Showing posts with label பெருமாள் முருகன். Show all posts
Showing posts with label பெருமாள் முருகன். Show all posts

Oct 15, 2010

பாராட்டு விழா – எழுத்தாளர் பெருமாள் முருகன்


தமிழ் இலக்கியச் சூழலில் குறிப்பிடத்தக்க சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். காலச்சுவடு இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர் நாமக்கல் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இது வரை 15 நூல்களையும், 125 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய நிழல் முற்றம், கூளமாதாரி ஆகிய புதினங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவில் உள்ள அரசு சார்பு அமைப்பான கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனம் எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாம் ஒன்றை நடத்திவருகிறது. சென்னையில் உள்ள இந்திய கொரிய கலாசார மையத்துடன் இணைந்து பரிமாற்றம், படைப்பாற்றல் குறித்த எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. தென்கொரியாவில் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கியிருந்து பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து 6 நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த முகாமில் கலந்து கொள்ள ஆசியக் கண்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர், எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆவார்.

2006-
இல் நடைபெற்ற முகாமில் இந்தியா சார்பில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழ்ப் படைப்பாளரான பெருமாள் முருகன் 2010-இல் தேர்வாகி கலந்து கொண்டு வெற்றிகரமாக திரும்பியுள்ளார். இதையொட்டி, நாமக்கல் அருகே மோகனூரில் இருக்கும் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரித் தாளாளர் பேராசிரியர்.சு.பழனியாண்டி அவர்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தார்.

அச்சமயம் பெருமாள் முருகன் அவர்களின் ’கங்கணம்’ நூல் குறித்த விமர்சனத்தை, எங்கள் அரிமா சங்க இதழான ’சுவடுகள்’ இதழில் வாசித்த பேரா. பழனியாண்டி அவர்கள் என்னையும் அந்தப் பாராட்டு விழாவில் கங்கணம் குறித்த பார்வைகளைப் பதிவு செய்யுமாறு அழைத்தார்.

விழாவில் அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா.கே.தனபாலன், வேலூர் நாங்கள் இலக்கிய அமைப்பைச் சார்ந்த கவிஞர். செல்மா காமராசன், பெங்களூரிவில் வருமான வரித்துறை இணை ஆணையராக பணியாற்றும் திரு. முரளி ஐ.ஆர்.எஸ் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன்.

திரு.முரளி ஐ.ஆர்.எஸ் அவர்கள் ப.வேலூர் அருகே ஒரு கிராமத்தைச் பூர்வீகமாகக் கொண்டு தற்சமயம் பெங்களூருவில் பணியாற்றுகிறார். ஒரு முறை எதேச்சையாய் காலை 5 மணிக்கு கங்கணம் புதினத்தை வாசிக்க எடுத்தவர், இடையில் நிறுத்த மனமில்லாமல், அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து வாசித்து முடித்தார் என்பது சுவாரசியம் மிகுந்த தகவல்.

பாராட்டு விழா இன்று காலை மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் பேரா.பழனியாண்டி அவர்கள் மிக நேர்த்தியான தலைமையைரையோடு துவங்கியது. கவிஞர் செல்மா காமராசன், திரு. முரளி, அரிமா. தனபாலன் ஆகியோர் மிகச் சிறந்ததொரு பாராட்டுரைகளை வழங்கினார்கள். குறிப்பாக திரு.முரளி கங்கணம் குறித்த அவரது பார்வையை அழகாக பகிர்ந்து கொண்டார். நானும் கங்கணம் புதினத்தை வாசிக்க நேர்ந்த பின்னணி, வாசித்த அனுபவம், அதில் வரும் கதாபாத்திரங்களின் இயல்பான, அப்பட்டமான தன்மை குறித்த எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்த வந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், தன்னுடைய கங்கணம் புதினம் 2007ல் வெளியாகி, இது வரை அதிகம் பேசப்படாத ஒன்று என்றும், சமீபத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருவதாகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். மேலும் தென் கொரியா நாடு கொரிய மொழி தோன்றி 150 வருடத்தில், மொழியளவில் முன்னேறியிருப்பதையும், இலக்கியத்திற்கு கொரிய மக்கள் அளித்து வரும் மரியாதை குறித்தும், தென் கொரிய மக்களின் விருந்தோம்பல், சாக்கடைகள் கலக்காத தூய்மையான ஹான் நதி, ஊழலற்ற நிர்வாகம், தன்னலம் பாராத அரசு அமைப்பு என தென் கொரியா குறித்து ஒரு மாதத்தில் தான் அனுபவித்து வந்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.








மாணவர்கள்


பேரா.பழனியாண்டி - தலைமையுரை
திரு. முரளி - உரை
கவிஞர். செல்மா காமராசன்




கங்கணம் குறித்த என் பார்வை


எழுத்தாளர். பெருமாள் முருகன் ஏற்புரை




_________________________________

Sep 18, 2010

கங்கணம் – வாசிப்பு அனுபவம்



இலக்கியத்தின் பெரும்பான்மையான வெளிப்பாடுகள் பெண் சார்ந்து, அவர்களுக்கு நிகழும் மனச்சிக்கல்கள் என்பதையொட்டி வரும் படைப்புகளில் தவிர்க்க முடியாத ஒன்று முதிர்கன்னிகள் குறித்த படைப்புகள். முதிர்கன்னிகளுக்கு நிகராக ”பேரிளம் ஆண்கள்” இருக்கிறார்கள் என்பதை இலக்கியம் பெரும்பாலும் மறந்து மௌனத்தோடு இருப்பது இயல்பான ஒன்று.


முதல் முறையாக திருமணம் என்ற பந்தத்துக்குள் ஆட்பட விரும்பும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் கைகூடி வராத ஒரு கிராமத்து இளைஞனுக்காக நானூத்தி சொச்ச  பக்கங்களை ஒதுக்கிய பெருமாள் முருகன் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.




கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து, நகரச் சக்கரத்தின் பற்களாக மாறிவிட்ட நமக்கு, கிராமத்தின் கீதங்கள் எட்டாமல் போய்விடுவதில் ஆச்சரியமேதுமில்லை. கிராமத்துக் கீதங்கள் கேட்க மறந்த காதுகளில் கிராமத்தை விட்டுப் பிரியத் தெரியாததாலே திருமணம் எட்டாக் கனியாக இருக்கும் தண்டுவன்களின் (திருமணமாகாத இளைஞர்கள்) மனம் எழுப்பும் குரல் கேட்கவா போகின்றது.


20 வயதில் பெண் பார்க்கத் துவங்கி 35 வயதாகியும் திருமணமாகாத, கதையின் நாயகன் மாரிமுத்து எனும் விவசாயி முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை நிறைந்து கிடக்கின்றான். அப்பா வழி பாட்டியும், அம்மா வழி அம்மாயியும் அச்சு அசலான மனிதர்களாக விரவிக்கிடக்கிறார்கள். கதைகளிலும் நாடகங்களிலும் வரும் பாசமான அப்பா அம்மாக்கள் இல்லை மாரிமுத்துவிற்கு. ஒரு கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளங்களாக மாரிமுத்துவின் அப்பாவும் அம்மாவும் உண்மையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.


திருமணத்திற்கு தயாரான காலத்திலிருந்து, பெண் பார்ப்பதும், பார்த்த பெண்கள் எப்படியிருந்தாலும் பிடித்துப் போவதும், அப்படிப் பிடித்த பெண்ணோடு சொத்தைக் காரணங்களால் திருமணம் நடக்காமல் போவதும் என மாரிமுத்துவின் வாழ்க்கையில் நிலவும் வறட்சி வாசிக்க வாசிக்க மனதை வாட்டுகிறது.


ஒவ்வொரு அத்தியாயங்களிலும் நெற்றிப்பொட்டில் அடிப்பது போன்ற வரிகள் நிறைந்து கிடக்கின்றன. அத்தியாயங்களைக் கடக்க கடக்க 35 வயதுகளைத் தாண்டியும் திருமணமாகாமல் நைந்து போன நம்பிக்கை நூலை பிடித்துக் கொண்டிருக்கும் கிராமத்து நண்பர்கள் மின்னலாய் ஒளிர்ந்து, சூடாய் விழிகளுக்குள் அமர்ந்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்க விடாமல் விட்டேத்தியாய் உட்கார வைத்து விடுகிறார்கள்.


காடே கதியென்று கிடக்கும் மாரிமுத்துவிற்கு காசு பணம் இல்லாமல் இல்லை. இருக்கும் பணத்திற்கு ரிக் வண்டி வாங்கி வடமாநிலங்களுக்கு போகமுடியாது என்றோ, இருக்கும் நிலத்தை ரியல் எஸ்டேட்டாக மாற்ற முடியாது என்றோ இல்லை, ஆனாலும் அங்கேயே வாழ்ந்து கிடக்க முக்கியக் காரணம் அந்த மனிதனை விவசாயம் நேசிக்கிறது என்பதே.


உயர் சாதிக்காரனான மாரிமுத்துவிற்கு தாழ்ந்த சாதிக்காரனான ராமனால் தான் திருமணத்திற்கு தீர்வு கிட்டுகிறது. பங்காளிச் சண்டையில் சும்மா கிடக்கும் நிலம் ஒரு கட்டத்தில் தீர்வுக்கு வருகிறது, திருமணத்திற்கு உதவும் ராமனுக்கு அந்த நிலத்தை விவசாயம் செய்து கொள்ளத் தருவதாக சொன்னாலும், ராமனைக் கழட்டி விடும் மனப்போக்கும் மாரிமுத்துவிற்கு இருக்கிறது. ஒரு கட்டத்தில் மாரிமுத்து கல் குவாரியில் டிராக்டர் ஓட்டும் போது கல் உடைக்கும் பெண் மேல் காதல் கொண்டு அலையும் போது பாராத சாதி, பகையான பங்காளி மகன்களில் நட்பாய் இருக்கும் தம்பி செல்வராசு, தாழ்ந்த சாதிப் பெண்ணை காதலிப்பதைக் கண்ட போது மனது சாதியுணர்வோடு பங்காளிப் பகையில் குரூரமாய் மகிழ்கிறது, இது போன்ற இடங்களில் ஒரு மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் குரூரத்தை மாரிமுத்துவின் வாயிலாகவும் மிக அழகாக கோடிடுகிறார் பெருமாள் முருகன்.


பெருமாள் முருகன்

திருமணம் என்ற பந்தத்தின் மூலம் காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞனின் காமம் குறித்த வெளிப்பாடுகளை  சிறிதும் பூசி மெழுகாமல், அந்த வெப்பம் சிறிதும் கரையாத வண்ணம் அப்படியே எழுத்தில் அடைகாத்து தந்திருக்கிறார்.


விவசாய பின் புலங்களைக் கொண்டதாலேயே பெண் கிடைக்காமல் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் சாதிகளையும், வரதட்சனையையும் சுக்குநூறாக உடைத்து திருமணத்திற்கு பெண்களைத் தேடி படையெடுப்பதை ”கங்கணம்” மிக நேர்த்தியாக நியாயப்படுத்துகிறது.


நமக்குத் தெரிந்து பெண் கிடைக்காததால் திருமணமாகாமல் இருக்கும் ஒரு மனிதன் இருந்தால், அவனுடைய மனப்போராட்டத்தை அறிய வாசிக்க வேண்டிய சரியான புத்தகம் – கங்கணம்.


வாசிப்புக்குப் பின், இன்னும் திருமணமாகாத என் சமகாலத்து நண்பர்களின் மேல் இருந்த அலட்சியம் சிதைந்து, வாஞ்சை கூடியிருக்கிறது.


குறிப்புகள்:
  • எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் திருச்செங்கோடுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் கதை, நான் புழங்கும் மொழியிலேயே வடிக்கப்பட்டிருப்பது வாசிக்கும் போது கூடுதல் ஈர்ப்பை உண்டாக்குகிறது
  • அரிமா சங்கத்தின் சுவடுகள் இதழுக்காக எழுதிய விமர்சனம்
  • பெருமாள் முருகன், அடையாளம் பதிப்பகம். 422 பக்கங்கள் விலை ரூ.235

______________________________


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...