தொன்மத்தின் வாசம்




அதிசயமாய் அகப்படுகிறது
புழுதிபடிந்த பனையோலை
விசிறியொன்று

வீசும் விசையில்
திசைமாறி
மோதும் காற்றில்
என்னை வருடும்
இந்த வாசத்தின்
பெயர் என்னவாயிருக்கும்?

கல்லால் கொட்டி
புண்ணுக்கு வைத்த
பனைமரத்துச் சாறு

காற்றில் உதிர்ந்து
திமிறிக் கிடக்கும் ஓலை

காக்கா முள்ளில்
கூட்டல் குறியாய்ச்
சிக்கியோடும் காற்றாடி

பதனியும் கள்ளும் போக
நொங்காய் விளைந்து
கவைக்குச்சி முனையில்
ஓடும் வண்டிச் சக்கரம்

முதிர்ந்துதிரும் பழத்தை
சுட்டுச் சப்பியபின்
அடிநாக்கில்
ஆறிக்கிடக்கும் ருசி

பனங்கொட்டையிலிருந்து
சீம்பாய் முளைவிட்டு
திரண்டு நிற்கும் கிழங்கு

ஒட்டுமொத்தமாய் வீசும்
தொன்மத்தின் வாசத்தில்
இதுமட்டுமென
எதைச் சொல்ல!

5 comments:

shanmuga vadivu said...

ரசனையான வரிகள்... அருமை...வாழ்த்துக்கள். கதிர்..

Pandiaraj Jebarathinam said...

ரசனைக்குரிய வரிகளும்,
நினைவுகளை தாங்கி நிற்கும்
அதன் வரிகளும்..
வார்த்தைகளின் வாசமும்
பனைமரக் காற்றாய்
வீசிக் கொண்டிருக்கிறது...

Unknown said...

பனை மர வாசனை வருது இந்த கவிதையில். நல்ல ரசனையான கவிதை. :)

இராய செல்லப்பா said...

இன்று தமிழில் பெரும்பாலான கவிதைகள் வாசகர்குகளுக்குப் புரிந்துவிடலாகாது என்ற மேதைமைச் செருக்குடனேயே எழுதப்படுகின்றன. அவற்றின் நடுவே, உண்மையின் கவிதையாக உங்களது விளங்குகிறது. இதே எளிமையைத் தொடர்ந்து கடைபிடியுங்கள். தமிழ்க் கவிதை உங்களால் வளம்பெறும் என்பது உறுதி.

Unknown said...

Ippathaan padichaen aana nethu pasangallam idhoda then mittai kudalnu saappadu itemum serthu pesikitrundhome