேன், அதேநேரம் அவர்களுக்கு அந்த நிகழ்வை சமூக ரீதியாகக் கடப்பதில் இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளில் அடைபட்டிருக்கும் அவலம் குறித்து செவிட்டில் அறைந்து வலி தெறிக்கத் தெறிக்கத் தருகிறது மாதவிடாய் ஆவணப்படம்.

மாதவிடாய் என்றால் என்ன என்பது கூட, அதை மாதந்தோறும் சந்தித்துவரும் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக மிகத்தெளிவாக விளக்க வாய்ப்பளிக்காத கல்விச்சூழலும் இருக்கும் சமூகத்தில் இதை யார் எப்படி யாருக்கு புகட்டுவது?

சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இன்னும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தபட்டு தள்ளிவைக்க ”மட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் உபயோகிக்க தனிப் பாத்திரங்களும் இருப்பதைக் கண்டு கிராமத்தைச் சபிக்கவே தோன்றுகிறது. சாதியைச் சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர்களைவிடவும் சம்பிரதாயங்களைச் சொல்லி இன்னும் கடைபிடிக்கும் ”ட்டு வீடு” மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

நூறு ரூபா கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் இருப்பதுபோல், பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் இதற்கான ’நாப்கின்’னை மாற்ற வாய்ப்பற்று இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் காணத் துன்பமே மிகுகிறது.

பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அழிக்க வெகு அரிதாக, சில இடங்களில் மட்டுமே பொருத்தமான இயந்திரங்கள், வாய்ப்புகள் கொண்ட சூழல் அமைந்திருக்கின்றன. பொதுக் கழிப்பிடங்களில், வேறுவழியின்றி தூக்கிவீசப்படும் பயன்படுத்திய நாப்கின்களை சுத்த செய்ய அங்கு பணியில் இருக்கும் பெண்கள் படும் துன்பமும் கொடியதாக இருக்கின்றது.

சமூக நலன் கருதி இதைத் தயாரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்தின் துணைப்பொதுமேலாளர் திரு. இளங்கோவன் (geetaiis@gmail.com) அவர்களுக்கும், இயக்கிய திருமதி கீதா இளங்கோவன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இந்தப்படத்தின் குறுந்தகடு இலவசமாக தரப்படுவதாகவும் அறிகிறேன்.

பல தரப்பட்ட சூழல், பலதரப்பட்ட, பல நிலைப்பெண்கள் என மிகுந்த உழைப்பில், அருமையான திட்டமிடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் மிக நிச்சயமாகக் காணவேண்டும். 

இந்த உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், உடனடியாக தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு, இயற்கையான ஒரு நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
 
இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்டிகிறது, நான் இது குடும்பத்திற்கான படம் என்றே பார்க்கிறேன். படத்தை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.




ன்றி தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்

-

Nov 20, 2012

மறக்க முடியாத பெண்கள் - குங்குமம் தோழி



படம் : குங்குமம் தோழி ஃபேஸ்புக் பக்கம்


மிக வேகமாக வீங்கி வரும் இந்தப் பெருநகர விளிம்புகளில் நீங்கள் அது போன்ற பெண்மணியைப் பார்த்திருக்கலாம். 

கருத்துப்போய் இருப்பார்கள். புடவையின் வர்ணம் அழுக்கின் வர்ணமாக மாறியிருக்கும். ரவிக்கை உடலைவிட ரொம்பவும் தளர்ந்திருக்கும். நம்மிடமிருந்து தொலைதூரத்திற்கு அந்நியப்பட்டிருப்பார்கள். எனக்கும் அந்நியப்பட்டுத்தான் இருந்தார்கள், மாநகராட்சி குப்பைத்தொட்டி ஒன்றை மிக நேராக என் அலுவலக வாசலின் எதிர்புறத்தில் வைக்கும் வரை.

குப்பைத் தொட்டி வந்த சில நாட்களில் ஒவ்வொருவராய் அதனருகே எப்போது சுற்றிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். யாராவது ஒருவர் எந்நேரமும் குப்பைத்தொட்டியைக் குடைந்துகொண்டே இருப்பதைக் காணுகையில் என்னதான் நடக்கிறது அங்கே என்று அறியும் ஆவலும் எழுந்தது. 

காலையில் ஒரு ஆள், முன் மதியத்திலிருந்து முன் மாலை வரை ஒரு பெண், மாலையில் ஒரு வயதான நபர் என மாறி மாறி சில நேரம் தொட்டிக்குள்ளே, பலநேரம் தொட்டியருகே நின்று பாட்டில்கள், பிளாஸ்டிக் என விதவிதமாய் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டேயிருப்பதைக் காணுகையில், 

குப்பைத் தொட்டியும் ஒரு அமுத சுரபி, போதி மரமென புரிபட ஆரம்பித்தது.

அந்த நடுத்தர வயதைக் கடந்து, கூடுதல் முதுமையைத் தன்மேல் சுமந்துகொண்டேயிருக்கும் ஒற்றைக்கண் பெண்மணி யாரோ ஒருவரின் சாயலை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார். ஒருமுறை யாரோ ஒரு பெண்ணிடம் குடுமிப் பிடி சண்டை, ஒருமுறை அருகிலிருக்கும் தேநீர் கடையில் சிரிக்கச் சிரிக்க கிண்டல், ஒருமுறை பரபரப்பாய் ஓடிவந்து குப்பைத் தொட்டியோரம் மண்டிபோட்டு உட்கார்ந்து அப்படியே ஒரு ஹாஃப் பாட்டிலைத் திறந்து கடகடவெனக் குடித்தது என்று பல பரிமாணங்களைக் காட்டிக் கொண்டேயிருந்தார்.

அன்று ஒரு வழக்கமான நாள்தான், அந்தப் பெண்ணும் வழக்கம் போல் கிளறிக்கொண்டிருந்தார்.  நான் நிற்கும் இடம் கொஞ்சம் உயரமானது என்பதால் எதைக் கையில் எடுத்தாலும் தெரியவே செய்யும். எதையோ கிளறிக்கிளறி ஒரு எச்சில் வாழையிலையில் சேகரித்துக் கொண்டிருந்தார். அருகாமை உணவகங்களிலிருந்து கொட்டப்படும் எச்சில் இலைகளிலிருந்து உணவுகளைச் சேகரிக்கப்பது புரிந்தது. ஆனால் எதற்காக? சாப்பிடுவதற்காக இருக்குமோ என்றவொரு பதட்டம் என்னுள் சட்டென புகுந்தது. 

வயிற்றில் காற்றுப் பந்து, மனதில் திடீர் எடை என ஒரு சிரமத்தை உணர்ந்தேன்.

என்ன செய்யலாம்..?? ஒன்றும் பேசாமல் உள்ளே போயி உட்கார்ந்துக்கலாமா? 
ஒருவேளை அதை உண்ண ஆரம்பித்தால், சப்தம்போட்டு தடுத்து கொஞ்சம் காசு கொடுத்து பக்கத்து மெஸ்ஸில் சாப்பிடச் சொல்லலாமா என ஏதேதோ மனதில் ஓடிய கணத்தில், இருகைகளிலும் இலையை ஏந்தி குப்பைத்தொட்டி அருகே குனிந்து கீழே வைத்தார். உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டா என்ன பண்றது எனப் பதட்டத்தோடு போலாமா, வேணாமா எனத் தடுமாறிய கணத்தில் வாயைக் குவித்து ஏதோ ஒரு ஒலி எழுப்பினார், குப்பைத் தொட்டியின் இன்னொரு புறம் இருந்த ஒரு நாய் ஓடிவந்தது, அதற்குக் கை காட்டிவிட்டு மீண்டும் குப்பைத் தொட்டியைக் கிளற ஆரம்பித்தார், நாய் வேகமாய்த் தின்ன ஆரம்பித்தது.

எனக்குள் இனம்புரியா ஒரு
பதட்டமும்...
வெளிச்சமும்...
கலக்கமும்.... 
கனிவும்...
அன்பும்...
குற்ற உணர்வும் ...
கலந்து தோன்றி வித்தியாசமாக உருளத் தொடங்கியது. 

அவளை மானசீகமாக வணங்க ஆரம்பித்தேன்..

தெருப்புழுதிக்குள்.. 
ஒதுக்கப்பட்ட பதர்களுக்குள்.. 
எச்சில் ஒழுக்குகளுக்குள்..
ஊராரின் கசம் அனைத்திற்குள்.. 

ஒரு ஞான போதியாய் ஒளிர்ந்தாள் அவள்..




-0-
குங்குமம் தோழி “மறக்க முடியாத பெண்கள்” தொகுப்பிற்காக எழுதியது.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...