Showing posts with label சாயக்கழிவு. Show all posts
Showing posts with label சாயக்கழிவு. Show all posts

Jul 21, 2011

கடல் சுனாமியைவிடக் கொடியது சாயக்கழிவு சுனாமி

அங்கே நாங்கள் கண்ட காட்சிகளின் அவலம்... உலக மகா சர்வாதிகாரி ஹிட்லரையே கேவிக்கேவி அழ வைத்துவிடும். 'நவீன ஹிட்லர்' ராஜபக்ஷேவையும் ரத்தக் கண்ணீர் சிந்த வைக்கும்''

ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் முதல் ஈரோடு வரை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு மிதிவண்டிப் பயணத்தினிடையே இப்படி ஒலித்த குரல்... அனைவரையும் விதிர்விதிர்க்க வைப்பதாக இருந்தது!


நதிகள் மாசுப்படுத்தப்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவிவெப்பமயமாதல், நஞ்சில்லா உணவு மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவை தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர், 'பசுமைப் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.கருணாகரன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கொடி அசைத்து பயணத்தைத் துவக்கி வைத்தனர்.

அன்னூர், அவினாசி வழியாகச் சென்ற மிதிவண்டி பயணக் குழுவினருக்கு பழச்சாறு, இளநீர் போன்றவற்றைக் கொடுத்து ஆங்காங்கே உற்சாகப்படுத்தி வழி அனுப்பிவைத்தனர் மக்கள்.

'நதிகளைக் காப்போம், நொய்யலை மீட்போம்’ என்கிற கோஷம் முழங்க. திருப்பூர் நகருக்குள் சுமார் 18 கி.மீ. தூரம் பயணம் தொடர்ந்தபோது... சாயப்பட்டறை பிரச்னை காரணமாக பலரும் வேலை இழந்திருப்பதால், திருப்பூர் வெறிச்சோடிப் போயிருக்கும் அவலத்தை உணர்ந்த பயணக் குழுவினர், முதல் நாள் இரவு ஊத்துக்குளியில் தங்கினர்.

இரண்டாம் நாள் பயணம்... திருப்பூரின் சாயக் கழிவுகள் காரணமாக நோயுற்றுக் கிடக்கும். ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியை நோக்கிப் புறப்பட்டது. அங்கேதான் ஒலித்தன... கட்டுரையின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த வரிகள்.

அப்படிக் குமுறிய கொங்கு இளைஞர் பேரவையின்  நிறுவனர்  குமார. ரவிக்குமார், ''திருப்பூரின் சாயக்கழிவு நீர் இப்பகுதியில் ஏற்படுத்திய பாதிப்பு... சமுத்திரத்தில் கிளம்பும் சுனாமியை விட, பலநூறு மடங்கு கொடுமையை விதைத்திருக்கும் 'சாயச் சுனாமி'. கடல் சுனாமி... ஒரு நாள் நிகழ்வு. இந்தச் சாயச் சுனாமியோ... தினம் தினம் மக்களைக் கொன்று போட்டுக் கொண்டிருக்கிறது. சாயக் கழிவு என்ற பெயரில் நொய்யல் ஆற்றில் கலக்கிவிடப்பட்ட விஷம்... அந்த ஆற்றங்கரையோர மக்களை நடைபிணமாக மாற்றி வைத்துள்ளது. மண் காற்று, நீர் அனைத்தும் நஞ்சாகிப் போயுள்ளது.

ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியில் கிணறுகள் அனைத்தும் ததும்பும் அளவுக்குத் தண்ணீர் இருக்கின்றது. ஆனால், அதை கால்நடைகள்கூட குடிக்க முடியவில்லை. அங்கே விளைந்திருக்கும் தென்னை இளநீர்கூட மக்கள் பருக முடியாத அளவுக்கு விஷமாகிப் போயிருக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது. நாங்கள் மிதிவண்டியை உருட்டிச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுதான் நிதர்சன நிலைமை!

ஒரு குடம் குடிநீருக்காக 5 கி.மீ. தூரம் போக வேண்டிய அவலத்தில் உள்ளார்கள் இம்மக்கள். ஆண், பெண் மலடு, புற்றுநோய், தோல் வியாதி என்று பெரும்பாலானவர்கள் நோய்களுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமை... பவானி, அமராவதி என்று மற்ற ஆற்றுப் பிரதேசத்தையும் தாக்க ஆரம்பித்திருப்பது இன்னும் கொடுமை'' என்று கவலை பொங்கக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சென்னிமலை வழியாகச் சென்ற மிதிவண்டிப் பயணம், மாலை 6 மணிக்கு ஈரோட்டில் நிறைவுற்றது. மொத்தம் 180 கி.மீ. தூரம் பயணித்து, ஈரோட்டை அடைந்த பயணக் குழுவை... நொய்யல் ஆற்று பாசன சபைத் தலைவர் அ.பொ.கந்தசாமி, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர். செ. நல்லசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

”விஷச் சாயம்” என்றே ஆகிவிட்ட இன்றைய விவசாயத்தைக் காப்பாற்றவும், நாசப்படுத்தப்படும் நதிகளை மீட்கவும், வனங்களைப் போற்றவும், மண்ணை மதிக்கவும் வலியுறுத்தி நடந்த இப்பயணம், பல ஆயிரம் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் இந்த முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி'' என்று பெருமிதத்தோடு சொன்னார். புரட்சிகர விவசாயிகள் முன்னணி அமைப்பாளர் முகிலன்.

-------
பொறுப்பி:

பசுமை விகடன் இதழில் திரு ஜி.பழனிச்சாமி(9940651071) அவர்கள் எழுதிய கட்டுரை. 

நன்றி : பசுமை விகடன், ஜி.பழனிசாமி

-0-

Oct 8, 2010

வண்ணச் சேர்க்கைக்கு இழந்த வாழ்வும், வாங்கிய வலியும்

தண்ணீரைப் போல் தெளிவானது, சுவையானது, சுகமானது ஏதேனும் உண்டா?. குழந்தைப் பருவத்தில் திணிக்கப்பட்டவை இரண்டு, ஒன்று ”தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திடும்” மற்றொன்று ”தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே!”

ஏதேனும் மரணச் செய்திகளை கேட்கும் போது, உடனே கேட்பது ”இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறமுடியுமா?” அதற்கு ஈடாகா பெறப்படும் பதில், “இல்லீங்க, கேன்சர்ங்க”. அடுத்தடுத்து கேட்கப்படும் மரணச் செய்திகளில், மரணத்திற்கான காரணமாக காட்டப்படுவது புற்றுநோய்.

தற்சமயம் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வட்டத்தில் பெரியப்பா, அத்தை, சின்ன பாட்டி என்பது போன்ற உறவுகளில் புற்று நோயால் மரணத்தை எதிர்நோக்கி வலியோடு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆறு.

ஒரு காலத்தில் புற்று நோய் என்பது ஒட்டு மொத்த உறவுகளில் யாரோ ஒருவருக்கு இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சமீப காலங்களில் நமக்குத் தெரிந்தவர் யாரேனும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது “அட… ப்ச்…” என்று கடந்து போகுமளவிற்கு மிகச் சாதாரணமாக விரவிக் கிடக்கிறது.

அதுவும் ஈரோடு பகுதிகளில் புற்று நோய் ஆழ வேரூன்றுவதற்கு முக்கியக் காரணம் விஷமாய் மாறிவரும் தண்ணீர். எங்கோ இருக்கும் யாரோ உடையணிய, இங்கு இருக்கும் ஒரு சிலர் கோடிகளில் புரள, அதன் பொருட்டு தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வையே காவு கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஒன்றா இரண்டா?
 

தண்ணீர் மாசுக்கெதிராக கண்ணா மூச்சியாடும் அரசாங்கம், எந்த விதத்திலும் சாமானியர்களின் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் சிந்திப்பதாக இல்லை. பவானி, ஈரோடு, பெருந்துறை, சிப்காட், ஊத்துக்குளி, திருப்பூர் இன்ன பிற சுற்று வட்டாரங்களெங்கும் சாயப்பட்டறைகள் துணிகளை வெளுத்து வெளுத்து, வேதிப்பொருட்களை அள்ளிக் கொட்டி, சாயமேற்றிக் கொண்டேயிருக்கின்றன. தங்கள் லாபத்தை அரிக்கும், சுத்திகரிப்பு பணிகளைச் செயல்படுத்த வாய்ப்பின்றி(!), மனமின்றி, போகிற போக்கில் சாயப்பட்டறை முதலாளிகளால் திறந்து விடப்படும் நீர், பவானி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, நொய்யல் ஆறு என எல்லா நீர்த்தடங்களையும் வண்ணம் மாற்றி, விஷமேற்றிக் கொண்டேயிருக்கிறது.

சாயப்பட்டறைகள் தங்கள் தேவைக்கென தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிகளைத் தாண்டுகிறது. அதில் தண்ணீர் வந்தால் சந்தோசம், ஒரு வேளை தண்ணீர் வரவில்லை என்றாலும் கவலையில்லை, வெளியேற்ற வேண்டிய சாயக் கழிவு நீரை, தண்ணீர் இல்லாத வெற்று ஆழ்துளைக் கிணறுகளில் பாய்ச்சி விடுகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகளில் தஞ்சம் புகுந்த விஷநீர் மண்ணுக்குள் சிலந்திவலையாய் கிடக்கும் நீர்த்தடங்களில் முப்பது, நாற்பது மைல் தூரம் கூட பயணித்து, கிணறுகளிலோ அல்லது மற்ற ஆழ்துளைக் கிணறுகளில் இருக்கும் தண்ணீரோடு கலந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.




உதாரணத்திற்கு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாயப்பட்டறைகளை அனுமதித்த பிறகு, அங்கிருந்து பல மைல்கள் தள்ளியிருக்கும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளின் தண்ணீர், தன் சுயத்தை இழந்து உவர்ப்புத்தன்மை மிகுந்துவிட்டது. நீரின் உண்மையான சுவை, தன்மை, குணம் என எல்லாம் தொலைந்து போய், முழுக்க முழுக்க நச்சுத் தன்மை கூடிக்கொண்டே வருகிறது. இது பற்றிய விழிப்புணர்வேதுமின்றி நமது நாட்கள் வழக்கம் போல், நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. உள்ளடங்கிய கிராமங்களை விடுத்து, பெரும்பாலான பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமானது, காசு போட்டு வாங்கும் தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாதாரத்திலேயே பெரும்பாலானோர் இருக்கும் நிலையில், சமையல் செய்ய கிணற்றுத் தண்ணீர் அல்லது குழாய்கள் வழியே வரும் ஆற்று நீரை மட்டுமே பயன்படுத்துகின்றோம். என்னதான் கொதிக்க வைத்தாலும் நீரில் கலந்த விஷம் பிரிந்துவிடவா போகின்றது. உணவகங்களில், விருந்துகளில், திருமணங்களில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் இதேதான் நடக்கும்.

அடுத்து, இந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன் படுத்தும் பொது, தானியங்கள், காய்கறிகளில் விஷம் சென்று தங்குவதை தடுக்க முடியாது. சாயப்பட்டறை கழிவு நீர் பாயும் விவசாயப் பகுதிகளில் வளரும் தென்னை மரங்கள் தரும் இளநீர் சுவையற்று, சில சமயம் நிறம் மாறி, துர்வாசனையோடு விளைவதை தவிர்க்க முடிவதில்லை.



புற்று நோய், மலட்டுத் தன்மை, குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி, தொடர்ந்து வரும் புதிய புதிய நோய்களின் பின்னணியில், புரிந்தும் புரியாத பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியக் காரணமாக இருப்பவை, இயற்கை அள்ளிக்கொடுத்த நீரை, பேராசையின் பொருட்டு,  மாசடைந்த, வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீராக மாற்றிய பாவமும் என்பதை மறுப்பதற்கில்லை.


தண்ணீரைப் பழிக்காதே என்று சொல்லிக் கொடுத்த வளர்ப்பு, தண்ணீரைச் சீரழிக்காதே என்று சொல்ல மறந்து போனதோ!? எதையோ நோக்கிய பேராசையில், எல்லாவற்றையும் உதறித் தள்ளுகின்றோம், உதறித் தள்ளியதை இழப்பு எனப் புரியும் பொறுமையின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உடம்பில் வெளியில் தெரியும் நோய்களை வண்ணம் நிறைந்த உடைகள் போட்டு மற்றவர்கள் கண்களிலிருந்து வேண்டுமானால் மறைக்கலாம், உள்ளுக்குள் நாமே உருவாக்கிய, நோய் கொடுக்கும் வலியை, அதன் தொடர்ச்சியாய் வரும் இழப்பை எதைக் கொண்டு மறைக்க முடியும்.

_________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...