என்னைக் கட்டிக்குங்க சார்

தொன்மை மன்ற விழாவிற்கு அழைத்தபோது, யார் பங்கேற்பாளர்கள் எனக் கேட்டேன். மாவட்டம் முழுவதிலுமிருந்து 210 வரலாற்று ஆசிரியர்கள் எனச் சொன்னபோது, ”உரை வேண்டாம், பயிலரங்காக வைத்துக்கொள்ளலாமா!?” என்று நான் தான் கேட்டிருந்தேன். காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

உண்மையில் ஆசிரியர்களைச் சந்திப்பதில் கொஞ்சம் நடுக்கம் உண்டு. காரணம் அவர்கள் ஆசிரியர்கள். நாம் கருதும் வண்ணமே அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. பொதுவாக பயிலரங்கு என்றால் 30 பேர் இருப்பதுதான் வசதி. 210 பேரை வைத்துக்கொண்டு உரையாடியபடி கையாள்வது என்பது சற்று ரிஸ்க் தான். அந்த ரிஸ்க் என்பது நேரம் கரைவதுதான்.
துவக்க விழா முடிந்து என்னிடம் அரங்கு வழங்கப்பட்டபோது மதியம் 12 மணி. வேண்டுமானால் அதிகபட்சம் 1.15 வரை எடுத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லப்பட்டது. நண்பர் ஆசிரியர் பால்ராஜ் அவர்கள் தேர்ந்த ஒரு அறிமுகம் கொடுத்தார்.
உரை என்றால் அப்படி நேரத்தைக் குறைப்பது குறித்துக் கவலையில்லை. முன்பு எவ்வளவு நேரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இறுதியாக நான் பேச வேண்டிய தருணம் வரும்போது எவ்ளோ நேரத்தில் முடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு, சொல்லும் நேரத்தில் ஓரிரு நிமிடங்கள் முன்பின் முடித்துவிடுவது வழக்கம்.
ஆனால் பயிலரங்கு என்று வந்துவிட்டு, திட்டமிட்ட நேரத்திற்கு தயாரிப்பை வைத்திருக்கும்போது, அதில் எதையும் கைவிட மனமே வராது. ஆரம்பம் - நடு - இறுதி என ஒரு கோர்வை இருக்கும். இடையில் எதை skip செய்தாலும் திருப்தியின்மை நிரம்பிவிடும்.
பங்கெடுத்திருக்கும் ஆசிரியர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பி வந்திருப்பவர்கள். விரும்பி வந்தவர்கள், அழைத்து வரப்பட்டவர்கள், இழுத்து வரப்பட்டவர்கள் எனக் கேட்கப்பட்டபோது, இழுத்து வரப்பட்டவர்களுக்கும் கணிசமாக கை உயர்ந்தது மனதில் இருந்தது.


மதியம் 1.12 மணிக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் முடித்துவிடத் தயாராகவே இருந்தேன். எல்லாவற்றையும் நகர்த்தி இறுதிப் புள்ளிக்கு நகர்ந்துவிடுவது ஒன்றும் சிரமமில்லை. ஆனால் சட்டென ஒரு ரிஸ்க் எடுக்க முனைந்தேன். “இன்னும் 3 நிமிசத்தில் முடிச்சுக்கனும். முடிச்சுக்கவா இல்லை இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா!?” என்றேன். சிலர் ஜெர்க் ஆவது புரிந்தது. அந்த ஜெர்க் ‘அய்யய்யோ முடியப்போகுதா!?’ என்பதுதான் என எனக்குப் புரிந்தது. எனக்கு முழுமையாகக் கொடுக்கவேண்டும். ஒருங்கிணைப்பாளர் முனைவர் தனபாக்கியம், “அய்யய்யோ லன்ச்ங்க... எல்லாரும் சாப்பிட்டு வந்து அடுத்த செஷன் இருக்கு” எனப் பதறத் தொடங்கினார்.

கூட்டத்திலிருந்து “செவிக்கு உணவில்லாத போது”, “கன்ட்னியூ பண்ணுங்க”, “எங்களுக்குப் போர் அடிக்கும் வரை போங்க” என்பது போன்ற குரல்கள் வந்தன. தனபாக்கியம் என்னைப் பார்த்து சிரித்தார். “சரி நீங்களே முடிவு செய்ங்க. மூனு நிமிசத்தில் முடிக்கவும் தயார். நேரம் கொடுத்தா தொடரவும் தயார்” என்றேன்.

“சரிங்க... 1.45 வரை எடுத்துக்குங்க!” என்று கூட்டத்திலிருந்தே குரல் வந்தது... எடுத்துக்கொண்டேன். நிறைந்த மனதோடு நிறைவு செய்தேன்.
நிறைந்தவுடன் ஆசிரியர்கள் நிகழ்ச்சி குறித்து தம் கருத்தைச் சொல்ல முன்வந்தார்கள். இறுதி வரிசையிலிருந்து ஒரு ஆசிரியர் ஓடி வந்தார். தம் பாராட்டைக் கூறியவர்... “நான் இந்த மேடையில் உங்கள் அனைவரின் முன்னும் என் நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி வந்தார். என்ன செய்யப்போறாரோ என சற்று திடுக்கிடலோடுதான் நின்றிருந்தேன். அருகில் வந்தவர் கைகளை விரித்தபடி “என்னைக் கட்டிக்குங்க சார்!” என்றார். மேடையில் பாராட்டு பெறும் விதமாக ஒரு ஆசிரியரை அணைத்துக் கொண்டது இதுவே முதல் முறை.
கீழே இறங்கி வந்ததும். அடுத்தடுத்து ஆசிரியர்கள் சற்றே உணர்ச்சிவயப்பட்ட நிலைகளில். “இன்னிக்குத்தான் நான் வாழ்க்கையைத் தொடங்குகிறேன்” என்றார் ஒருவர். உண்மையில் நடுங்கிப்போனேன். இப்போதைய நடுக்கம் வேறு விதமானது. ஒரு ஆசிரியை நோட்டை விரித்து வைத்துக் கொண்டு ஒரு “கையெழுத்து போடுங்க” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். “அதெல்லாம் வேணாம்ங்ம்மா!” எனக் கை கூப்பி விடைபெற்றேன்.
பயிற்சித் துறையை கையில் எடுத்தற்கு நெகிழ்ந்து நிறைந்த தருணங்களில் இன்றும் ஒன்று.

Miles to go...

2 comments:

நிலாமகள் said...

நெகிழ்ச்சி !! சிறப்பு!!

'பரிவை' சே.குமார் said...

சிறப்பு...
நெகிழ்ச்சி....
பேச்சின் வீச்சு...
வாழ்த்துக்கள் அண்ணா...