சாபம்


முப்பது வருசத்துக்கு மேல இருக்கும். அப்போ மூனாவது படிச்சிட்டிருந்தேன். அவன் அப்ப எங்கோடத்தான் படிச்சிட்டிருந்தான். என்னென்னமோ யோசிச்சுப் பாக்கறேன், அவம்பேரு மாத்ரம் நெனப்லையே வரல. அவனோட அக்கா பேரு ராணிங்கிறது மட்டும் நெனப்புல இருக்குது. இப்போ அவனுக்கு எதாச்சும் ஒரு பேரு சொல்லனுமே. அதேன் அப்படியொரு புதுப் பேர வெச்சு செரமப்படனும் ராணி தம்பினே இருக்கட்டும்.


அப்போ எங்கூர்ல தெக்குப்பக்கமா நாயக்கருங்க கொஞ்சம் பேர் இருந்தாங்க. நாயக்கருங்க சாமி சச்சுருவானதுன்னும், நாயக்கருங்க சாபம் உட்டா அது அப்படியே பலிச்சுரும்னு பெரியவிங்க சொல்லுவாங்க. அதனாலயோ என்னமோ, பள்ளிக்கூடத்துல கூட யாரும்ம் நாயக்கரு ஊட்டு பசங்ககிட்ட பெரிசா வம்புதும்பு வெச்சுக்க மாட்டாங்க.

நாயக்கருங்க ஊடெல்லாம் இருக்கிற பக்கம்தான் இந்த ராணி தம்பி ஊடும் இருந்துச்சு. என்ன நெனைச்சானோ ஏது நெனைச்சானோ தெரியல, ஒரு நா எங்கிட்ட,


”எங்கூட்ல சாபம் உடற பொட்டி இருக்குதுடா”னு சொன்னான்.



“டேய் நாயக்கருங்கதானே சாபம் உடுவாங்க, நீ எப்டி சாபம் உடமுடியும். பொய் சொல்ற”னு சொல்றப்பையே கொஞ்சூண்டு பயமும் இருந்துச்சு.



ஊட்டுக்கு வந்து ஆயாகிட்டே ”சாபம் உடுறதுக்கு பொட்டி எல்லாம் வெச்சிருப்பாங்களா”னு கேட்டேன்



”சாபம் உடறதுனா…. நாய்க்கரு, அவிய கோயலுக்குப் போயி, இவியெல்லாம் நாசமா போவோனும், கய்யிகாலு வராம போவோனும்னு சாமி கும்புட்டா, அந்த மாதரயே நடந்துரும்னு சொல்லுவாங்க”னு ஆயா சொல்லுச்சு



அடுத்த நாளு அவங்கிட்டப்போயி ’எங்காயா இப்படி சொல்லுச்சு’னு சொல்றதுக்கும் பயம். நெறையப் பேர்கிட்ட அவுங்க ஊட்ல சாபம் உடுற பொட்டியிருக்குனு சொல்லியிருக்கான். அதனாலயோ என்னமோ ஆரும் அவங்கூட பெருசா பேசிக்கிறதெல்லாம் கெடையாது. வெளையாட்ல கூட அவங்கூட ஆரும் சண்ட கட்றதில்ல.





நாளு போகப்போக அவனுக்கு திமுரு ஜாஸ்தியாயிக்கிட்டே இருந்துச்சு. யாருகிட்ட வேணா சண்ட போடுவான். சண்ட போடறப்போ,



”இர்றா எங்கூட்ல சாபம் உடுற பொட்டி இருக்குது. நாளைக்கு சாபம் உடறேன்”னு சொல்வான்



ஒன்னுக்குதண்ணிக்கு உட்டாலுஞ்செரி, மத்தியானச்சோத்துக்கு உட்டாலுஞ் செரி பசங்க புள்ளைங்கனு எல்லாருமே, அவுத்துட்ட கழுதைக மாதர ஊரையே சுத்திச்சுத்தி வெளையாடுவோம். அவன் சாபப் பொட்டியப் பத்தி சொன்னதுக்கப்புறம், அவங்கூட்டுச் சந்துல ஓடுறப்ப மட்டும்கொஞ்சம் பயமா இருக்கும்.



அவங்களுது ஓட்டு ஊடு. முன்னால வாசல்ல ஒரு எரும கட்டி வெச்சிருப்பாங்க. மத்தியானம் அவங்கூட்டு சந்துல ஓடறப்போ, ஒருசில நாளைக்கு ராணி தம்பியோட அம்மா நின்னுட்ருக்கும். எப்படி சாபம் உடற பொட்டிய வெச்சுக்கிட்டு பயமமில்லாம இந்தூட்ல இருக்காங்கனு நெனைச்சுக்குவேன்.



ஒரு நா கொஞ்சூண்டு தெகிரியமா ”டேய் சாபம் உடற பொட்டி என்னமாறிடா இருக்கும்”னு கேட்டேன்



”அது பெரீய்ய பொட்டிடா, எங்கப்பா மலக்கருப்புச்சாமி கோயிலுக்கிட்ட வாங்கீட்டு வந்துச்சு”



“அதுல இருந்து எப்டிடா சாபம் உடுறது”



“அதுல ஒரு கதவு இருக்குதுடா, அதத் தொறந்து யாரு மேல சாபம் உடனுமோ அவுங்க பேரச் சொல்லி, என்ன நடக்கவேணும்னு சொன்னாலும் அது அப்படியே பலிச்சுரும்டா”



பொட்டி பத்தி என்னென்னமோ சொன்னான். கடைசியா ஒருநாளைக்கு ஊட்டுக்கு கூட்டிட்டுப்போயி சாபம் உடற பொட்டிய காட்றேன்னும் சொன்னான்.



பொட்டியப் போயி பாக்குறதா, பாக்க வேணாமாங்கிறதே பெரிய பிரச்சனையா இருந்துச்சு



ஒரு நாள் என்னமோ அதும் இதும் சொல்லி ஊட்டுக்கு கூட்டிட்டுப் போனான். பயம்னா பயம் அத்தன பயம். ஊடு தொறப்பு போட்ருந்துச்சு. வாசல்ல எரும கட்றதுக்கு ஒரு பந்தல் இருந்துச்சு. பந்தலுக்கு ஒரு பக்கம் செவுரு. ரெண்டு பக்கம் தென்னந்தடுக்கு வெச்சு கட்டியிருந்தாங்க. தடுக்கும் செவுரும் இருக்குற மூலையில ஒரு பொட்டி இருந்துச்சு. சொருசொருப்பான மரப்பொட்டி அது. ரோஸ்கலர்ல, பச்சக்கலர்ல கலரு பூசுன மாதர இருந்துச்சு. ஆனா அவன் மொத சொன்னமாதர அதுக்கு கதவெல்லாம் இல்ல. பக்கத்துல போயி பாக்கறதுக்கும் பயமா இருந்துச்சு.


அந்த வருசம் முச்சூடும், அந்த பொட்டியச் சொல்லிச் சொல்லி அப்பப்ப மெரட்டுவான். பொட்டியப் பாக்குறதுக்கு முன்னால இருந்த பயம் பொட்டிய பார்த்த பொறவு கொஞ்சம் கொறஞ்சு போச்சு.



அடுத்த வருசம் என்ன காரணமோ தெரியல, ராணி ஊடு சொந்த ஊருக்கே குடிபோயிட்டாங்க. வருசம் போவப்போவ, அவம்பேருகோட மறந்துபோச்சு ஆனா அந்த சாபம் உடற போட்டிய மட்டும் மறக்கவே முடீல.



வாழ்க்கைல நீ கேட்ட மொத பொய் எதுனு ஒரு ப்ரெண்டு கேட்டப்போ பொசுக்குனு அந்த சாபம் உடற பொட்டிதான் நாவகத்துக்கு வந்துச்சு. இப்ப ராணி தம்பி என்ன பண்றான், எங்க இருக்காங்கனு ஒன்னும் தெரியல.



நாலாவதோ அஞ்சாவதோ படிக்குறப்போ ஒரு தடவை பவானி பழைய பஸ் ஸ்டாண்ட்ல ஆயா பழக்கடக்காரங்கிட்ட பழத்து வெலைய கொறச்சுப் போடுனு பேசிட்டிருந்தப்போ கடைக்குள்ள ராணி தம்பி ஊட்ல காட்டுன சாபம் உடற பொட்டி மாதரயே நெறைய பொட்டி அடிக்கியிருந்துச்சு. இந்த பொட்டியில சாபம் வெச்சுருப்பாங்களோனு பயிந்துக்கிட்டே



“ஆயா அதென்ன பொட்டினு கேளாயா”னு நச்ச ஆரம்பிச்சேன்



பழமெல்லாம் வாங்கி முடிச்சபொறவு, கடக்காரருகிட்ட ஆயா...



“அதென்னப்பாது பொட்டி, தம்பி என்னயென்னனு கேக்குது” என்றது



“பழம் வர்ற பொட்டி ஆயா.. வெளியூர்ல இருந்துதான் நெறையப் பழம் வரும். அதைய இப்படி பொட்டிலதான் அனுப்புவாங்க”னு சொன்னாரு.


-

6 comments:

Prapavi said...

ha ha ha!

PRIYA said...

Lovely ..loved it lots ..hahahaa :D

பா.சுடர்மதி பிரான்சிஸ் said...

சாபம் வுடற பொட்டி நெஜமாலும் கீதுன்னு பய்ந்தே போய்ட்டேன். கதை சூப்பரு...

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - மூணாங்கிளாஸ் பசங்க சொல்ற கத தானே = இப்படித்தான் இருக்கும் - பயம் இருக்கும் - கடசில பாத்தாக்க - பழம் வர பொட்டியா இருக்கு - கத பயந்து கிட்டே படிச்சேன் - என்ன ஆகுமோன்னு - நல்ல வேள - ஒண்னூம் ஆகல - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மங்கை said...

மாதரயே..மாத்ரம் ... பொசுக்குனு...அவங்களுது
ithai naan pesina kooda velai seyravunga sirippaanga... ithellaam unga telugu vaarthaigal nu.. itho ippo ithai kaati sollidaren.. ithu enga kongu bashai nu..

Perumal muruganin KooLa Mathaari novel ippo thaan padichen..

sorry tamil typing illai...

GURU CINEMA said...

ஒரு குறும்படமே பண்ணலாம்... செம ஹிட் அடிக்கும்