எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!


ஒரு நாளை எப்படி கடக்கலாம் அல்லது கடத்தலாம்? ரசித்துக் கடத்தலாம், ருசித்தும் கடத்தலாம். இறுக்கிப் பிடித்துக்கொள்ளலாம், பிடித்து கசக்கி எறியலாம், உதாசீனப்படுத்தி ஒதுங்கி நின்றுகொள்ளலாம். எல்லாம் நம் கையில்தான். இசைவாய் உடனிருக்கும் சூழலின் கையிலும் கூட

மற்ற தினங்களுக்கு இருக்கும் நிறத்தைவிட ஞாயிறுகளின் நிறம் சற்றும் சோபையானது. இன்னும் இலக்கியத்துவமாய்ச் சொல்லவேண்டுமெனில் அந்த சோபை கொஞ்சம் கவித்துனமானது. சில ஞாயிறுகளில் நான் வாசல் தாண்டி படியில்கூட கால் வைத்ததில்லை. சனி இரவு கூடடைந்து திங்கள் காலை வெளியேறும் போதுதான் உணர்வேன் கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஒரு 500-1000 சதுரடி பரப்புக்குள் மூழ்கிகிடந்ததை. மாறாக சில ஞாயிறுகளின் 24 மணி நேரத்தின் 90 சத நேரத்தை பரபரப்பு விழுங்குவதுண்டு.

விருப்பத்தின் பேரில் சட்டென மேற்கொள்ளும் ஞாயிறு பயணங்களுக்கு எப்போதும் கூடுதல் புத்துணர்வுண்டு. ஒரு பெருநகரத்தின் விடுமுறை பரபரப்புக்குள் குவியும் மக்கள் மத்தியில் ஒரு பொழுதைத் தொலைப்பது வரமென்றே சொல்வேன். ஞாயிறுகளில் வீதிகளில் எதையாவது வாங்க அலைபவர்களுக்கு, தேடுபவர்களுக்கு மற்ற நாட்களின் பரபரப்பு இருப்பதில்ல. திங்கட்கிழமை வீதிகளில் சுத்துபவர்களுக்கு அந்த வாரத்தின் துவக்கத்தில் சுத்துகிறோம் என்பதோடு அந்த வாரத்தை எதிர்கொள்ளும் கனம் இருக்கும். வாரத்தின் மத்தியில் சுற்றுபவர்களுக்கு கடந்த நாட்களுக்கு நிகராக மீதி நாட்கள் மிச்சம் இருக்கும் பொறுப்பு இருக்கும். வார இறுதி நாட்களில் சுற்றுபவர்களுக்கு தீரப்போகும் வாரத்தின் இறுதி சுமூகமாய் கடந்திடவேண்டும் என்ற பதைபதைப்பு இருக்கும். ஞாயிறுகளில் வீதிகளில் சுற்றுவோருக்கு அப்படி ஒரு கனம், பொறுப்பு, பதைபதைப்பு இருப்பதில்லை.

எத்தனையெத்தனை முகங்கள். எத்தனையெத்தனை குறிப்புகள். எத்தனையெத்தனை உணர்வுகள். எத்தனையெத்தனை இறுக்கங்கள். எத்தனையெத்தனை தளர்வுகள். உரக்க மலையாளத்தில்சம்சாரித்துக்கொண்டிருக்கும் ஒருவன் சமீபத்தில் பார்த்த மலையாளப் படத்தை நினைவூட்டுகிறான். நமக்கு தேவையே இல்லாத பொருளுக்கு அல்லது அவசியப்படாத ஒரு பொருளுக்கு சாலையோர வியாபாரி வலிய வந்து, சிறிது தூரம் துரத்தி வந்தும் விலை சொல்கிறான்.  தேவையோ இல்லையோ ஆனாலும் பேரம் பேசுதலில் ஒரு சுகம். 850 ரூபாய் விலை சொல்லும் பொருளை 150 ரூபாய்க்கு வாங்கும் சாத்தியங்கள் சாமார்த்தியம்தானா எனத் தெரியவில்லை.


ஸ்கூட்டரில் அப்பாவின் பின்இருக்கையில் பின்பக்கமாய்த் திரும்பி அவர் முதுகில் தன் முதுகை சாய்த்துக்கொண்டு தன்போக்கில் காற்றில் ஓவியம் வரையும் குழந்தை விரல்களில் பிகாசோவின் மிச்சம் கொஞ்சம் ஒட்டியிருக்கலாம்.

புதிதாய் நுழையும் வீதியில் தேநீரோ, சிற்றுண்டியோ, மதுபானமோ வரிசையாய் இருக்கும் கடைகளில் எதுவெனத் தீர்மானிப்பதில் சற்றேனும் ஊசலாடுகிறோம். கடைகளிலிருந்து வெளியேறும் ஒரு சைனீஷ் அல்லது திபெத்திய முகம், அந்தக் கடை குறித்து ஒரு கணம் அந்நியத்தன்மையை ஏற்படுத்தி மெல்ல சமநிலைக்கு நகர்த்துகிறது.

சுடச்சுட இனிப்பும் காரமும் புளிப்புமாய் பலகாரம் சுடும் கடையில் ஒவ்வொன்றாய் வாங்கி ஆளுக்கொரு கை என நட்புகளோடு பசியாறுகையில் தொலைந்த பால்யம் மீண்டு வந்து காலைக் கட்டிக்கொண்டு ஏக்கத்தோடு அண்ணாந்து பார்க்கத்தான் செய்கிறது.

கடந்துசெல்லும் இளவட்டங்கள் எவரெரையோ நினைவுக்குள் மீட்டி விடுகிறார்கள். விதவிதமான ஆடைகளில் இணையாய் நகரும் இருபாலின நட்புகள் துள்ளல் மிகுவொரு கவிதையை நினைவில் கசியவிடுகின்றனர். காலம் மாறிப்போச்சு, அதற்கேற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்த முற்போக்கை மெல்லத் திணிக்கிறார்கள். நாமும் மாறவேண்டும் என்பது அவர்களைப் போன்றேயல்ல, அதை எதிர்கொள்ளும், ஏற்கும் மனோபாவத்திற்கு.

வித்தியாசமாய் முடி வெட்டு, உடை எனக் கடந்து போகின்றவன் தன்னை மீண்டும் பார்க்க வைக்கிறான். தலைமுடிக்கு தங்கநிற வரிகளால் சாயம் பூசிக்கொண்டு, விழியகற்றாமல் ரசிக்க வைக்கும் அழகியதொரு ஆடையில்எங்கிருந்தோ வந்து திடீரென பார்வைகளில் விழுந்து கடந்து கரைந்து ஏதோ கடைக்குள் செல்பவள் மனதை வாரிச்சுருட்டிவா பின்னால்!’ என வெறித்தனமாய் இழுத்துச் செல்கிறாள். அம்மாவின் கை பிடித்துத் தொங்கிக் கொண்டே கேள்விகளால் துளைக்கும் குழந்தையின் பரபரப்பும், பதில் சொல்ல அலுக்கும் அம்மாவின் அயர்வும் கவிதைதானே!

மதுபானச் சாலையொன்றில் மிதமான இசையும், ஒளியும் எதிர்பார்க்க அதற்கு எதிராய் அமையும் தருணங்களில் மனதைஇப்படியில்லை அப்படி மாறிக்கோ!’ என மெல்ல மெல்ல பதப்படுத்த வேண்டியதாய் அமைகிறது. அதிரும் ஒலியும், மௌனமாய் ஓடும் தொலைக்காட்சியும், மேசையில் கேரம்போர்டு வைத்து விளையாடிக்கொண்டு ஆணும் பெண்ணுமாய்,  மிடறுகளாய் பியரைச் சுவைத்துக்கொண்டு அக்கம்பக்கம் பாராமல் தம் நிலை மறந்துகொண்டிருப்பதும் ஒரு தவம்தான். ருசிக்க மறுத்திருக்கும் மதுவும், நம்மைப் பார்த்து ரசித்துக்கொண்டே, என்னைக்கொஞ்சம் ருசியேனும் அழைப்புக்கு மறுப்புச்சொல்வதும் தவம்தான்.

எல்லாமும் கிடைப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் தரும் பேரங்காடியொன்றின் மூன்றாம் மாடியில் நின்றுகொண்டு மாடிவிட்டு மாடி நகரும் படிகளில் சேரும், கரையும் மனித அலைகளில் 99 சதத்திற்கு மேல் 30க்குச் சற்றே முன்னும் பின்னும் இருப்பதாகவேபடுகிறது.

ஒரு வீதியில் 250 ரூபாய்க்கு கிடைக்கும் மதுபானம், பிறிதொரு சாலையின் மூன்றாம் மாடிக் கடையில் 680 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் அந்தக் கடையின் புகைக்கும் பகுதி கண்ணாடிக்குள் ஒரே சிகரெட்டை மாற்றிமாற்றிப் புகைத்தலோடு, முத்தமும் மோகமும் பகிரும் திபெத்திய முகப் பெண்ணையும், அவளைவிட இரு மடங்கு உயரத்திலிருக்கும் தென்னிந்த தொப்பை ஆணையும் சற்றேனும் பட்டிக்காட்டான் முட்டாய்க் கடைய பார்த்த மாதிரி பார்க்கலாம். 250 ரூபாய் பானத்தை 150 ரூபாய்க்கு விற்கும் ஒரு மொத்தவிலைக் கடையில் ஒரு வார்த்தைகூடப் புரியாத மொழியில் 50 வயது ஆளோடு சண்டையிட்டு அடித்துக்கொண்டு கட்டிப் புரளும் ஒரு 20 வயது ஆளை சற்றே மிரட்சியுடன் கடக்கலாம். வேறு வேறு நிறங்களைக் கொண்டதுதான் இந்த உலகம்.

சிக்னலில் மெல்ல நெளியும் டாடா இண்டிகா காரின் இருக்கைக்குப்பின் பொருட்கள் வைக்கும் பகுதியில், ஒரே மட்டத்திலிருக்கும், நான்கைந்து வயது குழந்தைகளை நிறுத்தியபடி, நகர்வதை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. ”அடப்பாவிகளா இப்படியாடா குழந்தைகளை வச்சிருப்பீங்க!” என்ற அதிர்வுகளைப் போக்கும்வண்ணம் நம்மைப் பார்த்து கை அசைத்து டாட்டா சொல்லும் அந்த மலர்களுக்கும் நமக்கு எந்த ஜென்மத்து உறவோ தெரியவில்லை! அதுவும் வலது ஓரமாய் இருக்கும் அந்தப் பெண் குழந்தை கண்ணாடிக்குள்ளிருந்து காற்றில் வீசும் முத்தத்திற்கு இணையேது.

எல்லா நாட்களுக்கும் இருபத்தி நான்கு மணி நேரம்தான். இரவும் பகலும் தான். ஆனால் எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!


-



6 comments:

Unknown said...

Superb (y)..What ever it may be, finally to say: ஆனால் எல்லா நாட்களும் ஒன்றேயல்ல!

Unknown said...

நல்ல எழுத்தோட்டம் .. கணங்களின் மொத்த தொகுப்பாக ..

manjoorraja said...

எல்லா நாட்களிலும் இந்த மாதிரி ரசித்து அனுபவிக்கும் மனம் வாய்ப்பதில்லை என்பதும் உண்மைதான். ரொம்ப நல்லாவே ரசித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு ரசனை...!

/// குழந்தை விரல்களில் பிகாசோவின் மிச்சம் /// மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். அருமை.

குறிஞ்சி said...

"......என்ற அதிர்வுகளைப் போக்கும்வண்ணம் நம்மைப் பார்த்து கை அசைத்து டாட்டா சொல்லும் அந்த மலர்களுக்கும் நமக்கு எந்த ஜென்மத்து உறவோ தெரியவில்லை! "

நல்ல ரசனை... இந்த வரிகள் நினைவுக்கு வந்தது...

குழந்தையின் சிரிப்பில்
கண் சிமிட்டிச் சிரிக்கும்
அறிமுகம் இல்லா குழந்தையின்
கண்களில் தெரிகிறது
நம்
முன் ஜென்மத்து
மிச்சங்கள்...

http://puthithainaam.blogspot.in/2013/09/blog-post_788.html