சில அகக் கேள்விகளுக்கான பதில்

‘எதுக்கு இதெல்லாம் செய்திட்டிருக்கோம்?’ எனும் கேள்விகள் அவ்வப்போது எழுவதுண்டு. எப்போதாவதுதான் அதுவரையிலான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கள் கிட்டும்.


அப்படியானதொரு பதில்...
அமெரிக்காவிலிருந்து...

இந்த நாளை இனிதாக்கியிருக்கும் கடிதம்.

~*~

தம்மா துண்டு புக்கு ஈரோடுல இருந்து கெளம்பி... மதுரைக்குப் போயி... லோக்கல் ஃப்ளைட் ஏறி சென்னைக்கு வந்து... அங்கேருந்து இன்டர்நேஷனல் ஃப்ளைட் புடிச்சி பத்தரமா அமெரிக்கா வந்து சேந்தாச்சு😁👏🙌 (பொட்டி வந்தாச்சு 🥳பொட்டி வந்தாச்சு 🥳பொட்டி வந்தாச்சு 🥳)... ஊருக்கே கூவி கூவி சொன்னாதான் கொண்டாட்டம்..

ஒரு புக்கு பின்னாடி ப்ளூ ஜிப்பாவ பந்தாவா மடிச்சு விட்டுகிட்டு கதிரய்யா நிக்கிறாரு. இன்னொரு புக்கு பின்னாடி சேர்ல ஸ்டைலா போஸ் குடுத்துகினு உக்காந்துருக்கார். ஃப்ளைட்ல ஏறி வர்றோமே... சீட்டு புடிச்சு உக்காருவோமே, சீட் பெல்ட் போட்டுப்போமேனு இல்லாம இப்டி நின்னுகிட்டு, சீட் பெல்ட் போடாம வந்துருக்காரு. இந்த சேட்டை எல்லாம் செய்யலாமா?😛🤭

ஏதோ என்னோட நல்ல நேரம் தப்பிச்சார். இல்லைனா அப்டியே பொட்டியோட திருப்பி ஈரோடுக்கே கடத்தி விட்ருப்பாக... ஆமா...🤭

பத்து நாட்களில் பொட்டி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு வாரத்தில் பொட்டியும் அதில் ”வேட்கையோடு விளையாடு”, ”உறவெனும் திரைக்கதை” ஆகிய புத்தகங்களும் வந்து சேர்ந்தன.

இரு புத்தகங்கள் என் வீட்டிற்குள் நுழைந்தது என்று கூறாமல் தமிழ் என் வீட்டிற்குள் முத‌ல் முறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறது என்று கூறுவதே சரியானதாய் இருக்கும்😊

என் வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் என்றால் பள்ளி, கல்லூரியில் படித்த பாடப் புத்தகங்கள் மட்டுமே. அந்த புத்தகங்களை படித்ததும்கூட விரும்பி விரும்பாமல், புரிந்தும் புரியாமல், பல நேரங்களில் கடம் தட்டி, மண்டையை குடைந்து, முட்டி மோதி... இறுதியில் படித்ததெல்லாம் அறிவை வளர்த்துக் கொள்ளவா? கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கா? பேருக்கு பட்டம் வாங்குவதற்கா? ஏதோ ஒரு வேலை தேடிக் கொள்வதற்கா? பணம் ஈட்டுவதற்கா? எந்த ஒரு தெளிதலும் இல்லாமலே படித்தாகி முடிந்தது.

இந்த பாடப் புத்தகங்கள் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் பெரிதாய் வாசித்ததாக நினைவில்லை. சிறு வயதில் எப்போதாவது வாரமலரின் குறுக்கெழுத்து போட்டி பக்கத்தில் சிறிது நேரம் மூழ்கிக் கிடப்பேன்.

தாய்மொழி தமிழ் இல்லை என்பதால் வீட்டுக்குள் தமிழ் பேச வாய்ப்பில்லை. திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின்னால் எனக்கும் தமிழுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் போனது.

ஆனால் தமிழ் பிடிக்குமானு கேட்டா ரொம்ப பிடிக்கும். அமெரிக்கா வந்து ஆண்டுகள் பல கழிந்தும் ஆங்கிலம் ஒரு அந்நிய மொழியாகத்தான் இருக்கின்றது. உண்மையாய் சொல்ல வேண்டும் என்றால் என் தாய்மொழியைவிட தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேணும்னா எனக்கு ரெண்டு தாய்மொழினு வெச்சிக்கலாம்).

நண்பர்களின் வற்புறுத்தலில் 2012-13 ஆண்டு ஃபேஸ்புக்கில் நுழைந்தேன். அடர்வனம் ஒன்றில் பயணிக்கும் வேளையில் செவிகளுக்கு எட்டும் ஒரு நதியின் ஓடையின் அருவியின் சப்தம் அத்திசை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படிதான் ஒரு நாள் ஃபேஸ்புக்கில் அலைந்து திரிந்த வேளையில் ஒரே ஒரு வாக்கியம் தற்செயலாய் கண்ணில் தென்பட்டது "நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்"😊. அதை வாசிக்க வித்தியாசமாக இருந்தது.

சரி, உள்ள என்ன தான் இருக்குனு போயி தான் பாப்போம். பார்க்கத் தான் போனேன்..ஆனால் அங்கேயே தங்கிக் கொண்டேன். ஈரோடு கதிர் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்தேன்.

என்னை பொறுத்த அளவில் எந்த ஒரு விசயத்தையும் ஆ..ஊனு பிரம்மாண்டமாய் காட்ட வேண்டும்னு அவசியம் இல்லை. ரொம்ப சாதாரணமா, எளிமையா, தனக்கே உரித்தான நடையில், அறுசுவையும் சமச்சீராய் அளவாய் கலந்து, ரொம்பவும் திகட்டாம படிக்கிறதுக்கு பாந்தமா இருந்தா போதும். அப்படியானது தான் ஈரோடு கதிரின் எழுத்துக்கள்.

அந்த பக்கத்தில் தினமும் வரும் பதிவுகளை வாசித்து, வாசித்து ஒரு கட்டத்தில் தமிழ் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கானு என்னையே நான் கேட்டுகிட்டேன்.

ஒரு சூழலில் நெருங்கிய தோழியை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. ஃபோன்ல அந்த தோழிகூட பேசும் போது, நட்பின் பிரிவின் வலியை சொல்லி தோழி அழும் பொழுது... என்னையும் அறியாமல் அந்த கணத்தில் சில கவிதை வரிகள் (அது கவிதையானுகூட எனக்கு தெரியாது) மனசுல ஓடுது. ஃபோன் பேசிட்டு அந்த வரிகளை ஒரு பேப்பர்ல எழுதி மேலும் சில வரிகளை அதில் எழுதி முடித்தேன்.

அந்த தோழிக்கு எழுதிய கவிதையை பரிசாக குடுத்தேன். அதுக்கு அப்புறம் நண்பர்கள் கிட்ட கவிதையை பகிர்ந்து கொண்டப்ப எல்லாருக்கும் பிடிச்சது. அப்போதுதான் உணர்ந்தேன்... எனக்கும் ஏதோ கொஞ்சம் எழுத வருது போல..

இதை இந்த இடத்தில் சொல்லுவதற்கான காரணம்... ஈரோடு கதிரின் பக்கத்தை பின் தொடர்ந்து, அங்கே நான் வாசித்த அவரின் பதிவுகள் எனக்குள் ஒரு தாக்கத்தை, ஒரு தூண்டுதலை, எனக்குள் மெளனித்திருந்த தமிழை கொஞ்சம் கசிய செய்திருக்கிறது 😊..

அதுக்கு அப்புறம் எனக்கு மனசுல தோணுறது எல்லாம் எழுதிட்டு இருப்பேன். அதுக்காக தமிழ் எனக்கு சூப்பரா வருமானு கேட்டா எனக்கு தெரியாது. தமிழ் இலக்கணம் எல்லாம்... அது சுத்தமாவே மறந்து போச்சு... 'பின்ன நீ என்ன, எப்டிதான் எழுதுவ?’னு கேட்டா... எனக்கு தானா உள்ள இருந்து என்ன வருதோ எழுதுவேன் அவ்வளவு தான்.

ஓடுற ஆறு, வீசுற காத்து, பெய்யிற மழை, பாடும் பறவை, இயற்கையில் நடக்கும் எந்த விசயமும் எந்த விதிமுறை தெரிந்து, எதையும் கத்துகிட்டு செய்றது இல்ல. அது அது அதன் போக்குல இயங்கிட்டே இருக்குறது தான். அதுக்காக அதை எல்லாம் நாம ரசிக்காம இல்லையே. வர்றது எழுத வேண்டியது தான்😊..

எனக்கு எந்த புத்தகம் பெயரும், எழுத்தாளர் பெயரும்கூட பெரிசா தெரியாது. எப்படியா இருந்தாலும் புத்தகம் வாசிப்புனு ஒரு சிந்தனை வந்ததுக்கும்கூட கதிரின் எழுத்துக்கள் தான் காரணம். வாசிப்பதாக இருந்தால் முதலில் எழுத்தாளர் கதிரின் புத்தகம் தான் வாசிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில்😊இந்தியாவில் இருந்து குழம்புபொடி, ரசப்பொடி, சாம்பார்பொடிகளுடன், இனிப்பு காரத்துடன் புத்தகங்களும் வரவழைக்கப்பட்டு, புத்தகங்களை கண் குளிர பார்த்தாகிவிட்டது. பக்கங்களை புரட்டி கண்களால் அலசி ஆகிவிட்டது.

சிறு வயதில் பிடித்த கிடைத்த ஒரே ஒரு சாக்லேட் தீர்ந்துவிடக் கூடாது என்று கொஞ்ச கொஞ்சமாய் கடித்து, பேப்பரில் சுருட்டி ஒரு வாரத்திற்கு தக்க வைத்து..இறுதியில் பேப்பரில் ஒட்டி போன மீதத்தையும் வீணடிக்காமல் பேப்பரை மென்று சுவைத்ததைப் போல்... நாளுக்கு ஒரு கட்டுரை படிக்க முடிவு எடுத்து‌ள்ளேன் 😉

தம்மா துண்டு புக்குக்கு இம்மாம் பெரிசா எழுத வேண்டி இருக்கு. இன்னும் எழுதலாம் படிக்கிற எழுத்தாளருக்கு கொஞ்சம் break குடுப்போம் 😁

'நிறைய எழுது; நிறைய வாசி'... கண்டிப்பாக நிறைய எழுதுவேன் வாசிப்பேன்🙏



No comments: