Aug 13, 2020

கடத்தப்பட்டிருந்த ஒளியும் ஆற்றலும்

எண்பதுகளின் பிற்பாதியில்தான்ஓஷோகாற்றில் கசிந்து வரும் சொற்களாக அறிமுகமாகியிருக்க வேண்டும். அதுவும் அநேகமாக வானொலி செய்திகளில், வார மாத இதழ்கள் வழியேதான். மொத்தத்தில் எஞ்சி நின்ற எளிய அறிமுகம்... “ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார்”. பதின் வயதிற்கு அது போதாதா? காதல் என்கிற வார்த்தையைக்கூட சொல்வதற்கும், கேட்பதற்கும் (உண்மையிலேயே) தயக்கம் இருந்த அந்தக் காலத்தில் காமம், செக்ஸ் என்பதையெல்லாம் கேட்டாலே கடுங்குற்றமாக உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். என்ன, அதிலிருந்து ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அவ்விதமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், தேடித் தேடி அறிந்து கொள்ள, வாசிக்க முற்பட்டிருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி பத்து வருடங்கள் கழித்து பளபளக்கும் அட்டைப்பட புத்தங்கள் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டது ஓஷோவின் தத்துவங்கள் மட்டுமே என்பதால் இன்னும் பெரிதான அறிமுகமும் நிகழ்வில்லை, நெருக்கமும் துளிர்க்கவில்லை.

அப்ப... என்ன சொல்ல வர்றேனு கேட்பது புரிகின்றது. நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘வைல்ட் வைல்ட் கன்ட்ரி’ (Wild Wild Country) எனும் வலை ஆவணத்தொடர் ருக்கின்றது. மொத்தமாக எப்படியும் 400 நிமிடங்கள் பிடிக்கும். இதில் ஓஷோவா பின்னர் மாறிய ரஜனீஷ் 1970களின் மத்தியில் மகாராஷ்ட்ராவில் வேகமான புகழை எட்டி வருகிறார். அவருடைய போதனைகள் அப்படி. உலகத்தின் பல முனைகளிலும் இருந்து அவருக்கு பக்தர்கள், சிஷ்யர்கள் குவிகிறார்கள். அவர்களில் ஒருவராக இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்த பதினேழு வயதுப் பெண்ணான ஷீலா, தமது தந்தை வழியாக இணைகிறார். இணையும் தருணத்தை அவர் விவரிக்கும் விதமே ரஜனீஷ் மீது நமக்கு பெரும் காதலை ஏற்படுத்தும்.



ஷீலா அமெரிக்கா பயணிக்கிறார். திருமணம் செய்து கொள்கிறார். கணவரோடு இந்தியா வருகிறார். புனே ஆசிரமத்தில் தங்குகிறார்கள். உடல் நலிவினால் கணவர் இறந்து போகிறார். ஷீலா ரஜனீஷ்க்கு நெருக்கமான ஆளுமையாக மாறி, அவருடைய அந்தரங்க செயலர்மா ஆனந்த ஷீலாவாக  உருவெடுக்கிறார். ரஜனீஷ்ற்கு இந்தியாவில் எதிரிகளும், அரசியல் பகைகளும் முளைக்கின்றன. அமெரிக்கா சென்றுவிடலாம் என ஷீலா பரிந்துரைக்கிறார்

அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத நிலப்பகுதியாக இருந்த மத்திய ஓரேகான் பகுதியில் 64,229 ஏக்கர் நிலம் வாங்குகிறார்கள். அந்த நிலம், ரஜனீஷ்புரம் என பெயர் சூட்டப்படுகிறது ரஜனீஷ் சிஷ்யர்களை வைத்து அதுவொரு நகரமாக அதி அற்புதமாக கட்டமைக்கப்படுகிறது. 1980ம் ஆண்டு சிகிச்சைக்காக சுற்றுலா அனுமதியில் அமெரிக்கா சென்ற ரஜனீஷ், ரஜனீஷ்புரத்தில் மய்யம் கொள்கிறார்.

அந்த நிலப்பகுதியில் அணை ஏற்படுத்தப்படுகிறது. விவசாயம் செய்யப்படுகின்றது. அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே தயாரிக்கின்றனர். குடியிருப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. வங்கி, உணவகம், விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. விமான நிலையம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆச்சரியங்கள் மற்றும் பிரமாண்டங்கள் யாவற்றின் பின்னாலும் ஷீலா முழுக் காரணமாக இருக்கின்றார்.

ஒவ்வொரு நாளும் மாலை ஷீலா மட்டுமே ரஜனீஷை சந்திக்கிறார். அனைத்தையும் பேசுகிறார். அவர் சொன்னதாக கூட்டத்தில் தெரிவிக்கிறார். ரஜனீஷ் மற்றும் அவருடைய பக்தர்களுக்கிடையே ஷீலா மட்டுமே தொடர்பு இழையாக இருக்கிறார். ஏறத்தாழ 3.5 வருடங்கள் ரஜனீஷ் குரலைக்கூட யாரும் கேட்டிருக்கவில்லை. எனினும் அவரைச் சுற்றியே அத்தனை பேரும் இருக்கின்றனர். அதுதான் ஷீலா மீது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், அருகில் மிகச் சொற்ப எண்ணிக்கையில் அமெரிக்க குடும்பங்கள் வசிக்கும்  ஆண்டலேப் நகருடன் உரசல் ஏற்படுகிறது. இயல்பான நிற பேதம் மற்றும் மதப்பற்று காரணமாக, இந்திய ஆன்மீகவாதி மற்றும் சிவப்பு உடை பக்தர்கள் பிடிக்காமல் போயிருக்கலாம். அவர்களுக்கும் புதிதாக உருவான ரஜனீஷ்புரம் மக்களுக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரிக்கின்றது. ரஜனீஷ்புரம் ஒருபக்கம் பிரமாண்டமாக வளர, உள்ளூர் மக்களுடனாக சிக்கல்களும் கூர்மையாக நீண்டு கொண்டேயிருக்கின்றன.

ரஜனீஷ்புரத்தின் வளர்ச்சி குறித்து ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்த உரையாடல்கள் பல தளங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து இடங்களில் ஷீலா முன்னின்று சமாளிக்கிறார். இன்னும் சொல்லப் போனால் போரிடுகிறார். பெரும்பான்மையாக வென்றெடுக்கிறார்.

ரஜனீஷ்க்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. தங்களுக்கான பாதுகாப்பை தாமே அமைத்துக் கொள்கிறோம் என்று ஆயுதங்கள் கொள்முதல் செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களே ரஜனீஷ்புரத்தின் காவலர்களாக அமர்த்தப்படுகிறார்கள். ஏறத்தாழ ரஜனீஷ்புரம் ஓர் அரசாங்கம்போல் உருவெடுக்கின்றது. அவர்களை சமாளிக்கும் விதமாக ஆண்டலேப் நகரின் மேயராக ரஜனீஷ்புரத்தைச் சார்ந்த கிருஷ்ண தேவா மேயராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தங்களை ஆழமாக நிலை நிறுத்தும் விதமாகவாஸ்கோ கவுண்டிதேர்தலில் வென்றெடுக்க ஷீலா திட்டமிடுகிறார். தங்களின் வலிமையைப் பெருக்குவதற்காக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் உள்ள வீடற்றவர்களை பேருந்துகள் மூலம் அழைத்துவந்து அந்த நகரத்தின் மனிதர்களாக மாற்றுகின்றனர். அது மிகப் பெரிய சவால்களைத் தந்தாலும், திறம்பட செய்யப்படுகின்றது. அவர்கள் வாக்களிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட நிலையில்வாஸ்கோ கவுண்டிதேர்தல் கைவிடப்படுகிறது.

இந்த நிலையில் வாஸ்கோ கவுண்டி பகுதியைச் சார்ந்த 751 பேர் வயிற்றுக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாகவும், அதை ஷீலா செய்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறார். ஷீலா அடுத்தடுத்து சவால்களைச் சந்திக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று ரஜனீஷ் ஹாலிவுட் நடிகை ஃப்ரான்கோயிஸ் ருட்டி உள்ளிட்டவர்கள் மீது கவனத்தை குவித்தது. அவர் ரஜனீஷ்க்கு மிக நெருக்கமாகிறார். அவருடைய கணவர் ஜார்ஜ் ரஜனீஷ்க்கு மருத்துவராக நெருக்கமாகிறார்.

அவர்களின் கட்டுப்பாட்டில் ரஜனீஷ் சென்றதை ஷீலாவினால் ஏற்க முடியவில்லை. அவருக்கு ரஜனீஷ் மீது அலாதியான பொஸஸிவ்னெஸ் உண்டு. ரஜனீஷ்புரத்தில் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. முக்கியமானது அனைத்து உரையாடல்களும் ரகசியமாக பதிவு செய்யப்படுவதுதான். அவற்றில் ரஜனீஷ்க்கு தெரியாமல் அவரின் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டன. அதன் வாயிலாக ரஜனீஷ் மற்றும் டாக்டர் ஜார்ஜ் இடையே நடக்கும் உரையாடல் மூலம், அவர் மருத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம், கொலையும் செய்யப்படலாம் எனக் கருதும் ஷீலா, ரஜனீஷைக் காப்பாற்ற டாக்டரை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதற்கான முயற்சி நிறைவேறிய நிலையிலும் மருத்துவர் சாகவில்லை. ரஜனீஷ்புரம் வளர்வதைத் தடுக்க முயன்ற அட்டர்னி ஜெனரல் டர்னரை கொலை செய்ய முன்பு திட்டமிட்ட வழக்கு விஸ்வரூபம் எடுக்கின்றது.

தான் உருவாக்கிய சாம்ராஜ்யம் சிதைவதைக் காண முடியாமல், இதற்கு மேல் ஒன்றும் செய்யவும் முடியாது எனும் நிலையில் ஷீலா தன்னுடைய நெருக்கமான குழுவினரோடு அங்கிருந்து திடீரென ரகசியமாக வெளியேறுகிறார். ஜெர்மனிக்கு பயணிக்கிறார். ரஜனீஷ் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக பேசுகிறார். பேச்சில் தன்னை இழக்கிறார். அதுவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எல்லாவற்றையும் சமாளித்து வந்த ரஜனீஷ்புரம் காவல்துறை உதவியைக் கோருகிறது.

சட்டத்தில் இருக்கும் சில சந்தர்ப்ப வாய்ப்புகளை வைத்து, தங்களுக்குத் தண்ணி காட்டிய ரஜனீஷ்புரத்தை தகர்த்த தகுந்த வாய்ப்புத் தேடிய அரசு முழு மூச்சில் களம் இறங்குகிறது. அரசாங்கம் தீர்மானமாய் ஓர் முடிவை எடுத்துவிட்டால், அதில் வென்றெடுக்காமல் விடுமா? மேயர் கிருஷ்ண தேவா அப்ரூவராக மாறுகிறார். ரஜனீஷின் வழக்கறிஞரான  ப்லிப் டோக்கெஸ் புதிய மேயர் ஆகிறார்.  மா ஆனந்த ஷீலா, கொலை முயற்சி குற்றங்களில் தேடப்படுகிறார்.

ஜெர்மனியில் 25 பேருடன் வசிக்கும் ஷீலாவிற்கு பணம் தேவைப்படுகின்றது. அதற்காக அங்கு பிரபலமாக இருக்கும் ஸ்டெர்ன் இதழில் தன் நிர்வாணப் படத்துடன் தனது கதையை அளிக்கிறார். அது உலகம் முழுக்க ரஜனீஷ் குறித்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது.

ஒரே நேரத்தில் ரஜனீஷ் குழுவினர் மற்றும் ஷீலா குழுவினர் கைது செய்யப்படுகின்றனர். ஷீலா மீதான குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருப்பதால் அவருக்கு இருபது ஆண்டு கால தண்டனை வழங்கப்படுகிறது. ரஜனீஷை தண்டிக்க முடியாவிட்டாலும் அலைக்கழித்து அவரை திரும்ப வரமாட்டேன் எனும் உறுதிமொழியோடு நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது. ஷீலாவும் இரண்டரை ஆண்டுகளில் விடுதலையாகிறார். 21 நாடுகளால் நுழைவு மறுக்கப்பட்ட ரஜ்னீஷ் இந்தியா திரும்புகிறார். இங்கு அவர்ஓஷோவாக பெயர் உயர்வு பெறுகிறார். சில ஆண்டுகளில் இறந்து போகிறார்.

ஆவணப்படம் முழுக்க ஆண்டிலேப் மனிதர்கள், ஷீலாவின் குழுவினர், வழக்கறிஞர் ப்லிப் அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் மற்றும் பலரும் பெரும் பங்கு வகித்துள்ளனர். ஷீலா எதிரிகளாகக் குறிப்பிட்டவர்களின் உரையாடல்களைக் கேட்டால், பல முடிவுகளுக்குப் பின்னே இருந்த மற்ற காரணங்கள் புரிபடலாம்.



இந்த ஆவணப்படத்தில் ஓஷோவை உணர முடியாது. ஓஷோ குறித்து முழுமையாக எதுவும் இல்லை. ஆனால் ஓஷோவின் மௌனமான காலத்தை மேடையேற்றி உடன் நடந்த மிகப் பெரிய விஷயங்களை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் அறிய முற்படலாம். முழுக்க முழுக்க ஷீலா ஆவணப்படத்தை ஆக்கிரமிக்கிறார்ஷீலாவின் வலிமை, திட்டமிடல், போராட்டம், முடிவுகள், வெற்றிகள், தோல்விகள் என நிறையப் பாடங்கள் அறியலாம்.

ஷீலா வலிமையுற்றிருந்த 1980களின் காலமாகட்டும், நிதானமாக கூர்மையான சொற்களை எறியும் முதிர்ந்த ஷீலாவின் சமீப காலமாகட்டும், அவரின் கண்களும் பேசுவதை உணர முடியும். அந்தப் பார்வையை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. அந்தப் பார்வையின் கூர்மைக்கு நிகராக ஒளி பாய்ச்சும் மென் நெகிழ்வு படர்ந்த ஓஷோவின் பார்வையில் இருந்து ஒளியும் ஆற்றலும் கிட்டியிருக்கலாம். 

Jul 25, 2020

இதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது!


பெரும்பான்மையான குடும்பங்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் முக்கியக் காரணம் பிள்ளைகளின் திருமணம். திருமணம் என்பது உண்மையிலேயே என்னவென யோசித்துவிட்டு, தற்போது நடக்கும் திருமணங்களை மனக்கண் முன்னே கொண்டு வந்தால் இரண்டிற்கும் இடையே இருக்கும் முரண் புரியும்.

வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் இரண்டு பேரின் இணைப்பு, அவர்தம் குடும்பங்களின் பிணைப்பு, உறவுகளோடு கூடி மகிழும் திளைப்பு என்பதையெல்லாம் துறந்து திருமணம் என்பதை குடும்பங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் மைதானமாக மாற்றி யுத்தம் செய்வது வெகு காலமாக நடைபெறுகின்றது. பகட்டு, அந்தஸ்து, பெருமை என்கிற பெயரில் நாம் திருமணங்களுக்கு செய்திருக்கும் செலவினங்களும், நிகழ்த்திய கூத்துகளும் பிறிதொரு இக்கட்டான தருணத்தில் நினைத்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய அபத்தம் என்பது புரியும்.

எத்தனையோ நம்பிக்கைகளை காலம் உடைத்து சீர்படுத்தியிருக்கின்றது. ஏதோ ஒரு புள்ளியில் நாம் மாறியிருக்கின்றோம். திருமண படோபடம் குறித்து யாரும் பாடம் நடத்தியிருக்கிறார்களா எனத் தேடினால் இயக்குனர் சேரனின்திருமணம்ஆறுதலாக அகப்படுகின்றது. ’சில திருத்தங்களுடன்நிகழ்ந்த அந்த திருமணம்வெறும் படமாக இல்லாமல் பாடம் கற்பித்து, தரமான சில கேள்விகளை எழுப்புகின்றது. எனினும் பல நேரங்களில் கேள்விகளை சாய்ஸில் விடுபவர்களுக்கு கேள்வியின் தரம் என்ன விளைவுகளை ஏற்படுத்திவிட முடியும்?.

மண்டபம் பார்க்கும்போதே, கார் பார்க்கிங், தனித்தனி டைனிங் ஹால் எனத் திட்டமிடும் மனோண்மணி தரப்பு, மண்டபத்திற்குள்ளேயே கோவில் இருந்தால் மாப்பிள்ளை அழைப்புக்கென்று ஆகும் செலவு குறையும் எனத் திட்டமிடும் அறிவுடைநம்பி தரப்பு, அவ்வளவு எளிதில் இணைந்துவிடுமா என்ன?. அடுத்தடுத்து முட்டி திருமணமே நிற்கும் நிலைக்குச் செல்கிறது. இதெல்லாம் முக்கியமா இல்லையா எனும் அறிவார்ந்த அலசலுக்கு பூட்டுப் போடும் ஒரு வசனம் அதில் இருக்கின்றது. ”இதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது!”

*

ஓரளவு நடுத்தரக் குடும்பங்கள்தான் இரண்டு பக்கமும். ஆனால் சேர்க்கை முழுக்க வசதி படைத்தவர்கள். அந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே நடந்த திருமணத்தில், மண்பட வாடகை, இரண்டு வேளைக்கும் சேர்த்து அறுபது வகைகளுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான உணவு, மணவறை, ஃபோட்டோ, ட்ரோன் வீடியோ, ஆறு வகை ஐஸ் க்ரீம், டீக்கடை, கட்டில் கடை, பெட்டிக் கடை, மெகந்தி போட்டு விடுவது உள்ளிட்ட மண்டபச் செலவு மட்டும், அந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்கு இருபத்தியொரு லட்சம் கணக்கில் வந்தது. இவையன்றி அழைப்பிதழ்கள், நகை, உடைகள் தனிக்கணக்கு. இருதரப்பும் மூச்சு தம் கட்டி கடன் பட்டு அவற்றை ஈடு கட்டினர். மணமக்கள் ஒருவாரம்கூட சேர்ந்து வாழவில்லை. இரண்டாவது திருமண நாள் வருவதற்குள் நீதிமன்றத்தில் மண முறிவு பெற்றனர். இரண்டு குடும்பங்களுமே கல்யாணக் கடனை இன்னும் அடைத்தபாடில்லை. இந்த நிலையில் திருமணத்திற்கு வந்தவர்களில் ஐந்து சதவிகிதம் பேருக்குக்கூட மண முறிவடைந்தது தெரியாது.

*

அறிவுடை நம்பி, மனோண்மணி திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சிடுவதில் முட்டிக் கொள்கிறது. மனோண்மணி தரப்பில் தேர்ந்தெடுக்கப்படும் அழைப்பிதழ் ஏறத்தாழ ஒன்பது லட்சம் வருகிறதென்றால், அறிவுடைநம்பி சில ஆயிரங்களில் நிற்கிறார்.

அச்சகத் துறையில் இருபது ஆண்டு கால அனுபவம் எனக்குண்டு. திருமண அழைப்பிதழ்களின் எண்ணிக்கையும், அழைப்பிதழ்களுக்குச் செய்யும் செலவினையும் கண்கூடாகப் பார்த்து வருகின்றேன். பத்திரிக்கை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து அச்சுக்கு கொடுக்கும்போது, ஒரு பக்கத்தினர் செலவு குறித்து கவலையில்லை என்றும், இன்னொரு பக்கத்தினர்இன்னும் கொஞ்சம் கம்மியா..’ என சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் மருகுவதையும் உடனிருந்து கண்டிருக்கின்றேன். அழைப்பிதழ் என்பது அழைப்பதற்கான ஒரு மடல் என்பதைத் தாண்டி அது அலங்காரமான பரிமாணங்களை எட்டி நீண்ட காலம் ஆகின்றது.

நகரத்தில் பரவலான அறிமுகம் கொண்டிருந்த ஒருவர் தனது குடும்ப திருமண விழாவிற்காக அச்சிட்ட அழைப்பிதழ்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரம். விழா நடக்கும் திருமண மண்டபம் பதினைந்தாயிரம் பேரை சமாளிக்கும் திறன் அற்றது. எப்படி பதினைந்தாயிரம் பேரை உபசரிக்க முடியும் எனும் கேள்விகள் எழுந்தபோது,  ஐந்தாயிரம் பேருக்கு மட்டும் உணவு தயாரிக்கச் சொல்லியிருக்கின்றனர் எனும் பதில் கிட்டியது. அப்புறம் எதற்கு பதினைந்தாயிரம்?, அவருடைய தொழிலுக்கான விளம்பரமாக அதைப் பயன்படுத்துகிறார் என்று கூறப்பட்டது. மொத்த அழைப்பிதழ்களின் மதிப்பு சுமார் ஆறு லட்சம். அத்தனை அழைப்பிதழ்கள் யாரைச் சென்றடைந்திருக்கும்? பொது அமைப்புகளில் உறுப்பினர் மற்றும் அலுவலக முகவரியை வைத்து எனக்கு மட்டும் நான்கு அழைப்பிதழ்கள் வந்தடைந்தன. அதில் ஒரு அழைப்பிதழ் பதினொரு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயர் தாங்கி வந்திருந்தது. ஆக அழைப்பிதழ் என்பது அழைப்பிதழ் மட்டுமேயல்ல!

*

சுமார் நாற்பது வீடுகள் கொண்ட கிராமம் ஒன்றில், பொருளாதார வசதி குறைந்த குடும்பம் ஒன்றில் திருமணம் ஏற்பாடாகின்றது. இளம் வயதில் கணவனை இழந்த பெண் அவர். சொந்த நிலம் கிடையாது. கல்வியும் இல்லை. கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பம் நடத்த வேண்டும். மூன்று பிள்ளைகள். மகளுக்கு தற்போது திருமண ஏற்பாடு. எல்லாம் உறுதியாகி, மாப்பிள்ளைக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் அந்த நிகழ்ச்சிக்காக சுமார் ஐம்பது பேர் வருகின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் ஐம்பது பேர் வருகின்றார்கள் என்றால் நாமும் அதேபோல் அழைக்க வேண்டுமென, ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அழைப்பு விடுக்கிறார்கள். ’மாப்ளயூட்ல அம்பது பேர் வர்றாங்க,  நீங்க எல்லாரும் வந்துடோணும்என அழைப்பு விடுக்கப்படுகிறது. கொரோனா காலமாவது ஒன்றாவது, இத்தனை பாடுபட்டு கூப்பிடும்போது போகாமல் இருக்கலாமா என அனைத்து வீடுகளில் இருந்தும் இரண்டு, மூன்று பேர் வந்து கலந்து கொள்கிறார்கள். நூறு பேருக்கு சொல்லியிருந்த சாப்பாடு போதாமல், மீண்டும் வரவழைக்கப்படுகிறது. அனைவரும் விருந்துண்டு கலைந்து செல்கிறார்கள். சாப்பாட்டிற்கான செலவு மட்டும் ஏறத்தாழ பதினைந்தாயிரம்.

நினைவில் இருக்குமென நினைக்கின்றேன், அவர் கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடந்தவேண்டும். விவசாய கூலியாக அவரின் ஒரு நாள் சம்பளம் இருநூறு ரூபாய். ஆகவே மோதிரம் போட்டதற்கு சோறு போட்ட கணக்கிற்காக மட்டும் அவர் செலவிட்ட தொகை என்பது எழுபத்தைந்து நாட்கள் கூலி.

பெருந்தொற்று காலத்தில் மிக எளிமையாக நிழத்தியிருக்க வேண்டிய செயலுக்கு, விருந்து என்று தம் எழுபத்து ஐந்து நாட்கள் ஊதியத்தைக் கொடுக்க எது நிர்பந்திக்கிறது. மாப்பிள்ளை வீட்டாருக்கு நிகராக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதா? அல்லது கிராமத்தில் அனைவரையும் தன்னோடு இணைத்துக்கொள்ள நினைக்கும் மனநிலையா?



மார்ச் இரண்டாவது வாரத்தின் ஒரு மதிய வெயிலில் அந்த கிராமத்து தம்பதியினர் எங்கள் கிராமத்து வீட்டிற்கு வாடி வதங்கி வந்தடைந்தனர். வருகின்றபோதே காரணம்  தெரியும். மகனுக்குத் திருமணம். எனக்கு நினைவு தெரிந்து இந்த நாற்பது ஆண்டுகளில் நான்கைந்து முறை அங்கு வந்திருந்திருக்கலாம். அவ்வளவுதான் வரவேண்டிய தேவை இருந்திருக்கும். அந்தத் தேவைகளில் ஏற்கனவே நடந்த ஒரு திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கவும்தான்.

சம்பிரதாயமான உரையாடல்கள் நடந்தேறியதும், அழைப்பிதழை நீட்டினார்கள். நீட்டும்போதேஎன்னுமோ கொரானானு சொல்றாங்க... ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்துட்டோம். எப்டி நடத்துறதுனுதான் ஒரே யோசனையா இருக்குங்கஎன்றனர். மேலும் பேச்சுக் கொடுத்தபோது ஏறத்தாழ இரண்டாயிராயித்து ஐநூறு பத்திரிக்கைகள் கொடுத்திருப்பதாகவும், இந்த சிக்கலால் சுமார் ஐநூறு பேருக்கு மட்டும் உணவு தயாரிக்கவுள்ளதாகவும் கூறினர்.

ஊரடங்கு காலத்தில் திருமணம் மிக நெருங்கிய ஐம்பது உறவுகளோடு இனிதே நிகழ்ந்தது. மண்டப வாடகை, மணவறை செலவு, ஃபோட்டோ வீடியோ, சாப்பாடு செலவு என மிச்சம் ஆன தொகை ஏறத்தாழ பத்து லட்சம். ஒரு திருமணச் செலவில் எப்போதும் கணக்கில் கொள்ளப்படாத ஒரு செலவு இருக்கின்றது. இரண்டாயிரத்து ஐநூறு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்ட திருமணத்திற்கு எப்படியும் இரண்டாயிடம் குடும்பங்கள் கலந்து கொள்ளும். அவர்கள் வந்து செல்லும் செலவு சுமார் நூறு ரூபாய் எனக் கணக்கிட்டாலும், அந்தக் கணக்கில் இரண்டு லட்சம் மீதமாகியிருக்கின்றது.

விலை உயர்ந்த அழைப்பிதழ் அச்சிட்டு, ஊரெல்லாம் வழங்கி, வந்தவர்களுக்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் உணவு பரிமாறி, சமயங்களில் மிஞ்சிய உணவுகளை கீழே கொட்டுவதையும் பல திருமணங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

சேரன் என்ற கலைஞன் செதுக்கும் படைப்பென்பது இப்படித்தான் இருக்குமென பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப் ஆகியவை ஒரு படிமத்தை உள்ளுக்குள் தீட்டியிருக்கின்றன. அந்த சேரனின் படைப்பாக இதை ஏற்க முடியவில்லை என்றாலும், திரைப்படமாக பார்க்காமல் திரைவழியே நடத்தப்பட்ட பாடமாக இதை ஏற்கலாம். அழைப்பிதழ், உடைகள், மண்டபம் ஆகியவற்றின் மீது மிகத் தேவையான விமர்சனங்களை படம் வைத்திருக்கின்றது. இன்னும் மணவறை, சாப்பாடு ஆகியவற்றையும் இணைத்திருக்கலாம்.

வாழ்வில் ஒரே ஒருமுறைதான் செலவு செய்யப்போகிறோம் எனும் க்ளிஷே சமாதானங்களைச் சொல்லாமல், சூழலின் பொருட்டு தற்போது கைக் கொண்டிருக்கும் மாற்றத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடிவெடுப்பது, முயற்சியெடுப்பது தேவையான ஒன்று.

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடித்தால், பிரஸ், நகைக்கடை, துணிக்கடை, மண்டபத்தினர், சமையல்காரர், ஒப்பனையாளர், மணவறை போடுகிறவர், ஃபோட்டோ வீடியோ எடுப்பவர்கள் உள்ளிட்டவர்கள் பிழைக்க வேண்டாமா எனும் கேள்வி வரும். அதற்குமுன் ஒவ்வொருவரும் தம்மை நோக்கி எழுப்ப வேண்டிய  கேள்விநாம் பொழைக்க வேண்டாமா!?”

இதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது!” இந்த வெற்று சமாளிப்பை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் இதே நிலையைத் தொடர்வது. உண்மையில் முற்றிலுமாக மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் ஆங்காங்கே சில திருத்தங்களுடன் இனி திருமணத்தைத் திட்டமிடலாம். திருமணம் என்பது இரண்டு குடும்பத்தினருக்கான விழா. வெறும் பெருமைக்கும் பகட்டிற்கும் மட்டுமே நிகழ்த்தும் விழா அல்ல!

-       - ஈரோடு கதிர்



Jul 21, 2020

குபீர் வானிலை ஆராய்ச்சியாளர்

நேற்று மாலை துணி காய வைக்கக்கூடாத நேரத்தில் அம்மணி காயவைக்கப் போனார். அவர் கீழே இறங்கியதும் இருட்டத் தொடங்கியது. விளைவு...
“ஏங்க நான் குளிக்கப்போறேன், ‘சும்மாதானே இருக்கீங்க’ தூறல் விழுந்தா துணி ஒண்ணுவிடாம எடுத்தாந்து போட்டுடுங்க”.
இந்தத் தூறல் எப்ப விழும்னுதான் தெரியாதே. வெளியில் வந்து காவல் இருக்கத் துவங்கினேன். சரி எதற்கும் துணி அருகிலேயே இருப்பதுதான் உத்தமம் என மொட்டை மாடிக்குச் சென்று வானத்தை நோக்கி வழி மேல் விழி வைத்து...
வாவ்.... என்ன ஒரு அற்புதமான காட்சி. நடுவில் மட்டும் நீலமும், வெண்மையும் பிச்சுப் போட்ட பஞ்சு பொதிகளாய், குறிப்பிட்ட வட்டத்தைத் சுற்றி ஏறிக்கட்டி நிற்கும் கரு மேகங்கள். கரு மேகங்களைத் தாண்டி நடுவில் இருக்கும் நீலத்திற்குள் துளைத்துப் பாயும் மாலை ஐந்தரை மணி சூரிய ஒளி...
நான் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். முன்னப்பின்ன மேகத்தையே பார்க்காதவன்போல நானும் வளைச்சு வளைச்சு கழுத்து வலிக்கப் பார்க்க, துணிகளும் உலர்ந்த பாடில்லை, தூறலும் விழுந்த பாடில்லை.
ஒரு வழியாக இரவு மழை வந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய செய்திகள் வந்தன. வழக்கம்போல் பின்னரவில்தான் தூங்கப் போனேன். அப்படித் தூங்கப்போனால் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும் எனும் எண்ணம் சில மாதங்களாய்.
சில முக்கியமான கூட்டங்களுக்கு செல்லவிருக்கும் தினங்களில் மட்டும் அன்றைய தினத்தை முன்வைத்த கனவுகள் வந்து இம்சைப் படுத்தும். மற்றபடி நிகழ்காலத்தையொட்டி கனவுகள் பெரிதாக ஆக்கிரமிப்பதில்லை.
மாலையில் கழுத்து வலிக்க ஆராய்ச்சி செய்த மேகக்கூட்டமும், இரவு ஆங்காங்கே கொட்டிய மழைச் செய்திகளும் இணைந்து கனவில் வந்தன.
நான் ‘குபீர்’ வானிலை ஆராய்ச்சியாளராக அவதாரம் எடுத்திருந்தேன் அந்தக் கனவில். என் கண்டுபிடிப்பில் ஊரையே மூழ்கடிக்கும் மழையொன்று அங்கே நிகழப்போவதாக எல்லோரையும் எச்சரித்திருத்திருந்தேன். மிகச் சரியான நேரமும், எப்படி மழை கொட்டும், எவ்வளவு அளவு என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்த மழை ஒரு மேக வெடிப்பு மூலம் நிகழும் என்பதையும் தெரிவித்திருந்தேன்.
எல்லோரும் காத்திருக்கிறார்கள். மாலையில் பார்த்த அதே வடிவில் மேகங்கள் திரண்டிருக்கின்றன. நடுவில் இருந்த பஞ்சுப் பொதியின் ஓரங்களில் தீ எரிகின்றது. வனத்தில் எரியும் நெருப்பிற்கு ஒப்பானது அது. மேகத்தில் பற்றிய தீ, சரசரவெனப் பரவி வெடிக்கும்போது மேகம் வெடிக்கும், அதையடுத்து மழை அப்படியே நயாகரா அருவிபோல் கொட்டப்போகின்றது எனக் காத்திருக்கிறேன்.
அதற்குள்ளாக காற்று வீசியிருந்தது. முன்பே எச்சரித்திருந்தேன். இரண்டு சக்கர வாகனங்களைக்கூட நிலத்தில் படுக்க வைத்து விடுங்கள் என்று. யாரும் கேட்ட பாடில்லை. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றைக் காணவில்லை. காற்றில் கரைந்து போயிருக்கலாம். மற்றொரு வண்டியான மிலிடரி பச்சை நிற புல்லட் சிதைந்திருக்கின்றது. பெட்ரோல் டேங்க் ஓரிடத்தில் கிடக்க, டெயில் லேம்ப் இன்னொரு இடத்தில் கிடக்க... அந்தக் காற்று பயபுள்ள என்ஜினையும் அடித்துப் பெயர்த்துப் போயிருந்தது. மொத்தத்தில் அங்கே புல்லட் இருந்த சுவடே இப்போது இல்லை.
எனினும் மழையைக் காணவில்லை. இது தப்பாச்சே... எரிந்து கொண்டிருந்த மேகத்தைப் பார்க்கிறேன். எண்ணெய் இல்லாத திரிபோல் சோம்பலாய் மினுக்குகின்றது. இரவு நீள்கின்றது. நீளாமல் என்ன செய்யும். மேகத்தில் நெருப்பு பரவவில்லையே. நானும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவான் கோட்டைசாமி என்பதாக, மேகம் எப்படியாவது எரிந்து மேக வெடிப்பு நிகழ்ந்து... ம்ஹூம்...
“அடேய் நவுத்துப் போன மேகமே....!”
இறுதியில் நானே பெருந்தன்மையோடு குபீர் வானிலை ஆராய்ச்சியாளர் பதவியை உடனடியாக ராஜினமா செய்து விட்டேன்.
சமையலறையில் பாத்திரங்கள் உருளும் ஓசை. மெல்ல எழுந்து வருகிறேன்.
“என்னங்க கண்ணு ரெண்டும் நெருப்பாட்ட சிவந்திருக்கு!”
“மேகத்துக்கு அனுப்ப ராத்திரி முழுக்க உருவாக்கிக் கொண்டிருந்த நெருப்பு”னு சொல்லவா முடியும்!?
“நேரங்கெட்ட நேரத்தில் துணியை மெஷின்ல போட்டு எடுத்து, காய வைக்கிறதுக்கு காவல் இருக்கச் சொன்னா கண்ணு இப்படித்தான் செவக்குமாம்!”
“யாரு சொன்னது!?”
“குபீர் வானிலை ஆராய்ச்சியாளர்!”
*

Jul 14, 2020

தமிழ் Quora : கேள்வி பதில் - 2

தமிழ் Quora-வில் கேட்கப்பட்ட சில கேள்விகளும்... அதற்கான என்னுடைய ‘அரிய’ பதில்களும்...

கே : வேற்றுக்கிரகவாசி திடீரென்று உங்கள் கண்முன் தோன்றி தமிழ் மொழியில் பேசினால் அல்லது உங்கள் பரிச்சயமான மொழியில் பேசினால் நீங்கள் என்ன பேசுவீர்கள்?
ப : வேற்றுக்கிரகவாசி என நம்ப மாட்டேன். மேக்கப் போட்ட உள்ளூர்வாசிதானே எனக் கேட்பேன்.

கே : ஒருவரை சுயநலமற்றவராக மாற்றுவது எப்படி?
ப : “சுயநலமற்றவர்” எனப் பெயர் மாற்றம் செய்துவிடுங்கள். அதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.
தன்னலம் போற்றுவது மனித இயல்பு. அந்த இயல்பு பல இடங்களில் வெளிப்படாமல் இருப்பது அவருடைய வளர்ப்பு, சூழல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமையலாம். ஆனாலும் முழுவதும் இயல்பைத் தொலைப்பது மிகக் கடினமானது, அவசியமற்றது.

கே : நாம் அதிகமாக வெறுப்பது அதிகமாக ஈர்க்கப்படுவது போல் தோன்றுகிறது அது எதனால்?
ப : காரணம் வெகு எளிது.
வெறுக்க வேண்டும் என முடிவு செய்ததை, மீண்டும் மீண்டும் நினைவில் மீட்டுவோம். மீண்டும் மீண்டும் நினைவில் நிழலாடும் ஒன்று எளிதில் பிடித்துப் போகும்!

கே : தோல்வியை நாம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
ப : எந்த அளவிற்கு தோல்வி கிடைத்துள்ளதோ அதை அவ்விதமே ஒப்புக் கொள்ள வேண்டும். தோல்வி என்பது ஓர் உண்மை. உண்மையை மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை.
ஒப்புக்கொள்வது வேறு, ஏற்றுக்கொள்வது வேறு.

கே : பெரிய விஷயங்களை சாதிப்பதற்கான ஆற்றல் உங்களுக்குள் உள்ளது என்பதை உணர ஏன் பயமாக இருக்கிறது?
ப : 'பெரிய விசயங்கள்’ என்கிற மாயை தரும் அழுத்தம். பெரிய விசயமாக கருதப்பட்டதாலேயே அதைச் செய்ய முடியாமல் போய்விட்டால் யாரேனும் ஏதேனும் சொல்வார்களே எனும் தயக்கம்.
இந்த அழுத்தம், தயக்கம்… நம்மிடம் இருக்கும் ஆற்றலை மறக்கடித்துவிடும்

கே : காரணமே இல்லாமல் ஒரு விதமான பயம் மனதில் வருகிறது இரவில் இது மிக அதிகமாக இருக்கிறது இதில் இருந்து மீள்வதற்கு வழி இருக்கிறதா?
ப : காரணம் இல்லாமல் இருக்காது. அந்தக் காரணத்தை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருப்போம், ஏதோ ஒன்றை செய்யாமல் விட்டிருப்போம், ஏதோ ஒன்றை தவறுதலாக செய்திருப்போம், ஏதோ ஒரு காரணத்தினால் முடக்கப்பட்டிருப்போம்…. இதுபோல் ஏதோ ஒன்றுதான் அந்த இனம்புரியா பயத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
எந்தெந்த சூழல்களில் அந்த பயம் இருப்பதில்லை என்பதைக் கண்டுபிடியுங்கள். எந்தெந்த தருணங்களில் அந்த பயம் வருகிறது என்பதையும் கண்டு பிடியுங்கள்.
பயம் வருகின்ற தருணங்களைத் தவிர்த்து முடிந்தவரை பயம் வராத சூழல்களை ஏற்படுத்திக் கொள்வதே இதிலிருந்து மீள்வதற்கான முதல் வழி.
அடுத்து எந்தெந்த காரணங்களுக்காக வருகின்றது என்பதையும் பட்டியலிட்டால் மீள்வதற்கு உதவும்.
- ஈரோடு கதிர்


தமிழ் Quora-வில் தொடர... https://ta.quora.com/profile/Erode-Kathir

Jun 30, 2020

பதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு


எப்பொழுதுமே கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு. காரணம் பதில்கள் நம்முடையதாக இருக்கலாம், ஆனால் கேள்விகள் கேட்பவரின் அறிவு, தேடல், அனுபவம், நிலைப்பாடு, நம்பிக்கை ஆகியவற்றில் இருந்து எழக்கூடியவவை. அந்த சேர்மானத்திற்கு உணவிடுவது அவ்வளவு எளிதல்லவே!

திடீரென்று ஒருநாள் Jayalalitha Kaleshwaran அவர்களிடமிருந்து இந்தக் கேள்விகள் கொத்தாக வந்து விழுந்தன. பொதுவாகவே அவர் எது குறித்தாவது கேள்விகள் எழுப்பிக் கொண்டேயிருப்பார். நானும் பெரும்பாலும் ஒற்றைச் சொல்லில் பதிலளித்து சமாளித்துவிடுவேன். ஆனால் தொகுப்பாக விழுந்த இந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களில் தப்பிக்க முடியாததால்...

இனி நீங்களே படிங்க...

1. "எழுத்து" ஒரு எழுத்தாளரா இது பற்றி சிறுகுறிப்புச் சொல்லுங்க?
சொல், காட்சி, சிந்தனை, ஒலி இதில் ஏதோ ஒன்று மனதில் தைக்கலாம் அல்லது நம்மிடம் வழங்கடலாம். அது தானாக வளர்ந்து அல்லது நம்மால் வளர்க்கப்பட்டு, இனியும் வைத்திருக்க முடியாது என்ற தருணத்தில் வெளியேற்றினால்தான் நிம்மதி எனும் நிலையில் வாய்த்திருக்கும் பல வடிவங்களில் எழுத்தும் ஒன்று.


2. பிற புத்தகங்களை, இலக்கியங்களை வாசிப்பதும், பல்வேறு ஊர்களுக்குப் பயணப்படுவதும் ஒரு எழுத்தாளருக்கு எவ்வகையில் தம்படைப்புகளுக்கு உதவுகிறது? அல்லது உதவ முடியும்?
வாசிப்பதன் மூலம் வாசிப்பதையும், தான் எழுதியதையும் ஒப்பீடு செய்யலாம், செம்மையாக்க முயலலாம். வாசிப்பு புதிய சொற்களை, அழகியலை, நடையை, சூட்சுமத்தை நமக்கு அறிமுகப்படுத்தும்.
பயணம் எழுதுவதற்கான வாய்ப்புகளை, தேவைகளை உருவாக்கிக் கொடுக்கும்.


3. மேற்சொன்னது சாத்தியமானால் மட்டுமே ஒரு படைப்பை எழுத்தாளரால் தர அல்லது உருவாக்க முடியுமா?
பல்வேறு காரணிகளில் வாசிப்பும், பயணமும் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருக்கலாம்.


4. எழுதும் போது தங்களை கதிராகவே உணருவீர்களா? இல்லை அதன் கருவாகவே எழுத்தின் வழி கரைந்ததை எழுதி முடித்ததும் தான் உணர்வீர்களா?
அருள் வந்து சாமியாடும்போது தன்னை முற்றிலும் மறப்பதுபோல் எதுவும் இங்கு நடப்பதில்லை. நான் என்னைக் கதிராகவே உணர்ந்தபடிதான் எழுதுவேன். சில நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பாத்திரத்தில் ஏறிக் கொண்டு, அதை உணர்ந்தபடி, ரசித்தபடி எழுதிவிட்டு, இறங்கிக் கொள்வதும் உண்டு.


5. எழுத்தாளர் பயிற்சியாளர் இதில் எந்த கதிரை தங்களுக்கு மிகவும் பிடிக்கும்? இவ்விரண்டில் எதையொன்றையாவது விடச்சொன்னால் எதை விடுவீர்கள்?
இரண்டுமே இரண்டு விதங்களில் பிடிக்கும். ஒன்று கலை, இன்னொன்று தொழில்.

இரண்டையும் நான் பிணைத்துக் கொள்வதில்லை. ஒருவேளை இரண்டில் ஒன்றை விடச் சொன்னால் ஏன் விடவேண்டுமென்று விளக்கம் கேட்பேன். அப்படிச் சொல்லப்படும் விளக்கத்திற்கு, மீண்டும் கேள்விகள் கேட்பேன். அதற்கு வரும் பதில்களுக்குள் மீண்டும் கேள்வி கேட்பேன். இது நிற்காது. சொன்னவர் சலித்துப் போய், ‘விடவேண்டுமென்று சொல்வதைகைவிடலாம்


6. தாங்கள் மிகவும் மனம் நெகிழ்ந்து, நிறைவாக உணர்ந்த ஒரு தருணம் எது?
பல தருணங்கள் உண்டு. எப்போதே எழுதி, முற்றிலுமாக மறந்திருக்கும் ஒரு சொற்றொடரை தன் வாழ்வின் மந்திரமாக வைத்திருக்கிறேன் என ஒருவர் சொல்லும் தருணங்களில். பயிலரங்குகள் சந்தித்து, காலம் கடந்தும் விடாப்பிடியாக தொடர்பில் வந்து, தம் தெளிவை, உயர்வை ஒருவர் அறிவிக்கும் தருணங்களில்.


7. எதன் பொருட்டு எழுத ஆரம்பித்தீர்கள்? எதை நோக்கி பயணப்பட விரும்பினீர்கள்? நீங்கள் விரும்பியதை அடைந்து விட்டீர்களா?
தமிழில் எழுதி, இணைய வலைப்பக்கத்தில் பகிரமுடியும் எனும் வாய்ப்பு கிடைத்ததால் மட்டுமே எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப நாட்களில் வலைப்பக்கத்தில் எப்படியாவது இருபத்து ஐந்து இடுகைகள் எழுதிவிட்டால் போதும் எனக் கருதினேன்.


8. பசங்களுடனான மறக்கமுடியாத ஒரு அனுபவம் சொல்லுங்களேன்?
கடந்த அக்டோபர் மாதம் மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் தனக்குப் பிடித்தவருக்கு ஒரு கடிதம் எழுதும் ஒரு பணியைக் கொடுத்து பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியிருந்தேன். ஒரு மாணவி மட்டும் நேரம் போதாது என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்றுக்கொண்டு, விடாப்பிடியாக இரண்டாவது அமர்வின்போதும் தொடர்ந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை பக்கம் பக்கமாக எழுதியதோடு, நிகழ்வின் நிறைவில் தன் குடும்பத்தை நினைத்து அழுத காட்சி மறக்க முடியாத ஒன்று.


9. எழுத்தாளருக்கும் தம் ஒரு வாசகருக்குமான மறக்க முடியாத இனிப்பான, தருணம் பற்றிப் பகிருங்களேன்?
யாரையும் வாசகர் என்று கருதத் தோன்றியதில்லை, ஆகவே நானும் எழுத்தாளராய் என்னைக் கருத வேண்டி வருவதில்லை. எவரையும் நட்பாகக் கருதி இணைந்து பயணிப்பதால் கேள்வியில் எதிர்பார்த்த மறக்க முடியாத இனிப்பான தருணங்களை சற்று நீர்த்துவிடுவதற்கு நானே வாய்ப்புகள் கொடுத்துவிடுவேன்.


10. இன்றைக்கு எங்கு பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும்.. வாசிப்பு வாசிப்பு என்றும், வாசியுங்கள்... வாசியுங்கள்... என்பதுமான குரல் அதிகமாகக் கேட்கிறது. இதனால் என்ன பயன் வீட்டிற்கும் நாட்டிற்கும்? இதனால் ஏற்படும் மாற்றம் தான் என்ன?
புத்தகங்கள் வாசிப்பதால் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், புத்தகத் திருவிழாக்கள் உயிர்ப்புடன் இருக்கும். வெறும் வாசியுங்கள் எனும் முழக்கம் ஒருகட்டத்தில் அலுப்பு ஏற்படுத்திவிடும். உண்மையில் வாசித்த அனுபவம், அதனால் ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தி வாசிப்பை ஊக்குவிப்பதே முக்கியத் தேவை. வாசிப்பதால் நிகழும் முதல் மாற்றம் அப்போதிருந்த மனநிலை மாறும். தொடர்ச்சியாக மேலும் சில மாற்றங்கள் மெல்ல மெல்ல விளையும்.


11. அன்றைய எழுத்தாளர் (ஜெயகாந்தன்) ஒருவருக்கு, ஒரு வாசகர் தட்டு நிறைய பணம் பவுன் கொடுக்க (உதவ) வந்ததாகவும், அதை மறுத்து விட்டதாகவும் அறிந்த போது வந்த ஒரு கேள்வி இது. இன்றைக்கும் அது மாதிரியான வாசகர்கள் இன்றைய எழுத்தாளர்களுக்கு கிடைக்கிறார்களா?
இருக்கிறார்கள். தட்டில் வைத்து தருகிறார்களா எனத் தெரியவில்லை, நெட்டில் அனுப்பும் கதைகள் கேட்டதுண்டு.


12. எழுத்தாளர் கதிர் ஏன் இன்னும் கதைகளை நாவல்களை எழுத ஆரம்பிக்கவில்லை?
சில சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். அடுத்த ஆண்டில் தொகுப்பாக வெளிவரும்.


13. சினிமாவிற்கு கதை எழுத விருப்பமா?
இதுவரை சினிமாவுக்கு என்று எழுதத் தோன்றியதில்லை. எழுதியதில் அல்லது இனி எழுதுவதில் ஏதாவது ஒன்று சினிமாவிற்கு பொருந்தினால் அந்த விருப்பம் வரலாம். விருப்பம் மட்டும் போதாது கடும் உழைப்பு தேவைப்படும்.


14. ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஒரு எழுத்தாளருக்கு தன் படைப்புக்கான வருமானமும் சன்மானமும் அண்டை மாநிலங்களைவிட மிகச் சொற்பமாகவே கிடைக்கிறது? அல்லது கொடுக்கிறார்கள்? இதை பற்றி ஒரு நாளாவது தாங்கள் யோசித்ததுண்டா?
அண்டை மாநிலங்களில் எப்படித் தருகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை எத்தனை சதவிகிதம், எழுத்தாளர்களை அறிந்திருப்போர் எண்ணிக்கை எத்தனை சதவிகிதம் என்பதையெல்லாம் அலசி விபரங்கள் அறிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.


15. ஒரு படைப்பிலக்கியம் எதிர்காலத்திற்கு, அச் சந்ததியினருக்கு எவ்வகையில் உதவும்? எவ்வகையில் உதவுவதாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ஏதோ ஒரு காலத்திய நிகழ்வுகளை, உணர்வுகளை, நிலைமைகளை இன்னொரு காலத்திற்கு கடத்தி உதவலாம்.


16. வேட்கையோடு விளையாடு பற்றிய தங்களின் சிறு குறிப்பு?
ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்


17. அனைத்து மொழி படங்களையும் பார்க்கும் போது, தமிழ் மொழியினை பற்றிய தங்களின் உணர்வு, நிலைப்பாடு எப்படியிருக்கும்? (இங்கு மொழி பற்றியே கேள்வி. கதை படம் பற்றியல்ல)
மலையாளம் ஓரளவு புரியும். இந்தி ஓரிரு சொற்கள் புரியும். எல்லாவற்றையும் சப்-டைட்டில்களோடு மட்டுமே பார்ப்பதால், ஆங்கிலத்தின் வழிதான் அந்தந்த மொழிகளை உணர்கிறேன், உள்வாங்குகிறேன். இறுதியாக எல்லாவற்றையும் தமிழ் மொழியிலேயே புரிந்து கொள்கிறேன்.

18. பிற எழுத்தாளருடனான நட்பு பற்றி சுருக்கமாச் சொல்லுங்களேன்.
சிலருடன் அறிமுகம், சிலருடன் மரியாதை, சிலருடன் ஆச்சரியம், பலருடன் பழக்கம் என்ற அளவில்தான் இருக்கின்றேன். மிகச் சிலருடன் நல்ல நட்பு உண்டு.


19. நாம நிறைய எழுத்தாளர்களைப் படிப்போம். பிடிக்கும்னும் சொல்லுவோம்.! ஆனா நா அவரோட எழுத்துக்கு பைத்தியம்னு யாரோ ஒருவரை அல்லது ஓரிருவரைத் தான் சொல்லுவோம். அப்படியாகத் தங்களை பாதித்தவர் யார்?
முதன்முதலில் அதாவது 1990களில் அப்படிப் பைத்தியமாக்கியவர் பாலகுமாரன். தற்போது ஒட்டுமொத்தமாக யாரும் பைத்தியமாக்கவில்லை. சில ஆக்கங்கள் கொஞ்சம் கிறுக்குப் பிடிக்க வைக்கும்.


20. ஈரோடு வாசல் இதுவரைக்குமான தம் சாதனையாக உணர்வது எது? ஆரம்பித்ததின் இலக்கு நோக்கிய பயண அனுபவங்கள் பற்றிய சுவாரசியமான (அ) கசப்பான அனுபவம் பற்றி பகிர முடியுமா?
சாதனை என்பது பெரும்பாலானோர் அது தனக்கான களம் என்று மனதாரக் கருதுவது.


படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். அது மிகச் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டமும் புதிய முயற்சிகளே. ஆகவே அவை தொடர்ந்து சுவாரஸ்யமூட்டுகின்றன.


மிகச் சொற்பமாக நிகழ்ந்த கசப்பான என்பதைவிட சவாலான அனுபவங்களை மனதிற்குள்கூட மீட்டுவதில்லை. ஆகவே பகிரவும் தேவையில்லை.


21. ஒரு படைப்பில் புனைவும் நிஜமும் எப்படி, எவ்விகிதத்தில் பிணைய வேண்டும்?
ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒவ்வொரு சேர்க்கையுண்டல்லவா. அது போன்றே படைப்பிற்கேற்ப விகிதங்கள் அமைவது சிறப்பு.


22. இத்தனை கேள்வியிலும் ஒன்றிரண்டுக்காவது தாங்கள் பதில் அளிக்கக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கிறதா?
இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் கேட்டிருந்த இந்த 22வது கேள்வி வரை பதில் கிடைத்த வகையில் உங்களுக்கு கிடைத்திருக்குமென நினைக்கின்றேன்.


குறிப்பு :
ஜெயலலிதா காளீஸ்வரன் : #வேட்கையோடு_விளையாடு தொகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுக்கும் தனித்தனியே தம் வாசிப்பு அனுபவத்தை எழுதியவர். புத்தகத்தில் அடங்கியிருந்த மொத்த சொற்கள் ஏறத்தாழ 20000 என்றால், அந்தக் கட்டுரைகளுக்காக அவர் எழுதிய அனுபவப் பகிர்வுகளில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12,000.

.


Jun 8, 2020

கொரானாவை வாழ வைப்பதா நம் இலக்கு!?


அதீத அச்சம் முதல் வித்தியாசமான வாய்ப்புகள் வரை  கொடுத்துள்ள கோவிட்-19 கிருமி பழைய சில சொற்களை புதிய வடிவில் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்துள்ளது. கோ கரோனா கோ தொடங்கி வீட்டிலிரு, விலகியிரு, சமூக இடைவெளி, புதிய இயல்பு வரை நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் முக்கியமான ஒன்று கொரானாவுடன் வாழப் பழகுவோம்.

உலக சுகாதார நிறுவனம் என்ன அர்த்தத்தில் இதை அறிவுறுத்தியது என்பதைவிட, மக்கள் இதை எப்படி அணுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே நாளில் நான்கு இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை என அறிவிக்கப்படும் தலைநகரில் வசிக்கும் ஒருவர்பார்லர் போய்ட்டு வந்துட்டேன்என செல்ஃபிகளைத் தோரணம் கட்ட, ’ஆஹா...ஓஹோ... அழகுஎனப் பின்னூட்டம் இட்ட பலருக்கும் கொரானாவுடன் வாழப் பழகிட்டோம்லஎன்று பதிலளித்துக்  கொண்டிருந்தார்.

நேற்று நடைப்பயிற்சி வழியின் மையத்தில் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள், சப்தமாகச் சிரித்தபடி சொன்னதும்கூடநாங்க கொரானாவோட வாழப் பழகிட்டிருக்கோம்என்பதுதான்.

என் அதிர்ச்சியெல்லாம் கண்ணுக்கே தெரியாத கொரானாவுடன் குடித்தனம் நடத்தும் அளவிற்கு, நம் அறிவும் கண்ணுக்கே தெரியாமல் சுருங்கியிருப்பதை நினைத்துத்தான். எப்போதுதான் நாம் எதையும் அதனதன் உண்மையான பொருளோடு புரிந்து கொண்டிருக்கின்றோம். வெறியூட்டும் உணர்வுப் பூர்வமாக அணுகுகின்றோம் அல்லது எல்லாவற்றையும் பகடி செய்து மழுங்கடிக்கின்றோம்.

முடிவெடுத்தல் மற்றும் மன அழுத்தம் தவிர்த்தல் ஆகியவை குறித்து உரையாடும்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்வது, ‘பிடிக்காத ஒன்றில் தொடர்ந்து இருக்க வேண்டாம்’. இருக்க வேண்டாம் என்றால் என்ன செய்வது? பிடித்த விதமாக மாற்றிக் கொள்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து பாருங்கள், அதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காவிடில் அதைவிட்டு வெளியேறி விடுங்கள். ஒருவேளை சரி செய்யவும் இயலாது, வெளியேறவும் வாய்ப்பில்லை என்றால், ஏற்றுக்கொண்டு அதையே தொடருங்கள். மிக முக்கியமானது அப்படித் தொடர்வதாக முடிவெடுத்த பிறகு, அந்த நிலை குறித்து, புகார் எதுவுமின்றி தொடருங்கள் என்பதுதான்.

இதனை தற்போதைய சூழலுடன் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. நோய்த் தொற்று, வேலைதொழில் - வியாபார முடக்கம், பொருளாதார நெருக்கடிகள், எங்கும் போகமுடியாமல் முடங்கிக் கிடக்கும் நிலை. ஆழ்ந்து யோசித்தால் இந்த யாவுமே மனது மற்றும் உடலளவில் நெருக்கடிகளை, தாங்க முடியாமையைத் தொடர்ந்து திணிக்கின்றன. யாருக்கும் அதில் தொடர்ந்து நீடிக்கப் பிடிக்கவில்லை. அதிலிருந்து ஏதேனும் மாற்றங்களை உருவாக்க முடியுமா என்றால், அதற்கான வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

ஆகவே, நோய்த்தொற்று குறித்த அச்சம், தொழில் வேலை வாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, பொருளாதார நெருக்கடிகள், ஓடிக் கொண்டிருந்த பரபரப்பு வாழ்க்கையில் ஒட்டுமொத்த உள்ளிருப்பு முடக்கம் ஆகியவற்றில் உடனடியாக சரி செய்யக்கூடிய பெரும்பான்மையானவை நம் கட்டுப்பாட்டில் மட்டுமில்லை. இந்தச் சூழலில் நாம் செய்ய வேண்டியது, எது நெருக்கடியைக் கொடுத்ததோ, கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, இன்னும் கொடுக்குமோ அதை அவ்விதமே ஏற்றுக்கொள் என்பதையேவாழப் பழகிக் கொள்தல்எனக் கருதுகிறேன்.



அனைத்து முடக்கங்களின் பின்னாலும் பிரமாண்டமாய் நிற்கும் எவர் பார்வைக்கும் நேரடியாகத் தெரியாத நுண்கிருமி நமக்கு வேண்டாம்தான். வேண்டாததை வரவிடாமல் தடுக்க தடுப்பூசியும், நலமாக்க சரியான மருந்தும் இல்லை. அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளும் புதிய தன்மைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே பாதிப்புகளுக்குள் இரையாகாமல் வாழ்ந்துவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டுமே உரத்துச் சொல்வதுகொரானாவுடன் வாழப் பழகுங்கள்”. மீண்டும் சொல்கிறேன் அது கூடிக்குலாவி இணைந்து வாழ்வதல்ல. கிருமி இங்கே உலவிக் கொண்டிருந்தாலும், உரசிக் கொள்ளாமல், ஒட்டிக்கொள்ளாமல் ஒதுங்கியபடி வாழ்வதே வாழப் பழகுதல்.

உடல் உபாதைகள் இருந்தவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரை மட்டுமே வீழ்த்தும் என இதுவரை அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்று அறிகுறி துளியும் இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கும் இளம் வயதினரையும் எளிதில் வீழ்த்துவதை அறிய நேர்கிறது. ஆனால் தொற்றிய அனைவரையும் அது வீழ்த்திவிடவில்லை. மிக மிக குறைந்த சதவிகிதம் மட்டுமே. வழக்கமான எந்த மரண எண்ணிக்கை சராசரியையும் இது தாண்டிவிடவில்லை.

அரசின் அறிவிப்புகள் முழுக்க உண்மையாகவும், முழுக்க பொய்யாகவும் இருக்க முடியாது. எந்த அடிப்படையில் இயங்குவது? அலையலையாக வரும் வதந்திகளை தெளிவாக ஒதுக்கி, உலகம் உள்ளங்கைக்குள் வசப்பட்டிருக்கும் இந்த நிலையில் சற்று மெனக்கெட்டால் ஓரளவு உண்மை மற்றும் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க முடியும்.

பாதுகாப்பாக இருப்பதென்பது முழுக்க வீட்டிலேயே முடங்கியிருத்தல் அல்ல. முடங்கியிருக்க வேண்டியதில்லை என்றால் உடனே அழகு நிலையத்திற்கும், நடைப்பயிற்சி தடத்தில் கூடிக் குலாவி அரட்டை அடிப்பதற்கும், வயல் வெளியை சமன் செய்து ஆயிரம் பேரை அழைத்து திருமணம் நடத்துவதும், பேருந்தில் நெருக்கியடித்துப் பயணம் செய்வதும் அல்ல.

முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஐநூறு என்றிருந்த தொற்று ஐந்தாம் கட்ட ஊரடங்கு என ஏறத்தாழ 90% தளர்த்தப்பட்டபோது இரண்டு லட்சத்தை நெருங்கியிருக்கின்றது. சாதாரண் சூழலில் அசாதாரணமாக முடங்கியிருந்த நாம், அசாதாரண சூழலில் சாதாரணமாக புழங்கத் தொடங்கிய முரண் தான் புரியவில்லை.  ஊரடங்கு நிரந்தரமாக நோய்த் தொற்றுக்கு வேலியோ, நமக்கு பாதுகாப்பு வலையத்தையோ அமைத்து தர முடியாது. அதுவொரு வாழ்க்கை முறையை பழக்கிக் கொடுத்தது, அவ்வளவே! வீட்டில் இரு, இருப்பதை வைத்து சமாளி, ஓடியோடி ஒன்றுகூடாதே, வெளியே செல்லாதே, தூய்மை பேணு, எதையும் தொடாதே, எவருடனும் நெருங்கி நிற்காதே, அனைவரையும் தொற்றுள்ளவராய் சந்தேகிக்கலாம் ஆனாலும் வெறுத்து ஒதுக்காதே உள்ளிட்ட பாடங்களைத்தான்.

இந்த நிலையில் தளர்வுகள் என்பது, எல்லாம் முடிந்துவிட்டது ஓடி வாருங்கள் ஒன்று கூடலாம் என்பதற்கல்ல. செயலிழந்து கிடைக்கும் சில துறைகளை காலத்தின் நியாயம் கருதி இயக்க வேண்டியிருக்கிறது, எனவே தகுந்த பாதுகாப்போடு அவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவதவற்கு ஒவ்வொருவரும் விலகியிருந்து ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமே தேவையேயன்றி, ஒன்றிணைவதன் மூலம் மிகப் பெரிய சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதல்ல.

கொரானா உலவும் சூழலில் நாமும் வாழப் பழகுவதுதான் தேவையே தவிர, கொரானாவை வாழ வைப்பது நம் இலக்காக இருக்க வேண்டாம்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...