தண்ணீரைப் போல் தெளிவானது, சுவையானது, சுகமானது ஏதேனும் உண்டா?. குழந்தைப் பருவத்தில் திணிக்கப்பட்டவை இரண்டு, ஒன்று ”தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திடும்” மற்றொன்று ”தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே!”
ஏதேனும் மரணச் செய்திகளை கேட்கும் போது, உடனே கேட்பது ”இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறமுடியுமா?” அதற்கு ஈடாகா பெறப்படும் பதில், “இல்லீங்க, கேன்சர்ங்க”. அடுத்தடுத்து கேட்கப்படும் மரணச் செய்திகளில், மரணத்திற்கான காரணமாக காட்டப்படுவது புற்றுநோய்.
தற்சமயம் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வட்டத்தில் பெரியப்பா, அத்தை, சின்ன பாட்டி என்பது போன்ற உறவுகளில் புற்று நோயால் மரணத்தை எதிர்நோக்கி வலியோடு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆறு.
ஒரு காலத்தில் புற்று நோய் என்பது ஒட்டு மொத்த உறவுகளில் யாரோ ஒருவருக்கு இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சமீப காலங்களில் நமக்குத் தெரிந்தவர் யாரேனும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது “அட… ப்ச்…” என்று கடந்து போகுமளவிற்கு மிகச் சாதாரணமாக விரவிக் கிடக்கிறது.
அதுவும் ஈரோடு பகுதிகளில் புற்று நோய் ஆழ வேரூன்றுவதற்கு முக்கியக் காரணம் விஷமாய் மாறிவரும் தண்ணீர். எங்கோ இருக்கும் யாரோ உடையணிய, இங்கு இருக்கும் ஒரு சிலர் கோடிகளில் புரள, அதன் பொருட்டு தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வையே காவு கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஒன்றா இரண்டா?
தண்ணீர் மாசுக்கெதிராக கண்ணா மூச்சியாடும் அரசாங்கம், எந்த விதத்திலும் சாமானியர்களின் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் சிந்திப்பதாக இல்லை. பவானி, ஈரோடு, பெருந்துறை, சிப்காட், ஊத்துக்குளி, திருப்பூர் இன்ன பிற சுற்று வட்டாரங்களெங்கும் சாயப்பட்டறைகள் துணிகளை வெளுத்து வெளுத்து, வேதிப்பொருட்களை அள்ளிக் கொட்டி, சாயமேற்றிக் கொண்டேயிருக்கின்றன. தங்கள் லாபத்தை அரிக்கும், சுத்திகரிப்பு பணிகளைச் செயல்படுத்த வாய்ப்பின்றி(!), மனமின்றி, போகிற போக்கில் சாயப்பட்டறை முதலாளிகளால் திறந்து விடப்படும் நீர், பவானி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, நொய்யல் ஆறு என எல்லா நீர்த்தடங்களையும் வண்ணம் மாற்றி, விஷமேற்றிக் கொண்டேயிருக்கிறது.
சாயப்பட்டறைகள் தங்கள் தேவைக்கென தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிகளைத் தாண்டுகிறது. அதில் தண்ணீர் வந்தால் சந்தோசம், ஒரு வேளை தண்ணீர் வரவில்லை என்றாலும் கவலையில்லை, வெளியேற்ற வேண்டிய சாயக் கழிவு நீரை, தண்ணீர் இல்லாத வெற்று ஆழ்துளைக் கிணறுகளில் பாய்ச்சி விடுகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகளில் தஞ்சம் புகுந்த விஷநீர் மண்ணுக்குள் சிலந்திவலையாய் கிடக்கும் நீர்த்தடங்களில் முப்பது, நாற்பது மைல் தூரம் கூட பயணித்து, கிணறுகளிலோ அல்லது மற்ற ஆழ்துளைக் கிணறுகளில் இருக்கும் தண்ணீரோடு கலந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.
உதாரணத்திற்கு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாயப்பட்டறைகளை அனுமதித்த பிறகு, அங்கிருந்து பல மைல்கள் தள்ளியிருக்கும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளின் தண்ணீர், தன் சுயத்தை இழந்து உவர்ப்புத்தன்மை மிகுந்துவிட்டது. நீரின் உண்மையான சுவை, தன்மை, குணம் என எல்லாம் தொலைந்து போய், முழுக்க முழுக்க நச்சுத் தன்மை கூடிக்கொண்டே வருகிறது. இது பற்றிய விழிப்புணர்வேதுமின்றி நமது நாட்கள் வழக்கம் போல், நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. உள்ளடங்கிய கிராமங்களை விடுத்து, பெரும்பாலான பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமானது, காசு போட்டு வாங்கும் தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாதாரத்திலேயே பெரும்பாலானோர் இருக்கும் நிலையில், சமையல் செய்ய கிணற்றுத் தண்ணீர் அல்லது குழாய்கள் வழியே வரும் ஆற்று நீரை மட்டுமே பயன்படுத்துகின்றோம். என்னதான் கொதிக்க வைத்தாலும் நீரில் கலந்த விஷம் பிரிந்துவிடவா போகின்றது. உணவகங்களில், விருந்துகளில், திருமணங்களில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் இதேதான் நடக்கும்.
அடுத்து, இந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன் படுத்தும் பொது, தானியங்கள், காய்கறிகளில் விஷம் சென்று தங்குவதை தடுக்க முடியாது. சாயப்பட்டறை கழிவு நீர் பாயும் விவசாயப் பகுதிகளில் வளரும் தென்னை மரங்கள் தரும் இளநீர் சுவையற்று, சில சமயம் நிறம் மாறி, துர்வாசனையோடு விளைவதை தவிர்க்க முடிவதில்லை.
புற்று நோய், மலட்டுத் தன்மை, குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி, தொடர்ந்து வரும் புதிய புதிய நோய்களின் பின்னணியில், புரிந்தும் புரியாத பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியக் காரணமாக இருப்பவை, இயற்கை அள்ளிக்கொடுத்த நீரை, பேராசையின் பொருட்டு, மாசடைந்த, வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீராக மாற்றிய பாவமும் என்பதை மறுப்பதற்கில்லை.
தண்ணீரைப் பழிக்காதே என்று சொல்லிக் கொடுத்த வளர்ப்பு, தண்ணீரைச் சீரழிக்காதே என்று சொல்ல மறந்து போனதோ!? எதையோ நோக்கிய பேராசையில், எல்லாவற்றையும் உதறித் தள்ளுகின்றோம், உதறித் தள்ளியதை இழப்பு எனப் புரியும் பொறுமையின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உடம்பில் வெளியில் தெரியும் நோய்களை வண்ணம் நிறைந்த உடைகள் போட்டு மற்றவர்கள் கண்களிலிருந்து வேண்டுமானால் மறைக்கலாம், உள்ளுக்குள் நாமே உருவாக்கிய, நோய் கொடுக்கும் வலியை, அதன் தொடர்ச்சியாய் வரும் இழப்பை எதைக் கொண்டு மறைக்க முடியும்.
_________________________


