மதயானைக் கூட்டம் - விமர்சனம்



தெற்குச் சீமையில் ஒரு இனத்தின் குடும்பத்திற்குள்ளும் உறவுகளுக்குள்ளும் ஏற்படும் உரிமைச் சிக்கல்களில் விழும் முடிச்சுகளும், அவை அவிழ்க்கப் படாமல் அறுக்கப்படுவதும்தான் கதை.

 

நாயகனின் தந்தையின் மரணத்தையொட்டிய எழவில் தொடங்குகிறது படம். எழவு வீட்டில் கூத்தின் வழியே கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ரசனைக்குரியதொரு யுக்தி. நாயகன் பார்த்தியின் தந்தையான ஜெயக்கொடித்தேவர் முதல் மனைவி செவனம்மாவுக்கு மகள், மகன் இருக்க, இரண்டாவதாய் துணைவியோடு குடித்தனம் நடத்தி அங்கு ஒரு மகன், மகள் என வாழ்கிறார். துணைவியின் மகன் தான் நாயகன். முதல் மனைவி செவனம்மாவுக்கு துணையாய் அவருடைய அண்ணன் வீரத்தேவர் குடும்பம் இருக்கின்றது. செவனம்மா  ஜெயக்கொடித் தேவரை தன்னோடு சேர்த்துக்கொள்ளாமல், முகத்தில் கூட விழிக்காமல் வாழ்கிறார். அவரையொட்டிய உறவுகள் அவர் பெரிய மனிதர் என்றபோதிலும் ஒதுங்கியே வாழ்கிறார்கள். செவனம்மாவின் மகன் மட்டும் தந்தையின் துணைவி குடும்பத்தையும் தன் குடும்பமாய் நேசிக்கிறார்.

இரு குடும்பங்களுக்குள்ளும் பகை, இரு குடும்பங்களுக்கும் எதிராய் ஒரு பகை என மூன்று துருவங்களாய் ஒருவரையொருவர் பகைத்தே திரிகிறார்கள்

கேரளாவில் இருந்து படிக்க வந்த பெண்ணோடு நாயகனுக்கு விருப்பம் ஏற்படுகிறது. மகளுக்கு திருமணம் முடித்த இரவில் ஜெயக்கொடித் தேவர் மாரடைப்பில் இறந்துபோக, செவனம்மா வீட்டுச் சொந்தம் ஜெயக்கொடித்தேவர் பிணத்தை எடுத்துச் சென்றுவிட, இறுக்கம் அங்கே முற்றுகிறது.

ஒவ்வொரு இனத்திலும், கிராமத்து எழவு வீட்டில் நடக்கும் சடங்குகளில் இது ஒரு ஆவணம் என்றே சொல்ல வேண்டும். கூத்துக் கலைஞர்களை வைத்து எழவு வீட்டில் இறந்துபோனவரின் அருமை பெருமையெல்லாம் கதையாய், பாடலாய் சொல்வதெல்லாம் முற்றிலும் அழிந்துபோன காலகட்டத்தில் எத்தனையோ நினைவுகளை அந்தக் காட்சிகள் மீட்டெடுக்கின்றன. கூத்துக்கலைஞரின் ஓங்கிய ஒப்பாரியில் நரம்புகள் அதிர்கின்றன.

மைக் செட் கட்டி நாள் கணக்கில் ஒப்பாரி பாடுவதெல்லாம் முற்றிலும் மறைந்துபோய், அடுக்ககங்களில் அக்கம் பக்கம் கூடத் தெரியாமல் பிணத்தை அடக்கம் செய்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் இயல்புக்குத் திரும்பும் அவசர காலத்தில்இதுக்கெல்லாம் எங்க பாஸ் நேரம்” என்ற முனகலைக் கேட்டு சொல்லத் தோன்றுகிறதுவாழுறதுக்கு மட்டும் எங்க பாஸ் நேரமிருக்கென”!

ஜெயத்தேவரின் கருமாதி தினத்தன்று நிகழும் இன்னொரு எதிர்பாராத மரணத்தால் கதை சூடுபிடிக்கிறது. அதற்கான பழிவாங்கல் உக்கிரம் பிடிக்கிறது. பகை நாயகனை ஓட ஓட விரட்டுகிறது. இறுதியில் வஞ்சகத் தினிப்பை உணர்ந்தாலும், தன்மீதான நம்பிக்கையை நிரூபிப்பதற்காகவேநம்பிக்கைத் துரோகம்வெகு நேர்த்தியாய் இழைக்கப்படுகிறது.

நாயகன் பார்த்தியாய் புதுமுகம் கதிர். புதுமுகம் என்பதை விட பிஞ்சு முகமென்றே சொல்ல வேண்டும். ஆனாலும் தன் மீது சுமத்தப் பட்ட பாத்திரத்தை முடிந்தவரை நேர்த்தியாய்ச் சுமர்ந்திருக்கிறார். உக்கிரமாய் பகை துரத்த துவண்டுபோய் ஆயாசமாய் சோர்ந்துபோகும் விழிகளில் ஆயிரமாயிரம் உணர்த்துகிறார். க்ளைமாக்ஸ் காட்சியின் உக்கிரத்தை, கனத்தை கொஞ்சம் சிரமப்பட்டே தாங்கியிருக்கிறார். பயபுள்ள நிஜத்துல தம் அடிக்குமா இல்லையானு தெரியல, படத்துல அடிக்கிற மாதிரியே நடிக்குது!

உக்கிரமான பகையின் உருவகமாய் அடுத்த அறிமுகம் வேல ராமமூர்த்தி. மனிதரை நடிக்க வைத்த மாதிரியெல்லாம் எதுவும் தெரியவில்லை. படம் முடிந்து உறங்கி எழுந்த பின்னும் கூட அந்தக் கரிய உருவம், மீசை சுண்டும் விரல்கள், தலை அசைப்புகள் என அப்படியே மனதில் படிந்துகிடக்கின்றன. அவரை மிகச் சரியாகப் பொருத்திய, பயன்படுத்திய இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் பாத்திரமாக செவனம்மா விஜி சந்திரசேகர். விழியும் குரலும், சலனம் காட்டா முகமும் என மிரட்டியெடுத்திருக்கிறார்.  அண்ணன் மகன் மரணம் குறித்து, அண்ணன் உறவுகள் தன் மகன் சொல்கையில் பார்ப்பாரே ஒரு பார்வை. இரண்டாம் தாரத்தை வீட்டுக்கு அழைக்கச் செல்கையில் காட்டும் அதிகாரமும், இறுதிக்காட்சிகளில் இறுகிய முகத்தில் வழியவிடும் உணர்வுகளும்

படத்தில் உறுத்தலாய் பட்டதில் குறிப்பிடத்தகுந்தது லைட்டிங். பாதி படம் வரை ஒரு மஞ்சள் வெளிச்சம் எதிர் திசையிலிருந்து நம்மை நோக்கி அடித்துக்கொண்டேயிருக்கிறது. அந்த விளக்கைப் பிடுங்கி தமிழ்நாடு மின்வாரியத்திடம் அன்பளிப்பாக கொடுத்துவிடலாமா என ஆவேசப்படுத்தும் வகையில்.

ஓவியாவை ஒரு மலையாளியாய் காட்டுவதில் என்னவோ சிரமப்பட்டிருக்கிறார்கள், சரியாக ஒட்டவில்லையென்றே தோன்றியது. ராத்திரி பகலென வீச்சரிவாளோடு பேருந்து நிலையங்களில் வெட்டத் துடிக்கும் கும்பல்களை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் காட்டுவார்கள் எனத் தெரியவில்லை.

பகையின் உக்கிரத்தில் தப்பித்து ஓடும் நாயகனுக்கு கேரளாவில் ஒரு மான்டேஜ் டூயட் என்பதெல்லாம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கோழைத்தனம் என்றே தோன்றுகிறது.
நெஞ்சு வலிக்கிறது என்ற தந்தையைக் காப்பாற்ற வீட்டிலிருந்து ஓடிப்போய் கார் ஒன்றை அழைத்துக்கொண்டு நாயகன் வருவதற்குள், இறந்துபோய்விடும் அவரின் பிணத்தை எடுத்துச்செல்ல முதல் வீட்டிலிருந்து எப்படி வந்தார்கள் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

படம் ரத்தவாசம் கலந்த மண்வாசனைதான் எனினும், ஒரு குடும்பம் சார்ந்த உறவுகளுக்குள்ளான கௌரவச் சிக்கல்களையும், உறவுப் போரட்டங்களையும் மிக நேர்த்தியாக இயக்குனர் பதிவு செய்திருக்கிறார். கவாஸ்தேவ் என்பதில் இருக்கும் தேவ் என்பதை தேவர் சாதியோடு பொருத்திக்கொள்ளும் நுண்ணிய பகடி ரசிக்கத்தக்கது. அடுத்தடுத்து விழும் நுண்ணிய முடிச்சுகள், அவை யுக்தியாக அவிழ்க்கப்பட்டோ அல்லது நரம்புகளாக வெட்டியெறியப்பட்டோ என நகரம் திரைக்கதை பிரமிக்க வைக்கிறது.

-

நாயகன் கதிரை குழந்தையிலிருந்து நான் அறிவேன். எங்கள் உறவுகளில் பிரியம்மிகுந்த ஒரு குடும்பத்தின் வாரிசு. பாத்திரத்தின் பாரத்தை மிக நேர்த்தியாகச் சுமந்து கடந்த கதிருக்கு என் தனிப்பட்ட அன்பும் பாராட்டும் வாழ்த்துகளும்.

*


2 comments:

சத்ரியன் said...

பாக்கனும் கதிர்.

Rathnavel Natarajan said...

அருமையான விமர்சனம்.
நன்றி சார்.