தனிமை ருசி



யாருமற்ற வீட்டின் இரவில்
ஒரு ஆளாய் எதைத் தின்பது!

நொறுக்குகளைக் கொறிக்கலாமா?
பானை நீரில் பசியாறலாமா?
குளிர்சாதனப்பெட்டியிலுறங்கும்
நுரைத்த மாவில்
தோசை ஊற்றலாமா?

ஊற்றிய தோசைக்கு 
இட்லிப்பொடி தேடலாமா?
ஊறுகாய் தொட்டுக்கலாமா?
சர்க்கரையிலே சமாளிக்கலாமா?
ருசியான சட்னி அரைக்கலாமா?

தேங்காய் துண்டுகளோடு கடலை சேர்த்து
இஞ்சி சீவிப் பூண்டு சேர்த்து
வெங்காயம் நறுக்கி மிளகாய் கிள்ளி
காரம் குறைய விதைகள் உதிர்த்து
கல் உப்பு சேர்த்துத் தண்ணீரூற்றி
அரைக்க அரைக்க மூன்றுமுறை
மூடி கழட்டிச் சோதித்து…

ஒரு துளி எடுத்து உள்நாக்கில் வைத்து
புரியாச் சுவைக்கு விழிகள் உருட்டி..
இதுதான் சட்னி ருசியா
இந்த ருசியை இதற்குமுன்
உணர்ந்திருக்கிறோமா குழம்பித்தவித்து..

ருசி குறித்த பட்டிமன்றத்தில்
பாதியில் விக்கிநின்ற சந்தேகத்திற்கு
கொஞ்சம் நீர் வார்த்து
நிமிர்ந்து நெளியும்போது

தனக்கே உலைவைத்து
தனக்கே பொங்கி
தனக்கே அரைத்து
தனக்கே குழைத்தென

தனித்து வாழ்வோர்
தினமும் தின்றுதின்று தீர்த்தாலும்
சந்தேகக் கசப்போடு
மிச்சமிருக்கத்தான் செய்கின்றது
தனிமையின் ருசி!

-0-

15 comments:

தமிழ்ச்செல்வி said...

arumai...........

தீபா நாகராணி said...
This comment has been removed by the author.
தீபா நாகராணி said...

தனிமையின் ருசி அலாதிதான்...
விரும்பும் பொழுதெல்லாம் கிடைத்தால்...
வாசிச்சதும், கடைசில கொஞ்சம் பாரமாயிடுச்சு....
யாரோ ஒருவரால் அளிக்கப்படும், கசப்பு தனிமை யாருக்குமே வேணாம்...

Arvind said...

தனிமை அந்த சட்னியை விட (வி)காரம்

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - தனிமை கொடுமை தான் - இருப்பினும் அதில் இருக்கும் சுதந்திரம் இரசிக்கப் படும். நுறைத்த மாவில் தோசை எல்லாம் சுட வேண்டாம் - ஹாய்யாக உணவகம் காப்ஸ் சென்று சாப்பிட்டு ரசிச்சுச் சாப்பிட்டு வ்ரணும் - சரியா

சிந்தனை நன்று - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

selvishankar said...

எனக்குத் தனிமையின் ருசி ரொம்பப் பிடிக்கும் கதிர்...பிடிச்சத சமைச்சு பிடிச்சபோது சாப்பிட்டு, பிடிச்சத படிச்சு, பார்த்து..அட..அட..என்ன ருசி..!!

ஆனா இதெல்லாம் ஒரு நாளைக்கு மட்டும்தான்...

Rathnavel Natarajan said...

அருமை சார்.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க...

R A M E S H said...

Super..Well said..
Am experiencing the same situation!!

வால்பையன் said...

வீட்ல ஊருக்கு போயிருக்காங்கலா?

வால்பையன் said...

கடைசியில் எதை சாப்பிடிங்க. தனிமைய்யா. அதாவது துணைக்கு யாரையும் கூப்பிட்டிங்களா?

வால்பையன் said...

வீட்ல ஊருக்கு போயிருக்காங்கலா?

வால்பையன் said...

வீட்ல ஊருக்கு போயிருக்காங்கலா?

Easy (EZ) Editorial Calendar said...

உண்மை தான்...தனிமையில் இருந்தா கண்டிப்பா எதுவும் செய்து சாப்பிட தோணாது....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

KSGOA said...

ரொம்ப நல்லா இருக்குங்க!!!