மலையாளக் கரையோரம் - 1

அவ்வப்போது பார்த்த சில மலையாள மொழிப்படங்கள் குறித்த சில வரிப் பதிவுகள். முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை தவிர்த்து, அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.

  



Trivandrum Lodge

பெண் ருசியை புத்தகங்களில் மட்டுமே அறிந்து, நிஜத்தில் ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்குபவனும்...

பிடிகளில் இருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக்கொள்ள விரும்பி விவாகரத்தோடு தோழியின் உதவியால் லாட்ஜில் புகும் நாவலாசிரியையும்...

பல்லாண்டுகளுக்கு முன் பிரிந்து அடுத்தடுத்த அறைகளிலிலேயே (முன்னால்) கணவன்-மனைவி என அறியாவண்ணம் வாழும் வயதான தம்பதிகளும்...

பலரோடு உடலைப் பகிர்ந்து அதன் மூலம் உருவாக்கி தாய் தந்த சொத்துக்களை, பலமடங்கு பெருக்கி பெரும் பணக்காரனாய் வாழும், மனைவியை இழந்த ஒரு இளம் தந்தையும்...

பள்ளிச் சிறுவனாய் வகுப்புத்தோழி மீது மையல்கொள்ளும் மாணவனும்...

என....”திருவேண்ட்ரம் லாட்ஜ்” எனும் பழைய லாட்ஜ் தொடர்புடைய பலதரப்பட்ட மனிதர்களின் சில நிகழ்வுகளையும், அந்த லாட்ஜ் முதலாளியின் வாழ்க்கையைச் சுற்றியும் நகரும் மென்மையான ஒரு கதை. நுணுக்கமான வசனங்களாலும் அற்புதமான ஜெயசூர்யாவின் நடிப்பாலும் படம் நம்மை உள்ளே கட்டியிழுத்து தன்னில் பொத்தி வைத்துக்கொள்கிறது.


-



-:( அன்னயும் ரஸூலும் ):-

வாடகை கார் ஓட்டுனருக்கும், துணிக்கடைப் பணிப்பெண்ணுக்கும் இடையே துளிர்க்கும் காதல்.... சூழ்நிலைகளின் நகர்வில் படும்பாடுதான் கதை.

நண்பர்களோடு உடனிருப்பதாலும், சாதாரணமாக உதவுவதாலும் வந்தமரும் சிக்கல் பருந்து கொத்தித் தின்கிறது ரஸூலின் காதலையும் வாழ்க்கையையும்!

ஒரு சாதாரணப் பெண்ணாக, எதுவும் தனித்து செயல்பட முடியாதவளாக இருக்கும் அன்னாவை சூழல் இழுத்துச்செல்கிறது அதன் எல்லா எல்லைகளுக்கும்.

ஒரு போதை வம்பிழுப்புச் சம்பவம் படம் நெடுக துன்பத்தைக் கூட்டிக்கொண்டே போவது யதார்த்தமும் கூட.

அன்னா கடைசியாக எடுக்கும் முடிவுக்கு முந்தைய காட்சியில், ”அன்னா நிலையில் யார் இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுக்கமுடியும்” என நம்மை முன்கூட்டியே தீர்மானிக்க வைக்கும் காட்சிதான் படத்தின் பலம் என்று நினைக்கிறேன்.

படம் இவ்வளவு நீளமா எனத் தோன்றும்போதே, மிகமிக இயல்பான காட்சிகளால் எதையும் புறந்தள்ளமுடியாதே என்றும் தோன்றவைக்கும் படம்.





Mumbai Police - மலையாளம்

குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டதாக அசிஸ்டெண்ட் கமிஷ்னர் பிருத்விராஜ் போனில் பேசியபடி வண்டி ஓட்டும் நொடியில் பயங்கரமான விபத்தில் சிக்குகிறார். மோசமாக அடிபட்டு 15 தினங்களுக்குப் பிறகு, பழையவற்றை மறந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பும் அவரிடமே குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணி மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது.

கமிஷ்னர் ரகுமான், துணை கமிஷனர்கள் பிருத்விராஜ், ஜெயசூர்யா என அதகளம் செய்துகொண்டிருக்கும் மூன்று நண்பர்களில், ஜெயசூர்யா குடியரசுத் தலைவர் விருது பெறும் விழாவில் சுட்டுக் கொல்லப்பட, குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பிருத்விராஜ்ஜிடம் வழங்கப்படுகிறது.

விபத்துக்கு முந்தைய காட்சிகள், விபத்துக்கு பிந்தைய காட்சிகள் என விறுவிறுப்பாகச் செல்கிறது படம். சற்றும் எதிர்பாராத அந்தக் ட்விஸ்ட் க்ளைமாக்ஸில் அதிராமல் இருக்க முடியாது.

படத்தை மீண்டும் ஓட்டி பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகளைக் காணும்போது, மனிதன் எத்தனை அற்புதமாய் அந்தப் பாத்திரத்தை செய்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. முதல்முறை பார்க்கும்போது பிருத்விராஜ் செய்திருக்கும் நுணுக்கங்களை மிக நிச்சயமாக உணர வாய்ப்பில்லை. குறிப்பாக ஜெயசூர்யா நேவி ஆபிசரைக் கைது செய்து வைத்திருக்கும் காட்சியில் போலிஸ் ஸ்டேசனுக்கு வரும் பிருத்வியின் நடை உட்பட...!
 

2 comments:

Rajasekar Mani said...

இந்த படங்களைப் பற்றிய உங்கள் வரிகள் இவற்றை பார்க்கத் தூண்டும் ஆவலை அதிகப்படுத்தியிருக்கிறது. நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

"தமிழில் எப்படி இருக்குமோ...? என்கிற கவலை இப்போதே வந்து விட்டது...!

ரசனைக்கு நன்றி...