கீச்சுகள் தொகுப்பு - 69



உறவு முறித்தது போதும்... பகை முறி!
                       

என்ன அடைந்தோம் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமானது நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதுதான். அடைந்தது மறந்துபோகும். செய்தவை வாழ்நாள் முழுக்க துணை நிற்கும்!

*


தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருப்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. தொடர்ந்து தன்னையே ஏமாற்றிக் கொல்வதை விடவா தோல்வி வெட்ககரமானது!?
'ல்பிழையன்று!

*

நம் பலம் நமக்கே புரியும் தருணம் என்பது... சாத்தியமில்லை என நாம் நினைக்கிற ஒன்று, நம்மாலேயே சாத்தியப்படும் கணம்.

*

குழப்பத்தை தெளிவாகப் பார்!

*

மண்ணை நனைக்காத, உடையை மட்டும் நனைக்கும் மழைக்கு 'மானங்கெட்ட மழைஎனப் பெயர் சூட்டினேன்.  'மரம் நடாதவங்களுக்கு மானம் என்ன வேண்டியிருக்கு!?’ என்றது மழை!

*

கோபத்தின் உக்கிரத்தில் தெறிக்கும் சொற்களுக்கு பொருள் சொல்ல இன்னும் டிக்‌ஷ்னரி கண்டுபிடிக்கப்பட வில்லை!

*

'போதுமெனத் தோன்றுகிறது' என்றெழுதிவிட்டு முற்றுப்புள்ளிக்குப் பதிலாக காற்புள்ளி வைத்தல் தகுமோ!?

*


ரயில் தடமெங்கும்
கலங்கி நின்று
காற்றில் கையசைக்கும்
ராத்திரியில் பெய்தோய்ந்த
ரகசிய மழை நீரின்
பிரியத்திற்கு ஈடேது!

*

சாரல் பொழியும்
ரயில் பயணத்தில்
வழிவிட்டுக் காத்திருக்கும்
சிறு நிலையத்தில்
ஆவி பறக்கும் 
சுக்குக் காப்பியொன்றும்
அத்தனை ருசியில்லைதான்
ஆயினும் அச்சூட்டின் கதகதப்பில்
நினைவில் தளும்பும்
முத்தமொன்றின் தடயமுண்டு!


*

கவிழ்ந்து தொங்கும் 
கரு மேகம்
இந்த நகரைத்
தீண்டி விழுங்குமோ!?

*

நினைவில் துயிலும்
பெரு நெல்லி முத்தம்!

*

தேய்ந்து கொண்டிருக்கும்
சிரிப்பொன்றை
புன்னகையாய் 
சேமிக்கத் துவங்குகிறேன்!


நமக்கென்று ஒரு விலையில்லை என்பது... 
கர்வத்தில் சேருமா!? அறியாமையில் சேருமா!?

*

உனக்கு இதெல்லாம் தேவையா!?” - சில இடங்களில் கேட்க மறந்த கேள்வி, பல இடங்களில் தாங்குவதற்குத் தடுமாறும் கேள்வி! 

*

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை ஆகாது. சிலவற்றைத் தெரிந்துகொள்வதற்காக, பலவற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது.

*

மனிதம் என்பது தன் போக்கில் எதையும் ஆகச்சிறந்ததாய் இயக்குதல். அறிவோடு மனதையும் பிணைத்து உலகை ஆக்குதல்.

*

அதீத மன இக்கட்டில் இருக்கும் யாரோ ஒருவருக்கு உங்களை அழைத்துப் பேசத் தோன்றுகிறதா!? தேர்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

*

சுவையான தேநீர் பருக வேண்டுமென்பது வயிற்றின் தேவையன்று, மனதின் தேவையே!

*

இக்கட்டிலிருந்து 'மீள்வேன்', சோதனையில் வென்று 'தொடர்வேன்' என ஒருவர் சொல்வதை தன்னம்பிக்கை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர 'திமிர்' என்று சொல்வது பக்குவமின்மை!

*

ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை இருக்கின்றதா!? அது அவ்விதமே இருக்கட்டும். அதுதான் வாழ்க்கையை தொடர்ந்து இயக்கும் நிர்பந்தம்!

*

எல்லாப் பார்வைகளிலிருந்தும் 
எளிதாய் ஒளிந்து கொள்கிறேன்
இமைகளுக்குள்ளிருக்கும் 
விழிகளிடம் என்ன செய்ய!?

*

கோபத்தை நெகிழ்வான குரலில், மென்மையான சொற்களில் பகிரும் வித்தை தவிர்த்து, வேறென்ன வரம் வேண்டும்!

*

யாரையும் எதிர்கொண்டுவிட முடிகிறது.  'அப்பா-அம்மா இருவரும் இல்லை' என சன்னமான குரலில் அடையாளம் காட்டப்படும் பிள்ளைகளைத் தவிர!

*

அறியாமை ஒரு பாவம் என்றால் அரைகுறையாய் அறிந்து கொண்டிருப்பது பெரும்பாவம்.

*

ஒதுங்கியோ ஒளிந்தோ நிற்பதால் கடந்த காலம் பொய்யாகிவிடுமா!?

*

மௌனப் பஞ்சுப் பொதி...
சொற்களால் நனைகிறது.

*

மூச்சின் வெம்மைக்குள் இருப்பது மழையின் வாசனை!

*

தேவையில்லாத ஆணிகள்னு தெரிஞ்சும் பிடுங்கிட்டே இருக்கிறதுக்கு பேரு தியாகம், உழைப்பு கிடையாது... அதுவொரு குற்றம்!

*

மாற்றத்திற்கும் மாற்றமின்மைக்கும் இடையே ஒரு மெல்லியகோடுதான்.... அந்தக் கோட்டிற்கு நம்பிக்கை என்றும் ஒரு பெயர் உண்டு.

*

மௌனம், அது வாய்க்கும் இடங்களைப் பொறுத்து வடிவம் கொள்கிறது.


1 comment:

nava said...

சிந்தனைத் தூண்டல்