Showing posts with label பசுமைவிகடன். Show all posts
Showing posts with label பசுமைவிகடன். Show all posts

Jul 21, 2011

கடல் சுனாமியைவிடக் கொடியது சாயக்கழிவு சுனாமி

அங்கே நாங்கள் கண்ட காட்சிகளின் அவலம்... உலக மகா சர்வாதிகாரி ஹிட்லரையே கேவிக்கேவி அழ வைத்துவிடும். 'நவீன ஹிட்லர்' ராஜபக்ஷேவையும் ரத்தக் கண்ணீர் சிந்த வைக்கும்''

ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் முதல் ஈரோடு வரை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு மிதிவண்டிப் பயணத்தினிடையே இப்படி ஒலித்த குரல்... அனைவரையும் விதிர்விதிர்க்க வைப்பதாக இருந்தது!


நதிகள் மாசுப்படுத்தப்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவிவெப்பமயமாதல், நஞ்சில்லா உணவு மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவை தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர், 'பசுமைப் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.கருணாகரன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கொடி அசைத்து பயணத்தைத் துவக்கி வைத்தனர்.

அன்னூர், அவினாசி வழியாகச் சென்ற மிதிவண்டி பயணக் குழுவினருக்கு பழச்சாறு, இளநீர் போன்றவற்றைக் கொடுத்து ஆங்காங்கே உற்சாகப்படுத்தி வழி அனுப்பிவைத்தனர் மக்கள்.

'நதிகளைக் காப்போம், நொய்யலை மீட்போம்’ என்கிற கோஷம் முழங்க. திருப்பூர் நகருக்குள் சுமார் 18 கி.மீ. தூரம் பயணம் தொடர்ந்தபோது... சாயப்பட்டறை பிரச்னை காரணமாக பலரும் வேலை இழந்திருப்பதால், திருப்பூர் வெறிச்சோடிப் போயிருக்கும் அவலத்தை உணர்ந்த பயணக் குழுவினர், முதல் நாள் இரவு ஊத்துக்குளியில் தங்கினர்.

இரண்டாம் நாள் பயணம்... திருப்பூரின் சாயக் கழிவுகள் காரணமாக நோயுற்றுக் கிடக்கும். ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியை நோக்கிப் புறப்பட்டது. அங்கேதான் ஒலித்தன... கட்டுரையின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த வரிகள்.

அப்படிக் குமுறிய கொங்கு இளைஞர் பேரவையின்  நிறுவனர்  குமார. ரவிக்குமார், ''திருப்பூரின் சாயக்கழிவு நீர் இப்பகுதியில் ஏற்படுத்திய பாதிப்பு... சமுத்திரத்தில் கிளம்பும் சுனாமியை விட, பலநூறு மடங்கு கொடுமையை விதைத்திருக்கும் 'சாயச் சுனாமி'. கடல் சுனாமி... ஒரு நாள் நிகழ்வு. இந்தச் சாயச் சுனாமியோ... தினம் தினம் மக்களைக் கொன்று போட்டுக் கொண்டிருக்கிறது. சாயக் கழிவு என்ற பெயரில் நொய்யல் ஆற்றில் கலக்கிவிடப்பட்ட விஷம்... அந்த ஆற்றங்கரையோர மக்களை நடைபிணமாக மாற்றி வைத்துள்ளது. மண் காற்று, நீர் அனைத்தும் நஞ்சாகிப் போயுள்ளது.

ஒரத்துப்பாளையம் அணைப் பகுதியில் கிணறுகள் அனைத்தும் ததும்பும் அளவுக்குத் தண்ணீர் இருக்கின்றது. ஆனால், அதை கால்நடைகள்கூட குடிக்க முடியவில்லை. அங்கே விளைந்திருக்கும் தென்னை இளநீர்கூட மக்கள் பருக முடியாத அளவுக்கு விஷமாகிப் போயிருக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது. நாங்கள் மிதிவண்டியை உருட்டிச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுதான் நிதர்சன நிலைமை!

ஒரு குடம் குடிநீருக்காக 5 கி.மீ. தூரம் போக வேண்டிய அவலத்தில் உள்ளார்கள் இம்மக்கள். ஆண், பெண் மலடு, புற்றுநோய், தோல் வியாதி என்று பெரும்பாலானவர்கள் நோய்களுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமை... பவானி, அமராவதி என்று மற்ற ஆற்றுப் பிரதேசத்தையும் தாக்க ஆரம்பித்திருப்பது இன்னும் கொடுமை'' என்று கவலை பொங்கக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சென்னிமலை வழியாகச் சென்ற மிதிவண்டிப் பயணம், மாலை 6 மணிக்கு ஈரோட்டில் நிறைவுற்றது. மொத்தம் 180 கி.மீ. தூரம் பயணித்து, ஈரோட்டை அடைந்த பயணக் குழுவை... நொய்யல் ஆற்று பாசன சபைத் தலைவர் அ.பொ.கந்தசாமி, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர். செ. நல்லசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

”விஷச் சாயம்” என்றே ஆகிவிட்ட இன்றைய விவசாயத்தைக் காப்பாற்றவும், நாசப்படுத்தப்படும் நதிகளை மீட்கவும், வனங்களைப் போற்றவும், மண்ணை மதிக்கவும் வலியுறுத்தி நடந்த இப்பயணம், பல ஆயிரம் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் இந்த முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி'' என்று பெருமிதத்தோடு சொன்னார். புரட்சிகர விவசாயிகள் முன்னணி அமைப்பாளர் முகிலன்.

-------
பொறுப்பி:

பசுமை விகடன் இதழில் திரு ஜி.பழனிச்சாமி(9940651071) அவர்கள் எழுதிய கட்டுரை. 

நன்றி : பசுமை விகடன், ஜி.பழனிசாமி

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...