நானும் 2018ம்...

2018ல் மிக முக்கியமான ஒரு காரியம் செய்திருக்கிறேன். சுற்றிலும் நடக்கும் அபத்தம், சகிக்க முடியாத கண்றாவிகளையெல்லாம் பார்த்தவுடன் ஜிவ்வ்வ்வுனு ஒரு கோபம் வரும் தெரியுமா...! அதை எழுதி, பேசி என எதுவும் செய்யாமல், அதற்காகவே இருக்கும் இரண்டு வாட்ஸப் குழுமங்களில் பகிர்ந்துவிட்டு அமைதியாகி விடுகிறேன். அந்த குழுக்களில் தலா 8 மற்றும் 5 பேர் மட்டுமே! குழுமங்களின் பெயரை வெளியில் சொல்வதில் சில சட்டச் சிக்கல்கள் உண்டு என்பதால்.... ஆமாம் அதில் ஒரு வக்கீல் அண்ணன் இருக்கிறார்.
மற்றபடி...
இத்தனை வேகமாய் ஒரு ஆண்டு கடக்குமென்றால் எத்தனை ஆண்டுகளையும் வாழ்ந்து கடக்கலாம் எனத் தோன்றும் ஆண்டு 2018.
2018 என்னளவில் அற்புதமான ஆண்டு...
பேரன்பு தளும்பும் மனிதர்களை இந்த ஆண்டும் இனம் கண்டு கை பற்றிக் கொண்டேன்.
சாலைப் பயணத்தில் அற்புத அனுபவமாக ஒரு நாள், காலை ஈரோட்டில் புறப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைந்தது என இடை தங்காமல் பயணித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு அனுபவம். அதிலும் அஜந்தா குகை விசிட்...ம்ம்ம்... என்றும் மறக்க முடியா தருணம்.
உடற்பயிற்சியில் 100 நாட்கள் அதிலும் 100வது நாள் 21 கி.மீ ஓடியது கெத்து என்றால், அதன்பின் தொடர்ந்து ஏமாற்றி சோம்பேறியா இருப்பதற்கு என்னை நானே மொத்திக் கொள்ளலாம்.
ஏறத்தாழ 22 ஆண்டுகளாக இருந்த ஒரு துறையிலிருந்து வெளியேறிய திடமான முடிவு ஒன்று எடுத்திருக்கிறேன். அதேபோல் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆர்வம் காட்டிய அமைப்புகளிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறேன்.
எழுத்தில்... புதிய தலைமுறை கல்வியில் 25 வாரங்கள் தொடர் எழுதியது மிக மகிழ்வான பணி. அயல்சினிமா, மின்னம்பலம் என உறவெனும் திரைக்கதையின் அடுத்த பாகத்தை சற்றே மெதுவாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எழுத்தில் இன்னும் சில இலக்குகளை நானே கைவிட்டது குறித்து வெட்கப்படுகிறேன்.
பேச்சு மற்றும் பயிற்சியில் குறிப்பாக இலங்கைக்கு மேற்கொண்ட அனுபவத்தில் என்னை நானே பெருமையாக உணர்ந்தேன். தொடர்ந்து ஐந்து நாட்களில் 9 அமர்வுகளில் ஏறத்தாழ 35 மணி நேரம் பயிற்சியளித்த ஆற்றல் பெரும் தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி தொடங்கி டிசம்பர் 30 தேதிக்குள்ளாக 102 மேடை மற்றும் அரங்குகளில் பங்கெடுத்திருக்கிறேன். அதன்வாயிலாக ஏறத்தாழ 30,000ற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 22,000+. இதற்காக சுமார் 227 மணி நேரம் பேசியிருக்கிறேன். வெறும் 18 பேர் முதல் 2900 பேர் வரை என இரண்டு எல்லைகளுக்குமான கூட்டத்தை இந்த ஆண்டு சந்தித்தேன். சிறப்பு விருந்தினராகச் சென்று, ஒரு கூட்டத்தில் வெறும் 2 நிமிடம் மட்டுமே பேச வேண்டிய சவாலான அனுபவமும் இந்த ஆண்டில் நிகழ்ந்தது. அந்த சவாலை சரியாக கடந்ததாலே சில கூட்ட வாய்ப்புகள் கிடைத்ததையும் மறுக்க முடியாது.
வாசிப்பு என்று எடுத்துக்கொண்டால்.... @#$%@#%@#$% தட் மீன்ஸ்..... த்த்தூ....த்த்தூ....
இந்த ஆண்டில் வருத்தமானது, துன்பமானது எதுவும் இல்லாமலா இருந்திருக்கும். நான் அதை நினைவில் கொள்ளவோ, மீட்டிப் பார்க்கவோ விரும்புவதில்லை என்பதாலேயே அவற்றில் பகிர எதுவும் இல்லை.
மற்றபடி எங்கள் ஈரோடு வாசல் குழுமத்தில் கணிசமான நேரம் மற்றும் பங்களிப்பை செய்திருக்கிறேன். அதிலிருந்து அற்புதமான பலரை அடையாளம் கண்டது பெருமையளிக்கிறது. ஈரோடு வாசல் தம்மளவில் சமூகத்திற்கான உடனடிப் பங்களிப்பாக கஜா புயல் நிவாரணத்தில் 2.20 லட்சம் ரூபாய்க்கு உணவுப் பொருட்களை வழங்கியிருப்பதில் பெரும் நிறைவு கொள்கிறேன்.
நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் காட்டும் அன்பிற்கு என்ன பிரதியன்பு செலுத்தப்போகிறேன் எனும் வினாக்களோடுதான் எப்போதும் இருக்கிறேன்.
எவர் மீதும் பெரிய புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் வரும், அதுவும் இப்பொழுதெல்லாம் குறைந்து வருகிறது.
இந்த வாழ்வை அதன் இயல்புகளோடு இனிதே வாழ்ந்திடும் கனவு அனுபவமாகவும் தொடர்கிறது. இனியும் தொடரும். இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே..

3 comments:

Avargal Unmaigal said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வசூல்ராஜாmbbs said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Kasthuri Rengan said...

பக்குவம்