உன் குத்தமா என் குத்தமா!?

தமிழக அரசியலில் தெரிந்தோ தெரியாமலோ, நல்லதோ கெட்டதோ பெரும் பங்கு வகிப்பதுபேச்சுதான். காமராஜர் தோற்றது தமிழக மக்கள் அடுக்குமொழி வசனத்தில் மயங்கிப் போனதினாலும்தான் எனச் சொல்லக் கேட்டதுண்டு. பேச்சு ஒரு சுவை மிகுந்தகலையாக முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மகுடியாக வாசிக்கப்பட்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் அதேபேச்சுபேசுவதற்கும், செயல்பாட்டிற்கும் தொடர்பே இல்லாதகளைஎன மாறிப்போனதையும் மறுக்க முடியாது.

அரசியல் குறித்த ஆர்வம் தோன்றிய விடலைப்பருவ வயதில் வெற்றிக்கொண்டான் பேச்சைத்தான் அனைவரும் சிலாகித்துப் பேசுவார்கள். வெற்றிக்கொண்டான் பேச்சைக் கேட்டு ரசிக்க எதிர்க் கட்சிக்கார்களே தலையில் முக்காடிட்டவாறு வருவார்கள் என்றும் உசுப்பேற்றியிருந்தார்கள். 90களின் பிற்பாதியில் ஒரு கூட்டத்தில்தான் வெற்றிகொண்டான் பேச்சைக் கேட்டேன். ஆபாசத்திற்கொன்றும் குறைச்சலில்லை. இன்றளவும் நினைவிலிருப்பது சீதாராம் கேசரி காங்கிரஸின் தலைவராக இருந்த காலம் என நினைக்கிறேன். அநேகமாக ஜெயின் கமிசன் சிக்கல் காலகட்டமாய் இருக்கலாம். சீதாராம் கேசரி குறித்து வெற்றிகொண்டான் பேசும் போதுஏரோப்பிளைன்ல அடிபட்டு வுழுந்து முகம் சப்பளிஞ்சு போயி மூஞ்சுறு மாதிரி முகத்தோட ஒருத்தன் இருப்பானே” எனச் சொன்னது இன்றும் நினைவிலிருக்கிறது. தீப்பொறி ஆறுமுகம் பேசியதாக நண்பர்கள் சொல்லக் கேட்பதெல்லாம் இங்கு எழுதமுடியாத வாசகங்கள்.

வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் அளவிற்கு திறமையாக, சுவாரஸ்யமாக(!) பேச ஆள் இல்லையென்றாலும் மற்ற கட்சிக பேச்சாளர்களிலும் ஆபாசமாகப் பேசியவர்களைக் கண்டதுண்டு. அப்படி ஒரு பெண் பேச்சாளர் மிக ஆபாசமாகப் பேசி, அடிதடி நடந்ததாகவும் ஒருமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்.

காலம் வெகுவாக மாறிப்போயிருக்கின்றது. கிராமங்களில் கூத்துகளில் கோமாளிகள் பேசும் கெட்ட வார்த்தைகளைக் கேட்டு மிரண்டு, ரகசியமாய் ரசித்த காலமெல்லாம் மலையேறிப்போய்விட்டன. இப்போதைக்கு எல்லா வீடுகளிலும் சந்தானம், விவேக் வகையறாக்கள் தெளிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமே பழக்கத்திலுண்டு.

அரசியல் கூட்டங்களில் காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டோ, பாஜகவோ மிகப்பெரிய முழக்கங்களையெல்லாம் முன்னெடுப்பதில்லை. 2009, 2011 தேர்தலில் நரம்பு புடைக்க முழங்கிய சீமானை, அதன்பின் காணும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மதிமுக கூட்டங்களில் முழக்கங்கள் இருந்தாலும் நாகரீகம் இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன். தந்தி டிவி நேர்காணல்களில் நாஞ்சில் சம்பத் தடுமாறும் பொழுதெல்லாம், மதிமுகவில் கர்ஜித்த சம்பத்தா இது எனத் ஆச்சரியப்படுவதுண்டு. அடிக்கடி நடைபெறும் கழகக் கூட்டங்களில் முழக்கங்களை விட வசவுகளுக்கு இடம் அதிகமாகிவிட்டது.

”ஊர்ல இத்தன இலவச கல்யாணம், அத்தன இலவச கல்யாணம்னு பண்றாங்களே, அவங்களுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வெச்சு கொழந்த பெத்துக்கச் சொல்லு. அப்போதான் குடும்பம் குட்டி விலைவாசினு கஷ்டம் தெரியும்” என ஒருவர் பேசுவதையும்

”குடிகார நாயே” என குடிப்பழக்கமுள்ள ஒருவர் பேசுவதையும்

”ஊரெல்லாம் கூத்தியா வெச்சிருக்கியேடா!” என ஒரு பெண் முழங்குவதையும்

”நீ செத்து அனாதைப் பொணமா நாறிப்போய்டு” என தளர்ந்த வயதிலிருக்கும் ஒருவர் சபிப்பதையும்

 “நீ ஆம்பளையா இருந்தா எங்க ஊருக்கு வந்து பாருடா” என ஒருவர் சவால் விடுவதையும் கேட்டுச் சகிக்க வேண்டியதாயிருக்கிறது

பொதுவாக இம்மாதிரியான கூட்டங்களுக்கு முன்பு போல் பொதுமக்கள் கூடுவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த வீதியில் வந்து நிற்கும் வேன், லாரிகளிலிருந்து கும்பல் கும்பலாக இறங்கி ஒரு ஒழுங்கில் வந்து இருக்கைகளை நிரப்பிவிடுகிறார்கள். பொதுமக்களாக விருப்பப்பட்டுக் கூடுவது மிக அரிதான கூட்டங்கள். அதற்கு குறைந்த பட்சம் மிக முக்கியத்தலைவர் அந்தக் கூட்டத்தில் பேச வேண்டியதாக இருக்க வேண்டும். இம்மாதிரியான எல்லாக் கூட்டங்களிலும் கழகப் பேச்சாளர்கள் பேசுவதில்லை. அந்தந்தப் பகுதி கட்சி பொறுப்பாளர்களே அதிகம் பேசுவதை கேட்க நேர்கிறது. பேச்சாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் வேறுபாடு உண்டு. பெரும்பாலும் பேச்சாளர்கள் எனப்படுபவர்கள் அன்றைக்கு மேடையில் தோன்றும் நட்சத்திரங்களே. ஆனால் பொறுப்பாளர்கள் எனப்படுவோர் அந்தந்தப் பகுதியில் மக்கள் பிரதிநியாக இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் அல்லது வருங்காலத்தில் வந்தாகவேண்டும் எனத் துடிப்பவர்கள்.

இப்படி வெறும் உணர்ச்சிப் போக்கில் மட்டுமே பேசுபவர்கள், நம் பகுதியின் வார்டு கவுன்சிலர் பதவிக்கோ, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ, நகராட்சித் தலைவர் பதவிக்கோ, மாநகராட்சி தலைமைப் பதவிக்கோ, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ என கடந்த தேர்தலில் வீட்டில் வந்து வாக்குக் கேட்டவர்கள் அல்லது வரப்போகும் தேர்தலில் வந்து கை கூப்பி வாக்குக் கேட்பவர்கள்.

யார் தலைவனாய் வரவேண்டும் என்பது குறித்தெல்லாம் பொறுமையாய், தெளிவாய் யோசிக்க நமக்கு எங்கே நேரமிருக்கிறது. வெற்று முழக்கங்கள் மூலம் வாடகைக் கூட்டத்திடம் கை தட்டல் பெற்று, ஓங்கிய குரலுக்காக அல்லது அதில் தடவியனுப்பும் வன்மத்திற்காக, அதோடு அவர்கள் காட்டும் அதீத பணிவிற்காக மேல் மட்டத்தின் கடைக்கண் பார்வையில்பட்டு, மடமட வேட்டியோடு வெள்ளைச் செருப்போடு மாறி மாறி நம் வீட்டு வாசலில், சாலையோரப் பாதாகைகளில் நிற்கையில் ரெண்டுல ஒன்னத் தொடு என்பது போல் அவருக்கோ அல்லது இவருக்கோ என பொத்தானை அழுத்திவிட்டு, அவர்கள் நல்லது செய்வார்கள் எனக் காத்திருக்கிறோம்.

மேலே அவர்கள் பேசியதாக குறிப்பிட்டிருக்கும் நாலைந்து வரி வசனங்களில் வெளிப்படுத்தியிருக்கும் குணத்தின் வேர்தான் ஆழ வேரூன்றியிருக்கிறது. அதிலிருந்துதான் அவர்கள் முளைத்து கிளை பரப்புவார்கள். கனி கொடுப்பார்கள்.

ஊமத்தை வேரிலிருந்து மல்லிகைப்பூச் செடியும், கருவேலமரத்தின் வேரிலிருந்து வேம்பும் முளைக்குமென நினைப்பது யார் குற்றம்.

3 comments:

ezhil said...

அருமையான பதிவு...

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு அண்ணா....
வாழ்த்துக்கள்.

மகிழ்நிறை said...

ரொம்ப அருமையா நகர்ந்த பதிவு என் பெருமூச்சோடு முடிந்திருகிறது:((
நாஞ்சில் சம்பத்தை பார்க்கும் போது எனக்கும் இது தான் தோணுது அண்ணா!