திறந்து பார்க்க மறந்த உலகம்


தொலைக்காட்சிக்குள்ளே ஆழ மூழ்கிக் கிடக்கும் என் மகளை பல நேரங்களில் பிரித்தெடுப்பதே மிகச் சிரமமானதாக இருக்கிறது. தொலைக்காட்சியை அணைக்கச் சொல்லும் பொழுதெல்லாம், அதற்கு ஈடாக விளையாடுவதற்காக என் கைபேசியையோ, மடிக்கனிணியையோ கையகப்படுத்த முயற்சிப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு என் மடிக்கணினியில் அப்படி விளையாட என்னதான் இருக்கிறது என்ற கேள்வியிருந்தாலும், உட்கார்ந்து உற்று நோக்கும் பொறுமை உதிர்ந்து போய்விட்டது.



ஒரு வழியாய் மடிக்கணினியை கையகப்படுத்தி “அப்பா, படம் வரைய போட்டுக்குடுங்க” என்று குறுகுறுப்பாய் வேடிக்கை பார்த்து, அதற்கான மென்பொருளை நான் இயக்கும் வரை காத்திருந்த நாட்கள் மலையேறிவிட்டது. மடிக்கணினியை, பையிலிருந்து எடுத்து, திறக்கும் போதே “தள்ளுங்கப்பா” என்று மிக இயல்பாய் ஒதுக்கி, தனக்கென கையகப்படுத்தி, சடசடவென ஒவ்வொன்றாய் சொடுக்கி ஏதாவது ஒரு விளையாட்டுக்குள் மூழ்கிப் போய், அந்த விளையாட்டுக்கேற்ப விதவிதமாக குரல் எழுப்புவதை நினைக்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது.

குழந்தைகளின் உலகத்தில் மூழ்குவதை விட பிற அலுவல்களே முக்கியமாய் தோன்றும் சாபம் என்னையும் விட்டு வைத்ததில்லை. பல நேரங்களில் அவள் பேச வருவதை கேட்கும் மனநிலையை, ஏதோ ஒரு கைபேசி அழைப்பு களவாடிவிடுகிறது. நான் பேச நினைக்கும் நேரத்தில் வீட்டுப் பாடமோ, சுட்டி தொலைக்காட்சியின் செட்ரிக் அல்லது ஹம்பி டம்பியோ அவளை என்னிடமிருந்து களவாடிவிடுகிறது.

வழக்கமான வார விடுமுறை, வழக்கம் போல் வீட்டில் வார நாட்களின் களைப்பைக் கரைக்க கிடந்தேன். ஊரில் இருந்து தாத்தா வந்திருந்தார். எண்பதுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு, எழுதப் படிக்கத் தெரியாது. கையெழுத்து மட்டும் கிறுக்கலாய்ப் போடத் தெரியும். தொலைக்காட்சியும், அப்பா அம்மா இல்லாத நேரங்களும் என் மகளின் விளையாட்டுத் தோழனாக இருப்பவர் என்னுடைய தாத்தா. மதிய உணவுக்குப் பின் கொஞ்சம் தூக்க கலக்கத்தோடு படுக்கையில் கிடக்க, வழக்கம் போல் மடிக்கனிணியை கையகப் படுத்தியவள் அதை படுக்கையில் என்னருகில் கடை விரித்து, வெளியில் இருந்த என் தாத்தாவை தன் அருகில் அமர வைத்துக் கொண்டு எதோ ஒரு விளையாட்டை துவங்கினாள்.

ஒரு மாதிரி அரைத்தூக்கத்தில் இருந்த எனக்கு, என்னவோ சலசலப்புக் கேட்டது, நேரம் நகர பேச்சு அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

“குட்டிம்மா, என்ன சாமி பண்றே, கொஞ்சம் தூங்க வுடேன்”

“அப்பா, இந்த கேம்-மை தாத்தாக்கு சொல்லிக் குடுத்ட்ருக்கேன்”

தூக்கம் பிடிபடவில்லை, என்ன நடக்கிறது என்று கவனிக்கத் துவங்கினேன். ஏதோ ஒரு விளையாட்டின் மையத்தில் இருந்தாள். கை பரபரவென விளையாடிக் கொண்டிருக்க, விளையாட்டு குறித்த விளக்கம் கோர்வையாக வந்து கொண்டிருந்தது. சரியாய் சில விளக்கம், தனக்குத் தோன்றிய விதத்தில் கற்பனையாய் சில விளக்கம் என வெகு சுவாரசியாமாய் போய்க் கொண்டிருந்தது.

குழந்தை விவரிப்பதை வெகு சிரத்தையாய்
“ம்…”
“அப்படியா….”
“ஓ” என தாத்தா கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த விளையாட்டு ஒரு மாதிரி பிடிபடாமல் போக, வேறொரு விளையாட்டில் அடுத்த பாடம் ஆரம்பித்தது.

என்னால் ஒன்றை நிச்சயமாக உணர முடிந்தது, என்னுடைய தாத்தாவிற்கு அதில் ஒன்றுமே புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் வெகு சிரத்தையாய் அதை “ம்” கொட்டி பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். தனக்கு ஒன்றும் புரியவில்லை, இது தனக்கான விசயம் இல்லை என்ற போதும், ஏழு வயது குழந்தை சொல்வதை தன்னை மறந்து குழந்தையோடு குழந்தையாக தன்னுடைய எண்பது வயதில் ஏதோ ஒரு ஈடுபாட்டோடு கேட்டுக் கொண்டிருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

குழந்தைகளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்ய நினைக்கும் நமக்கு, ஒரு போதும் குழந்தைகளின் உலகத்தில் மூழ்க மனதிருப்பதில்லை. அதே போல் ஒன்றை உண்மையாகவோ, கற்பனையாகவோ சுவாரசியமாய் குழந்தைகள் விவரிப்பது போல் சொல்லும் திறனும் அற்றுப் போய் விட்டது. ஒவ்வொரு இடத்திலும் எல்லைகள் வரைந்து வைத்து, எல்லைகளுக்குள்ளாக, ஏனென்றே தெரியாமல் குறுகிப்போய் கிடக்கின்றோம்.

கொம்பு முளைத்த புத்தி, எதையெடுத்தாலும் குத்திக் கிளறி அதை ஆய்ந்து ஆய்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது. நம்மூலம் வந்த குழந்தைகளுக்கு, சரியாகவோ தவறாகவோ ஒரு உலகத்தை வடிவமைக்க நினைக்கும் வேகத்திற்குள், குழந்தைகள் மிக அழகாக தங்களுக்கென கட்டமைத்திருக்கும் உலகத்திற்குள் சென்று, இதுதான் குழந்தைகளின் உலகம் என்பதைப் பார்த்து, உள்வாங்கி அனுபவிக்க மறந்து விட்டோம்.

ஏழு வயதுக்குழந்தை எண்பது வயதிற்கு தாத்தாவிற்கு பாடம் எடுப்பதையும், எண்பது வயது தாத்தா குழந்தையாக மாறி ஏழு வயது குழந்தையிடம் எல்லாம் புரிந்ததுபோல் கேட்பதையும் பார்க்கும் போது குழந்தைத் தனத்தை தொலைத்த மனதிற்கு கொஞ்சம் குறுகுறுப்பாகவும், பொறாமையாகவும், வெட்கமாகவும் இருக்கத்தான் செய்கின்றது.


______________



45 comments:

Anonymous said...

photo super :)

பழமைபேசி said...

ஒளி ஓவியர் ஈரோ கதிர் வாழ்க!!!

vasu balaji said...

அப்பாக்கள் அப்படித்தான். இது எப்போதுமே பாட்டி தாத்தாக்களின் உலகமாகவே இருந்திருக்கிறது பெரும்பாலும். :(. நல்ல இடுகை.

naanjil said...

"Kulal inithu yazh inithu enber
mazhai chol kelathavar."

Thanks for sharing your pleasant experience. This is happening in my home too.
Nannjil peter

பழமைபேசி said...

மாப்பு... குழந்தைகளோடு பெரும்பாலானோர், என்னையும் உட்பட நேரம் செலவிடுவதில்லைதான்.... ஒப்புதல் வாக்குமூலம் அருமை!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை.

அன்பரசன் said...

Wonderful...

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு... படம் ரொம்ப க்யூட்...

பின்னோக்கி said...

கதிர் இது வழக்கமான வாழ்க்கை வட்டம் என்றே நினைக்கிறேன். உங்களுக்கு, உங்களின் பேரன் பேத்திகளிடம் பொறுமை வந்து அவர்களின் உலகிற்கு நீங்கள் செல்லும் போது, உங்கள் மகள், தினந்தோறும் வாழ்க்கையைக் கடத்தும் முயற்ச்சியில் அயர்ச்சியாக இருப்பாள்.

பின்னோக்கி said...

சற்றே யோசிக்கையில் தாத்தா, தன் மகனிடம் நேரம் செலவழிக்க முடியாத குற்ற உணர்ச்சியை, பேத்தி,பேரனிடம் நேரம் கழிப்பதில் போக்கிக்கொள்கிறார் என்றே படுகிறது.

ஆனால், வேகமாக இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் குறைந்து வருவது வருந்தத்தக்கது. குழந்தைகளும் எலக்ட்ரானிக் விளையாட்டுக்களில், பெற்றோர்களை எதிர்பார்க்கும் தருணங்களும் குறைந்துகொண்டே வருகிறது :(

Mahi_Granny said...

'எப்போதுமே பாட்டி தாத்தாக்களின் உலகமாகவே இருந்திருக்கிறது பெரும்பாலும்.' யாம் பெறுகின்ற இன்பம் நீவிரும் பெறும் நாளும் வரும்.history has to repeat itself

Mahi_Granny said...

'எப்போதுமே பாட்டி தாத்தாக்களின் உலகமாகவே இருந்திருக்கிறது பெரும்பாலும்.' யாம் பெறுகின்ற இன்பம் நீவிரும் பெறும் நாளும் வரும்.history has to repeat itself

Unknown said...

உண்மைதாங்க...

அகல்விளக்கு said...

mazhalaigal ulagam endrume visithiramaanathu....

Angu erumbugal kooda Biramaandamai uruveduthu kathaikal peasum...

naamthan erumbugalai mithithuk kondirukkirom...

மணிநரேன் said...

இடுகையும், புகைப்படமும் நல்லா இருக்குங்க கதிர்.

நட்புடன் ஜமால் said...

பல நேரங்களில் அவள் பேச வருவதை கேட்கும் மனநிலையை, ஏதோ ஒரு கைபேசி அழைப்பு களவாடிவிடுகிறது. நான் பேச நினைக்கும் நேரத்தில் வீட்டுப் பாடமோ, சுட்டி தொலைக்காட்சியின் செட்ரிக் அல்லது ஹம்பி டம்பியோ அவளை என்னிடமிருந்து களவாடிவிடுகிறது.]]

ஒன்னும் சொல்றதுகில்லை ...

a said...

போட்டோ அருமை...

ஆமாம்... 80 வயது முதிர்ச்சி........... நமக்கு நம் கவலைகள் குழந்தைகளின் உலகத்தை மறக்கடித்து விடுகின்றன....

மதுரை சரவணன் said...

குழந்தைகளின் உலகை ரசித்துடன் அதை பகிர்ந்த விதம் அருமை. வாழ்த்துக்கள். குழந்தைகளுடன் தந்தையர் வாரத்தில் செலவிடும் நேரம் ஐந்து நிமிடம் தான் என சர்வே சொல்லுகிறது. நீங்கள் குழந்தையுடன் விளையாடுவது ரசிப்பது வியக்க வைக்கிறது.

காமராஜ் said...

ஆஹா கதிர்... கவனிக்க மறந்தவற்றை திருப்பி நிறுத்தி சிலகிக்கச்சொல்லுகிறது இந்தப்பதிவு.

Unknown said...

குழந்தைகளோட சேர்ந்து குழந்தையாகவே பல தடவை விளையாடியிருக்கேன். அதன் சுகமே தனி தான். நெகிழ்வான பதிவு.

PS : எனக்கும் உங்க வயது தான்.

Chitra said...

குழந்தைகளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்ய நினைக்கும் நமக்கு, ஒரு போதும் குழந்தைகளின் உலகத்தில் மூழ்க மனதிருப்பதில்லை. அதே போல் ஒன்றை உண்மையாகவோ, கற்பனையாகவோ சுவாரசியமாய் குழந்தைகள் விவரிப்பது போல் சொல்லும் திறனும் அற்றுப் போய் விட்டது. ஒவ்வொரு இடத்திலும் எல்லைகள் வரைந்து வைத்து, எல்லைகளுக்குள்ளாக, ஏனென்றே தெரியாமல் குறுகிப்போய் கிடக்கின்றோம்.

......குழந்தைகள் உலகம் தனித்துவம் வாய்ந்தது. குழந்தை மனம் கொண்டவர்கள் மட்டுமே அதில் உள்ள குதூகலத்தை புரிந்து கொள்கிறார்கள்.
I remember the English saying: Aging is inevitable but maturing is optional. :-)

Thuvarakan said...

நெகிழ்வான பதிவு... super

ரோகிணிசிவா said...

அழகு போட்டோ கதிர்!!

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க கதிர்......

ஜெயந்த் கிருஷ்ணா said...

குழந்தையின் மன நிலையை அப்பாவாக மிகவும் அருமையாக புரிந்து வைத்திருக்கறீர்கள்.... ஆனால் குழந்தைக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை...

அந்த தாத்தா இருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இன்னும் உங்கள் மகள் மகிழ்ச்சியடையலாம்...

அருமையான பகிர்வு..

ராமலக்ஷ்மி said...

இந்த புன்னகைப்பூவினை விரலுக்குள் பூவாக ஃப்ளிக்கரில் ரசித்து விட்டிருக்கிறேன் முன்னமே:)!

// எண்பது வயது தாத்தா குழந்தையாக மாறி ஏழு வயது குழந்தையிடம் எல்லாம் புரிந்ததுபோல் கேட்பதையும் //

தாத்தா அப்பாவாக இருக்கையில் எப்படி இருந்திருப்பார் எனத் தெரியவில்லை. நாம் மாறலாமே!

அருமையான இடுகை.

சத்ரியன் said...

//ஏழு வயதுக்குழந்தை எண்பது வயதிற்கு தாத்தாவிற்கு பாடம் எடுப்பதையும், எண்பது வயது தாத்தா குழந்தையாக மாறி ஏழு வயது குழந்தையிடம் எல்லாம் புரிந்ததுபோல் கேட்பதையும் பார்க்கும் போது குழந்தைத் தனத்தை தொலைத்த மனதிற்கு கொஞ்சம் குறுகுறுப்பாகவும், பொறாமையாகவும், வெட்கமாகவும் இருக்கத்தான் செய்கின்றது.//

அத்தனையும் உண்மை சாமீ, உண்மை!

Anonymous said...

தாத்தாவுக்கு இருக்கும் பொருமை நமக்கில்லாமல் போனது ஏன் குற்ற உணர்வு தோன்றுகிறது..இணையத்தில் இணைந்து இவர்களோடு நேரம் ஒதுக்க மறந்து எதை சாதித்து கொண்டிருக்கிறோம் என? தெளிய வைக்கிறது பதிவு..ம்ம்ம்ம்ம் திருந்துகிறேனா பார்க்கலாம்....குழந்தையின் சிரிப்பு அழகு

சத்ரியன் said...

//ஒளி ஓவியர் ஈரோ கதிர் வாழ்க!!//

இதென்ன வில்லத்தனம் “ ஈரோ” கதிர்.

அப்ப பழமையண்ணன் தான் வில்லனா?

பத்மா said...

நமக்கு 80 ஆகும் முன்பாவது இது புரிபட வேண்டும்..
இதனால் தான் பாட்டி தாத்தாக்கள் பெற்றோர்களை விட குழந்தைக்கு மிகப் பிரியமானவர்களாய் போய்விடுகிறார்கள் ..
quality time என்று இதை பற்றி தான் மனவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள் போலும்

dheva said...

தவிர்க்க முடியாத காலத்தின் மாற்றம் இது கதிர்!

பிரபாகர் said...

நல்ல இடுகை. நம்ம கிட்டயும் இதே மாதிரி ஒர் விஷயம் இருக்கு, எழுத முயற்சிக்கிறேன்...

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

உண்மைதாங்க...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக அருமையான பகிர்வு கதிர்.

மெல்லிய விசயங்களை அழகாக அனுயுள்ளீர்கள்.

sakthi said...

குழந்தைகளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்ய நினைக்கும் நமக்கு, ஒரு போதும் குழந்தைகளின் உலகத்தில் மூழ்க மனதிருப்பதில்லை. அதே போல் ஒன்றை உண்மையாகவோ, கற்பனையாகவோ சுவாரசியமாய் குழந்தைகள் விவரிப்பது போல் சொல்லும் திறனும் அற்றுப் போய் விட்டது

உண்மைதான்

பவள சங்கரி said...

'கொம்பு முளைத்த புத்தி, எதையெடுத்தாலும் குத்திக் கிளறி அதை ஆய்ந்து ஆய்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது. நம்மூலம் வந்த குழந்தைகளுக்கு, சரியாகவோ தவறாகவோ ஒரு உலகத்தை வடிவமைக்க நினைக்கும் வேகத்திற்குள், குழந்தைகள் மிக அழகாக தங்களுக்கென கட்டமைத்திருக்கும் உலகத்திற்குள் சென்று, இதுதான் குழந்தைகளின் உலகம் என்பதைப் பார்த்து, உள்வாங்கி அனுபவிக்க மறந்து விட்டோம்'......அருமை...அருமை..யதார்த்தம்....போட்டோ...அருமைங்க...வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

கவிதையான இடுகை கதிர். நீங்கள் தாத்தாவாகும் போது ஆட்டோமேட்டிக்கா எல்லாம் நிகழும். பாருங்களேன்..

க.பாலாசி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

ம்ம்ம்... அவசரம், தேவைகள், உழைப்பு, பணம் எல்லாத்துக்கும் சேர்ந்துமான களைப்பு... இவ்வளவுக்கும் நடுவில அவங்க ஏரியாவுக்கு போறது கஷ்டம்தான்...அப்பனாக இருக்கும்வரையில்... (சிலரைத் தவிர)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பாப்பா சிரிப்பு சூப்பர்..

பாட்டி/தாத்தன்ஸ் க்கு பொறுமை ஜாஸ்தி தாங்க.. அப்பா அம்மாவ விட இந்த விஷயத்துல அவங்க மேல..

vimala said...

ippo yellam nuclear family aagivittathu sir....thaatha ,paati irukkum veedu, kulandaigal oru varam

Unknown said...

இந்தப் புன்னகை என்னவிலை....

அவர்களின் விலைமதிப்பில்லா...
திரும்பக்கிடைக்காத தருணங்களை
வாழ்வின் இன்னபிற வரவுக்காக
தொலைத்து ஏங்குகிறோம்

அருமை கதிர் பதிவை
பெருமையுடன் சுவைத்தேன்

ரமணி .........

shanmuga vadivu said...

Super kathir...

Unknown said...

உண்மைதான்...குழந்தைகளை பற்றி நிறைய பேசுகிறோமே தவிர குழந்தைகளிடம்பேசுவது குறைவு தான்...ஆனால் எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டோம் என்பது அவர்கள் வளர்ந்ததும் புரிகிறது...

Unknown said...

உண்மைதான்...குழந்தைகளை பற்றி நிறைய பேசுகிறோமே தவிர குழந்தைகளிடம்பேசுவது குறைவு தான்...ஆனால் எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டோம் என்பது அவர்கள் வளர்ந்ததும் புரிகிறது...